Thursday, January 25, 2007

'தல'யின் கிரீடம் 'இளையதளபதி'யின் அழகிய தமிழ்மகன்



பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் நிறுவனம் புதியதாக அவரின் மகன் சுரேஷ் பாலாஜியின் கீழ், மும்பை அட்லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், கிரீடம். இதில் ஜி படத்திற்கு பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேருகிறார். அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக சரண்யாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் வி.எல். அழகப்பனின் மகன் விஜய் இயக்குகிறார். இந்தப் படம் மலையாளத்தில் திலகன், மோஹன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் படத்தின் தழுவல்.



இந்த படம் கிட்டதட்ட 60% ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்துக்கு வெயில் அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பை திரு ஏற்று இருக்க, எடிட்டிங்கை ஆண்டனி செய்கிறார்.



ஒரு தந்தை மகனுக்கு இடையிலான பாசத்தை சொல்லும் அழகான குடும்ப, ஆக்க்ஷன் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது கிரீடம்.

போக்கிரியின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகனின் ஷூட்டிங் நேற்றிலிருந்து தொடங்கியது. படத்தை மசாலா இயக்குநர் தரணியின் அசிஸ்ட்டண்ட் பரதன் இயக்க, படத்திற்கு இசை அலங்காரம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்க, இன்னொரு நாயகியாக நமீதா வேஷம் கட்டுகிறார்.



இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

Wednesday, January 24, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 1

எனது கல்லூரியில், முதுநிலையான எம்.சி.ஏ படிக்கும் போது இருந்த பிரிய நண்பர்களில் கிரிஷ்ணசாமியும் குமரனும் மிக முக்கியமானவர்கள். கிராமத்தில் இருந்து வந்திருந்த எனக்கு, பல விஷயங்கள் பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல தான் இருக்கும். அதுவும் அப்போது என் ஊரில் இருந்து தினமும், கிட்டதட்ட ஐம்பத்தைந்து கிலோமீட்டர் வந்து செல்வதால், மனசு, போகும் ரயில்வண்டியின் கால அட்டவணை மேலேயே தான் கவனத்தோடு இருக்கும். அந்த இடைப்பட்ட நேரங்களில் கூட அரட்டைகள், ஆட்டங்கள், கடலை என தான் என் வாழ்க்கை அதிகம் கழிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த கணினி பற்றி அதிகம் சொல்லி, புதுப் புது விஷயங்கள் எல்லாம் எனக்கு புகட்டியவர்கள் அவர்கள் தான். எங்களுக்குள் அப்படியொரு சொல்லாத இணைப்பு இருந்திருக்கிறது.. இன்னமும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

செமஸ்டருக்கு முன்னால் படிக்க கிடைக்கும் அந்த இருபது நாட்கள் தான், நாங்கள் ஆறு மாசமாய் படிக்காமல் விட்டதை படிக்கும் நாட்கள். குமரனின் வீடு தான் நாங்கள் படிக்கும் இடம். விடிய விடிய படித்து விட்டு விடியற்காலையில் தான் தூங்குவோம். என்னமோ தெரியவில்லை, ஆந்தையை போலவே அந்த காலங்களில் இரவுகளில் தான் முழித்து கிடப்போம் படிப்பதற்காக. இன்னமும் கிரிஷ்ணாபுரம் காலனி பஸ்ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஹோட்டல் நட்சத்திராவின் முட்டை தோசையும், நன்றாக அடித்து செய்யப்பட்ட கொத்து புரோட்டாவையும் நாங்கள் மறக்க முடியாது. அதுவும் அந்த இரண்டு கரண்டிகளும் அந்த புரோட்டா கல்லின் மீது ஒற்றை கால்கலை தூக்கி போடும் ஆட்டங்களும் விடுகின்ற சத்தங்களும், பாக்காமலும் கேக்காமலும் இருந்ததில்லை.

ஒரு செமஸ்டர் விடுமுறையில், சிறுமலையில் இருக்கும் எனது பெரியப்பா தோட்டத்துக்கு செல்லலாம் என்று எனது நண்பர்களை அழைத்துகொண்டு கிளம்பினோம், நானும், எனது அண்ணன்கள் சிவாவும், குட்டியும், முருகனும். முருகன் எனது அப்பாவின் பங்காளி முறை. அதாவது எனக்கு சித்தப்பா முறை. ஆனால் எனக்கும் அவருக்கும் ஒரு மூன்று வயது தான் வித்தியாசங்கள். அதுவும் அவர் கொஞ்சம் குட்டையாக இருப்பதால் அவரது முருகன் என்ற பெயர் மறந்து பெரியண்ணன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது போல தான் குட்டி அண்ணனும். அவருக்கு சந்திரலால் என்ற பெயர் இருந்தாலும் அவரை குட்டியண்ணன் என்று தான் நாங்கள் அழைப்போம்.

கிராமத்தில் இப்படி முதற் பேர் மறந்து இட்ட பட்ட பெயரே நிலைத்துவிட்ட பலபேர் இருக்கின்றனர். அதுவும் ஒரு வீட்டில் ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் என்று நினைத்து பெண்பிள்ளையாய் பிறந்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு போதும்பெண் என்று பெயர் வைப்பார்கள். அப்படி பெயர் வைத்தால் அடுத்து கட்டாயம் ஆண்பிள்ளை தான் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படியே தான் பெரும்பாலும் நடந்து விடுகிறது. எனக்கு தெரிந்தவரை அப்படித் தான் மூன்று நான்கு குடும்பங்களில் ஆண்பிள்ளை பிறந்திருக்கிறது. இது போன்ற நம்பிக்கைகள் அதிகமுண்டு கிராமங்களில்.

பெரும்பாலும் மலைகளில் செல்லும் பேருந்துகள் சின்னதாக தான் இருக்கும். அப்போதான் சுலபமாக வளைவுகளில் திருப்ப முடியும் என்று. அதுவும் இது போன்ற அதிகம் மக்கள் வந்து செல்லாத இடங்களுக்கு பாதையோ மிகவும் சிறியதாகத் தான் இருக்கும். அப்படிபட்ட சிறுமலைக்கு செல்லும் ஒரு சிறி பஸ்ஸில் ஏறி, கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்தோம். இந்த பேருந்தில் தான் காலை வேலைகளில் பலாப்பழம் முதல் மாங்காய் வரை பலவகை பழங்கள் கொண்டு வருவார்கள். இதற்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மார்க்கெட்டே இருக்கிறது.

எங்கள் ஊரில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தான் நாங்கள் இருக்கும் இடம் இருக்கிறது. ஆனாலும் அந்த சற்றுக்கல் மலைபாதையில் போகவேண்டாம் என்று எனது பெற்றோர் சொல்லிவிட்டதால் தான் இந்த பேருந்து பயணம். இல்லையெனில் அந்த மலைப் பாதையிலே நடந்தே போய் விடலாம் என்பது தான் எங்களது திட்டம். ஒரு பேருந்தில் இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் இது வரை, அப்படி எந்த பேருந்திலும் கணக்கு வைத்து ஏற்றியதாக நான் பார்த்ததில்லை. பத்து புத்தகங்கள் வைக்கப்படும் பள்ளிச் சிறுவனின் பையிலே இருபது புத்தகங்களை திணிப்பதை போல, அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது.

(பயணம் தொடரும்)

உள்ளமெல்லாம் இன்ப மயம்

இந்த வாரம் எப்பவும் படிப்பது போல் தமிழ்மணத்தின் பூங்கா இதழைத் திறந்தால் இன்ப அதிர்சியாய் இங்கே எழுதிய கிராமத்து பொங்கல் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாட்டங்கள் என்னும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கபட்டுள்ளது.

இந்த புது வருசத்தில் அதிகம் சினிமாவை பற்றி எழுதக்கூடாது என்று முடிவு செய்து, எழுத்து நடையை மாற்றியது நல்ல பலனை கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்குள் உறங்கி கிடந்த ஆற்றலை வெளிகொண்டு வந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவுக்கு நன்றி..நன்றி..நன்றி

Tuesday, January 23, 2007

போதும் நிறுத்திக்குவோம் வைகைபுயல் வடிவேலு

இந்த வார விடுமுறையில் போக்கிரி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. படம் எப்படி இருந்ததுங்கிறதை விட முக்கியமான விஷயம் படத்துல. படத்தின் நகைச்சுவை காட்சிகள். வடிவேலுவின் நகைச்சுவைகள் இப்போ எல்லாம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

வின்னரில் கைப்புள்ளையாய் வந்தபோது கைதட்டி, சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வர பார்த்து பார்த்து ரசித்ததுண்டு. இப்போதும் இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை எங்கே கண்டாலும் சலிக்காமல் பார்ப்பதுண்டு. ஆனால் இந்த படம் வந்து கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆயிடுச்சு. இன்னமும் இவர் விதவிதமாக அடிவாங்குவது வாத்தியார், கிரி, தலைநகரம் போன்ற சில படங்களில் ரசிக்க வைப்பதாக இருந்தாலும், இப்படியான ஒரு வித்தையை தொடர்ந்து பார்த்து வந்தால் ஒரு நேரத்தில் சலித்துவிடும். அடச்சே.. என்னப்பா ஒரே மாதிரி இருக்கு என்று மனசு புலம்பித் தள்ளும்.

கவுண்டமணி-செந்தில் காமெடிகளும் இப்படித் தான், ஆரம்பத்தில், உதயகீதம், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களில் ஆரம்பித்து கரகாட்டக்காரன், சின்னவர் படங்கள் வரை தொடர்ந்தாலும், ஒரு நேரத்தில் ரசிகர்களுக்கு களைத்து போனது. அதுவும் கவுண்டமணி, கார்த்திக், சத்யராஜ் படங்களில் கதாநாயகனின் இணையாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து செந்திலுக்கு வேலை இல்லாமல் போனது. அந்த இடத்தை மெல்ல வடிவேலுவும் விவேக்கும் ஆக்கிரமித்துகொண்டனர். முந்தையோருக்கும் வேற வழியில்லாமல் போனது.

இப்போது வடிவேலுவும் மெல்ல கதாநாயகனாக இம்சை அரசன் படத்தில் வெற்றி பெற்று, இப்போது இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்திலும் கதாநாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. மெல்ல அவருக்குள் நாயகன் வேடம் என்னும் வேதாளம் முருங்கை மரம் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லை. விவேக்கும் 2004-இல் விட்ட இடத்தை இன்னமும் பிடிக்க முடியவில்லை. போன வருடம் பொங்கலுக்கு வந்த மூன்று படங்களில் (ஆதி, பரமசிவன், சரவணா) நடித்தும், சொல்லிகொள்ளும்படியாக இல்லை. அதனால் வடிவேலுவை எதிர்ப்பதற்கு கஞ்சா கருப்பு, முத்துகாளை போன்றவர்கள் மட்டுமே முயன்றனர். அதுவும் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. புதிதாக வந்த தாமிரபரணி படத்தை பார்த்த பிறகு, வடிவேலுவின் ரிபீட் காமடிகளே மேல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

மதுர அண்ணாச்சி வடிவேலு அவர்களே, கொஞ்சம் உங்கள் காமெடி ஸ்டைலை மாற்றுங்கள். நாங்கள் உங்களின் மதுரை வட்டார பேச்சுகளையும், உங்கள் சட்சட்டென மாறும் பாடி லேங்குவேஜையும் பெரிதும் ரசிக்கிறோம். ஆனால் இது அப்படியே திடர்ந்தால் சிறிது காலத்தைல் எங்களுக்கு புதிதாக, புதிய ரசிக்கக்கூடிய சரக்குடன் வருபவர்களை கவனிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒவ்வொரு இடமாக நீங்கள் அடி வாங்குபவதில் இருந்து உங்களின் எல்லாவிதமான அடிவாங்கும் வகைகளையும் பார்த்து ரசித்துவிட்டோம். கொஞ்சம் புதியதாக ஏதாவது செய்யுங்கள். நாங்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம் வடிவேலு..

உங்களுக்கு ரசிகர்கள் வைகைப்புயல் என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். அதற்காக இப்படி சீக்கிரம் கற்பனா சக்தி வறண்டு போக வேண்டாம் உங்களிடம். நல்ல ரசிக்கக்கூடிய வின்னர் பட காமெடியை போன்று வித்தியாசமான காமெடியை முயற்சி செய்யுங்கள். இன்னும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வைகைபுயல் வடிவேலுவே.

Sunday, January 21, 2007

புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது

டேய் கார்த்தி.. எழுந்திரு.. என்ஜாய் பண்ணனும்னா வெளிய பாரு.. சரியான உறக்கத்தில் இருந்தேன். நண்பனின் குரல் என்னை எழுப்பியது. சோம்பலுடன் எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே பனி மழை.. அதுவும் ஏற்கனவே தரையெல்லாம் மூடி மரத்தில் வெள்ளைப்பூ பூக்க ஆரம்பித்தது. இத்துணை நாட்களாய் வெளியேறாத பனிக் குருவி கீச் கீச்சென்று மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருந்தது.. தானாகவே கண்கள் அந்த முதல் விழிப்பிலேயே பிரகாசமானது. அவசர அவசரமாய் குளித்து விட்டு வழக்கம் போல போட்டோ செசனுக்கு கிளம்பினோம்.



எப்பவும் டிசம்பர் மாதம் 15 முதலே பனி பெய்ய ஆரம்பித்துவிடும். இங்கிருக்கும் மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் வெள்ளை கிறிஸ்துமஸ்னு பனியோடு கொண்டாடுவார்கள். இந்த தடவை அப்படி கொண்டாட முடியவில்லை என்று எல்லோருக்கும் ஒரு வருத்தம். ஜனவரி ஆகியும் பனி பெய்ற மாதிரி தெரிவதில்லை. சரி.. அடுத்த வருசம் இங்கே இருப்போமான்னு தெரில.. இந்த தடவை பனியை பார்க்காமலே இந்திய போற மாதிரி ஆகிடுமோன்னு பார்த்தா, இப்படி நல்லா தூங்குற காலை நேரத்துல சட்டுன்னு வானத்தை பொத்துக்கொண்டு பனி மழை.. அந்த பனி மழையை பார்க்கவே சிறு குழந்தையாகி பனியோடி விளையாட வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் பரவியது..



குடியிருக்கும் அபார்ட்மன்ட்டை விட்டு வெளியே வந்தால், கிட்டதட்ட நாலு, அஞ்சு இஞ்ச் உயரத்துக்கு பனி பெய்திருந்தது. இன்னமும் இறகு போல பனி மழை பெய்து காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது.. அந்த பனியில் இறங்கியது தான் தாமதம்.. மனசுக்குள் அப்படி ஒரு உற்சாக ஊற்று ஓடியது.



கிட்டதட்ட ஒரு மணி நேரம் பனியில் பந்து விளையாடினோம். பனியையே எறிந்தும் விளையாடினோம். பார்க்கும் சின்ன சின்ன இடங்களில் எல்லாம் பனி அப்படி அப்பிகிடந்தது. ரொம்ப நாள் ஏக்கம் மனசுக்குள் தீர்ந்த ஒரு திருப்தி இருந்தது.

அந்த என் உற்சாக போட்டோக்களை இங்கே உங்கள் மனசுக்குள் கண் வழியே ஏற்றுகிறேன் நண்பர்களே.

கோப்பன் பொரியுருண்டை

எனக்கு பள்ளியில் படிக்கும் போது தமிழ் பாடம் என்றால் கொள்ளை பிரியம். எனக்கு, நான் தம்பிதோட்டத்தில் எட்டு, ஒன்பது, பத்தாவது படிக்கும் போது தமிழ் பால் ஊட்டியவர் த.கதிர்வேல் ஐயா அவர்கள். அவருக்கு என்னை கண்டாலும், எனக்கு அவரை கண்டாலும் அப்படி ஒரு சொல்லொணா பாசம். வகுப்புக்கு வந்தால் தமிழ் வகுப்புகளில் உரைநடை புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிப்பதிலிருந்து, தமிழ் கட்டுரைகளை வாசிக்கும் வரை என்னை தான் செய்ய சொல்வார். அவரிடம் திட்டு வாங்குவதும், தலையில் நறுக்கென்று குட்டு வாங்குவதும் தினமும் நடக்கும் செயல். ஆனால் என்னமோ தெரியவில்லை, அவர் என்னை திட்டியதில்லை. ஒரு முறை, அவர் தமிழ் கட்டுரை வாசிக்க வாசிக்க நாங்கள் எழுதிக்கொண்டிருந்தோம். அப்போது நான் பெஞ்சின் ஓரத்தில் தான் உட்கார்ந்திருப்பேன். அவர் நடந்து கொண்டே வாசிக்கும் போது ஏதோ ஒன்றுக்கு நான் சந்திப் பிழை விட்டுவிட்டேன். அவ்வளவு தான் நறுக்கென்று தலை ஒரு குட்டு விழுந்தது. அப்போது தான் வகுப்பில் மற்றவர்கள் அடி வாங்கும் வலி எனக்குப் புரிந்தது. அது தான் அவர் என்னை முதலும் கடைசியுமாய் தலையில் கொட்டியது.

நான் எட்டாவது பயிலும் போது, முதல் முறையாக அவர் எனக்கு படம் எடுத்த அழகு இன்னமும் ஞாபகப் பெட்டகத்தில் இருக்கிறது. பெரும்பாலும் பேண்ட் சட்டை தான் அணிந்திருப்பார். என்றாவது ஒரு நாள் வெள்ளை வேட்டி சட்டை அணிவார். சைக்களில் தான் வந்து போவர். அதன் செயின் மர்காடில் அவரது பெயரும், வாங்கிய பட்டங்களும், பள்ளியின் பெயரும் இருக்கும். தமிழ் வாத்தியார் என்பதால் எப்போதும் வைரமுத்து பேசுவது போல் எல்லாம் பேசமாட்டார். வாலியின் வரிகளை போல எளிமையாய் இருக்கும். ஆனால் சொல்ல வந்த விஷயத்தையும் எங்களுக்கு அழகாக விளக்குவார். செய்யுளை அவர் பிரித்து பொருள் சொல்லும் அழகே அழகு. அதை ஒரு முறை கேட்டாலே, பரீட்சையில், அன்பில்லாதவர்களை பற்றி வள்ளுவர் என்ன கூறுகிறார் என்றால் நாலு பக்கங்களுக்கு மிகாமல் எழுதலாம்.

கொஞ்சம் முற்போக்கான சிந்தனை உள்ளவர். அதை தனது வாழ்க்கையிலும் நடத்தி, கடைபிடித்தவர். எனது நாடக, நடிக்கிற எண்ணங்களுக்கு நெஞ்சில் விதை விதைத்து, அறுவடை பார்த்து உச்சி மோர்ந்தவர். இன்னும் எந்தன் நெஞ்சில் இப்படி தமிழை பச்சை குத்தியிருக்கிறேன் என்றால் அது அவர் எனக்குள் விழுத ஏர் தான். இப்போது பட்டி மன்றங்களில் நடுவராக, தனது எண்ணங்களை சின்னாளபட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் பரப்புபவர்.

இன்று வரை எனக்கு புரியாத ஒன்று, எங்கு கேட்டும் அர்த்தம் கிடைக்காதது, அவர் கோபத்தில் எங்களை திட்டும் போது பயன்படுத்தும் வார்த்தை. அது 'கோப்பன் பொரியுருண்டை'. என்ன அர்த்தம் என்று தெரியவே இல்லை. ஆனால் யாரை திட்டும் போதும் இப்படித் தான் சொல்வார். முதல் முறை அவர் திட்டும் போது, இந்த சொல்லை பயன்படுத்தும் போது, எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவர் அடிக்கடி பயன் படுத்தும் போதெல்லாம் கேட்டு கேட்டு, சேது படத்தில் சீயான் பெயரின் அர்த்தத்தை எல்லோரும் தேடுவது போல் நான் தேடி இருக்கிறேன். யார் யாரிடமோ கேட்டிருக்கிறேன். விடை தான் கிடைத்தபாடில்லை. உங்கள் யாருக்காவது இதன் அர்த்தம் தெரியுமா.. தெரிந்தால் சொல்லுங்களேன்.. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

Saturday, January 20, 2007

அஜித்துக்கு மட்டும் ஏனிப்படி?

இப்போதெல்லாம் தமிழ் சினிமா படத்துக்காக இல்லாமல், அந்த படத்தில் நடித்த நடிகருக்காகவும், அதற்கு தரப்படுகிற விளம்பரத்துக்காகவும் தான் ஓடுகிறது.. அந்த படத்திற்காக செலவு செய்த, உழைக்கின்ற பலபேரை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நான் இப்படி சொல்வதற்கு சில எடுத்துக்காட்டுகள்..



தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வெளிவந்தது. அதற்கு உலக தொலைக்கட்சியில் முதன் முறையாக என்று மார்தட்டி நிகழ்ச்சிகள் நடத்தும் சன் தொலைக்கட்சி கடைசி வரை வல்லவனை முதலிடத்திலும் வரலாறை இரண்டாம் இடத்திலும் வைத்தது. போன வருடம் 2006-இன் அதிக வசூலை குவித்தது என்று இந்தியா டுடே நாளிதழும் விநியோகஸ்தர்களும் சொன்ன ஒரு படம், சன் தொலைக்காட்சியில் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுகிறது.. இது நியாயமா.. இதே, சன் டிவியை தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்கள் தொடர்பு கொண்ட படமாய் இருந்தால், அது எப்பேர்ப்பட்ட படமாய் இருந்தாலும் முதலிடம் தான்.. அது தெலுங்கு படத்தை அப்படியே அச்சு அசலாக நகலெடுத்த இளையதளபதி விஜயின் படமாக இருந்தாலும் சரி, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படமாக இருந்தாலும் சரி, சர் சரென்று கைகளால் கபடி விளையாடி நடிக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் படமாக இருந்தாலும் சரி.. முதலிடம் தான்.. ஏகபோக பாராட்டுக்கள் தான்.. இது தான் நடுநிலைமை தவறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சியா..

இது மட்டுமல்ல, மாதம் இரண்டு முறை படித்துவிட்டீர்களா குங்குமம் புத்தகத்தில் தும்மினால் கூட போட்டு விளம்பரங்கள் செய்வதுவும் நடக்கிறது. இதெல்லாம் செய்வது தவறில்லை. ஆனால் இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வராத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி அவர்கள் எழுதியது தன் செய்திகள், அவர்களின் செய்தி தரும் ஊடகங்களில்..

இதற்கு அடுத்து நெட்டில் புகழ் பரப்பும் நம்ம சிஃபி இணையதளம். வரலாறை வெற்றி என்று அறிவிக்க அவர்களுக்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால் போக்கிரியை மூன்று நாட்களில் வெற்றி என்று பறைசாற்றி இருக்கிறார்கள். வரலாறைவிட குறைந்த லாபமே ஈட்டிய வேட்டையாடு விளையாடு கடைசியில் பிளாக்பஸ்டர் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி வரை வரலாறு சூப்பர் ஹிட்டாகவே இருந்தது.

இப்போது தான் ஆழ்வார் படம் பார்த்தேன். இ-மெயில்களிலும் வார்த்தை வழிகளிலும் சொல்லப்படுகின்ற மாதிரி..இல்லை இல்லை.. பரப்பப்படுகின்ற அளவு படம் மோசம் இல்லை. முதல் முறை இயக்குவதால் இயக்குநர் செல்லா சில தவுறுகளை செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் சொல்வது போல் இல்லை. அஜித் இது போன்று புது இயக்குநர்களுக்கு ஆதரவு தந்தது போன்று வேறு யாராவது தந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.. கிட்டதட்ட பதினெட்டு படங்கள் அஜித்திற்கு புது இயக்குநர்கள் இயக்கியது தான். சும்மா அடுத்தவர் ஜெயித்ததிலே, அவர்களை நகலெடுத்து நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தன்னை போன்றே வெற்றி பெற துடிக்கும் பல பேருக்கு வாய்ப்பு தந்தவர் அஜித். எஸ்.ஜே.சூர்யா முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை புதுமுகங்கள் தான், அவர்கள் முதல் படங்களை எடுக்கும் போது. இவர்களை எல்லாம் நம்பிக்கையோடு அரவணைத்திருக்காவிட்டால் இவர்கள் இன்று முகம் காட்டியிருக்க முடியுமா? அப்படி கொடுத்தது தான் செல்லாவுக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பையும் அவர் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். (படத்தின் விமர்சனம் தனியாக)

எனது ஊர் நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோது, பொங்கலன்று, போக்கிரி சரியில்லை என்றார்கள். ஆழ்வார் நன்றாக இருக்கிறது என்றார்கள்.. மற்ற எல்லா நண்பர்களும் போக்கிரி விமர்சனத்தில் குறியிருப்பது போல், தெலுங்கு போக்கிரி படத்தை மட்டுமல்ல, அதன் நாயகனின் நடை உடை பாவனையையும் அப்படியே காப்பி அடித்திருக்கிறார்களாம்.. நான் மற்றவர்களை குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி தனியாக எந்த விளம்பரங்களும் இல்லாமல் முன்னேறும் ஒருவருக்கு இப்படியா வதந்திகள் மூலம் படத்தை ஓடவிடாமல் செய்வது.

இதற்கு மேல் வாதம் செய்தால் அது ஏதோ தனிமனித துவேஷம் ஆகிவிடும். விமர்சனம் எழுதும் நண்பர்களே, உண்மையை எழுதுங்கள். உங்கள் நடைக்கேற்ப சுவைபட எழுதுங்கள். ஆனால் உன்மையை எழுதுங்கள்.

நான் அஜித்தின் ரசிகன் என்பது உலககுக்கே தெரியும். அதனால் தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் கேட்டால் அஜித்தின் தன்னம்பிக்கையும், அவருக்கும் மட்டும் ஏனிப்படி நடக்கிறது என்ற கவலையும் உண்டு. எனக்கும் தான். நிச்சயம் விரைவில் தலை நிமிர்ந்து நிற்பார். அவரை பாக்க எல்லோரும் கழுத்து சுளுக்கி பாக்காணும். இது ஏதோ எப்பவும் பேசும் வசனங்கள் இல்லை. ஒரு நம்பிக்கை.

Thursday, January 18, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (இரண்டாம் பகுதி)

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)



லிங்கன் அவர்களின் நினைவு மண்டபத்தை பார்த்து வியந்தவாறே நாம், வலது பக்கம் நடந்தால் அங்கே கொரியா போரின் நினைவிடம் ஒன்று இருக்கிறது.. அங்கே கைகளில் துப்பாக்கி ஏந்திய, கண்களில் அந்த வீரம் மின்ன, பதினைந்துக்கும் மேற்பட்ட வீரர்களின் சிலைகள் உள்ளன. தினமும் இங்கே கொரியா நாட்டு தூதரகத்தின் சார்பாக மலர்வளையம் வைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தின் பக்கவாட்டில் கறுப்புக்கலர் கற்களால் ஒரு சுவர் அமைக்கப்பட்டு அதில் பல வீரர்களில் உருவங்கள் பதிக்கப்பட்டிருகின்றன. இது மட்டுமில்லாமல் "சுதந்திரம் சும்மா கிடைப்பதில்லை" என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.



இதன் மறுபுறத்தில், லிங்கன் மண்டபத்தின் இடது பக்கத்தில் வியட்னாம் போரின் நினைவிடமும் இருக்கிறது. இங்கே போரில் போராடிய பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தினமும் அன்றைய தேதியில் மறந்து போன வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக மலர்ச்செண்டு வைக்கிறார்கள். நாட்டின் தலைநகரம் என்பதால் எல்லா இடங்களில் தேசப்பற்று சார்ந்த விஷயங்களே மிகுதியாக தெரிகிறது. இந்த நினைவு இடங்களுக்கு எல்லாம் நாம் சென்று திரும்பும் போது, காதுகளில் துப்பாக்கி ஓசையும் பீரங்கி முழக்கங்களும், கண்களில் போர்க்களத்தின் காட்சிகளும், இதயத்தில் அவர்களின் நாட்டுபற்றும் அதற்கு அவர்கள் தந்த விலையும் இமயமாக எழுந்து நிற்கிறது..

(நம்ம ஊரில் இன்னமும் தலைவர்கள் சிலைக்காக அடித்துக் கொள்வதை கண்ட அந்த கணங்கள் இந்த மாதிரி இடங்களில் ஞாபகம் வர மிகவும் வருந்தினேன்..)



இந்த இடத்திலிருந்து அப்படியே நேரா நடந்து போனால், எலிப்ஸ் பூங்கா வரும்.. அதன் மேல்பக்கத்தில் தான் வெள்ளை மாளிகை. உள்ள விட மாட்டாங்கன்னு தெரியும்.. அதனால வெளில இருந்தே பார்த்தோம்.. வெளியில் இருந்து பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒன்றும் பெரிய விஷயங்கள் இதில் இருப்பதாக தெரியவில்லை.. ஜனாதிபதி இருக்கிறார் என்பதை தவிர. ஆனால் வெள்ளைமாளிகையை நமது ராஷ்ட்ரபதி பவனோடு ஒப்பீடு செய்தால் எனக்கு ராஷ்ட்ரபதி பவன் தான் பிடித்திருக்கிறது.. ஒவ்வொரு முறையும் ராஷ்ட்ரபதி பவனில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்று வந்தவர்கள், அதை பற்றிச் சொல்லும் போதும் அவர்களுடன் நாமும் சென்று வந்ததை போல இருக்கும். ஆனால் அதெல்லாம் வெள்ளை மாளிகையில் இருக்கிறதா என்று பக்கத்தில் குடியிருக்கும் நமது நாட்டாமை தான் சொல்ல வேண்டும். ஆனால் நம்ம ஊருக்கு போனால் எல்லோரிடமும் காட்ட வேண்டுமே அதனால்.. வெள்ளை மாளிகை முன்பு சராமாரியாக புகைபடங்கள் எடுத்துக் கொண்டேன். அதை எடுத்துக் கொண்டு ஊரில் காண்பித்தால் தான் நான் அங்கே சென்று வந்ததாக நம்புவார்கள். நான் நியுயார்க் மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் அடங்கிய டிவிடி எங்கள் ஊரில் வீடு வீடாய் சுத்திக்கொண்டிருக்கிறது. என்னை பாக்கவில்லை என்றாலும் அமெரிக்காவின் பல இடங்களை பார்க்கலாமே என்று தான் அவர்கள் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



வெள்ளை மாளிகையை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, அமெரிக்க பாராளுமன்றத்தை பார்க்க கிளம்பினோம். அதன் போகும் வழிகளில் இருந்த கட்டிடங்கள் எல்லாம் மிரட்டலாய் இருந்தன. அழகாய் வடிவமைக்கப் பட்டு, உயரமாய், நமது மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களை போல எல்லாக் கட்டிடங்களிலும் தூண்கள் நின்று அந்த கட்டிடங்களை தாங்கி கொண்டிருந்தன. சிவப்பு நிற வண்ணத்தில் சில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாய் இருந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தின் அருகில் செல்ல சில பாதுகாப்பு காரணங்களால் போக முடியவில்லை என்பதால் தூரத்தில் இருந்தே பார்த்து வழக்கம் போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். என்னதான் வெயில் காலங்களில் ஊரை சுத்தி பார்த்தாலும் இந்த மாதிரி ஒரு அழகிய ரசிப்பதற்கேற்ப வானம் கருப்பு ஆடை அணிந்து கிடக்கும் இந்த வேலையில் நகரின் தெருக்களில் நடப்பது சுகமானது.



அதுவும் வருடத்தின் முதன் நாளில் இப்படியொரு இனிய பயணம் அந்த வருடமெல்லாம் வசந்தமே என்று நெஞ்சுக்கள் ஒரு சந்தோச விதயை தூவின. அந்த சந்தோச விதை இன்று மரமாய் விளைந்து நிற்கின்றன. அப்படியே பரவி இனிய பூக்களை தூவுகின்றன ஒவ்வொரு நாட்களிலும் நடகின்ற பாதையில் பரப்புகின்றன. அந்த சந்தோச வாசனை படிக்கின்ற எல்லோர் மனசிலும் கலந்து வாழ்வு செழிக்க, காற்றில் கலந்து எங்கும் குடியிருக்கும் இறைவனின் அருளால் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

வீராசாமி விமர்சனம் - ரவியின் ரவுசான பதிவு

செந்தழல் ரவியின் ரவுசான பதிவு.. படித்தவர்கள் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி ஒரு நையாண்டி பதிவு.. எதைப் பற்றி என்று தானே கேட்கிறீர்கள். நமது அகில உலக அடுக்கு மொழி வேந்தன் விஜய.டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தின் விமர்சனம் (ஏதோ ஒரு காரணத்தால் லிங்க் முதலில் வேலை செய்யவில்லை. இப்போது வேலை செய்கிறது.) தான்.

சோர்வாக இருப்போர் படித்தால் குதுகலமாவீர்கள்.. படம் எப்படியும் இருக்கட்டும். இது போன்ற பதிவுகளை படிக்கும் போது படத்தை இதற்காகவாவது பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது..

நல்ல பதிவுங்க ரவி.

வீராசாமி படத்தின் புதுமையான இந்த போஸ்டரையும் இங்கே பாருங்களேன்

Wednesday, January 17, 2007

கனவே கலையாதே...

இரண்டு மூன்று நாட்களாக சரியான அலுப்பு.. வீட்டிற்கு வந்தால் தலையணை தேடி, படிக்கச் சொல்லுது மனசு.. அந்த அளவுக்கு அலுப்பாக இருக்கிறது.. எல்லோருடைய பதிவுகளுக்கும் செல்ல முடியாமலும் இருக்கிறேன்..

நண்பர்களே, பொறுத்தருங்கள்.

போன வாரமெல்லாம் இரவு 1 மணி வரை முழித்திக் கிடந்தேன்.. இந்த வாரம் 10 மணிகெல்லாம் கண்கள் சொருகுகின்றன.. எனக்கு வருகின்ற கனவுகள் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். நேற்று காலை ஒரு ஐந்து மணி அளவில், பயங்கரமான ஒரு கெட்ட கனவு. அதற்கு பிறகு தூங்கவே முடியாத ஒரு கொடூர கனவு.

என் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு காலி இடத்தில் ஒதுங்க முடியா கூட்டம். என்னவென்று பார்த்தால் வரிசையாக பூமியில் இருந்து பிணங்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன.. அவை எல்லாம் எனக்கு தெரிந்த ஏதோ சில முகங்கள்.. அதன் பிறகு தூங்கவே பிடிக்கவில்லை.. என் அறையின் ஜன்னலுக்கு வெளியே காற்றில் இரண்டு மனைதர்கள் காலில்லாமல் நடப்பது போல ஒரு பிம்ப உணர்வு.

எப்பவோ பார்த்த, நினைத்த சங்கதிகள் தான் ஆழ்மனசில் இருந்து ஒரு நாள் கனவுகளாக வரும் என்று சொல்வார்கள்.. எப்படி இந்த கனவு வந்தது என்று யோசித்துப் பார்த்ததில், முன்னுக்கு முந்திகொண்டு வந்தது கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படம். அதில் வரிசையாக பிணங்களை தோண்டி எடுப்பார்களே, அது தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் பார்த்துவிட்டு வந்த பின், கிட்டதட்ட இரண்டு நாட்களுக்கு அந்த பாதிப்பு இருந்தது.. அதில் காட்டப்பட்ட கொலைகளும், அதை செய்த விதமும் அந்த அளவுக்கு மனதை பாதித்தது. அது இப்போதுதான் மனதில் இருந்து வடிந்து ஓடியிருக்கிறது போலும்..

அதே போல், இன்று காலை ஒரு கனவு. முற்றிலும் மாறானா கனவு. நான் ஒரு திரைப்படத்தின் அறிமுகப்பாடலில் நடிக்கிறேன்.. இரு கைகளையும் மேலே தூக்கி ஆடுகிறேன் பாடுகிறேன்.. மழை பெய்கிறது.. வானம் நோக்கி கைகளை உயர்த்தி ஏதோ பாடுகிறேன்.. கேமரா வேறு என்னை புதுப்புது கோணங்களில் என்னை பதிவு செய்கிறது.. நான் உயரப் பறக்கிறேன்.. கீழே என் பாட்டியும், தங்கை மற்றும் தங்கையின் தோழி கூட சேர்ந்து ஆடுகிறார்கள்.. இந்த கனவு வந்ததால் என் கண்களை திறக்காமல் தூங்கியதில், அலுவலகத்துக்கு இன்று கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றேன்.

இந்த கனவு எப்படி வந்தது.. ஏன் வந்தது.. இன்று முழுவதும் மனசில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம்.. ஏனிப்படி? என்னுள் சின்ன வயசுல இருந்து இருக்கும் சினிமா ஆசைகளா.. தெரியவில்லை. ஆனால் இன்றைய பொழுது நன்றாகவே போனது..

சில சமயங்களில் வாழ்க்கையில் நடக்காத பல விஷயங்கள் இப்படி கனவிலே நடந்து மனசை சாந்தப்படுத்துகின்றன.

என் கனவுகளுக்கு நன்றி.. அது தான் என் கற்பனையையும் திறன்களையும் வளர்த்து விடுகிறது என்பது என்னுள் விதைக்கப்பட்ட ஒன்று.

எனது ஏனைய கனவுகள்