Tuesday, June 26, 2007

ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவா உயிர் துறந்தார்

நிறைய திரைப்படங்களை தன் கண் வழியே பார்த்து, பிடித்து நமக்கு விருதளித்த ஒளிப்பதிவாளர் ஜீவா தன் கண்களை மூடி நிரந்தர உறக்கதிற்கு சென்றார் நேற்று. தாம் தூம் என்னும் திரைப்படத்திற்காக ரஷ்யாவில் இருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது உயிரைத் துறந்தார் ஜீவா.. வாலி, குஷி, இந்தியன் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற இளமை துள்ளூம் திரைப்படங்களை இயக்கியவர்.. ஷாம், அசின், பூஜா, ஆர்யா, போன்ற எண்ணற்ற புதுமுகத்தை அறிமுகம் செய்தவர்.

அன்னாருக்கு, உங்கள் அனைவரின் சார்பாக அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Monday, June 25, 2007

மறுபடியும்.... நாங்க வந்திட்டோம்ல

தட தடன்னு ஒரு சின்ன கல்லை வேகமா கடக்குற ரயில் பெட்டிகள் போல, ஒவ்வொரு நாளும் என்னை கடந்து போயிடுச்சு.. எழுதுறது போதையாயிடுச்சுன்னெல்லாம் சொல்லி, நாளுக்கு நாளு போதையேத்திக்கிட்டு தெரிஞ்ச இவன், இப்போ ஒரு பதிவை போடுறதுக்கே இரண்டு மூன்று நா(ஆ)ட்களின் உதவியை நாட வேண்டியிருக்கு.. எனக்கு இங்க ஒரு மேனேஜர் இருக்கார்.. நம்மளை கண்டா அவருக்கு எப்படித் தான் இருக்குமோ தெரியாது..ஒரு நிமிஷம் யார் கூடவும் பேச விட மாட்டார்.. பேசினா போதும்..இருக்கிற வேலையோட இன்னும் ரெண்டு வேலையை கொடுத்திட்டு போயிடுவார்.. உங்களுக்கே நல்லாத் தெரியும்..நாம எப்படி கதை சொல்வோம்னு.. ஆனா எப்போ கதையும் பேசுறது இல்லை..கிசு கிசுவும் இல்ல..ஆணிக்கு மேல ஆணி..ஆப்புக்கு மேல ஆப்பு.. இப்படி நாம முள்படுக்கைல இருக்கப்போ, அண்ணன் அண்ணியோட ரவுண்டைக்க போயிட்டார்னு எல்லாப் பக்கமும் ஒரு வதந்தி வேற..அப்படி இருந்தா நக்கீரன் மாதிரி முதல்ல சந்தோசப்படுறவன் நான் தான்.. நமக்கு தான் நரிப் பொழப்பா போயிடுச்சே.. சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்னு..

இப்போ கொஞ்சம் வேலையெல்லாம் குறைஞ்சு இருக்கு... மறுபடியும் பழைய வேகத்தோட பதிவை போடலாம்னு நினைக்கிறேன்.. வழக்கம் போல உங்க பேராதரவை தந்து நமக்கு உற்சாகமூட்டுங்கள்.. பழைய படி உங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து கதவையும் தட்டுவேன்..

இனிவரும் நாட்களில்..

பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லா - சிவாஜி விமர்சனம்
பிறந்தநாள் கலாட்டாக்கள் - உங்களுக்காக பிரத்தியோக வீடியோ
அமெரிக்காவின் கேரளா - மயாமி ஒரு சுற்றுலா தொடர் வண்ண புகைப்படங்களுடன்..
அனிதா வயிற்றில் ஆழமான கத்தி - சிலிர்க்கச் செய்யும் ஒரு கொலைக்கதை மொகிகன் பள்ளத்தாக்கு - கூடாரம் கட்டி வாழ்ந்த கதை
கொத்து புரோட்டா முதல் வாழைப்பழ அல்வா வரை - சமையல் தொடர்

இதற்கு இடைல, அப்பப்போ சினி தகவல்கள் வழக்கம் போல உங்களுக்காக சிட்டுக்குருவி இப்போ ஜோடியோட.

என்ன நீங்க ரெடியா?

Wednesday, June 13, 2007

யார் பெரியவர்? அமிதாப்பா இல்லை ரஜினியா

வழக்கம் போல ஃபார்வர்ட் ஆகி வந்த செய்தி தான்.. ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது.. இந்த வீடியோவை பாருங்களேன். தென்னகத்து சூப்பர் ஸ்டாரையும் வடநாட்டின் சூப்பர் ஸ்டாரையும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.. யார் பெரியவர்னு CNN சொல்கிறது.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதில் ஒரு நெருடலான விஷயம்.. அமிதாப்புக்கு 18 ரசிகர் மன்றங்களே இருப்பதாக இந்த வீடியோ சொல்கிறது..உண்மையா?

இன்னும் ஆணிகள் குறைந்த பாடில்லை.. உங்களுடைய பின்னூட்டங்களுக்கு தனித் தனியாக பதிலளிக்கமுடியவில்லை..

Tuesday, June 12, 2007

தமிழ் சினிமாவின் தலைகீழ்கள் - 1

பல சமயங்களில் நாம சரியா இருக்காதுன்னு ஒதுக்கினதோ, இல்லை நமக்கு வந்த வாய்ப்பை நாம பயன்படுத்த முடியாத போதோ, அதை பயன்படுத்தி மற்றவங்க பெரிய ஆளா வர்றப்போ, புகழின் உச்சிக்கு செல்றப்போ ஒரு பக்கம் நமக்கு ஏண்டா அந்த வாய்ப்பை தவற விட்டோம்னு தோணும்.. அது மாதிரி தான் சினிமாவுலையும்.. சில படங்களை சில கதாநாயகர்கள் நடிக்க முடியாது போன போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி சில பேர் நல்ல பேரை வாங்கியிருக்கின்றனர்..

பாய்ஸ் படத்திற்கு நன்றாக இசை ஞானம் உள்ள இளைஞர்களை ஷங்கர் தேடிகொண்டிருந்த போது, சிம்புவையும் கேட்டிருக்கின்றார். ஆனால் அப்போது சிம்பு தனது தந்தை டி.ஆரின் இயக்கத்தில் முதல் படமான காதல் அழிவதில்லை நடித்துகொண்டிருந்ததால், அது முடிந்த பிறகு தான் தன் மகனை அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். அப்படி வாய்ப்பு கிடைத்து தான் இன்று நடிகராக கொடிகட்டி பறக்கிறார் சித்தார்த். அந்த படத்தில் நடித்திருந்தால் சிம்புவின் இப்போதைய பார்முலா மாறியிருக்குமா?

தம் இயக்கி பெருவெற்றி படைத்த காக்க காக்க படதிற்கு முதலில் அஜித்தை தான் அணுகினார்கள். ஆனால் அப்போது உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்போது தன்னால் நடிக்க முடியாது என்று அஜித் சொல்லிவிட அந்த வாய்ப்பு சூரியாவுக்கு கிடைத்து அது சூர்யாவின் பேரை பல மடங்கு உயரதிற்கு கொண்டு சென்றது. அதில் அஜித் நடித்திருந்தால், படம் அந்த அளவு புகழ் பெற்றிருக்குமா?


நேற்று இன்று நாளை படத்திற்கு எல்லா பாடல்களையும் பாடி ரெக்கார்டிங் முடித்துத் தர எம்.ஜி.ஆர் டி.எம்.எஸ்ஸிடம் சொல்ல, இரண்டு நாள் கழித்து இருக்கும் தன் மகள் திருமணம் முடிந்த பிறகு பாடித் தருவதாக இவர் சொன்னார். அதை தவறாக யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட இரண்டு பாடல்களே பாடியிருந்த எஸ்.பி.பியை அழைத்து வந்து அந்த படத்தில் பாட விட்டார் எம்.ஜி.ஆர். அதற்கு தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற எல்லா நாளிதழ்களிலும் முழுபக்கம் விளம்பரம் வேறு, எம்.ஜி.ஆரும் எஸ்.பி.பியும் இணைந்து இருப்பது போல. அப்படி எஸ்.பி.பி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பிரசித்தி பெற்றார். அப்படி அவரை உயர தூக்கிய பாடல் பாடும் போது நான் தென்றல் காற்று.

இப்படி பல சம்பவங்கள் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.. மெதுவாக ஒவ்வொன்றாக பார்ப்போமே

Saturday, June 09, 2007

மனதின் பிரதிபலிப்புகள்

நானும் எப்படியாவது வாரத்துக்கு பழைய மாதிரி அஞ்சு பதிவாவது போட்டுடடும்னு பாக்குறேன்.. ஆனா முடியல.. ஆபீஸ் விட்டு கிளம்பவே ஆறு ஆறரை ஆகிடுது.. அப்படியே கிரிக்கட் விளையாட போனா, அப்படி இப்படின்னு நேரம் ஒன்பதரை ஆகிடுது.. அப்புறம் வீட்டுக்கு வந்து, குளிச்சு சாப்பிட்டு உட்கார்ந்தா கடிகாரத்துல சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒண்ணாய் சேர்ந்து இடக்குது.. அப்படியே மெதுவா படுக்கைல விழுற நிலமைல தான் தினமும் நம்ம பொழப்பு போகுது.. இதுக்கு இடையில, சரி பதிவு தான் போட முடியல, நண்பர்கள் பதிவுபக்கதிற்கு போய், பதிவை படிச்சோமா, ஒரு அட்டென்டன்ஸ் போட்டோமான்னு இருக்கவும் முடியல.. ஏன் எப்படின்னு பக்கதுல இருக்க சுவரு, பலகை எல்லத்துலையும் தலையை மோதி யோசிச்சேன்.. அப்பத் தான் புரிஞ்சது.. நான் இப்போ எல்லாம் ஆபீசுல அதிகமா வேலை பாக்குறேன்னு.. அதுக்கடுத்து, வீட்ல சன் டிவி கனெக்க்ஷன் இழுத்ததும் ஒரு காரணம். வீட்டுக்கு போனாவே போதும் கை தானா ரிமோட்டை தேடுது.. என்ன மொக்கை படம்னாலும், அப்படியே பார்க்க வேண்டியது..இந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு.. டிவி தமிழ்நாட்ல மட்டுமல்ல, இங்கேயும் வந்து நம்மள துரத்த ஆரம்பிச்சிடுச்சுப்பா..

ஒரு காலத்துல எழுத உட்கார்ந்தா, எதை எழுதுறதுன்னு யோசிக்கவே ரொம்ப நேரம் ஆகும்.. எழுதணும்னு நினச்ச தலைப்பை பத்தி எழுத ஆரம்பிச்ச, அட! பெரிய பதிவாப் போச்சே அப்படின்னு நாமளா முடிக்கிற அளவுக்கு ஒரு சக்தி இருந்தது.. இப்போ என்ன ஆச்சுன்னு தெரில.. ஒரு பதிவு போடுறதுக்கே ரெண்டு நாள் யோசிக்க வேண்டியது இருக்கு.. அதுக்கடுத்து அதை எழுத ரெண்டு நாள் ஆகுது.. அந்த சக்தி கொடுன்னு சூப்பர்ஸ்டார் மாதிரி பாடவும் முடியல, எனக்கு வேணும் ஆசை ஆசைன்னு தருமி மாதிரி புலம்பவும் முடியல.. ஆனா எப்படியும் பழைய மாதிரி எழுதிடுவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.. ஒரு வேளை தொடர்ந்து இவ்வளவு நாள் விடாம கிறுக்கி வந்ததாலா, பழக பழக பாலும் புளிக்கும் மாதிரி நமக்கு இந்த பிளாக் புளிக்குதா.. தெரில.. எதை நினச்சாலும், ஆராஞ்சாலும் ஒரு முடிவுக்கு வர முடியல.. சரி அதை அப்படியே விட்டுடுவோம்..

அன்புடன் குழு(நமது தோழி சேதுக்கரசியும் இதில் ஒரு அங்கத்தினர். நமது கவிதைகளை பார்த்து என்னையும் கவிதை எழுத சொன்னார்.. ஆனா என்னமோ தெரில இந்த மாதிரி போட்டிக்கு எழுதணும்னு உட்கார்ந்தா வர்ற கவிதை நமக்கே புடிக்கிறது இல்லை..) நடத்திய பரிசு போட்டில நமது தோழியும் பி.மு.கவின் துணை முதல்வருமாகிய வேதா பரிசு வாங்கியிருக்காங்க. நிச்சயமாய் அவருக்கும், அவரது சிந்திக்கும் திறனுக்குமிது ஒரு நல்ல ஊட்டச் சத்தாய் இருக்கும்னு நினைக்கிறேன்.. தோழிக்கு எமது வாழ்த்துக்கள்!

தினமும் ஒரு திருகுறள்னு நவீனமயமா எழுதிவர்ற நமது கிட்டு மாமாவோட பதிவுகள் 250 என்ற ஒரு மைல்கல்லை தொட்டிருக்கு.

வாழ்த்துக்கள் கிட்டு மாமா.

இன்னும் நிறைய நண்பர்கள் பல தலைப்புகள்ல அருமையான தொடர்களை எழுதி வர்றாங்க.. அதெல்லாம் தொடர்ந்து சுடச் சுட படிக்க முடியலைனாலும், நேரம் கிடைக்கும் போது படிக்காமல் விட்டதில்லை.. அதில் CVR-இன் வானுக்குள் விரியும் அதிசயங்கள் தொடர், படித்தவுடன் என் கண்களை ஆச்சரியத்தில் விரியச் செய்தது. அதுவும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் விளக்குவது, தொடர் பதிவு சற்று பெரிதாக இருந்தாலும் சலிப்பு தட்டாமல் கொண்டுசெல்கிறது. அருமையான தொடர்! பரந்து விரிந்த வான்மண்டலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களுக்கு இருந்தால் தாராளமாக உள்ளே கால் வைக்கலாம்.

இதோ வர்றார், அதோ வர்றார்னு கிட்டதட்ட பதினெட்டு மாதங்களா பத்திரிக்கைகளுக்கும், ரசிகர்களுக்கும் செய்தி தீனி போட்ட சூப்பர்ஸ்டாரின் சிவாஜி வெளிவர இன்னும் ஐந்தே நாட்கள்! சூடம் ஏத்தி, பாலூத்தி, பேப்பர் கிழித்து விசில் சத்தம் தியேட்டர் அதிர படத்தை பார்க்கமுடியலைனாலும், நானும் இந்த மாதம் 24-இல் கொலம்பஸ்லயே படத்தை பாக்கபோறேன்.. பத்து நாள் கழிச்சு பாத்தாலும், நெருப்பு சூடு ஆறாமத் தானே இருக்கும்? என்ன நாஞ் சொல்றது.

Tuesday, June 05, 2007

SLR கேமரா - எது வாங்கலாம்?

சின்ன வயசுல இருந்தே நமக்கு போட்டோ எடுக்குறதும் சரி, போஸ் கொடுக்குறதும் சரி பிடிச்ச விஷயம்.. நம்ம பிளாக்குக்கு வர்ற எல்லா மக்களுக்கும் இது தெரிஞ்ச விஷயம்.. ஆனா, இப்போ சமீப காலமா போஸ் கொடுக்குறதை விட போட்டோ எடுக்குறது ரொம்ப ஈடுபாடு வந்திடுச்சு..

என்னோட அண்ணன் ஒருத்தர் இருக்கார்.. பெரியப்பா பையன்.. அவருக்கும் நம்மள மாதிரி போட்டோ எடுக்குறது ரொம்ப பிடிக்கும்.. ஆனா நம்மளை விட மேலானவர்..கோட் சூட் போட்டு போட்டோ எடுத்துக்குவார்.. போலீஸ் டிரஸ் போட்டு எடுத்துக்குவார்.. அட! ஒரு வரில சொன்னா ராசுக்குட்டி பாக்யராஜ் தான் அவர். ஒரு தடவை ஜவுளிக்கடைக்கு போய் மஞ்சள் சிவப்பு பச்சை கலர்ல பல துண்டு சில்க் துணிகளை வாங்கி வந்து அதையெல்லாம் இணைச்சு தைச்சு, அந்த துணியை வச்சு சட்டை தைச்சு போட்டுகிட்டார்னா அவரோட ஆர்வக் கோளாறை பாருங்களேன்.

என் மாமா ஒரு தையல்காரர்.. அவர் இந்த மாதிரி தான் புதுசு புதுசா ஏதாவது செய்வார்.. என் அண்ணனுக்கு அந்த சட்டையை தச்சு கொடுத்தவர் அவர் தான்.. அதே மாதிரி ரெண்டு பக்கமும் போட்டுக்குற மாதிரி ஒரு சட்டையை தைச்சு, எங்க ஊர்ல எல்லா பேரையும் அது மாடலை போட வச்சார். அதுவும் வயல்ல வேலை செய்றவங்க, சாரயம் காச்சப்போறவங்க எல்லாம் டவுசர் போடுவார்கள். அந்த டவுசர்ல தேவையான இடத்தை விட மத்த இடத்துல கிட்டதட்ட இருபது பட்டன் எல்லாம் இருக்கும்.. அதே சட்டைலயும் அத்தனை பட்டன்கள் இருக்கும்..

நாம எப்பவுமே இப்படித் தான்.. ஏதாவது ஒண்ணு சொல்ல வந்தால் அதை மறந்துட்டு வேற ஏதாவது கதைக்கு ஓடிடுவோம்.. சரி நம்ம கேள்விக்கு வரலாம்.. எந்த SLR கேமரா வாங்கலாம்.. நமக்கு அப்படி கேமரா வாங்கணும். நிறைய ட்ரை பண்ணனும் ஆசை இருக்கு..ஆனா டெக்னிக்கலா ரொம்ப தெரியாது.. அதனால இதுல பெரிய மனுஷங்க யாராவது நல்லதா சொன்னா புண்ணியமா போகும்.. எந்த கேமரா வாங்கலாம் அது வாங்கலாம்னு ஓடிப்போச்சு ஒன்பது மாசங்கள்.. சரி.. இனிமேலும் தள்ளிப்போட்டா நல்லதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. உங்க யாருக்காவது இதுல ரொம்ப விஷயம் தெரிஞ்ச கொஞ்சம் நமக்கும் சொல்லுங்க.. ஹிஹிஹி.. ஒரு வளர்ற PC ஸ்ரீராமுக்கு உதவின மாதிரி இருக்கும்.

Monday, June 04, 2007

மவுஸை எல்லாம் தூக்கி தூரப்போடுங்கள்.. நம்ம கைகளே போதுமே

இந்த வீடியோவை பாருங்க.. டெக்னாலஜி எந்த அளவுக்கு ஜெட் வேகத்துல போகுதுன்னு நீங்களே தெரிஞ்சுக்குங்க.. (ஆச்சர்யத்தில் உங்கள் வாய் திறந்தே கிடக்கும், இதை பாக்குறப்போ)

Sunday, June 03, 2007

பயண பாதையில் ஒரு மைல்கல்

சென்னையில இருந்தப்போ ஒரு மூணு நாள் லீவ் கிடச்சா உடனே சொந்த ஊருக்குத் தான்.. வேற எந்த யோசனையும் மனசுல வராது.. ஆனா இங்க, அமெரிக்கா வந்த பிறகு, மாசத்துக்கு ரெண்டு வாரமாவது வெளில சுத்துறதே வேலையாயிடுச்சு எனக்கு.. அதுவும், இப்போ கொலம்பஸை மையமா வச்சு ஸ்கைபஸ்னு ஒரு புதிய ஏர்லன்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க.. அதுல தொடக்க டிக்கட் விலை பத்து டாலர் தான்.. அப்புறம் ஒவ்வொரு பத்து டிக்கட்டிற்கும் பத்து டாலார் ஏத்துறாங்கன்னு நினைக்கிறேன்.. முதல் நாள் காலைல இதை செய்தில கேட்டவுடனே, மடமடன்னு நண்பர்கள் கூட ஒரு கூட்டத்தை போட்டு லாஸ் ஏஞ்சல்ஸ், புளோரிடா, சான் பிரான்ஸிஸ்கோன்னு ரெண்டு வார கேப்ல டிக்கட் புக் பண்ணி, அதுல லாஸ் ஏஞ்சல்ஸும் போயிட்டு வந்தாச்சு.. நம்மளோட அதிர்ஷடம் நாம வந்த சமயத்துல இப்படி ஒரு ஏர்லன்ஸ் ஆரம்பிச்சு, நம்ம நெஞ்சுல, நாட்டாமை சொல்ற மாதிரி பீர் ஊத்திருக்காங்க..இவ்வளவு கம்மியான விலைல கொடுத்தாலும், மத்த எல்லாமே காசு தான்.. உங்களுக்குன்னு ஒரு சீட் நம்பர் சொல்ல மாட்டாங்க.. அங்க போய் க்யூவுல நிக்கணும்.. அப்புறம் உள்ள போய் எந்த சீட் கிடைக்குதோ அதுல உட்காரணும்.. அப்படி நான் வரிசைல நின்னு சீட்ல உட்கார்ந்தப்போ, நம்ம ஊர் பஸ்ல சீட் பிடிக்கிறது தான் ஞாபகம் வந்தது.

எங்க ஊருக்கு அரை மணிக்கொரு பஸ் தான் இருக்கும் திண்டுக்கல்ல இருந்து. அதனால ஒரு பஸ், பஸ்ஸ்டாண்டை விட்டு கிளம்பின பிறகு, அடுத்த பஸ் வர்றதுக்குள்ள நல்ல கூட்டம் சேர்ந்திடும். பஸ், பஸ்ஸ்டாண்டுக்குள்ள நுழையிறதுக்குள்ள, எல்லோரும் ஓடிப்போய், ஜன்னல் வழியா, கர்ச்சீப்-லயிருந்து, துண்டு, வயர்கூடை, சாக்கு வரை எல்லாத்தையும் வச்சு இடம் பிடிப்பாங்க.. சில சமயம் வாய்க்கா வரப்பு தகராறைவிட இந்த சீட் பிடிக்கிற தகராறு பெருசா இருக்கும். சீட்டு பிடிக்க பஸ் கூடவே ஓடி வர்ற கூட்டத்துக்குள்ள நிதானமா பஸ் ஓட்ற அந்த டிரைவர்களை பாராட்டியே ஆகணும்.. அப்படி ஒரு கொல வெறி நம்ம மக்கள்கிட்ட இருக்கும் சீட் பிடிக்க..

இந்த ஸ்கைபஸ் ஏர்லைன்ஸ் விமானத்துல ஏறிட்டா, உள்ளாற எல்லாமே காசு தான்.. தண்ணில இருந்து பர்கர், ஸ்நாக்ஸ் எல்லாமே உள்ளாற விக்கிறாங்கா.. நீங்க வேணும்னா தலையணை போர்வைகூட உள்ள வாங்கிக்கலாம். அதை உங்க வீட்டிற்கும் எடுத்துட்டு போகலாம். என்ன வாங்கினாலும் நமக்கு ஒரு இருபது டாலர் எக்ஸ்ட்ராவாகாது.. அப்புறமென்ன, அதுவும் நாலரை மணி நேர பயணத்துல அப்படி என்ன நாம சாப்பிட்டுவிடப்போகிறோம்.

இந்தியாவில் இருக்கும் போது பெரும்பாலான பயணங்கள் எல்லாமே பஸ்ஸில் தான் இருக்கும். ரொம்பவும் அரிதாக, ரயிலில் இருக்கும். பஸ் பயணங்கள் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்களையே தந்திருக்கு.. அதுவும் அப்போவெல்லாம் வீடியோ இருக்க பஸ்ல போறது தான் பிடிக்கும்.. அடுத்த நாள் ஆபீஸ் இருந்தாலும், ஏற்கனவே பலதடவை பார்த்த படமா இருந்தாலும், அது எவ்வளவு மொக்கப்படமா இருந்தாலும் நைட்டு ரெண்டு மணிவரையாவது படம் பாக்காம இருக்க முடியாது.. நானும் எப்படியாவது தூங்கிடணும்னு கஷ்டப்பட்டு கண்ணைமூடுவேன்.. கொஞ்ச நேரத்துல என்னையும் அறியாம அந்த படத்தை பாத்துக்கிட்டு இருப்பேன்.. கண்டக்டரா வீடியோவை நிப்பாட்டாதவரை, நமக்கு தூக்கம் கிடையாது.

ஒரு முறை என் சித்தி பொண்ணு கல்யாணத்திற்காக ரெண்டு நாளைக்கு முன்னாடியே டிக்கட் புக் பண்ணியும், ஆபீசுல வேலை இருந்ததால என்னால போக முடியல. அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி.. வேளச்சேரில இருந்து பஸ் பிடிச்சு தாம்பரம் போயாச்சு.. வர்ற எந்த பஸ்லயும் இடமே இல்லை.. ஒரு பஸ்ல சீட் இல்ல.. தரைல தான் உட்காரணும், ஆனா டிக்கட் விலை ஒண்ணுதான்னெல்லாம் மனசாட்சியே இல்லாம கேக்க ஆரம்பிச்சுட்டான். கூட்டத்தை பாத்துட்டு அங்கிருந்த வேன் வச்சிருக்கவங்க, திருச்சிக்கு ட்ரிப் கூட அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நமக்கு இந்த மாதிரி வேன்ல போறதுலையும் இஷ்டம் இல்லை.. கடைசியா, பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் வந்தது.. அதுல ஏறினா, நிக்கக் கூட இடமில்லாத அளவு பயங்கர கூட்டம்.. வேற வழியில்லாம் நைட்டு முழுக்க தூங்காம அந்த ஏழு மணிநேரமும் நின்னுகிட்டு தான் திருச்சி போய் சேர்ந்தேன். இன்னொரு தடவை, வேற வழியே இல்லாம புஷ்-பேக் இல்லாத ஒரு அரசு பஸ் தான் கிடச்சது.. பரவாயில்லைன்னு நினச்சு உட்கார்ந்தா, இன்னொரு மாப்பெரிய மனிதர் என் பக்கத்துல உட்கார்ந்தார்.. சென்னை வந்து சேர்றதுக்குள்ள, ஜூஸ் ஆகாம தப்பிக்க என்னென்னமோ பண்ணவேண்டியிருந்தது..

இப்படி பயணங்கள் எல்லாமே நமக்கு வித்தியாசமான அனுபவத்தை தான் தந்திருக்கிறது.. இப்படியான ஒரு நிலா வெளிச்ச பயணத்துல தான் நான் அந்த சுடிதார் நிலாவை சந்தித்தேன்.. இரு கண்கள் போதாதுன்னு அவசர அவசரமாக என் உடம்பெல்லாம் இந்திரன் போல கண்கள் முளைக்க வைத்தவள் அவள். அந்த அனுபவம் பற்றி, அவளை பற்றி பின்னாடி ஒரு நாள் வேறோரு பதிவுல சொல்றேனே..

Saturday, June 02, 2007

அரிவாள் இல்லாத ஹரி படமா? வேல், உங்கள் பார்வைக்கு

Friday, June 01, 2007

சமையல்கட்டு அறிமுகங்கள்

நான் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்த சமயம். முதல் இரண்டு வாரங்கள் நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை..ரயிலில் ஏறுவதும் திண்டுக்கல் மதுரை ரயில் போகும் வழித்தடங்கள் எல்லாமே எனக்கு புதியது என்பதால் அதை வேடிக்கை பார்ப்பதுவுமாகவே இருந்தேன். சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகள் எப்பவுமே பச்சை பெயிண்டை கொட்டிவிட்டாற்போல தான் தரையெல்லாம் நெற்கதிர்கள் பரந்து விரிந்து கிடக்கும். ஜன்னல் அருகிலோ இல்லை வாசலிலோ இருந்தால் அந்த நெற்கதிர்களை தொட்டு வரும் வாசம் இதயம் தொடும் போதெல்லாம் அப்படியொரு சிலிர்ப்பு உடம்பில் இருக்கும்.

நான் சென்று வந்த ரயில், தினமும் மதுரை-திண்டுக்கலுக்கு இடையே பயணிப்பது, காலையில் ஏழு மணிக்கும் மாலையில் ஏழு மணிக்கும், வேலைக்கு சென்று வருபவர்களுக்கு ஏதுவாக. அதனால் பயணிகள் எல்லோருமே தினமும் வருபவர்கள் தான். மற்ற ரயில்களைப் போல, நிஜ ரயில் பயணங்கள் அல்ல இது. மெல்ல நண்பர்கள் எனக்கும் அறிமுகமாகி, எண்ணிக்கையில் அதிகமானார்கள்.. எனக்கு பள்ளியில் ஜுனியராக இருந்த ஒரு பையனின் நட்பு கிடைத்தது எனக்கு. அருண் - அவன் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கேட்டரிங் வகுப்பு படித்து வந்தான்.

வாரத்திற்கு இருமுறை அவன் வகுப்பில், செய்முறை பயிற்சியில் செய்த உணவுகளை எடுத்து வருவான், ரயிலுக்கு, எங்களுக்காக. அது அப்போது எங்களது மாலை வேளை ஸ்நாக்ஸாக இருந்தது.. நெய் வடிய வடிய பொங்கலும், மொறுமொறுப்பாக வெளியில் பிரட் தூள்கள் தூவப்பட்ட கட்லெட்டும், நாவில் எச்சில் ஊறவைக்கும் கேரட் அல்வாவும் என தினமும் அவன் செய்து எடுத்து வரும் உணவு பதார்த்தங்களுக்கு எங்கள் ரயில் குரூப்பே அடிமை. அதுவும் அந்த டிபன் பாக்ஸை முதலில் திறப்பவர் அதிர்ஷ்டசாலி. நிறைய சாப்பிடலாம் அல்லவா.. நான் இதற்காகவே எனது கல்லூரி நண்பனின் வண்டியில் ஏறி மதுரை ஜங்க்ஷனுக்கு வேகமாக வந்த காலங்கள் எல்லாம் உண்டு..

அந்த எனது ரயில் ஸ்நேகிதன் தான் சமையல் என்னும் கலையில் எனக்கு ஆர்வத்தை தூண்டியவன். அதுவரை சமையற்கட்டில், என்ன செய்கிறார்கள் என்று எட்டி பார்க்கவே சென்று வந்த நான் அதன் பிறகு எப்படி செய்கிறார்கள் என்று உற்று நோக்க ஆரம்பித்தேன். அருண், அன்றைக்கு செய்து எடுத்து வந்த பதார்த்தங்களை எல்லாம் எப்படி செய்தான் என்று கவனமாக கேட்டு தெரிந்துகொள்வேன். நேரம் கிடைக்கும் போது வீட்டில் அதை செய்து பார்த்து எல்லோரையும் துன்புறுத்துவேன்.. நான் சமையலறைக்குள் நுழைந்தாலே, நான் அன்றைக்கு விரதம் என்று என் தங்கச்சி சொல்லிவிடுவாள்.. (அப்படி சொன்ன என் தங்கை ஒரு முறை சென்னைக்கு தனது தோழியுடன் இன்டர்வியூவிற்கு வந்த போது, பொடி தோசை, நெய் தோசை, மசால் தோசை, வென்காய தோசை னு போட்டு அமர்களப்படுத்தினதுல, என் சமையலை எல்லோருக்கும் போன் போட்டு சொன்னாள், அசத்தல் என்று) ஒன்னும் சரியாக தெரியாத அந்த காலங்களில் உப்பை இனிப்பில் போட்டுவிட்டு, எல்லோரையும் கேரட் அல்வா சாப்பிடச் சொல்லி ஆர்பாட்டம் பண்ணுவேன்.

இப்போதெல்லாம் சன் டிவி இரவு நேர செய்திகளில் ஒரு பகுதி வருகிறது. திருப்பம்ங்கிற தலைப்புல. அது மாதிரி நான் இப்போ இப்படி சமைக்கிறேன்னா அது அன்னைக்கு நான் அருணை சந்தித்ததும் அவன் எனக்கு சொல்லி சொல்லி, சமையல் ஆர்வத்தை தூண்டி விட்டதும் தான். அதன் பிறகு சென்னையில் வேலை செய்ய வந்த பிறகு தட்டு தடுமாறி ஒவ்வொரு வகையையும் தெரிந்து கொண்டாலும், இன்றைக்கு கார்த்தி செஞ்சா எல்லாமே சூப்பர் தான் என்று எல்லோரும் சொல்வதுமாக இருந்தாலும், எல்லாமே அன்றைக்கு எனக்குள் அருண் போட்டு வைத்த விதை தான். எப்படி நமக்கு, கூடவே ஓடி வந்து சைக்கிள் சொல்லித் தந்தவரை மறக்கமுடியாதோ, எனக்கு அப்படி அருணை மறக்க முடியாது. கல்லூரி முடித்து சென்னை வந்த பிறகு ஒரு நாள் தொடர்புகொள்ள முயற்சித்தேன்.. அருணை தொடர்பு கொள்ளமுடியவில்லை.. அப்புறம் அவனது பள்ளி நண்பன் ஒருவன் சொன்னான், அவன் சென்னை சோழா ஷெரட்டனில் வேலை பார்ப்பதாக.. செய்தியை கேட்டவுடன் சந்தோசமாக இருந்தது. அவன் இருக்க வேண்டிய இடம் அது தான் என்று..

நமது வாழ்க்கையில் வந்து சிறிய காலங்களே இருந்தாலும், இது மாதிரி நம்மளை புரட்டி போட்ட மனிதர்கள் பலர்.. எனது வாழ்கையில் எனக்கு சமையலை கற்றுக்கொடுத்து, இப்போது இது போன்ற தனியாக வாழும் காலங்களில் கை கொடுக்கவைத்த அருணும் அவர்களில் ஒரு ஆள்..

எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ, இந்த விஷயம்.. அழகாக தமிழில் விவரிக்கப்பட்டு படங்களுடன் ஒரு தனி தமிழ் வலைப்பக்கமே இருக்கிறது சமையலுக்காக.. கிராமத்து சமையல், செட்டுநாட்டு சமையல் என வட்டார வகைகளும், மாநில வகைகளும் என அங்கிருக்கும் பட்டியல் ஏராளம். புதியதாக முயற்சிக்க வேண்டுமென்றால், இங்கே சென்று பார்க்கலாம். அந்த வலைப்பக்கம் பெயர் அறுசுவை