எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் விஜயகாந்த்
மடியில் கனமில்லை என்றால் யாரும் யாருக்கும் பயப்படத் தேவை இல்லை.இது கிராமங்களில் பொதுவாக சொல்லும் ஒரு சொற்றொடர். இது இப்போது புதிய அரசியல்வாதி விஜயகாந்திற்கு சாலப் பொருந்தும். கல்யாண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க ஒன்றும் நான் அரசியலுக்கு வரவில்லை என்றார் விஜயகாந்த். அவர் அப்படிச் சொன்னது பொய் என்று ஊருக்கே தெரியும். தனது கல்யாண மண்டப இடிப்பை தவிர்க்கவே அங்கே அவர் கட்சி அலுவலகத்தை நடத்துகிறார் என்றும், இப்போது நீதிமன்றத்தில் அதையே தான் காரணமாக கூறியும் இருக்கிறார் திருவாளர் விஜயகாந்த். அய்யா, அங்கே பாலம் வரப் போகிறது என்று உங்களுக்கு 2005-ன் மே மாதத்திலேயே தெரியும். அதற்காக நீங்கள் கருணாநிதி சந்தித்தது கையெழுத்து பத்திரிக்கை தவிர, எல்லாவற்றிலும் வந்துவிட்டது. அதற்கு பிறகு கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு தான் கட்சி ஆரம்பித்த நீங்கள் சிக்கலில் இருக்கிறது என்று தெரிந்தும் கல்யாண மணடபத்தை கட்சி அலுவலகமாக மாற்றியது ஏன்? உங்கள் கல்யாண மண்டபம் இடிபடுவதை தவிர்ப்பதற்காக நீங்கள் போட்டுகொடுத்த மாற்று வரைதிட்டத்தில் எதிர்புறம் இருக்கும் முப்பது கடைகள் காலியாகும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?
சரி, விடுங்கள்.. இது பழைய கதை. புதியதற்கு வருகிறேன். வருமானவரி அதிகாரிகள் சோதனைக்கு வந்தது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்கிறீர்கள். நாங்களும் அதை ஒத்துகொள்கிறோம். ஆனால் அப்படி வந்தால் என்ன? எல்லா கணக்கு வழக்கையும் நீங்கள் ஒழுங்காக வைத்திருக்கும் பட்சத்தில் யார் வந்தால் உங்களுக்கென்ன? எல்லா கணக்கையும் ஒழுங்காக காண்பித்துவிட்டு, காலரை தூக்கி காண்பிக்க வேண்டியது தானே. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாய் இருந்தாலும், நீங்கள் எல்லாவற்றிலும் பக்காவாய் இருக்கும் பட்ச்சத்தில் யாருக்கும் பயப்பட வேண்டும். ஆனால் வந்த முடிவு அப்படி இல்லையே.. நீங்கள் வேட்பாளராக பிரகனபடுத்தும் போது கொடுத்த சொத்து விவரத்திற்கும் இப்போது கைபற்றிய ஆவணங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும் போலத் தெரிகிறதே.. ஐந்து வருடங்களாய் சொத்து வரிகள் கூட கட்டவில்லையே, உண்மையா?
இது உண்மையா பொய்யா என்பது உங்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீங்களும் எல்லாம் கற்றுக்கொண்ட தெளிந்த அரசியல்வாதியாகி விட்டீர்கள் என்று. நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இது போலத்தான், இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் போலத்தான் நடந்து கொள்ளப் போகிறீர்கள்..
நன்றாகத் தான் அரசியல் நடத்துகிறார்கள். சொந்தப் பிரச்சினை வந்த பிறகு, மக்கள் பிரச்சனை பற்றி பேச விஜயகாந்துக்கு இப்போ நேரம் கிடையாது. எல்லப் பத்திரிக்கையிலும் கல்யாண மண்டபமும், வருமான வரி ரெய்டும் தான் செய்திகளாய் இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு இப்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் புதிய வெள்ளைசொக்காய் அரசியல்வாதி கிடைத்து விட்டார். தண்ணியடித்து விட்டு தான் சட்டசபைக்கு வந்தார் என்று ஒருவர் கூறினால், ஆமாம் அவரா ஊத்திகொடுத்தார் என்று கேட்பார். லஞ்சம் விஜயகாந்த் வாங்கினார் என்று யாராவது சொன்னார், ஆமாம் அவரா எண்ணிக்கொடுத்தார் என்று கேட்கப் போகிறார். வேறு என்ன புதியதாக செய்யப் போகிறார் இவர். ஆமாம், எல்லோரும் ஜோராய் ஒரு தடவை கை தட்டுங்கள். நமக்கெல்லாம் இப்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் புதிய வெள்ளைசொக்காய் அரசியல்வாதி விஜயகாந்த் கிடைத்து விட்டார்.
