எனது கிராமத்தை பற்றியும், அங்கு நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் எத்தனையோ பதிவுகளில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த பதிவுகளை நான் தமிழ்மணத்தில் ஏற்றம் செய்யும் பொழுது, கவனித்த தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழு, இவனின் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்டு, குருவியின் தலையில் பனங்காய் வைப்பது போன்றொரு பணியினை தந்தார்கள். தமிழ்மண பூங்காவில் வாரந்தோறும் வெளியிடுமாறு ஒரு தொடர், கிராமத்தை பற்றியும் மக்களின் பழக்க வழக்கங்களை பற்றியும் எழுதி தருமாறு ஒரு வாய்ப்பினை தந்தார்கள்.
எனக்கு இது ஒரு பெரிய வேலை. எப்படி ஆரம்பிப்பது, எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பம். கணினியில் எழுதியதால் ஆயிரம் தாள்கள் வீணாகவில்லை. அத்தனை முறை அடித்து திருத்தி எழுதினேன். எழுதி முடித்த பிறகு மனசுக்கள் சந்தோசப் பூ இருந்தது. ஆனால் திருப்தி இல்லை. இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்போது தான் எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. உள்ளத்தில் தேடல் உள்ளவனுக்கு எந்த விஷயத்திலும் எல்லை இல்லை என்று. மனதை சமாதானபடுத்திவிட்டு, எழுதியதை நானே இருபது தடவை படித்துவிட்டு அனுப்பி வைத்தேன் பூங்கா குழுவினருக்கு.
இப்போது அந்த தொடரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறையென பூங்கா பொங்கல் முதல் வெளியிட்டு வருகிறது. கடவுளையும் காதலையும் கவிதையாக சொன்ன பதிவை அவர்கள் வெளியிட்ட அந்த நாளிலே தான் எனது தொடரும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அதனை கவனிக்கவில்லை. இன்று காலையில் தான் பார்த்தே. பார்த்தவுடன், இரை தேடி சுவற்றின் மீதும், நீரைக் கடந்தும் படையெடுக்கும் ஒரு சுள்ளெறும்பை மெதுவாக பிடித்து, ஒரு தேன் குட்டையில் விட்டால் எப்படியொரு மகிழ்வு கொள்ளுமோ, அதன் மனசு எப்படி உவகை கொள்ளுமோ, அந்த ஒரு சந்தோசம் எனது இதயத்திலும் பரவிக்கிடக்கிறது.
இந்த ஜனவரி மாதம் என் உள்ளத்தில் புதுவித சந்தோசங்களையும், எனக்குள் புத்துணர்ச்சியையும் தந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை பாராட்டி, என்னை உற்சாகப்படுத்தியது எல்லாம் எனது நண்பர்களாகிய நீங்கள் தான். இப்படி ஒரு நண்பர் கூட்டம் வாய்த்தவனுக்கு, இமயமும் தொட்டுவிடும் தூரம் தான். நன்றி நண்பர்களே.
கிராமத்தை எழுதிய அந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்க நீங்கள் இங்கே சுட்டுங்கள்.
இந்த தொடரை வெளியிட்ட தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள். பூங்கா இதழ் தொடங்கப்பட்ட நேரத்தில் நமது பதிவுகள் அதில் வரும் காலம் என்னாளோ என்று ஏங்கிய காலம் உண்டு. அந்த ஏக்கத்தை துடைத்துவிட்டதற்கு நன்றி.