Tuesday, November 04, 2008

இப்படியும் நடந்து இருக்கலாமோ - அஜித்தும் நடிகர் சங்க உண்ணாவிரதமும்

புரட்சி புண்ணாக்கு எழுதிய இந்த கட்டுரையை படியுங்கள், நீங்கள் சொல்வீர்கள் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று

Monday, September 15, 2008

நாலு வரியில் புதுப்பட விமர்சனங்கள்

தாம் தூம் - ஆங்கில இசை தொகுப்பை போல பாடல் காட்சிகள், வழக்கமான ஜீவா படத்தின் ஹை-லெட்டான ஹாரிஸ் ஜெயராஜின் அசரவைக்கும் பாடல்கள், ஜெயம் ரவியின் நடிப்பு, இவைகள் படத்தின் தூண்கள். திரைக்கதை இன்னும் மெருகேற்றப்பட்டிருந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும் - 5.5/10


பொய் சொல்ல போறோம் - முதல் பாதியில் ஆமை வேக கதையில் எல்லாமே வறட்சி.. இரண்டாவது பாதி பரவாயில்லை - 4/10

சத்யம் - கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு ஏற்ற வகையில் படம் இல்லை. நிச்சயமாக இது விஷாலுக்கு சறுக்கல் தான். தாம் தூமிற்கு இசை பலம் தந்த ஹாரிஸ் இதில் காலை வாரிவிட்டிருக்கிறார். சண்டை காட்சிகள் மட்டும் பரவாயில்லை, அதுவும் கூட்ட கூட்டமாக வருவதால் சலிப்பு தான் - 3.5/10

ஒரே நேரத்தில் இரு நிலாக்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்னைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசின்னு அறிவிச்சு, அதை ஆரம்பிச்சும் வச்சுட்டார். நமக்கு எதுக்குங்க அரசியல்? ஒரு காலத்துலா நாமளும் ஒரு நாளைக்கு ஒரு பதிவுன்னு போட்டுகிட்டு இருந்தோம்.. இப்போ தான் முடியல.. மறுபடியும் கிட்டதட்ட ஆறேழு மாசத்துக்கு பிறகு, இணைப்பெல்லாம் கொடுத்து செட் ஆகியாச்சு..

இனி தொடரும் என்ற நம்பிக்கையுடன்..

பின் குறிப்பு : டைட்டில் பத்தி ஒன்னும் சொல்லலியேன்னு பாத்தீங்களா, சும்மா எல்லாரையும் சுண்டி இழுக்கத்தான்

Thursday, June 19, 2008

தசாவதாரம் - ஆராய்ச்சிகள் 1

தசாவதாரம் படத்திற்கு முன், எனக்கொரு சின்ன சந்தேகம் இருந்தது.. இவ்வளவு பணத்தை இறைத்து எடுக்கப்படும் படம் வியாபார ரீதியாக ஓடுமா என்று? ஏனெனெனில் ஆளவந்தான் இது போன்று உரக்க பேசப்பட்டு கடைசியில் உப்பில்லாத ப(ண்)டம் ஆனது. படத்தின் விற்பனைக்கு பெரிதும் உதவிய பத்து வேடங்கள் எந்தவாறு உதவும் என்றும் ஐயமும் இருக்கத் தான் செய்தது. என்னை பொறுத்தவர் படம் நன்றாக இருக்கிறது, முந்தைய பதிவில் சொன்னது போல.. கயாஸ் தியரி மற்றும் பட்டாம்பூச்சி எபெக்ட்களை பற்றி பின்னால் பார்ப்போம். முதலில் பாத்திர படைப்புகளை பற்றி காண்போம்.

படத்தில் மொத்தம் நான்கு கமல்கள்.. என்னடா பத்து வேடங்கள் என்று சொன்னார்களே என்று பார்க்கிறீர்களா? நான் சொன்னது கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று கமல் இந்த படத்தில் எடுத்துக்கொண்ட வெவ்வெறு பரிமாணங்கள் பற்றி. படத்தில் சிறு சிறு விஷயங்கள் கூட சிலாகிக்க தகுந்தவை.. படத்தின் கதை எல்லோருக்கும், படம் பார்க்காதவர்களுக்கு கூட தெரியும் என்பதால் அதை பற்றி பெரியதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை.

படத்தில் நாம் முதலில் எடுத்துக்கொள்வது, மணற் கொள்ளையை எதிர்க்கும் வின்சென்ட் பூவராகன் பாத்திரம். அதில் நான் கவனித்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.

1. பெரும்பாலும் தலித் இன மக்கள், கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட, கிறித்துவ - இந்து கலந்த பெயர் வின்சென்ட் பூவராகன். இதில், நாகர்கோயில்காரராக பூவராகனை வடித்திருப்பதிலும் இது சரியே என்று தெரிகிறது.
2. கே.எஸ்.ரவிகுமார் படம் என்றாலே கற்பழிப்பு காட்சிகள் இருக்கும் என்று எல்லோரும் விமர்சனங்களில் எழுதியிருந்தனர். ஆனால், அந்த விஷயம் கதையில் மிக முக்கியமானது. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். தனது மேலாடை உருவப்படும் போது ஆன்டாள், நாராயணா என்று ஆண்டவனை அழைக்கிறாள். திரௌபதிக்கு சேலை தந்து காத்தது போல், இங்கேயும் நுழைகிறது பூவராகன் கதாபாத்திரம். அங்கே கண்ணன் கறுப்பு.. இங்கே பூவராகனும் அப்படியே. கண்ணனும், பூவராகனும் கனுக்காலில் கூர்மையான ஆயுதம் குத்தியே இறந்து போகின்றனர். கமல், பூவராகன் பாத்திரத்தை கண்ணனோடு ஒப்புமை படுத்திய உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.
3.சந்தான பாரதி, பி. வாசு இருவரும் தவறு செய்பவர்களே.. அதுவும் தப்பு செய்ய தூண்டும் பி.வாசுவே பெரிய குற்றவாளியாக தோன்றுகிறார். ஆனால், கதையில் பி.வாசு சாகாமல் சந்தாபாரதி சுனாமியால் இறப்பது ஏன்? அதற்கான காரணங்கள்
அ) பெண்ணை மானபங்க முயற்சி செய்ததால்
ஆ) பி.வாசு இறந்திருந்தால் சந்தான பாரதி மணற்கொள்ளையை தொடர்ந்திருக்கலாம். இப்போது, பி.வாசுவின் மகன்களை பூவராகன் காப்பாற்றியதால், அவரது கால்களில் விழுந்து மனது மாறுகிறார். இனிமேல் மனற்கொள்ளை நிச்சயம் நடக்காது
இ) பூவராகனை விட சந்தான பாரதி தான் பி.வாசுவுக்கு உறவினர். ஆனால், பூவராகனும் சந்தானபாரதியும் இறந்து கிடக்கும் இடத்தில் அவரது எல்லா உறவினரும் பூவராகனை சுற்றியே. என்னதான் உறவினராய் இருந்தாலும், நல்ல உள்ளங்கள் போற்றப்படுகிறான் என்பது உணர்த்தப்படுகிறது இங்கே
4. கிருஷ்ணவேணி பாட்டி, இறந்த பூவராகனை மகனாக நினைத்து அழும்பொழுது சாதி உணர்வுகள் உடைத்தெரியப்படுகிறது.. அதற்கேற்றார்போல் அங்கே வசனங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

"நம்ம ஆராமுதன் சிவப்பால இருப்பான்"
"உள்ளே சிவப்பு தாண்டா.. உழச்சு உழச்சு கறுப்பாயிட்டான்"

இப்போது பொதுவான சில விஷயங்கள்...

1. இரண்டாம் உலகப்போரில் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு இருந்தது ஜப்பானும் (கடைசியில் சுனாமி என்று கத்தி சொல்வதற்கும் இவர் உதவி உள்ளார். நன்றாக பார்த்தால் இந்த சுனாமிக்கு முன்னர் ஜப்பான் நாட்டை சேர்தவர்கள் தான் அதை பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்தனர்), அமெரிக்காவும்.. அந்த இரண்டும் நாடுகளும் உலகத்தை அழிக்கும் சக்தியை எதிர்த்து நேரடியாகவும் மறைமுகமாகவும் போராடுகின்றன.. இதற்கு வழக்கம்போல் இந்தியா உதவுகிறது
2. இந்தியாவில் பஞ்சாப் (அவ்தார் சிங்), ஆந்திரா (பல்ராம் நாயுடு), தமிழ்நாடு (கோவிந்த்) (நரசிம்மராவ் என்று வரும் அந்த கொரியர் அலுவலக கன்னட இளைஞனையும் சேர்க்கலாம்) என்று மாநிலங்களுக்கு இடையே கதாபாத்திரங்கள் அமைத்து, அவர்களும் தீய சக்தியை அழிக்க மறைமுகமாகவோ நேரடியாகவோ உதவுகின்றனர்
3. மூன்று முக்கிய மதத்தை சார்ந்த கதாபாத்திரங்கள் (கோவிந்த், வின்சென்ட் பூவராகன், கபி ஃபுல்லாகான்)
4. ஒரே மதமாயினும் வேறு வேறு வகுப்பை சார்ந்தவர்கள்

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மெல்ல மெல்ல கதைக்கு ஏற்றவாறு அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.. நன்றாக இன்னும் ஆராய்ந்து பார்த்தால் கமலின் புலமை நமக்கு தெள்ள தெளிவாக தெரியும்..

இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் அடுத்த பதிவில்.. காத்திருங்கள்..

உங்கள் எண்ணங்களையும் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்



பின் குறிப்பு : நான் அக்மார்க் ரஜினி ரசிகன் என்பது நான் பிளாக் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து பதிவுகளை படிப்பவர்களுக்கு தெரியும்

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - எங்கெங்கும் விமர்சனம்

பிளாக் உலகம் ஆரம்பித்த பிறகு, ஒரே படத்திற்கு இத்தனை விமர்சனங்கள் கிடைத்தது தசாவதாரதிற்குத் தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள். விமர்சனங்கள் படித்த பிறகு படத்திற்கு செல்வோர் இவர்களின் விமர்சனங்கள் பார்த்து மண்டை குழம்பி போய் உள்ளனர்.. கயாஸ் தியரி, பட்டர்பிளை இபக்ட் என்று புதுசு புதுசாக சொல்கிறார்கள்.. ஒன்றும் புரியவில்லை.. இரண்டாவது நாளே ஓசி டிக்கட்டில் படம் பாத்தாகிவிட்டது. உண்மையில், எனக்கு படம் பிடித்து தான் இருந்தது.. அப்ப விமர்சனம் எழுதலையா என்று கேட்கிறீர்களா.. இதோ நாளை இரண்டாவது தடவையாக சொந்த காசில் பார்க்க போகிறேன்.. வந்து விரிவாக எழுதுகிறேன்

Wednesday, June 04, 2008

MGM - என்ன நிலையிலிருக்கிறது

கடந்த வாரம் ஊரிலிருந்து அப்பா, அம்மா, எனது சித்தி பசங்க எல்லோரும் விடுமுறைக்கு வந்ததால், சனிக்கிழமை MGM சென்றோம்.. கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு, அங்கே சென்றேன். எனக்கு அதிர்ச்சி நுழைவு கட்டணம் தரும் இடத்திலிருந்து ஆரம்பித்தது. இதற்குமுன் சென்ற போது, குறைந்தபட்ச நுழைவு கட்டணம் (இதை பெற்ற பிறகு உள்ளிருக்கும் சில விளையாட்டுகளுக்கு தனியாக பணம் கட்டவேண்டும்),எல்லா ரெய்டுகளும் விளையாடும் நுழைவு கட்டணம், சிறுவர்-சிறுமிகளுக்கு என்று மூன்று வகையான கட்டணங்கள் இருக்கும். ஆனால் இப்போது குறைந்தபட்ச நுழைவு கட்டணம் என்ற ஒன்றை எடுத்திருந்தனர். பெரியவர்களுக்கு என்று ஒரே கட்டணம் வசூலித்தனர். இதையெல்லாம் சரியாக வசூல் செய்யும் இவர்கள், உள்ளிருக்கும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் கூப்பாடு போடுவதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். பல மாதங்களாக, ஏதோ ஒரு விளையாட்டு இயந்திரம் அந்து விழுந்து உயிர் சேதம் நிகழ்ந்ததால் மூடி கிடந்ததாக கேள்விப்பட்டேன். அதன் பிறகாவது நன்றாக பராமரித்திருப்பார்கள் என்று நம்பினால் இன்னும் மோசம். பணம் மட்டும் சரியாக வசூல் செய்துவிட்டு உள்ளே ஒன்றும் உருப்படியாக இல்லை.

MGM பற்றி அவர்கள் தரும் வரைபடம் மகா கேவலம். ஏதோ கடமைக்காக தருகிறார்கள் போலும். அந்த பிட்-நோட்டிஸ்ஸில் நமக்கு ஒரு விஷயமும் உருப்படியாக இருப்பதில்லை. கழிவறைகள், குடிநீர் இடங்கள், எந்தெந்த ரெய்டுகள் எங்கெங்கே என்று ஒரு விவரமும் இல்லை. அரசாங்கம் தரும் பட்டாவில் இருக்கும் வரைபடம் மாதிரி இருந்தது. நிச்சயமாக அந்த ஒரு வரைபடம் அச்சடிக்க அவர்களுக்கு ஐம்பது காசு கூட செலவாகி இருக்காது.. அதை ஏன் தருகிறார்கள் என்று புரியவில்லை.

நிச்சயமாக நான் சென்று வந்த பிறகு, MGM போய் வாருங்கள் என்று மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு MGM ஒன்றும் விசேஷமானதாகவோ தரமானதாகவோ பாதுகாப்பானதாகவோ இல்லை என்பது தான் உண்மை. மற்ற நாடுகளில் இருக்கும் இது போன்ற பார்க்குகளோடு ஒப்புமை படுத்தும் அளவிற்கு இல்லை என்றாலும் இன்னும் நன்றாக மக்களுக்கு தரலாமே? ஏன் எப்படி காசை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொழில் ரீதியாக பார்கிறார்களோ தெரியவில்லை (உள்ளே கிடைக்கும் சாப்படு, ஒவ்வொரு ரெஇடிலும் இருக்கும் நபர்களின் அணுகுமுறை என்று மைனஸ் விஷயங்கள் பல.. சிலவற்றை மட்டுமே ஆதங்கத்தில் சொல்கிறேன்). மார்க் போடும் காலம் என்பதால் பத்திற்கு நான்கை மட்டுமே கஷ்டப்பட்டு தரமுடிகிறது இந்த பார்கிற்கு

Monday, May 26, 2008

சிவாஜி - குருவி ஒற்றுமை

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.

சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது. படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும், பல இடங்களில் சிவாஜியின் சாயல் தெரிந்தது. அது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.. கவனித்ததை பட்டியலிடுகிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் பட்டியலை தொடருங்கள்

1. சிவாஜியில் ரஜினியின் அப்பா மணிவண்ணன், குருவியில் விஜயின் அப்பாவும் இவரே
2. சிவாஜியிலும் குருவியிலும் வில்லன் சுமன்
3. சிவாஜியில் இடைவேளையின் போது காசை சுண்டிவிட்டு, சிங்க பாதையா பூப்பாதையா என்று ரஜினி விவேக்கிடம் கேட்பது போன்று, இங்கேயும், மலேசியா கிளப் சண்டைக்கு முன்பு விஜய் இரு விரல்களை காண்பித்து அகிம்சை, அடிதடி என்று விவேக்கை தேர்வு செய்ய சொல்வது
4. சிவாஜியில் ரஜினி செத்து பிழைப்பது போல், இதிலும் விஜய் தண்ணீரில் இறந்து விட்டது போல் காட்சி அமைத்திருந்தது
5. மியூஉசிக்கல் ஸ்டோரில் நடக்கும் முதல் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி, குருவியில் மலேசியா கிளப் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி..
6. இது ஒற்றுமையா என்று தெரியவில்லை.. இரண்டிலும் நாயகர்கள் கூடவே விவேக்

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.. இன்னும் இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..

பி.கு: கல்யாணம் முடிந்து விருந்து என அலைந்து இப்போது தான் கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்தது.. இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்.. கல்யாணத்திற்கும், பிறந்த நாளிற்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

இந்த மாதம் மத்தியில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கிய கவிதாயினி வேதாவிற்கும், மாப்ள பரணிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Wednesday, March 19, 2008

நம்ம வீட்ல விஷேசங்க

மளமளவென வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு தயாராகிவிட்டேன்.. இப்போது தான் இந்தியா வந்த மாதிரி இருக்கிறது அதற்குள் இருபது நாட்கள் ஓடி விட்டது. நிற்க நேரமில்லை.. எனது பள்ளி கால நண்பர்களிலிருந்து பழைய அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்த நண்பர்கள் வரை, அவர்களின் தொடர்பு எண்களை வாங்கி குவிக்கிறேன்.. நேரமிருக்கும் போதெல்லாம் என் திருமணதிற்கு வர அவர்களை அழைக்கிறேன்.. திருமணம்? ஆமாம்.. நான் வந்த ஒரே வாரத்தில் எல்லாம் முடிவு செய்யப் பட்டு ஏப்பிரல் 11-இல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் RR கம்யூனிட்டி ஹாலில், வத்தலகுண்டை சேர்ந்த ஹேமலதாவை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கிறேன்.. இதை படிக்கும் அனைவரும், நான் நேரில் வந்து அழைத்ததாய் எண்ணி எங்களை வாழ்த்த வருமாற் அழைக்கிறேன்..

இன்னும் திருமண அழைப்பிதழ் எனக்கு ஊரிலிருந்து வரவில்லை. வந்தவுடன் அழைப்பிதழுடன் உங்கள் அழைக்கிறேன் நண்பர்களே..

Saturday, February 16, 2008

முனியாண்டி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு



மெட்டி ஒலி புகழ் திருமுருகன், தன் முதல் முயற்சியான எம் மகனில் தன்னை ஒரு நல்ல டைரக்டர் என்று நிருபித்தார். இப்போது அதே குழுவோடு அடுத்த படத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த படத்தின் புகைப்படங்கள் இப்போது தான் வெளியடப்பட்டிருக்கிறது.



படத்தின் குழுவில், எம் மகனின் நாயகி கோபிகா தவிர, பெரும்பாலும் அனைவரும் அதே ஆட்கள்.. கோபிகாவிற்கு கால்ஷீட் இல்லாததால், தனக்கு தெரிந்த இன்னொரு தூரத்து பெண்ணை டைரக்டருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.. அவர் பெயர் தாமரை.. சாயலில் கோபிகா போலவே இருக்கிறார்.



இந்த கலர் தாவணி, கோயில் அம்மன் வருவது போல ஒரு உணர்வை தருகிறது.. கோபிகாவை போலவே நன்றாக மணம் வீசுவாரா இந்த தாமரை?



திருமுருகன், படத்தின் கதைக்கு தரும் முக்கியதுவத்தை படத்தின் தலைப்பிற்கும் தருவார் போல...

Friday, February 15, 2008

பரபரப்பாய் தமிழ்நாடே பாக்குற பாட்டு

இப்போதைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே விடாம பாத்து பாத்து ரசிக்குற படப்பாடல் இது.. இனிமேல் வடிவேல் தேவையில்லை..விவேக் வேண்டாம் நகைச்சுவைக்கு.. லாரன்ஸ் ஓடட்டும்.. ராஜூ சுந்தரம் ரிட்டர்யட் ஆகட்டும்.. எங்கள் அண்ணன் சாம் அன்டர்ஸ்னின் பாடல் அசைவுகளுக்கு ஈடு கொடுக்க யாரும் உண்டோ..



வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.. இந்த பாடலை பார்த்தா நோய் எந்த ஜென்மத்திற்கும் வராது..

இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல்.. எங்கள் நண்பர்களுக்கு மத்தியில் சாம் அன்டர்ஸன் தான் ஹீரோ