Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, May 19, 2010

சென்னை குளிர்கிறது

வரப்போகிறது, விரைவில் வந்துவிடும் என்று எதை சொன்னார்களோ அது இப்போது வந்துவிட்டது என்றே நினைகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அனலாய் சுட்டெறித்த அக்னிக் கோடை, லைலா (பெயர் தான் காரணமோ) என்ற புயல் வந்து சென்ற பிறகு குளிர்கிறது. உண்மையாய் இந்த இரவு என்னால் போர்வை உதவி இல்லாமல் உறங்க முடியவில்லை. தட்ப வெட்ப சூழ்நிலை மெதுவாய் மாற ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி அனலாய் தகிக்கும் என்று நினைக்கிறேன்
பெரிய்ய்ய்ய்ய பதிவு இடமுடியவில்லை என்றாலும் இதுமாதிரி சிறிதாய் எழுதலாமென்ற எண்ணத்தில் மறுபடியும் ஆரம்பிக்கிறேன்.
எல்லோருக்கும் எனது வணக்கங்கள்

Friday, January 15, 2010

நான் தகப்பனானேன்

வாழ்க்கையின் அடுத்த அடுத்த அனுபவங்கள் மிகவும் அதிசயமானவை..ஆச்சர்யமானவை.. அப்படி எதிர்பார்த்து, காத்திருந்து, ஒவ்வொரு நாளும் கண்கள் பூத்திருந்து நிகழ்ந்தது தான் நான் தந்தையாகிய தருணம்.. நவம்பர் மாதம் 5-இல் நான் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனானேன்.. எனது ஆசையும் பெண் குழந்தை தான்.. ஆண்டவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடந்தது.. அந்த நாள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் தனிப்பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..
அதுவும் கிட்டதட்ட மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 25 நாளுக்கு குழந்தை பிறந்தது.. இப்போது தாயும் சேயும் நலம்..

பெயர் : வேதாந்திகா

விரைவில், இங்கே குழந்தையின் புகைப்படத்தையும் இடுகிறேன்.. இப்போதைக்கு ஆர்குட்-டில் இருக்கிறது..

Thursday, January 14, 2010

ஔவையார் கண்ணாடி அணிந்திருந்தாரா?

பத்து வருஷத்துக்கு முன்னால், ஒரு வீதியில் ஒரு மளிகை கடை இருக்கும். ஆனால் இன்று வீதிக்கு ஒரு பணம் வழங்கும் இயந்திரம், மருந்துக்கடை, கண் சிகிச்சை தரும் இடங்கள், மூக்கு கண்ணாடி பொருத்தி விடும் கடைகள் என்று பல்கி பெருகிவிட்டன.. இத்தனை பெருக காரணம் தொழில் நுட்பமா இல்லை நமது வாழ்க்கை முறையா என்று ஒரு நாளும் நாம் சிந்தித்தது கிடையாது. காரணம் தெரியாத காரணத்தால் முன்னோர் பழக்கங்களையும் நாம் கடைபிடிப்பது இல்லை.. இயந்தர வாழ்க்கையாகி இன்று எதற்காக என்று தெரியாமல் வாழ்கிறோம்.. எதிர்கால சமுதாயம் நம்மை விட வேகமாக உருமாறி கொண்டிருக்கிறது ஒரு தவறான பாதையில் பயணம் கொண்டு..

என்று முதன் முதலாய் கண்ணாடி அணிய மனிதன் ஆரம்பித்தான் என்று பார்ப்பதை விட ஏன் ராஜ ராஜ சோழனும், பிசிராந்தையாரும், நக்கீரரும், ஔவையாரும், மாவீரன் நெப்போலியனும், ராவணனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் அணியவில்லை என்று சிந்தனையை தட்டிவிட வேண்டும். அவர்கள் கடைபிடித்த ஏதோ ஒன்றை நாம் செய்யவில்லையா அல்லது நமது உணவு பழக்கம் இந்த அளவு தறிகெட்டுவிட்டதா அல்லது இன்றைய தொழில் நுட்பம் (தொலைகாட்சி பெட்டி, இரவு இரண்டு சக்கர மற்றும் ஏனைய வண்டிகளில் பயணிக்கும் போது எதிர் வாகனத்தின் சக்தி மிகுந்த வெளிச்சம், ஏனைய பிற)காரணமா, என்று தெரியவில்லை.. ஆனால் இப்போது சாலைகளில் நடக்கின்ற முதல் ஐந்து நிமிடத்தில் நீங்கள் ஒரு பத்து பேரையாவது மூக்கு கண்ணாடியுடன் பார்க்காமல் இருக்க முடியாது. நமது முந்தைய தலைமுறைகளை கேலியுடனும் கிண்டலுடனும், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம், நமது நாளைய சமுதாயத்தை எப்படி அமைத்திருக்கிறோம் என்று சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன 2020-இல் மூக்கு கண்ணாடி மனிதர்களின் எண்ணிக்கை ஏறத்தான் போகிறது.. இன்று ஒரு வீட்டில் ஒருவர் இருவர் என்றால் எதிர்காலத்தில் வீட்டில் எல்லோரும் தனது வாழ்நாளிற்குள் கட்டாயம் கண்ணாடி அணிவர் என்பது தான் உண்மை. சிந்திக்க தெரிந்த மனித இனம் இப்போது சிந்தனையை மறந்தோ இல்லை தன்னை பற்றிய ஒருமுக சிந்தனையுடனோ வாழ கற்றுக்கொண்டோம் என்பது தான் உண்மை. இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, சிறார்களை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் அரசாங்கம் அனுமதித்த எண்ணிக்கையிலான பள்ளிக் குழந்தைகளைத் தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று சொன்னால், அரசே எங்கள் வயிற்றில் அடிக்காதே என்று அச்சுத்தாள் அடுத்து எதிர்ப்பை காட்டுகின்றனர் அந்த வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள். இதை என்னவென்று சொல்வீர்கள் நீங்கள்?

ஒழுங்காக பயிற்சி எடுத்து முறையாக ஓட்டுநர் உரிமை வாங்கிய யாராவது ஒரு நபரை எனக்கு காட்டுங்கள்? இப்படி ஓட்டுநர் உரிமம் வாங்கியவருக்கு வாகனத்தில் உள்ள கீழ் மற்றும் மேல் விளக்குகள் (Low and High beam) எதற்காக என்று தெரியுமா? தெரிந்திருந்தால் தான் எப்போதுமே பயன்படுத்தும் உயர் சக்தி மேல் விளக்குகள் எதிர் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்குமே அல்லது அவர்களால் ஒழுங்காக வண்டி ஓட்ட முடியாதே என்று உணராமல் இருக்க மாட்டார்கள்.. இந்த பழக்கம் தொண்ணூறு சதவிகத வாகன ஓட்டிகளை விட அதிகமான நபர்களுக்கு இருக்கிறது.. அதுவும் நான்கு சக்கர ஓட்டுநர்கள் இருக்கிறார்களே யெப்பா, அப்படியே அவர்களின் கண்களை கட்டாயம் திறக்க வைத்து தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு அதே உயர் சக்தி மேல் விளக்குகளை கண்களுக்குள் பாய்ச்ச வேண்டும்.. ஒவ்வொரு முறையும் இரவு நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் இது தான் எனக்கு தோன்றும். அப்படியொரு கோபம். எதிர்காலம் நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அவதார் படம் பார்த்தவுடன் உங்கள் மனத்தில் என்ன தோன்றியது என்று உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் கேட்டதற்கு, பண்டோரா கிரகம் உண்மையில் இருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியதாக கூறியுள்ளார்கள்.. ஹ்ம்ம்.. ஒரு காலத்தில் நமது பூமியும் அப்படித் தான் இருந்தது..நாம் தான் அதனை இன்றிருக்கும் நிலைமைக்கு மாற்றியவர்கள் என்று யாருக்கு புரிகிறது.. இல்லை புரியாதது மாதிரி நடிக்கிறார்களா?

ஒன்று மட்டும் நிச்சயம்.. உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படி யாரும் உயர் சக்தி மேல் விளக்குகளை பயன்படுத்துவது இல்லை என்பது தான் உண்மை.. எப்பொழுதும் போல தம்பட்டம் அடித்தே பழகும் நாம், இந்தியா சீக்கிரம் வல்லரசாகி விடும் என்று பெருமைக்கு சொல்லிகொள்ள வேண்டியது தான்
அடுத்தது நமது உணவு பழக்கம்.. இப்போது மிக அதிகமான குழந்தைகள் நூடுல்ஸும், துரித உணவு வகைகளுக்கும் அடிமையாகிவிட்டனர். பெற்றொர்களுக்கும் நல்ல உணவு வகைகளை சமைக்கும் நேரமும் பிள்ளைகளுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை சொல்லி தந்து தொலைக்காட்சி பெட்டியின் முன் இருக்கும் நேரத்தை குறைக்கவும் கற்றுக்கொடுக்க நேரமில்லை. நேற்று மாநகர ரயிலில் ஒரு நடிகரை பற்றி விலாவாரியாக பேசத் தெரிந்த ஒரு சிறுமிக்கு, நமது பிரதமரின் பெயரைச் சொல்லத் தெரியவில்லை. மேலும் யுவராஜ் சிங், மன்மோகன் சிங், இதில் யாரு என்று கேட்டால் பளிச்சென்று யுவராஜ் சிங் என்று சொல்லும் அளவிற்க்கு இன்றைய பிள்ளைகளின் அறிவு திரைப்படங்களின் மோகத்தில் மூழ்கி கிடக்கிறது.

கீரைகள், எல்லா விதமான வண்ண காய்கறிகள் (எண்ணையூற்றி செய்யாமல், நீரில் வேக வைப்பது தான் உடலுக்கு மிகவும் நன்று) என்று தினமும் தந்து, கிழங்கு வகைகள், பழ வகைகள் எல்லாமே சரி விகிதத்தில் கலந்து சிறார்களுக்கும், எல்லோருக்கும் தரப்பட வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது வாரம் ஒருமுறையாவது வெளி உணவகத்திற்கு செல்லவில்லையென்றால் கௌரவ குறைச்சல் ஆகிவிட்டது.. கீழ் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர் தன் பிள்ளையின் பள்ளியில் எல்லோரும் வெளிஉணவகம் சென்று சாப்பிடுவதால் தானும் தன் பிள்ளைக்காக அதன் வற்புறுத்தலுக்காக அவ்வாறு செய்து வந்தார் என்பது மிகவும் வேதனையான விஷயம். அதுவும் எத்தனை உணவகங்களில் உணவுகள் சரியாக சுகாதாரமாக சமைக்கப் படுகிறது என்பது கேள்விக்குறியே. இங்கே மக்கள் எல்லா விஷயத்தையும் சுலபமாக ஏற்க பழகிவிட்டனர் என்பது முகத்தில் அறையும் உண்மை. சோம்பேறித்தனத்தால், மறு கன்னத்தைகூட காட்டாமல் ஒரு கன்னத்திலேயே ஒவ்வொரு முறையும் இவர்கள் அறை வாங்கிகொண்டே இருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை மக்களை எதையும் ரசிக்க விடாமல் அடித்துகொண்டே இருக்கிறது மாறி மாறி, ஒவ்வொரு முறை ஒரு புதிய ஆயுதம் கொண்டு.

அப்படித் தான் இந்த கண்ணாடி போடும் பழக்கமும்.. ஆறு வயதில் ஆரம்பித்து குழந்தைகள் கண்ணாடி போடும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.. அவர்களுக்கு ஏற்ப தொழில் நுட்பமும், லேசர் முறைகளால் கண்ணாடி போடும் கட்டாயத்தை குறைக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வேளை 2020-இல் அதிகம் பேர் கண்ணாடி போடுவது இந்த சிகிச்சை முறையினால் முறைந்தாலும் குறையலாம். நல்ல உணவு, முறையான முன்னோர் சொன்ன வழக்கங்களை கடை பிடித்தல் (அதிகாலையில் சூரியனை வணங்கினால் கண்குறைபாடுகள் நீங்கும் என்று தெரிந்தும் இன்னும் இழுத்து போத்திகொண்டு எத்தனை பேர் தூங்குகிறோம்..இப்படி வந்தது தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பழமொழி), முறையான வாழ்க்கை முறையினை கடைபிடியுங்கள்.. இப்படி இருந்தால் ஔவையார் வயதிலும் மூக்கு கண்ணாடியில்லாமல் வாழலாம்.

Tuesday, February 05, 2008

அமெரிக்க இந்திய உணவகங்கள் - சுகாதாரம்?

என் பிலாக் குரு பாலாஜிக்கு சான்டா கிளாரா தோசா பிலேசில் நடந்த குலோப்ஜாமுனில் பூச்சி சம்பவத்தை படித்த பிறகு, அறுபது சதவிகித இந்திய உணவகங்கள் அமெரிக்காவில் இப்படித் தான் இருக்கின்றன, என்ற என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. இப்போது முக்கால்வாசி அப்படித் தானோ என்று யோசிக்கத் தோன்றுகிறது..

கொலம்பஸ்ஸில், பனானா லீஃப் (வாழை இலை) என்ற ஒரு உணவகம் இருக்கிறது.. முதலில் ஆரம்பித்த போது மக்கள் நிறைய சென்று நல்ல வருமானம் ஈட்டியது.. கூட்டம் எப்போதும் இருக்கும்.. உணவும் சுவையாக இருக்கும்.. ஆனால் சுகாதாரம், அதற்கு பெரிய கேள்விக்குறி தான் மிஞ்சும் .அதுவும் அங்கே சமைக்கும் ஒருவர், கேரளா பாலக்காட்டுகாரர், ஆரம்பித்த புதிதில் வெள்ளையும் சொல்லையுமாக இருப்பார்.. சாப்பிட வருபவர்களை குசலம் விசாரிப்பார்.. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அவர் வெளியில் வந்து எங்களை சாப்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வந்தால் தெறித்து ஓடுவொம்.. முகத்தில் பாதி இடத்தில் தோசை மாவு இருக்கும்.. கை வைத்த வெள்ளை பனியன், காவி கலரில் இருக்கும்.. தலை முடி கண்ணா பின்னாவென்று சிதைந்து கிடக்கும்.. பார்ப்பதற்கு சமையல்காரர் போல இருக்கமாட்டார்.. இவரை பார்த்தே அந்த கடையில் கூடும் கூட்டம் குறையத் தொடங்கியது.. ஒரு நாள், ஒரு உணவுகூட ஆய்வின் போது கடையையும் பூட்டிவிட்டார்கள்.. ஒரு மாததிற்கு பிறகு கடையை மறுபடியும் திறந்தார்கள்.. அந்த பாலக்காட்டு சமயல்காரரை காணவில்லை.. இப்போது முன்னைவிட கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது..

பணம் சம்பாரிக்கத் தான் நாம் வந்திருக்கிறோம்.. ஆனால் ஓரளவிற்காவது நாம் சுத்தமாக வைத்துகொள்ளவேண்டும்.. நாயகரா சென்றபோது, அங்கே இருந்த டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்ப்பிட்ட பிறகு இனிமேல் வெளியூரில் எந்த இந்திய உணவகங்களில், அது பற்றி நன்றாகத் தெரியாமல் சாப்பிடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.. நிச்சயமாய் இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல இந்திய உணவகங்கள் இருக்கத் தான் செய்கின்றது.. இதற்கு விதிவிலக்காக அமெரிக்கர்களை அசத்தும் உணவகங்களும் உண்டு..

நியுயார்க்கில் 26வது வீதியும் லெக்க்ஷிங்டன் அவென்வியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது சென்னை கார்டென்.. சைவ உணவகம்.. சரவண பவன் அருகில் இருப்பது.. சிதம்பரத்தில் இருந்து இங்கிருக்கும் ஒரு கோவிலுக்கு வர்ணம் பூச வந்தவர், அந்த வேலை ஆறு மாதத்தில் முடிய, ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.. அதன் பிறகு, கிட்டதட்ட ஆறேழு வருடங்களுக்கு பிறகு, தனியாக இந்த உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார். அங்கு சாப்பிடும் போது அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது இந்த கதை..நல்ல வருமானம்.. உணவும் ருசியாக இருந்தது.. மூன்று நாளில் முதலிரண்டு நாட்கள் சரவண பவனில் சாப்பிட, இங்க ஒரு நாள் சாப்பிட்டோம்.. கழிவறை மட்டும் மிகவும் சிறியது.. இந்தியர்களை விட, அதிக அமெரிக்கர்களை தான் பார்க்க முடிந்தது..

இங்கு திரவியம் தேட வந்தவர்கள், சிறிது சுகாதாரம், பண்பு எல்லாவற்றையும் கற்றுகொண்டால் நல்ல பெயரும் அதிக வருமானமும் அவர்களுக்குத் தானே.. இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? புரியவில்லை...

Friday, January 18, 2008

சாலை நெரிசலை தவிர்க்க.. ஒரு எளிய வழி

சென்னை மட்டுமல்ல, எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் எட்டரையிலிருந்து ஒன்பதரை மணிக்குள் ஏகப்பட்ட நெரிசல் இருக்கும் சாலையில்.. அண்ணா சாலையில் ஒவ்வொரு சிக்னலையும் கடப்பதே பெரிய வேலையாக இருக்கும்.. பஸ்ஸில் கழைக்கூத்தாடி போல் படியில் பயணம், மின்சார ரெயிலில் வாசல் கம்பியை சுற்றி இருபது பேர் பிரயாணம்..இது தின நிகழ்வு..இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அலுவலகத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும்.. ஆனால் நமது அலுவலகத்தில் சீக்கிரம் வந்தாலும் ஆறு மணிவரை கட்டாயம் இருக்குவேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறது.. நேரத் தளர்வு கிடையாது. அதனால் சீக்கிரம் வந்து, இந்த கூட்ட நெரிசலில் சிக்காமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று நினைப்பதற்கும் தோன்றாது. எட்டு மணி நேரம் இருந்தால் போதும், கொடுத்த வேலையை முடித்தால் போதும் என்ற கொள்கை இருந்தாலும் நன்றாக தான் இருக்கும்.. ஆனால் அதற்கும் வழி இல்லை.. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அமெரிக்க வசதியும் கிடையாது.. அலுவலகத்தில் விட்டாலும் இன்னும் அந்த அளவுக்கு நமது ஊரில் நெட் வசதிகளும் பெருகவில்லை.. (நெட் கனெக்க்ஷன் புலம்பல்களை தனியாக கீதா மேடம் பதிவில் படிக்கலாம்)

மேல சொன்ன வழிகளை நிறைவேற்ற பல நாட்களும், பல விஷயங்களும் தேவைப்படும். அப்புறம் இந்தக் கதை தெரிந்தால் ஷன்கர் அவர்களுக்கு புது படத்திற்கான கதை கிடைத்துவிடும். அதெல்லாம் விட, அரசாங்கம்
நினைத்தால் நடக்கக் கூடிய இன்னொரு எளிய வழி இருக்கிறது. ஒவ்வொரு சாலைகளிலும் ஐநூறுக்கும் மேற்பட்டவர் பணிபுரியும் நிறுவனங்களுக்கு உரிமம் தரும் போதும் அந்த நிறுவனம் எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். எல்லா நிறுவனங்களின் இயங்கும் நேரமும், 8-5, 9-6, 10-7 என்னும் மூன்று நேரங்களில் ஏதாவது ஒன்றில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரே சாலையில் இருக்கும் நிறுவனங்கள் மேற்சொன்ன நேரங்களில் சமமாக பிரிக்கப்பட்டு இயங்க வேண்டும். இப்படி ஒரு ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களும் மாற்றப்பட்டால் சாலைகளில் போக்குவரத்தும் பிரிக்கப்பட்டு, நெரிசல் குறைந்து விடும். இதன் முதல் வெள்ளோட்டமாக எல்லா அரசாங்க அலுவலகத்தின் நேரங்களும் இது போல் மாற்றலாம்.

டைடல் போன்ற பெரிய வளாகத்தில் இருக்கும் நிறுவனங்கள் இது போல நேர பிரிவுகளில் உள்ளடக்கினால் அந்த வளாகத்துள் வண்டிகள் நிறுத்தும் இடங்களிலும், முக்கிய சாலையிலிருந்து அந்த வளாகத்துள் பிரியும் இடங்களும் நெரிசல் தவிர்க்கப் படும். ஏற்கனவே நிறைய பள்ளிகளின் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டுவிட்டன (அரசாங்க பள்ளிகள் தவிர்த்து) இதெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் நெரிசல் 30 முதல் 50 சவிகிதம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த அளவுக்கு இந்த உத்தி ஒத்துவரும், வெற்றிபெறும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு முயற்சியில் சற்றே சாலை நெரிசல் குறையும் என்பது எண்ணம்.. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இது மாதிரி வேற ஏதும் கருத்துகள் உங்களிடம் இருக்கிறதா? இருக்கவே இருக்கு பின்னூட்டம்.. பகிர்ந்துகொள்ளுங்களேன்

Thursday, January 17, 2008

கணக்கை மறுபடியும் திறக்கிறேன்

புத்தாண்டும் முடிந்தது, பொங்கலும் போயிடுச்சு.. ஜனவரியின் இரண்டாம் வாரம் தான் ரொம்பவும் மெதுவா, சத்தியமா, ஆமையை விட மெதுவா போச்சு.. எல்லா வருஷம் போலவும் இந்த வருஷம்.. சரியா பனிரெண்டு மணிக்கு வீட்டு சரவுண்டு சிஸ்டத்துல முருகன் பாட்டை போட்டு, புது வருஷத்தை ஆரம்பிச்சோம், நானும் என்
அறையில் இருக்கும் தம்பி மதனும்.. மற்ற நண்பர்கள் வித்தியாசமா கொண்டாடப் போறோம்னு வெளில கிளம்பிட்டாங்க.. முருகன் பாட்டு முடிஞ்சவுடன், எப்பவும் போல, நம்ம ஊர் வானொலி நிலையங்கள் செய்வது போல, சகலகலா வல்லவன் பட இளமை இளமை இதோ பாட்டு.. அவ்வளவு தான்.. எங்களுக்கு இப்படித் தான் புது வருஷம் பிறந்தது.

அப்புறம் ஊரில் இருக்கும் உறவுக்காரர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் தொலைபேசி வாழ்த்துக்கள்.. நலம் விசாரிப்புகள்.. பேசமுடியா நண்பர்களுக்கு மெயில் விடு வாழ்த்துக்கள்.. சில பேருக்கு ஆர்குட் வாழ்த்துக்கள்.. பக்கத்தில் இருப்பவர்கள், நேரில் கைகுலுக்கல்கள்.. இப்படியாக சென்றது புது வருஷத்தின் பகல்..

நான் சென்னையில் இருக்கும் போது, குமுதம் புத்தகத்தை புரட்டும் போது 'கதவை திற காற்று வரட்டும்' என்னும் ஆன்மீகத் தொடரை சுவாமி பரமஹம்ச நித்யானந்தா எழுதியிருப்பதை பார்த்திருக்கிறேன்.. பெரும்பாலும் படித்ததில்லை.. என்றாவது வேற வழியே இல்லை என்றால் படித்ததுண்டு. அவர், கொலம்பஸ்ஸில் அவரது ஆசிரமக் கோயிலை அமைத்திருக்கிறார். சிவன், பார்வதி, விநாயகர், முருகன் இரு துணைவிகளுடன், பார்க்க தமிழ்க் கோயில் போல பரவசம் தருகின்றது என்று நண்பர்கள் சொல்ல வருஷ முதல் நாள் அன்று சென்றிருந்தோம். கிட்டதட்ட இரண்டடியில் வினாயகர் கற்சிலையில் அருள் தருகிறார். சிவன், பார்வதியோடு (லிங்க வடிவில் அல்லாது உருவவடிவில் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை) வீற்றிருக்கிறார். இவரின் வலப்பக்கம் முருகன், தெய்வானை வள்ளியோடு எழுந்தருளிக்கிறார். கோயில் தமிழக கோயில்கள் மாதிரி இல்லாது, வீடு போல கோயில் அமைக்கபட்டிருக்கிறது.. அக்டோபர் 2007-இல் தான் கோயிலை நிர்மாணித்து பிரண பிரதிஸ்டை எல்லாம் செய்திருக்கிறார்கள். ஆண்டவன் அருளை பெறுவது தானே நல்ல ஆரம்பமாயிருக்க வேண்டும்..

ஒவ்வொரு முறையும் எதையாவது பதிவெழுதலாம் என்று நினைக்கும் போது, அட! இது மொக்கை பதிவாகிட்டா என்ன பண்றதுன்னு தோன்றும். ஆனா கீதா மேடத்தை பார்த்த பிறகு..ம்ம்..அதை பத்தியெல்லாம் கவலைப் பட தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது.. அப்படி எழுதியது தான் இந்த பதிவு..

Thursday, December 13, 2007

குலோப்ஜாமூனும் நானும், சுவைத்த நேரங்களும்

சின்ன வயசுல, நாலாவது படிக்கிறப்போன்னு நினைக்கிறேன்.. காலைல தூங்கி எழுறப்போ, சட்டையெல்லாம் ரத்த திட்டுகளா இருக்கும்.. எல்லாம் சில்லு மூக்கு உடையிறதுனால அப்படின்னு சொன்னாங்க.. மத்தவங்களுக்கு ஏதாவது மேல மோதினா வர்ற மாதிரி நமக்கு இல்லை.. தானா உடையும்..ஒரு தடவை என்னோட பள்ளி வெள்ளை சீருடை கூட இது மாதிரி ரத்தம் பட்டு மறுபடியும் அணிய முடியாதமாதிரி ஆகிடும்.. அடிக்கடி அப்படி நடக்க, பயந்துகிட்டு டாக்டர் கிட்ட காமிச்சாங்க.. அவர், அவர் கல்லா நிரம்ப, தினமும் ஒரு ஊசின்னு பத்து நாளைக்கு ஒரு ஊசி போடணும்னு சொன்னார்.. திண்டுக்கலில் அந்த கிளினிக் எனது பள்ளியின் அருகிலே இருந்ததால் எனக்கும் வசதியா போய்விட்டது. தினமும் மதியம் சாப்பாடு முடிந்த பின், நானும் எனது நண்பர்களும் பொடிநடையாக நடந்து சென்று அந்த டாக்டரிடம் ஊசி போட்டுவிட்டு வந்தோம்.. இப்படி தினமும் செல்வது பெரிதாக இல்லையென்றாலும், தினமும் அந்த டாக்டரிடம் பத்து ரூபாய் கொடுப்பது எங்களுக்கு கடுப்பாகியது. நானும் என் நண்பர்களும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். தனி புரட்சி படையே உருவானது.. டாக்டர் எப்படி இப்படி கொள்ளை அடிக்கலாம்.. என்று அவரை வம்புக்கு இழுத்தோம்.. அப்போது ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் எதுக்கு டாக்டருகிட்ட போகணும்னு நாங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்து முடிவெடுத்தோம்.

அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு ஹோட்டலா ஏறி இறங்கினோம். வேற எதுக்கு குலோப்ஜாமூன் சாப்பிடத் தான். அப்போ இருந்த நண்பர்கள்ல பல பேருக்கு குலோப்ஜாமூன்னா அவ்வளவு உசுரு.. அதனால எல்லாக் கடையிலும் மிச்சம் இருக்க ஐந்து நாள்ல குலோப்ஜாமூன் டேஸ்ட் பண்ணிடணும்னு முடிவெடுத்து படையெடுத்தோம்.. எங்களது புரட்சிப்படை குலோப்ஜாமூன் வேட்டைக்காக கிளம்பியது. இப்படித் தான் குலோப்ஜாமுடன் என் உறவு ஆரம்பமானது.. அப்படி படிக்கும் காலங்களில் இது போன்ற சுவை மிகு பதார்த்தங்கள் சாப்பிடுவது மிகவும் குறைவு. ஏதாவது கல்யாண வீடுகளில் சாப்பிட்டால் உண்டு.

சென்னைக்கு வந்த பிறகு, அடிக்கடி குலோப்ஜாமூன் சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது.. பஃபே மாதிரி சென்றுவிட்டால், வாடா தங்கங்களா என்று இரண்டு கப்பில் பத்து குலோப்ஜாமூனை எடுத்து வருவேன்.. மெயின் ஐயிட்டங்களை ஒரு பிடிபிடித்தாலும், வயிற்றில் எப்போதுமே இவைகளுக்கு தனி இடம் உண்டு. அதுவும் சில சமயம் நண்பர்களோடு போட்டி போட்டு எண்ணிக்கை அளவு தெரியாமல் சாப்பிட்டதுண்டு.

நான் அமெரிக்கா வரும் வரையில், நானும் குலோப்ஜாமூனும் அவ்வளவு நண்பர்கள். வாயோடு வாயாக பழகியவர்கள்.. இங்கே வந்த பிறகு, புதியதாய் ஒரு பழக்கத்தை கற்றுக்கொண்டேன், டயட் என்னும் பெயரில். அதன் பிறகு எதை சாப்பிட்டாலும் மட மடவென்று மனசு கலோரி கணக்கு போட ஆரம்பித்து விடுகிறது. நான் மட்டுமல்ல என்னை சுற்றியிருக்கும் பெரும்பாலானவர்கள் இதை தான் செய்கிறார்கள். இப்படியான, கலோரி கணக்கு பார்க்கும் காலங்களில் குலோப்ஜாமூனை ஒன்றோ இரண்டோ என்று தான் சுவை பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயம் அது இருக்கும் திசை பார்த்து சப்பு கொட்டிவிட்டு எதையும் சாப்பிடாமல் செல்வதும் உண்டு. அமெரிக்க உணவு வகைகளில் ஒரு சின்ன சாக்லேட் எடுத்தால் கூட, அது எதனால் ஆனது, அதில் கொழுப்பு எவ்வளவு, புரதசத்து எவ்வளவு என்று அக்கு வேறு ஆணிவேராக போட்டிருப்பார்கள். ஆனால், நமது இந்திய உணவுகளில் இது அந்த அளவுக்கு விஷயங்கள் இருப்பதில்லை.. ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொழுப்பை குறைக்க பத்து நிமிஷம் ஓடவேண்டும் என்று நண்பனொருவன் பத்து குலோப்ஜாமூன்களை சாப்பிட்டுகொண்டே சொன்னது, அவ்வப்போது ஞாபகத்திற்கு வரும்.

சமீபத்தில் இங்கே வந்த நண்பன் ஒருவனுக்கு, குலோப்ஜாமூன் செய்வதென்றால் அவ்வளவு பிரியம். தீபாவளிக்காக எங்கள் டீமில் நடந்த கூட்டாஞ்சோறுக்காக (பாட்லக்) விடிய விடிய குலோப்ஜாமூன் செய்தவன். யாராவது சும்மா, எங்கே எனக்கு ஜாமூன் என்றால் அடுத்த நாளே கையில் ஜாமூனுடன் வந்து நிற்பான் இவன்.. பாருங்கள், சாப்பிட கணக்கு பார்க்காத காலங்களில் கையில் குலோப்ஜாமூன் இல்லை.. இப்போ கையில் அடிக்கடி கிடைத்தும் சாப்பிட முடியவில்ல.. அட ஆண்டவா..

Monday, December 10, 2007

மலர்களே மலர்களே - PIT புகைப்பட போட்டி

இந்த மாத போட்டிக்கு, மலர்கள் என்று தலைப்பு தந்திருக்கிறார்கள், PIT ஆசிரியர்கள். அமெரிக்காவில் இப்போது, இந்த பனிக் காலத்தில் பூக்களை பார்ப்பதே அரிது. அதனால் நான் முதன் முதலாக கெனான் ரிபல் வாங்கிய சமயத்தில், ஐம்பது நாட்களுக்கு முன்னர் எடுத்த படங்களை பிற்தயாரிப்பில் சற்று மெருகேற்றி போட்டிக்கு சமர்பிக்கிறேன்..




கடந்த மாத சாலைகள் தலைப்பு போட்டியில் முதல் பத்து படங்களில் ஒன்றாக நமதின் இரண்டாம் படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு நன்றி.

Monday, November 19, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 6

நீண்ட நாட்களாய் எழுதாமல் பாதியில் விட்ட இந்த தொடரை மீண்டும் தூசி தட்டு, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...

ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... -
இரண்டாம் பகுதியிலிருந்து...

பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...

சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...

பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். -
ஐந்தாம் பகுதியிலிருந்து


துரத்தி ஓடி வந்தவர்கள், இந்தப் பக்கம் யாராவது ஓடினார்களா என்று எங்களைப் பார்த்து கேட்டார்கள்.. என் நண்பன் கத்தி குத்துபட்டு ஓடியவன் சென்ற திசையை காட்டினான்.. அவர்கள் நான்கு பேரும் அந்தப் பக்கம் ஓட ஆரம்பித்தனர்.. எங்களுக்கெல்லாம் பயங்கர கோபம் வழி சொன்ன நண்பன் மீது.. எங்கள் கோபத்தை புரிந்து கொண்ட அவன், "டேய்! பூச்சியை மாதிரி என்னை பாக்காதீங்கடா... கத்தியில குத்து வாங்கினவர் அங்க இருக்க பாலத்துக்கு கீழ ஓளிஞ்சுகிட்டார்.. அதனால தான் நான் வழி சொன்னேன்..அங்க பாருங்க அந்த நாலு பேரும் அந்த பாலத்தை தாண்டியே போயிட்டாங்க" என்று சொன்னவன், வாங்கடா, நாம வேற வழில ரூமுக்கு சீக்கிரம் போயிடலாம்" என்று எங்களை அவசரப்படுத்தினான்.. அறைக்குள் நுழைந்த பின்னும் ஒருவித பதட்டமும், குத்து பட்ட அந்த ஆளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற கவலையும் இருந்தது எங்களுக்கு.

எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்த போது அவ்வப்போது திடீர் பெண்கள் நடமாட்டமும், பக்கத்து அறைகளில் கண்ணாடி டம்ளர்களின் (பின்னாளில், அவைகள் பயன் படுத்திய பின், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள்) ஓசைகள், சிரிப்பும் கோபம் கலந்த பேச்சுகளுமாய் எதிரொலித்தது. முக்கால்வாசி நாட்களின் இரவுகள் இப்படித் தான் கழிந்தன.. நாங்கள் அப்போது வேலை தேடும் மும்மரத்தில் இருந்ததால், இதை பற்றியெல்லாம் ரொம்பவும் சட்டை செய்ததில்லை.. இரவு நேர சாப்பாடாய், கையேந்தி பவனில் முடித்த பின், அறைக்குள் நுழைந்து விட்டால், அன்றைக்கு நடந்த விஷயங்கள் பற்றிய அரட்டையும், கையில் சீட்டு கட்டுடன் நடு இரவு வரை சீட்டாட்டமும் தொடரும்.. வார இறுதிகளில் திருவல்லிக்கேணியில் இருக்கும் தியேட்டருக்கோ (தியேட்டரின் பெயர் மறந்து விட்டது), இல்லை தேவி, சாந்தி, சத்யம் தியேட்டர்களில் ஏதேனும் படங்களுக்கோ செல்வாதாய் கழிந்தது.. அதுவும் தேவி தியேட்டரில், பிளாக்கில் டிக்கட் விற்கும் பெண்கள், டிக்கட் தரும் நபரிடம் அக்கவுண்ட் வைத்திருந்ததை பார்த்தவுடன் எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. மொத்தமாக பத்து இருபது டிக்கட்டுகள் இது மாதிரி அக்கவுண்ட்டில் வாங்கி சென்று அதை இருபது, முப்பது ரூபாய் அதிகமாய் விற்று அந்த கடனை அடைப்பதாய் அவர்களின் வேலை சென்று கொண்டிருந்தது.,. இதற்கு தியேட்டருக்கு மிகவும் தாமதமாக வரும் குடும்பத்தினரை (பொதுவாக, எல்லோரையும்)சொல்லவேண்டும்.. டிக்கட் கொடுக்க ஆரம்பித்த பின்னர் தான் அவர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள்.. அதுவரை வந்தபின், அவ்வளவு பெரிய வரிசையில் நிற்பதுவும் இயலாத காரியம்.. தியேட்டர் வரை வந்த பின்னர், படம் பார்க்காமல் செல்வதுவும் இழுக்கு.. கடைசியில் கணவனின் வியர்வை, டிக்கட்டை பிளாக்கில் விற்கும் நபரின் வியர்வைக்காக, சினிமா டிக்கட்டாய் தியேட்டர் வாசலில் கிழியும்.. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் சத்யம் தியேட்டரில் இது போன்ற இடைஞ்சல்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.

2002, ஏப்பிரல் மாதம் 13ந்தேதி, திருவல்லிக்கேணி தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்துகொண்டிருந்தோம்.. கலைவாணர் அரங்கத்தின் வழியாகத் தான் புதிய விடுதிக்கு செல்வோம்.. அப்படி செல்கையில் கலைவாணர் அரங்கத்தின் வாயிலில் வண்ண தோரணங்கள் எல்லாம் கட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் செல்ல செல்ல, அங்கிருந்தவர், எங்கோ பார்த்த ஆள் மாதிரி தெரிந்தது.. அட! நம்ம(!) சாபு சிரில்.. பாய்ஸ் படத்தின் பட பூஜை விழாவிற்காக அலங்கார வளைவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள் அவரது குழுவினர்.. எங்களுக்கோ இன்ப அதிர்ச்சி.. இவரையாவது சென்னையில் இருப்பதற்கு நேரில் பார்க்க முடிந்ததே என்று எனக்கு மகிழ்ச்சி.. (மற்றவர்கள் எம்.எல்.ஏ விடுதியில் நடந்த காதல் அழிவதில்லை படத்தின் படப்பிடிப்பை பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியவர்கள்) பக்கத்தில் சென்று அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திகொண்டோம்.. அவசரத்தில் என் நண்பன் பூபாலன் சினிமா டிக்கட்டிலும், கிச்சா ஒரு சிறிய டைரியிலும் கையெழுத்து வாங்கி கொண்டார்கள்.. (என்னிடம் அது கூட இல்லை அந்த நேரத்தில்) அந்த கையெழுத்தை போட்டுவிட்டு "இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. இன்னமும் அந்த சினிமா டிக்கட்டும் டைரியும் அவர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஹேராமின் கல்கத்தா கலவரத் தெரு, கன்னத்தில் முத்தமிட்டாலின் உடைந்த படகு என்று நமக்கு தெரிந்த அவரின் கைவரிசைகள் பற்றி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அவரும் எங்களை பற்றி விசாரித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அவரிடம் பேசிவிட்டு உள் நுழைந்தால், நடிகர் கமலஹாசனின் (முன்னாள்) மனைவி சரிகா நின்று கொண்டிருந்தார். இவர் தான் பாய்ஸ் படத்தின் உடையலங்கார நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடம் சென்று பேசுவதற்கு என்ன இருக்கிறது (ஏன் கமலுக்கும் உங்களுக்கும் சண்டை என்று கேட்பதை தவிர) என்று நினைத்துகொண்டு நாங்கள் எங்களின் அறைக்கு சென்று விட்டோம்.

மறு நாள், தமிழ்ப் புத்தாண்டு.. ஆங்கில புத்தாண்டில் தண்ணியடிக்க இருக்கும் சௌகரியம் தமிழ் புத்தாண்டில் இல்லை.. அன்று கோவிலுக்கு செல்வது தான் முக்கிய விஷயம் போல.. ஒரு நாள் விடுமுறை, சில திரைப்படங்கள் ரிலீஸ் என்று தான் இருக்கப்போகிறது.. ஜனவரி 1 அன்று இருக்கும் சந்தோசம், குதியாட்டம் எதுவும் ஏப்பிரல் 14-இல் ஏனோ இருப்பதில்.. இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த நாள் மறக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.. இது தான் எங்களுக்கு இடையில் முக்கியமான விவாதமாய் இருந்தது அன்று.. தூங்கி எழுந்து, வாலஜா ரோட்டில் இருக்கும் கடையொன்றில் காபியும், தி ஹிந்துவும் வாங்கி வர சென்றோம், நானும் கிச்சாவும். கலைவாணர் அரங்கத்துள் வந்தால் எங்கு பார்த்தாலும் கொடியும் தோரணமும்.. வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்..அட..இன்னைக்கு பாய்ஸ் பட துவக்கவிழா என்பதே மறந்திடுச்சு என்று கூட்டத்தை பார்த்துகொண்டே நடந்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வருக! வருக! என்று பேனர் கட்டப்பட்டிருந்தது.. அட! நம்ம தலைவர் வர்றார்..சொல்லவே இல்லியே யாரும்.. காலை காப்பியையும் ஹிந்துவையும் மறந்தோம்.. கூட்டத்தோடு கூட்டமாக நின்று, வருவோர் போவரையெல்லாம் பார்த்துகொண்டிருந்தோம்.. சத்யராஜ், கார்த்திக், என பலர் காரை விட்டு இறங்கி உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். படத்தை குத்து விளகேற்றி துவக்க ஜோதிகா என்று கூட்டத்தில் யாரோ சொல்ல, ஆஹா.. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று மெல்ல முண்டியடித்து கூட்டதுக்குள் நுழைந்தோம்..

சிவப்பு நிற டி-ஷர்டும், கறுப்பு பேண்டும் அணிந்து ஜோதிகா.. அட அட அடடா.. இதுவல்லோ பாக்கியம் என்று நானும் கிச்சாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துகொண்டோம்.. ரஜினி வருவாரா என்ற ஆவல் பல மடங்கு எகிறியது.. அவரது கார் வந்தது..அவர் வெள்ளை வேஷ்டி, சட்டையில் வந்திருந்தார்.. பாபா முக வெட்டில் இருந்தார்.. சரியாக பார்ப்பதற்குள் "வாம்மா..மின்னல்" வேகத்தில் நுள்ளே நுழைந்துவிட்டார்.. எங்கள் இருவருக்கும் பயங்கர கவலை.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு(?) நின்று ரஜினியை ஒழுங்கா பார்க்க முடியவில்லையே என்று.. அப்போது தான் எங்களுக்கு அந்த இனிய அதிர்ச்சி கிடைக்கும் செய்தி கேட்டது..

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Monday, November 12, 2007

புகைப்பட போட்டிக்கான சாலை படங்கள்...

தமிழில் புகைப்படக்கலைக்கு முக்கியத்துவம் தந்து, அதில் ஆர்வம் உள்ள அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் பொருட்டு, மாத மாதம் புகைப்பட போட்டி நடத்தி வருகின்றனர்.

இப்போது தான் நான் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தாலும், முயன்று பார்க்கலாமேன்னு இதோ போட்டிக்கான என் படங்கள்..

வாஷிங்டன் மாநகர பிரமாண்ட வீதி...




கொலம்பஸ் நகர ஸ்கியாட்டோ நதியின் கரையில்...



படத்தின் மீது குட்டினால் இன்னும் பெரியதாக படம் விரியும்.

Wednesday, October 24, 2007

மிலிட்டரி மாமா

இராணுவம் என்றால் மனசுக்குள் ஒரு தேசப்பற்றையும் அவர்களின் தியாக உணர்வையும் வீரத்தையும் என் சின்ன வயசில் என் மனசில் விதைத்தது, என் அப்பாவின் பள்ளி கால நண்பரும், சொந்த முறைகளில் மாமாவுமான சின்னையா மாமா தான். சத்யராஜ் உயரம்.. நல்ல ஆஜாகுபாவான உடம்பு.. ஆனால் மனசு இவருக்கு நிஜமாகவே குழந்தை தான்.. என் மீதும் என் தங்கையின் மீதும் அவ்வளவு பாசமாக இருப்பார்.. தனது பெரிய குடும்பத்தை (மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்) விட்டு எப்படி காஸ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மொத்தமாக இருபது வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். எங்கள் ஊரில் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் எல்லோரும் அவரை பாசமுடனும் மரியாதையுடனும் கேப்டன் சின்னையா என்று தான் அழைப்பார்கள்.

அவர் ஒரு இரண்டு வருட காலங்கள் பெங்களூர் இராணுவ முகாமில் இருந்த போது (அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக்கொந்டிருந்திருக்கலாம்) அரையாண்டு தேர்வு கால விடுமுறைகளில் ஒரு வார காலம் அவருடன் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை படங்களின் மூலமே இராணுவ முகாம்கள் பார்த்து வந்த எனக்கு அந்த பயணம் மிகவும் ஆச்சர்யத்தையும் அவர்கள் மீதான ஒரு மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களூர் குளிரிலும் அவர்கள் அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் பயிற்சி எனக்கும் அவ்வளவு காலையிலே எழுந்து உடல் பயிற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசைய அப்போதே உருவாக்கியது.. அவர்களுக்கு தினமும் ஒவ்வொரு மாநில மொழி திரைப்படங்கள், தனியாக வரிகள் இல்லாத கேண்டீன் (என் மாமா வாயிலாக சில பொருட்கள் வரிகள் இல்லாமல் எங்கள் வீட்டிற்குள் வந்ததும் உண்மை) எப்படி எத்தனையோ சலுகைகள் உண்டு.. உள்ளேயே, இராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்க பள்ளிகளும் இருந்தன. அந்த ஒரு வாரம் எனக்குள் அப்படியோரு மாற்றத்தை தந்தது.. (ஆனால், அந்த வளாகத்தை விட்டு வெளியே இருக்கும் உலகம் இது எதை பற்றியுமே, கார்கில் மாதிரி போர்க்காலங்களைத் தவிர, கண்டுகொள்ளாமல் இருப்பதென்னவோ உண்மை தான்)

நான் சென்னைக்கு வேலைக்கு வரும் சமயத்தில், என் மாமா இராணுவத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று, ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். தினமும் ஊரில் கூட காலையில் எழுந்து ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் ஊரில் இருக்கும் பொழுதுகளில் அவர் கூட சேர்ந்து ஓடியிருக்கிறேன்.. நான் வேலைக்கு சென்ற புதிதில், அவர் பயன்படுத்திய டை எல்லாம் எனக்கு கொடுத்து உதவினார். எப்போது டை கட்டினாலும் அவர் நினைப்பு எனக்கு வராமல் இருந்ததில்லை.. ஊர் கோயிலில் சாமிக்கு திருவிழா எடுக்கும் போது இரண்டு குழுவிற்கு இடையில் பிரச்சனை வந்தபோது இவரும் ஒரு ஆளாக இருந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி தந்தார் இரண்டு வருடமாக. திண்டுக்கலில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தன் மகன்களுடன் நிர்வகித்து வந்தார்..

இங்கே வந்த பிறகு ஒரு முறை அவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.. இரண்டு வாரங்களுக்கு முன்னால், எப்போதும் என் வீட்டிற்கு தொலைபேசினேன்.. அப்போது அவர்கள் சொன்ன செய்தி, ஒரு டன் விறகுகளுக்கு இடையில் சிக்கியதாய் என் இதயம் வலித்தது. குடும்ப பிரச்சனை காரணமாக (இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) திண்டுக்கலிலிருந்து வீட்டிறு தனது இரண்டாவது மகனுடன் வந்த போது, வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த பிரச்சனை நடந்த போது அந்த வழியாக வந்த எங்கள் ஊர் பஸ்ஸிலிருந்தவர்களால் கூட இவர் காப்பாற்ற முடியவில்லை.. இரண்டு மூன்று நாட்களுக்கு நினைப்பெல்லாம் அவராகவே இருந்தது.. என்னடா வாழ்க்கை என்று கூட பல சமயங்களில் என்னை சலிக்க செய்தது.. ஒரு இரணுவ வீரராக அவர் இருந்த காலத்திலே இறந்திருந்தாலோ, இயற்கையாக இறந்திருந்தாலோ இந்த பாதிப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.. கனத்து போயிருந்த இதயத்தை அவர் ஞாபகமாக தந்து விட்டு போன டைகளை தடவி பார்த்து ஆற்றிக்கொண்டேன்..

Monday, October 22, 2007

ஒரு பயணக் குறிப்பும் சில நன்றிகளும் 1

மாதமொருமுறை சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் காலங்களில், சென்னை வந்த புதிதில் பேருந்தில் தான் செல்வேன் (அதன் பிறகு ரயிலில் செல்வது வழக்கமாயிற்று) பெரும்பாலும் அரசு பேருந்துகள் தான். கட்டணங்கள் குறைவு என்பதால் அதை பட்டியலின் முதலில் வைத்திருப்பேன். தனியார் சொகுசு பேருந்துகளை போல, அந்தந்த மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தின் தொலை தூர பேருந்துகள் நன்றாகவே இருக்கும். முக்கியமாக அரசு விரைவு பேருந்துகளை விட இவைகள் பயணிக்க சொகுசாக இருக்கும். பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும். தனியார் பேருந்துகளைப் போலவே அரசு பேருந்துகளிலும் இப்போதெல்லாம் டிவிப் பெட்டிகள் வைத்து படங்கள் ஓட்டுகின்றனர். (தற்போது தனியார் வண்டிகளில் இந்த சௌகரியம் இல்லை என்று நினைக்கிறேன்) இந்த மாதிரி இரவு நேர பேருந்துகளில், பயணிகள் எல்லோரும் தூங்கின பிறகு, எந்த அளவு கண்முழித்து அந்த ஓட்டுநர் கஷ்டப்பட்டு அந்த வண்டியை, அத்தனை பேரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வண்டியை ஓட்டியிருக்க வேண்டும்? (அதற்கு தான் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை இங்கே ஒரு கருத்தாக எடுத்துகொள்ளத் தேவையில்லை என்று நினைகிறேன்) அதுவும் இரண்டு மூன்று மணிக்கெல்லாம் அப்படியொரு தூக்கம் கண்களை தழுவும்.. அடிக்கடி சொக்கி நம்மை விழவைக்கும்.. அதையெல்லாம் பொறுத்துகொண்டு ஓட்டுவது எவ்வளவு சிரமம்? இதையெல்லாம் நான் அந்த வண்டிகளிலே பயணிக்கும் போது கொஞ்சம் கூட நினைத்ததில்லை.. அதுவும் நினைத்த நேரத்தில் இடம் சென்று சேர முடியவில்லை என்றால், எத்தனையோ பேரோடு நானும் அந்த ஓட்டுநரை மனதால் சபித்திருக்கிறேன். (அமெரிக்காவில் ஓடுகின்ற தொலைதூர பேருந்துகள் ஒவ்வொரு ஆறு\எழு மணிநேர பயணத்திற்கும், இரண்டு மணி நேர ஓய்வு எடுப்பது வழக்கம் என்று பயணித்த நண்பர்கள் சொல்லக் கேள்வி)


இந்த சனி ஞாயிறு கிழமைகளில் என் தங்கையை (சித்தி பெண்) பார்க்க விஸ்கான்ஸினில் உள்ள மில்வாக்கி நகரம் சென்றிருந்தேன். கிட்டதட்ட ஏழரை மணி நேர பயணம்.. தனியாளாக கார் ஓட்டி சென்றேன்.. அப்போது தான், என்னை இது வரை சுமந்து சென்ற பேருந்தின் ஓட்டுநர்கள் தெய்வங்களாக கண்முன்னே தெரிந்தார்கள்.. அதுவும் சொகுசான சாலைகள்.. சொன்னபடி கேட்கின்ற புது வண்டிகள் (நான் ஓட்டி சென்றது ஏழு பேர் உட்காரக்கூடிய கிரைஷலர் டவுன் கன்ட்ரி.. மில்வாக்கியில் இருக்கும் தங்கை நண்பர்களோடு சிகாகோ செல்லும் திட்டம் இருந்ததால் பெரிய வண்டியாக எடுத்துக்கொண்டேன்) என்ற சாதகங்கள் இருக்கும் இடத்திலேயே ஏழு மணி நேர பயணம் அலுப்பை கொடுத்தது. நிச்சயமாக, இப்படிப்பட்ட நெடுந்தூர வண்டிகளை இயக்கும் எண்ணற்ற ஓட்டுநர்களுக்கு (குறிப்பாக இந்தியாவில்), இதுவரை நன்றி மனதினுள் கூட சொல்லாமல் இருந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.. அவர்களுக்கு இந்த பதிவின் என் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

இந்த பயணத்தில் என்னுடன், எனக்கு ஆதரவாக என்னுடன் பயணித்தது இசை தான்.. இசையினால் எந்த அளவுக்கு துணையாக, ஆறுதலாக இருக்க முடிகிறது என்பதை கண்கூடாக அனுபவித்து கொண்டேன். எண்பதுகளில் வந்த கொண்டாட்ட பாடல்கள் தனிவகை.. காக்கிச் சட்டை சிங்காரி சரக்கு, சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் மனதிற்கு அவ்வளவு தெம்புகளையும்
உற்சாகத்தையும் தந்தது என்றால் அது மிகையில்லை.. இப்படி குத்தாட்ட பாடல்கள் ஒருவகை என்றால், மனதை மயிலிறகால் வருடும் இளையராஜவின் மெல்லிசை அடுத்த வகை.. ஒரு இசைத்தட்டு முழக்கம் மிகுந்ததாவும், அடுத்தது இப்படி மெல்லிசைகளுமாய் கேட்டவாறே என் பயணம் அமைந்தது..

இப்போது இங்கே இலையுதிர்காலம் என்பதால், மரங்கள் எல்லாம் வண்ணம் மாறி, அருமையாய் தெரிந்தன.. ஒவ்வொரு காட்சிகளும், வண்ண இலைகள், மரம் முழுவதும் இத்தனை பூக்களா என்று வியக்க வைத்து, கண்ணை வாரிச் சென்றது.. விஸ்கான்ஸின், இல்லினாய்ஸ் மாநிலங்களை விட, வடகிழக்கே வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலங்களை இந்த இலையுதிர்காலத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேள்வி.. இந்த முறையும் அங்கெல்லாம் சென்று மகிழ, கொடுத்து வைக்கவில்லை எனக்கு.. நானிருக்கும் ஒஹாயோவில் இப்போது தான் மெல்ல இலைகள் உருமாறி, மாறியவைகள் மரத்தை வண்ணமடித்தது போதும் என்று தரையெல்லாம் வண்ணமடிக்க உதிர்ந்து கொண்டிருக்கின்றன..

இதையெல்லாம் சேமித்து வைக்க என் மூன்றாவது கண்ணை இன்னும் திறக்க வில்லை.. திறந்த பின், சில நிழற்படங்களை (டிஜிட்டல் யுகத்தில் நிழற்படம் என்று சொல்லலாமா) இங்க உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.. பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்களின் கருத்துகள், குடுவையின் கீழ் இருக்கும் தண்ணீரை பருக கற்களை ஒன்றன்பின் ஒன்றாக இட்ட காக்கைகு உதவியதாக இருக்கும்.

எனது பழைய பதிவுகளுக்கும் சென்று, படித்து பின்னூட்டமிட்ட சேதுக்கரசிக்கும் என் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

Wednesday, October 17, 2007

மூன்றாவது கண்

என்னடா திடீர்னு பரமசிவன் மாதிரி பதிவெல்லாம் போடுறியேன்னு நினைக்காதீங்க.. புதுசா ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கியிருக்கேன்.. நான் ஒரு கேமரா வாங்க வேண்டும் என்று நினைத்த பிறகு எதை வாங்கலாம்னு ஒரு குழப்பதுல இருந்தப்ப, இருள் தேசத்தில் டார்ச் அடிச்சு வழி சொன்னவங்க நீங்க.. உங்க ஆலோசனையெல்லாம் கேட்ட பிறகு, கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ வாங்கலாம்னு முடிவு பண்ணினேன்.. கொஞ்ச நாட்களுக்கு முன், நல்லதொரு பேரம் கிடைத்ததால் அதை வாங்கியும் விட்டேன்.. இப்போ எங்க போனாலும் நம்ம தோளுல அது தான் சவாரி செய்யுது.. சுகமான சுமை.. ஏற்கனவே தருமி மாதிரி நாம எடுக்குற புகைப்படங்கள் நல்லாயிருக்குன்னு நம்மளை உசுப்பேத்துற மக்கள் இங்க அநேகம்.. இப்போ இதையும் தோளுல தூக்கி சுமக்க ஆரம்பிச்சதிலிருந்து, நம்ம வீடு பால் காய்ச்சுறோம்.. கொஞ்சம் வந்து போட்டோ எடுத்து தரமுடியுமான்னு மக்கள் கேட்க அராம்பிச்சுட்டாங்க.. ஆயிரம் பேரை கொன்னாத் தான் அரை வைத்தியன் மாதிரி, பத்தாயிரம் போட்டோ எடுத்தா தான் அரை போட்டோகிராபர்னு நம்ம பள்ளிகூடத்துல சொல்றாங்க.. இப்பத் தான் நாம பள்ளில 'அ'னா போட ஆரம்பிச்சிருக்கேன்.. பார்ப்போம், பட்டப்படிப்பு வரை போகமுடியுதான்னு..

அதனால, இனிமேல் அடிக்கடி நாம எடுத்த படங்களை போட்டு உங்களுக்கு சோதனை தரப் போறேன்.. அதுக்கிடையில் வேலைகள் சற்று குறைவாக இருப்பதால், மறுபடியும் நம்ம எழுத்துப் பணியை தொடரலாம்னு நினைக்கிறேன்.. அப்பப்போ உங்க பக்கங்கள்ல நான் தலை காட்டி வந்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவு காட்டி வரும் நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி

நம்ம பிளாக் மக்கள் எல்லோரும் ஒண்ணா கூடி, புகைப்படக்கலைக்குன்னு தமிழ்ல ஒரு தனி பக்கம் ஆரம்பிச்சு, புதிய நுணுக்கமான தகவல்கள், போட்டிக்கள்னு பட்டையை கிளப்புறாங்க.. உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் இந்த பக்கத்தை மேயலாம்.. இந்த பிளாக் பக்கத்திற்கு நான் கியாரண்டி :)

வாங்கின கேமராவை பற்றி (ராம்கி கேட்டதிற்காக):

மாடல் பெயர் : கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ\EOS 400 with 18-55 mm Lens
விலை : $674 (No Tax, Free Shipping)
வாங்கிய இடம் : US1photo.com

சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:







Wednesday, August 15, 2007

விடுதலை சிந்தனைகள்

எல்லோரும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்திடனும். நம்ம பள்ளியில தேசிய கொடியேத்தி, மாறுவேடப்போட்டி நடக்கும்னு பள்ளியின் காலை வழிபாட்டில் தமிழாசிரியர் அறிவித்தார்.. வகுப்புக்கு போனவுடனே வகுப்பு ஆசிரியை, நாளைக்கு வருகை பதிவு எடுப்பேன்.. வராதவங்களுக்கு தனியா தண்டனை கொடுப்பேன்.. எல்லோரும் நாளைக்கு காலைல வந்திடுங்கன்னு சொன்னார்.. இப்போதைய சுதந்திர தின கொடியேற்ற நிகழச்சிகள் இப்படித் தான் வலுக்கட்டாயமாக மாணவர்களை வரவைத்து நடத்தப்படுகின்றன. உள்ளத்தில் விடுதலை வேட்கையும் எழுச்சியையும் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் முதல் நம்மை சுற்றியிருக்கிற எல்லோரும் உருவாக்கத் தவறிவிட்டனர்.

அரசு விடுமுறை நாள் கிடைத்தால், விருப்பமான நேரத்தில் காலையில் எழுந்து, தொலைக்காட்சியில் போடுகின்ற நிகழ்சிகளை பார்த்து விட்டு அப்படியே சோபாக்களில் மறுபடியும் ஊறங்கிப்போகும் வழக்கம் என பாரதி சொன்னது வீணிலே அழிகின்றனர் பலர். சிறுவனாக இருக்கும் காலத்திலேயெ இதெல்லாம் அவர்களின் மனதிலே வாழைப்பழத்திலே ஊசி ஏற்றும்விதமாக செய்யப்பட்டிருக்கவேண்டும்.

எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைபள்ளியும் உண்டு. விடுதலை திருநாளின் அன்று, காலை எல்லோரையும் வரவழைத்து கொடியேற்றி, ஊர்வலம் வருவார்கள், கோஷங்கள் முழக்கமிட்டு, கையில் மூவர்ண கொடிகளுடன். அந்த சிறு வயதிலே அவர்கள் அந்த கோஷங்கள் சொல்வதிலும், கொடிகளை ஏந்துவதிலும் அப்படி ஒரு ஆர்வம் இருக்கும். இப்படி பட்டணத்தில் இருக்கும் எத்தனை பள்ளிகள் செய்கின்றன.. பெரும்பாலான பள்ளிகள் விடுதலை நாளன்று கொடியேற்றுகிறதா என்பதே சற்று சந்தேகம் தான். இந்த சிறார்கள் அப்படி ஊர்வலம் சுற்றி வருகையிலே, அவர்கள் பெற்றோர்கள் கொள்ளும் சந்தோசத்தை வார்த்தையில் சொல்ல இயலாது. அன்றைக்கு, தாங்கள் தின்பண்டங்கள் வாங்க வைத்திருக்கும் காசில் கொடி வாங்கி நெஞ்சினில் குத்திகொண்டு அவர்கள் பள்ளிகள் நோக்கி செல்லும் போதும், பார்ப்பவர்களுக்கே சற்று தேசியபற்றின் அளவு மனதில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.

ஏதோ இராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் தேசியப்பற்று இருக்க வேண்டுமென்று எல்லைகள் வகுக்கப்பட்டதை போல் எல்லோரும் வாழ்கிறார்கள். இந்நிலை மறந்து, தேசிய உணர்வை ரத்தங்களில் ஏற்றி எல்லா நாளங்கள் நரம்புகளில் பரவ செய்ய வேண்டும். இந்த அறுபது வருட காலத்திலே வியக்க வைக்கும் முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் பல கோடுகள் இந்திய அன்னையின் முகங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி, தெருவை சுற்றி சுகாதாரமாக, குற்றங்கள் இல்லாத ஒரு இடமாக, சீராக வைத்துகொள்ள ஆரம்பித்தால் அதுவே மெல்ல ஒரு சங்கிலியை போல நமது நாட்டை காக்கும். அதுவே ஒவ்வொரு விடுதலை நாளின் போதும் நாம் ஏற்றுக்கொள்ளும் உறுதி மொழியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2007

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை 2

முதல் பார்வை இங்கே

இப்போது டிவிக்களின் ராஜ்ஜியம் பட்டொளி வீசி பறக்கையில், தியேட்டர்கள் நவீன வசதிகள் கொண்டு எல்லாவித சௌகரியங்களை வைத்திருந்தாலும், லாபத்தில் தான் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். எத்தனையோ நகரங்களில் தியேட்டர்கள் திருமண மஹாலாவது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற விஷயம் தான். அதுவும், சமீபத்தில் மதுரை சிந்தாமணி தியேட்டருக்கும் அப்படியொரு நிலைமை வந்துவிட்டது.. மதுரையில் நான் கல்லூரி படிக்கும் போது இங்கே பார்த்த ஒரே படம், கௌதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. ஆனால், திண்டுக்கலில் எந்தவொரு தியேட்டரும் இப்படி ஒரு நிலைமையை சந்தித்ததில்லை. ஒரு வேளை என்ன தான் டிவி பார்த்தாலும் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை போலும்..

சரி. இனி அடுத்த இரண்டு தியேட்டர்களை பற்றி பார்ப்போம்..

முதன் முதலில் திண்டுக்கல்லில் நவின கட்டிட, ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கட்டப்பட்டது நாகா ஏசி மற்றும் லஷ்மி தியேட்டர் வளாகம் தான். இந்த தியேட்டர் வந்த புதிதில் இதில் படம் பார்ப்பதே மக்களுக்கு பெரிய விஷயமாக பட்டது.. கட்டணம் அல்ல.. சௌகரியம் தான்.. திண்டுக்கலில் சிறுவர்கள் விளையாடும் சிறு பூங்காவுடன் இருக்கும் தியேட்டர் இது தான். அந்த சுற்று வட்டாரதில் குடியிருப்பவர்கள் விடுமுறை நாட்களில் படத்திற்கு வரவில்லையென்றாலும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு இங்கு வருவது உண்டு.. நாகா ஏசி தியேட்டர் மிகவும் சிறியது.. ஐநூறுக்கும் குறைவான பார்வையாளர்களே உட்கார முடியும். லஷ்மி தியேட்டர் கிட்டதட்ட ஆயிரம் பேர் உட்காரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். லஷ்மி, திண்டுகல்லில் இருக்கும் ஒரே 70mm தியேட்டர். இப்போது ராஜேந்திரா, ஆர்த்தி தியேட்டர்களின் வரவினால் இந்த தியேட்டர் கொஞ்சம் ரசிகர்களின் கவனத்தை இழந்திருப்பது நிச்சயம். இதில்விவரம் தெரிய பார்த்தது ரஜினியின் சிவா.. கடைசியாக பார்த்தது புதுகோட்டையிலிருந்து சரவணன்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தை ஓட்டி, ஆர்த்தி தியேட்டரை விட அருகில் இருப்பது கணேஷ் தியேட்டர். ஆரம்பத்தில், இதற்கு முன் சொன்ன மூன்று தியேட்டர்கள் வருவதற்கு முன் இது தான் சிறந்த தியேட்டராக இருந்தது. இடையில் வசதிகள், தரங்கள் நிறைந்த தியேட்டர்கள் வந்த பின், இது மெல்ல மெல்ல தன் பெயரை இழந்துவிட்டது.. இப்போது இடையில், படங்களை திரையிடுவது நிறுத்தபட்டு, உள்ளே மாற்றங்கள் செய்யப்பட்டு, DTS ஒலி அமைக்கப்பட்டு மறுபடியும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால், தனது பழைய பெயரை திரும்ப பெற்றதா என்பது கேள்விக்குறி தான். முதன் முதலில் பார்த்த படம் போக்கிரி ராஜா.. எனக்கு விவரம் தெரிய முதலில் பார்த்ததும் இது தான். பள்ளியில் இருந்து இங்கே எங்களையும் வாழவிடுங்கள் என்னும் குரங்குள் பற்றிய படத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அபிராமி, ஷான், NVGB, சென்ட்ரல், சோலைஹால் ஆகிய தியேட்டர்களை பற்றி அடுத்த பதிவில்

Thursday, August 09, 2007

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை

இந்தியாவுல இருக்க பெரும்பாலான மக்கள்களுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் பாக்குறது தான். சென்னையிலாவது கடற்கரை அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதி, கிண்டி பூங்கா, கோயில்கள் என்று இடங்கள் அநேகமாக இருக்கலாம். ஆனால் திண்டுக்கல் போன்ற சராசரி நகரங்களுக்கு பெரிதாக அப்படி என்ன இருந்துவிடப் போகிறது தியேட்டர்களை விட. அபிராமி, மாரியம்மன் கோயில்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை (இந்த மலைக்கு போனவர்களின் எண்ணிக்கையை விட போகாதவர்களின் எண்ணிக்கை தான் அதிகமிருக்கும்), மலைக்கோட்டை அடியினில் இருக்கும் நகராட்சி பூங்கா (எப்போதும் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதான்னு தெரில), இது போன்ற சொற்ப இடங்களே.. இதுவிட்டால், நடுத்தர மக்களுக்கு அருகிலிருக்கும் கொடைக்கானல், எல்லோரும் செல்லும்படியான பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் என ஒரு சில இடங்களும் உண்டு. ஆனால், எல்லோரும் போகக்கூடிய ஒரே இடங்கள் தியேட்டர்கள் தான். நான் திண்டுக்கலில் இருக்கின்ற எல்லா தியேட்டர்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆமாம், இருக்கிறதே பதிமூன்று தியேட்டர்கள்..அதிலென்ன எல்லா தியேட்டர்களும் என்று கணக்கு வேறு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இனி ஒவ்வொரு தியேட்டர்களாக பார்ப்போம்..

ஒளி மற்றும் ஒலித் தரத்தில் இப்போது முண்ணனியில் இருப்பது தியேட்டர் ராஜேந்திராவும் அதன் குட்டி அடையாளமான உமா தியேட்டரும் தான். இந்த தியேட்டர் நான் சென்னை வந்த பிறகு தான் திறந்தார்கள் என்பதால் என்னால் அதிக படங்கள் பார்க்க முடியவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் நான் படங்கள் பார்த்திருக்கிறேன். கடைசியாக அந்நியன் பார்த்தேன்.. அதிசயமாக எப்போதும் தியேட்டரில் ஏசி போடப்பட்டிருந்தது. தியேட்டரும் கொஞ்சம் புதுசு என்பதால் பளபளப்பு குறையாமல் தான் இருந்தது. இப்போதைக்கு அதிக விலை கொடுத்து, அதிக பரபரப்பு மிகுந்த படங்களை வாங்கி வெளியிடத் தகுதியான தியேட்டர் ராஜேந்திரா மட்டுமே. சென்னையில் இருந்து திண்டுக்கல் என்ஜினியர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன், தமிழ் நாட்டிலேயே சத்யதிற்கு அடுத்த DTS நன்றாக இருப்பது திண்டுக்கல் ராஜேந்திரா தான், என்று சொல்லக் கேள்வி.. இந்த வளாகம் பஸ் நிலையத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பது இதற்கு ஒரு பின்னடைவே.

இதற்கடுத்த தியேட்டர் ஆர்த்தி மற்றும் சிவா வளாகம். 90-ன் ஆரம்பத்தில் (சரியாக ஞாபகம் இல்லை) கட்டப்பட்டு பளிச்சென்று அப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த தியேட்டர் இது. தியேட்டர் உள்ளமைப்பு நன்றாக இருக்கும். எனக்கு விவரம் தெரிஞ்சு பார்த்த படம் சிப்பிக்குள் முத்து.. கடைசியாக பார்த்தது ஆதி. விஜயின் அதிகப் படங்கள் இதில் தான் வெளியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருப்பதால் எப்படிப் பட்ட படம் போட்டாலும் வசூலை இந்த தியேட்டர் பார்த்து விடும். முதலில் ஆர்த்தி தியேட்டர் கட்டப்பட்டு, சமீபத்தில் தான் கிட்டதட்ட நானூறு இருக்கைகள் கொண்ட சிவா தியேட்டர் கட்டப்பட்டது. சிவாவில் இதுவரை எந்த படமும் நான் பார்த்ததே இல்லை. ஆனால், திண்டுகல்லிலேயே அதிகமாக நான் ஆர்த்தியில் தான் படங்கள் பார்த்திருக்கிறேன்..

இப்போது இந்த நாலு தியேட்டர் படங்கள் தான் அதிகமாக வசூல் குவிக்கும் படங்களை எடுத்து ஓட்டுபவைகள். இங்கு திரையிடப்படும் படங்கள் நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னைக்கு சத்யம், தேவி போல திண்டுக்கலுக்கு இந்த இரு தியேட்டர்களையும் சொல்லலாம்..

மற்ற தியேட்டர்கள் பற்றி அடுத்த பதிவில்..

Monday, August 06, 2007

எல்லாம் சோம்பேறித் தனம்

காலைல கண்ணை முழிச்சாலே மடிக்கணினில ஒரு ஆங்கில படத்துல தான் முழிக்கிறது இப்போ எல்லாம். இங்க வந்த புதுசுல மாசத்துக்கு ஒரு படம்னு இருந்தது.. இடைல அது கூட இல்லாம இருந்தது.. இப்போ நாளைக்கு ஒண்ணு.. வரிசையா இந்தூரு நூலகத்துல முன்பதிவு செய்து எல்லாத்தையும் வாங்கி வச்சு வரிசை கட்டி படம் பாக்குறது. இது இல்லாம சின்சினாட்டிக்கு அருண் கூட போனப்ப அருண் நெட்ஃப்லிக்ஸ் பத்தி சொன்னவுடனே அதுலையும் சேர்ந்து தமிழ், ஆங்கிலம்னு விட்ட தொட்ட படத்தை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாசு.. நான் பாத்த படத்தை லிஸ்ட் கொடுத்தாலே வாரம் ஒரு பதிவு போட்ட மாதிரி ஆகிடும் போல அத்தனை படம்.. ஏற்கனவே பார்த்த படம்னாலும் மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சாசு..

இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்
(அடைப்புகுறிக்குள்ள நம்மளோட ரேட்டிங்)

தியேட்டரில் பார்த்தது

டிஸ்டர்பியா (7/10)
ஃபென்டாஸ்டிக் ஃபோர் (5.5/10)
ஷ்ரெக் மூன்று (7.2/10)
டிரான்ஃபார்மர் (6.8/10)
ஹாரி பார்ட்டர் (6.5/10)

டிவிடியில் பார்த்தது

மிஷன் இம்பாஸிபிள் 1
லார்ட் ஆப் தி ரிங்ஸ் - முதல் பாகம்
ஆலீஸ் இன் தி வொன்டர்வேர்ல்ட்
சிக்கன் லிட்டில்
போன் பூத்
கார்ஸ்

இது இல்லாம பிரண்ட்ஸ் நாடகத்தோட ஒன்பதாம் பாக டிவிடியில் சில எபிசோடுகள்.. இப்படி பொழப்பு போகுது நமக்கு.. நண்பர்கள் காறித் துப்பாத கதை தான். என்னடா நொய் நொய்னு முதல்ல எல்லாம் போன் பண்ணுவ.. இப்போ பண்றதில்லியேன்னு.. ஏற்கனவே சொன்னது மாதிரி, நாம மதுரையில இளநிலை படிச்சுகிட்டு இருந்தப்போ கிட்டதட்ட மாசத்துக்கு முப்பது படம் தியேட்டர்லயே பார்த்ததுண்டு.. இப்போ டிவிடியில் பார்த்ததை எல்லாம் சேர்த்தா அந்த நம்பரை தாண்டிடுவேன் போல..

நம்ம நண்பர் மணி தனது திருமணத்திற்காக இந்தியா கிளம்பிட்டார்.. அவரை பிரிய மனசில்லாம அருண் எழுதுன பாட்டை படிச்சா, எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது.. அருண், பட்டையை கிளப்பிட்டேல.. மணி, வாழ்துக்கள் பா

போன தடவை பில்டப் கொடுத்து அப்படி எழுதப்போறேன் இப்படி எழுதப்போறேன்னு பதிவு போட்ட பிறகு ஒண்ணும் எழுத முடியல.. இந்த தடவை நோ பில்டப்..பார்ப்போம் எழுத முடியுதான்னு.. இப்போதைக்கு இந்த பதிவு மூலமா உங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் போட்டுக்குறேன் மக்களே.

Tuesday, July 17, 2007

வகுப்பறையில் சில நாய்குட்டிகள்

எட்டாவது நான் படித்த வகுப்பறை, பள்ளியின் மேடை அருகே இருந்தது. கிட்டதட்ட பனிரெண்டிலிருந்து பதினைந்து அடி அகலமும் முப்பதாறு முதல் நாற்பது அடி வரை நீளமும் கொண்டது. வகுப்பின் கரும்பலகை வட மேற்கு நோக்கி இருக்கும். வகுப்பின் வாசப்படி தென்மேற்குப்பக்கம் இருக்கும்.. வாசலின் அருகினில் பெண்கள் உட்காருவதெற்கென்று பெஞ்சுகள் இருக்கும்..அவர்களின் பெஞ்ச் இரண்டு பேர் அமரக்கூடியது.. எதிர்புறம் இருக்கும் ஆண்கள் பெஞ்சில், கிட்டதட்ட நான்கு பேர் அமரலாம். வகுப்பின் பின்னே, சிமெண்டினால் ஆன திறந்த வெளி அலமாரிகள் இருக்கும். வகுப்பில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது, அதில் தான் ஏறி உட்கார்ந்து ஆட்டம் போடுவோம் நாங்கள். அந்த அலமாரியின் கீழ் தட்டின் இடது பக்கம் இருக்கும் அலமாரியில் எப்போதும் மண்கள் தோண்டப்பட்டும் சிதறிக்கிடக்கும். எப்போதோ ஏதோ விலங்கோ, இல்லை வேற ஏதோ காரணத்தினாலோ இப்படி ஆன பின்னும் பள்ளி நிர்வாகம் இன்னும் சரி செய்யாமல் இருந்தது.

ஒரு முறை வகுப்பில் அந்த கீழ்தட்டு அலமாரியில் சில காலியான பான்பராக் பாக்கெட்டுகளை எப்படியோ எனது வகுப்பு ஆசிரியை பார்க்க நேர்ந்தது. அவருக்கோ தூக்கி வாரிப்போட்டது..இந்த சின்ன வயசில் யார் இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று. தனியாக (வகுப்பு தலைவனாக இருந்த காரணத்தால்) என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்து, யார் என்று கண்டுபிடிக்க சொல்லி உத்தரவிட்டார்.. தருமியின் நிலமை எனக்கு. யாரென்றே தெரியாது.. எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று பயங்கர கவலை.. அது நம்ம வகுப்பில் இருக்கும் பையன் தானா இல்லை வேற யாரேனுமா என்று ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டர்கள்..

ஆனால் அந்த மர்மமும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் வகுப்பில் சரசரவென்று சத்தம் கேட்க, பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையே யார் அந்த பையன் என்று கண்டுபிடித்துவிட்டதால் எனது வேலை சுலபமாக, சுபமாக முடிந்துவிட்டது. சிவகாசியில் இருந்து வந்து விடுதியில் தங்கி படித்த சம்பத் என்ற பையனே அந்த பான்பராக் பாக்கெட்டுகளுக்கு காரண கர்த்தா. அவனைப் பற்றி சொல்லும் போது இன்னொரு சம்பவத்தை பற்றியும் சொல்லியேயாக வேண்டும்.

ஒரு முறை வார இறுதி என்பதால் எல்லாப்பாடங்களிலும் அதிக வீட்டுப்பாடங்கள் தந்துவிட்டார்கள். திங்கள் வகுப்பிற்கு வந்த பிறகு தான் இத்தனை வீட்டுப்பாடங்கள் இருப்பது சம்பதிற்கு தெரிந்தது. என்ன செய்வது என்று நினத்து, உடனே ஜாமென்ட்ரி டப்பாவில் இருந்த டிவைடரை வைத்து கையை கிழித்துக்கொண்டான்.ரத்தம் சொட்ட ஆரம்பிக்கும் போது, கைகுட்டையால் அதை கட்டினான்.. ஆசிரியர் வீட்டுப்பாடங்கள் செய்யாதவர்கள் யார் என்று கேட்ட போது, இவன் எழுந்து நின்று, தனக்கு அடி பட்டுவிட்டதால் எழுத முடியவில்லை என்று சொன்னான். இது பற்றி அப்போது தெரிந்த இரண்டு பெஞ்சு பசங்களும் பயங்கர அதிர்ச்சியில் இருந்தோம் சிறிது நேரம்.

அந்த வருடம் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாங்கள் வந்த போது எங்கள் வகுப்பின் எண்ணிக்கை சற்று உயர்ந்திருந்தது. இந்த வகுப்பின் பின்னே கீழ்தட்டு அலமாரியில் ஒரு நாய் தனது குட்டிகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தது. அந்த நாய் அழகாக இருந்தது. கருப்பு வண்ண மூக்கும், வெள்ளையில் சாம்பல் கலந்தும் இருந்தது. அதற்கு ஆறு குட்டிகள். ஒண்ணொன்னும் பொம்மைகள் மாதிரி இருந்தன. வகுப்பில் ஆசிரியர் ரொம்பவும் சுவாரஸ்யமாக ஏதும் நடத்திக்கொண்டிருக்கிற போது, அந்த நாய் தனது குட்டிகளுடன் உள்ளே வருவதும் போவதுமாய் இருக்கும்.. அந்த பிஞ்சு குட்டிகள் அதன் தாயுடன் ஒட்டியவாறு போவது பார்க்க அவ்வளவு ரசிப்பதாய் இருக்கும்.இரண்டு மூன்று நாட்களில் அவைகள் எங்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தன. நாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டை போடுவது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து வர்க்கி, பிஸ்கட் வேறு அவைகளுக்கு தர ஆரம்பித்தோம்.. கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்த பசங்க சில பேர், ஆளுக்கொரு நாய்குட்டிகளுடன், அவைகளை கொஞ்சியவாறே பாடம் கவனிக்க ஆரம்பித்தனர்..

ராஜா என்னும் பையன், அவைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டு ஒன்றை வீட்டிற்கு எடுத்து செல்ல முற்பட்டான். ஆனால் தாய் கிட்ட இருந்த அதை பிரிக்கக்கூடாது என்று எல்லோரும் சொல்லிவிட்டதால் அவன் அந்த எண்ணத்தை கைவிட்டான்.. அதே சமயம், அந்த வருட பொங்கல் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது, அந்த நாயையும், குட்டிகளையும் காணவில்லை..சில நாட்கள் எங்கள் பேச்சில், வகுப்பில் ஒரு அங்கமாக இருந்த நாய்குட்டிகள் எங்கே போயின, எப்படி காணாமல் போயின என்று எங்கள் தெரியவே இல்லை.. எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாக இருந்தது. இரண்டு மூன்று மாதம் கழித்து, ராஜா அந்த நாயும் நாய்குட்டிகளும் தன்னுடைய தோட்டத்தில் தான் வளருவதாக சொன்னான். அவன் தான் தன் ஊர் நண்பர்களுடன் வந்து தாயோடு எல்லா நாய்குட்டிகளையும் எடுத்து சென்றுவிட்டானாம். கேட்ட போது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தது. வகுப்பில் பணம் வசூலித்து சில நாட்கள் அவைகளுக்கு பிஸ்கட் எல்லாம் வாங்கி தந்துகொண்டிருந்தோம்.

Sunday, July 15, 2007

சென்னை நூலகத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்

இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியவில்லை. ஆனால் எனது நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியது. மின்னுது மின்னலுக்கு நன்றி.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை, சென்னை நூலகத்தின் வலைப்பக்கத்தில் இருக்கிறது. ஆற அமர ஒவ்வொரு பக்கமாக நீங்கள் படிக்கலாம். உங்கள் எல்லொருக்கும் யான் பெற்ற இன்பம் பெருக இவையகம் என்று உங்களுக்கும் இதோ..

Thursday, July 12, 2007

தனிமையில் கிடைத்த ஞானப்பழம்

கடந்த வாரம் காரை எடுத்துகிட்டு, தனியா ரவுண்டு அடிக்கலாம்னு கிளம்பினேன்.. அப்படி தனியாக சுத்தியதற்கு என்ன காரணம்.. எப்பவும் எங்கேயும் கூட்டதோடு இருக்கவே எனக்கு பிடிக்கும்.. அரட்டைகள் பிடிக்கும்.. நாம அடுத்தவங்களை ஓட்றோமோ, அடுத்தவங்க நம்மளை ஓட்றாங்களோ தெரியாது, ஆனா அந்த அரட்டை கும்மி ஆனந்தம் தரும்.. மொத்தமாக ஒரு வீட்டில் கும்மி அடித்து, ஒரு ஆள் வெங்காயம் நறுக்க, அடுத்த ஆள் தக்காளி அறுக்க, இந்த பக்கம் ஒரு ஆள் கோழியை வெட்டி மஞ்சள் போட்டு கழுவ.. அந்த பக்கம் சமையல் என்ன நடக்குதுன்னு கவனிக்காம டிவில ரெண்டு பேர் தமிழ் படம் பாக்க.. ஒரு சின்ன திருவிழா சந்தோசம் அந்த அறைக்குள்ளே இருக்கும்.. மொத்தமா சேர்ந்து சமைச்சு சாப்பிட்டு, சத்தமா பேசி சிரிச்சு சாப்டா அந்த உணவே அமிர்தம்.. அந்த நாளே திருவிழா.. அந்த இடமே சொர்க்கம்.. இப்படி ஒண்ணா இருந்து பழகிட்டதால, என்னைக்காவது தனிமைல இருக்கின்ற சந்தர்ப்பம், அதாவது எங்கேயாவது போறப்ப வந்தா சமாளிக்கமுடியாதோன்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு.. அதனால தான் அந்த தனி உலா..

கொலம்பஸ்ல ஸ்கியாட்டோ ஆறு ஒண்ணு இருக்கு.. இது கிட்டதட்ட 231 மைல் நீளம் கொண்டது என்று யாரோ சொல்லக்கேள்வி..அது போற வழியெல்லாம் ஆற்றுப்படுகை பூங்காக்கள் நிறைய இருக்கும். கிட்டதட்ட வீட்டிலிருந்து ஒரு முப்பது மைல் தூரத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றேன்.. ஆற்றில் நீர் விளையாட்டுக்கள் பல பேர் செய்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் கூச்சலும், மரங்களின் இலைகள் காற்றோடு பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளும், தூரத்தில் பறவைகள் மெதுவாகப் பாடுவதும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது..

கிட்டதட்ட அம்பது வருடங்களுக்கு முன்னால் வந்த ஆடிப்பெருக்கு படத்தில், ஏ.எம்.ராஜன் இசையமைத்து பாடிய "தனிமையிலே இனிமை காணமுடியுமா' என்ற பாடல் மனசுக்குள் ஓடியது.. இது மாதிரி வம்பாக தனிமை தேடி செல்வது சரியா என்பது தான் நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது எனக்கு தோன்றியது..ஆனால், அதையும் அனுபவிப்போமே.. அமெரிக்கா வந்த பிறகு இது மாதிரி தனியாக எங்கும் சென்றதில்லையே என்ற எண்ணம் மனசை முழுதாக ஆளுமை படுத்தியது.

ஊர்ல இருக்கிறப்போ எப்படித் தான், சில சமயம் நேரத்தை தள்ள முடியாம தள்ள வேண்டியதா இருக்கும். அது மாதிரி நேரத்துல மிதிவண்டியை எடுத்துகிட்டு எங்கேயாவது போயிடுவேன்.. போற இடம் தெரியாது.. கால் வலிக்கிற வரைக்கும் போயிட்டு எங்க வலிக்க ஆரம்பிக்குதோ அங்க உட்கார்ந்துடுவேன்..எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு தெரியாது.. தரையில் கிடக்குற புள்ளை ஒண்ணொன்ணா புடுங்கி ஏறியிறது முதல், வானத்துல மேகம் வரையிற ஓவியங்கள் பார்ப்பது வரை ஏதாவது பண்ணிகிட்டு இருப்பேன்.. எனக்கு இன்னமும் ரொம்ப பிடிக்கிறது மேகத்தை ரசிப்பது.. காற்று அடிக்க அடிக்க அது தன் உருவத்தை மாத்துறது அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். சில சமயம், டைனோசர் மாதிரி உருவமும் இருக்கும்.. சில சமயம் ஓடுகின்ற மனுஷனை போலவும் இருக்கும்.. எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.. ரொம்ப நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பி வருவேன்.. பல சமயங்களில் முழுதாக சக்தியேற்றப்பட்டவனாக உணர்ந்ததுண்டு.

இங்க வந்த பிறகு அது போல், தனிமை அவ்வளவாக வாய்த்ததில்லை.. ஆமாம்.. இது மாதிரி தனிமை தேடி போனால், ஏதோ மனசுக்குத் தான் கஷ்டம் போல என்று எலோரும் பார்ப்பார்கள்.. சந்தோசமாக இருப்பவன் இப்படியெல்லாம் போகக்கூடாதா என்ன என்று தெரியவில்லை.. ஆனால், அன்று நான் அப்படி தனிமை தேடி போன போது, பின்னால் திரும்பி பள்ளி சம்பவங்களையும் அங்கே போட்ட ஆட்டங்களையும் நினைத்து பார்க்க முடிந்தது.. ஏழாவதில் தமிழம்மாவிடம் (ஜெயலலிதா அல்ல) திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், வெளியே நின்று கொண்டிருந்தது, எட்டாவதில் எங்கள் வகுப்பில் ஒரு நாய், குட்டியோடு தங்கி இருந்ததும், மொத்தமாக குட்டிகளோடு அது உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது என பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தது..

இப்படி எல்லாம் நினைத்து பார்க்க அருமையான சந்தர்ப்பம் அன்று அமைந்தது. மறுபடியும் காரினுள் ஏறி முன்னால் கிளம்பியபோது, நான் பதினைந்து வருடங்கள் பின்னால், மென் மீசை வளர்ந்து, சிறுவனாக, டவுசர் போட்டுக்கொண்டு திரிந்த காலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.