Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, February 05, 2008

அமெரிக்க இந்திய உணவகங்கள் - சுகாதாரம்?

என் பிலாக் குரு பாலாஜிக்கு சான்டா கிளாரா தோசா பிலேசில் நடந்த குலோப்ஜாமுனில் பூச்சி சம்பவத்தை படித்த பிறகு, அறுபது சதவிகித இந்திய உணவகங்கள் அமெரிக்காவில் இப்படித் தான் இருக்கின்றன, என்ற என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. இப்போது முக்கால்வாசி அப்படித் தானோ என்று யோசிக்கத் தோன்றுகிறது..

கொலம்பஸ்ஸில், பனானா லீஃப் (வாழை இலை) என்ற ஒரு உணவகம் இருக்கிறது.. முதலில் ஆரம்பித்த போது மக்கள் நிறைய சென்று நல்ல வருமானம் ஈட்டியது.. கூட்டம் எப்போதும் இருக்கும்.. உணவும் சுவையாக இருக்கும்.. ஆனால் சுகாதாரம், அதற்கு பெரிய கேள்விக்குறி தான் மிஞ்சும் .அதுவும் அங்கே சமைக்கும் ஒருவர், கேரளா பாலக்காட்டுகாரர், ஆரம்பித்த புதிதில் வெள்ளையும் சொல்லையுமாக இருப்பார்.. சாப்பிட வருபவர்களை குசலம் விசாரிப்பார்.. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அவர் வெளியில் வந்து எங்களை சாப்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வந்தால் தெறித்து ஓடுவொம்.. முகத்தில் பாதி இடத்தில் தோசை மாவு இருக்கும்.. கை வைத்த வெள்ளை பனியன், காவி கலரில் இருக்கும்.. தலை முடி கண்ணா பின்னாவென்று சிதைந்து கிடக்கும்.. பார்ப்பதற்கு சமையல்காரர் போல இருக்கமாட்டார்.. இவரை பார்த்தே அந்த கடையில் கூடும் கூட்டம் குறையத் தொடங்கியது.. ஒரு நாள், ஒரு உணவுகூட ஆய்வின் போது கடையையும் பூட்டிவிட்டார்கள்.. ஒரு மாததிற்கு பிறகு கடையை மறுபடியும் திறந்தார்கள்.. அந்த பாலக்காட்டு சமயல்காரரை காணவில்லை.. இப்போது முன்னைவிட கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது..

பணம் சம்பாரிக்கத் தான் நாம் வந்திருக்கிறோம்.. ஆனால் ஓரளவிற்காவது நாம் சுத்தமாக வைத்துகொள்ளவேண்டும்.. நாயகரா சென்றபோது, அங்கே இருந்த டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்ப்பிட்ட பிறகு இனிமேல் வெளியூரில் எந்த இந்திய உணவகங்களில், அது பற்றி நன்றாகத் தெரியாமல் சாப்பிடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.. நிச்சயமாய் இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல இந்திய உணவகங்கள் இருக்கத் தான் செய்கின்றது.. இதற்கு விதிவிலக்காக அமெரிக்கர்களை அசத்தும் உணவகங்களும் உண்டு..

நியுயார்க்கில் 26வது வீதியும் லெக்க்ஷிங்டன் அவென்வியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது சென்னை கார்டென்.. சைவ உணவகம்.. சரவண பவன் அருகில் இருப்பது.. சிதம்பரத்தில் இருந்து இங்கிருக்கும் ஒரு கோவிலுக்கு வர்ணம் பூச வந்தவர், அந்த வேலை ஆறு மாதத்தில் முடிய, ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.. அதன் பிறகு, கிட்டதட்ட ஆறேழு வருடங்களுக்கு பிறகு, தனியாக இந்த உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார். அங்கு சாப்பிடும் போது அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது இந்த கதை..நல்ல வருமானம்.. உணவும் ருசியாக இருந்தது.. மூன்று நாளில் முதலிரண்டு நாட்கள் சரவண பவனில் சாப்பிட, இங்க ஒரு நாள் சாப்பிட்டோம்.. கழிவறை மட்டும் மிகவும் சிறியது.. இந்தியர்களை விட, அதிக அமெரிக்கர்களை தான் பார்க்க முடிந்தது..

இங்கு திரவியம் தேட வந்தவர்கள், சிறிது சுகாதாரம், பண்பு எல்லாவற்றையும் கற்றுகொண்டால் நல்ல பெயரும் அதிக வருமானமும் அவர்களுக்குத் தானே.. இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? புரியவில்லை...

Tuesday, December 18, 2007

கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லா

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் சார்பாக இந்த வாரம் கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லாவை திரையிடுகிறார்கள்.. டிக்கட்களுக்கு, சங்கத்தின் செயலாளர் சரவணகுமாரை (740 549 3707) அணுகவும்.


Monday, October 22, 2007

ஒரு பயணக் குறிப்பும் சில நன்றிகளும் 1

மாதமொருமுறை சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் காலங்களில், சென்னை வந்த புதிதில் பேருந்தில் தான் செல்வேன் (அதன் பிறகு ரயிலில் செல்வது வழக்கமாயிற்று) பெரும்பாலும் அரசு பேருந்துகள் தான். கட்டணங்கள் குறைவு என்பதால் அதை பட்டியலின் முதலில் வைத்திருப்பேன். தனியார் சொகுசு பேருந்துகளை போல, அந்தந்த மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தின் தொலை தூர பேருந்துகள் நன்றாகவே இருக்கும். முக்கியமாக அரசு விரைவு பேருந்துகளை விட இவைகள் பயணிக்க சொகுசாக இருக்கும். பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும். தனியார் பேருந்துகளைப் போலவே அரசு பேருந்துகளிலும் இப்போதெல்லாம் டிவிப் பெட்டிகள் வைத்து படங்கள் ஓட்டுகின்றனர். (தற்போது தனியார் வண்டிகளில் இந்த சௌகரியம் இல்லை என்று நினைக்கிறேன்) இந்த மாதிரி இரவு நேர பேருந்துகளில், பயணிகள் எல்லோரும் தூங்கின பிறகு, எந்த அளவு கண்முழித்து அந்த ஓட்டுநர் கஷ்டப்பட்டு அந்த வண்டியை, அத்தனை பேரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வண்டியை ஓட்டியிருக்க வேண்டும்? (அதற்கு தான் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை இங்கே ஒரு கருத்தாக எடுத்துகொள்ளத் தேவையில்லை என்று நினைகிறேன்) அதுவும் இரண்டு மூன்று மணிக்கெல்லாம் அப்படியொரு தூக்கம் கண்களை தழுவும்.. அடிக்கடி சொக்கி நம்மை விழவைக்கும்.. அதையெல்லாம் பொறுத்துகொண்டு ஓட்டுவது எவ்வளவு சிரமம்? இதையெல்லாம் நான் அந்த வண்டிகளிலே பயணிக்கும் போது கொஞ்சம் கூட நினைத்ததில்லை.. அதுவும் நினைத்த நேரத்தில் இடம் சென்று சேர முடியவில்லை என்றால், எத்தனையோ பேரோடு நானும் அந்த ஓட்டுநரை மனதால் சபித்திருக்கிறேன். (அமெரிக்காவில் ஓடுகின்ற தொலைதூர பேருந்துகள் ஒவ்வொரு ஆறு\எழு மணிநேர பயணத்திற்கும், இரண்டு மணி நேர ஓய்வு எடுப்பது வழக்கம் என்று பயணித்த நண்பர்கள் சொல்லக் கேள்வி)


இந்த சனி ஞாயிறு கிழமைகளில் என் தங்கையை (சித்தி பெண்) பார்க்க விஸ்கான்ஸினில் உள்ள மில்வாக்கி நகரம் சென்றிருந்தேன். கிட்டதட்ட ஏழரை மணி நேர பயணம்.. தனியாளாக கார் ஓட்டி சென்றேன்.. அப்போது தான், என்னை இது வரை சுமந்து சென்ற பேருந்தின் ஓட்டுநர்கள் தெய்வங்களாக கண்முன்னே தெரிந்தார்கள்.. அதுவும் சொகுசான சாலைகள்.. சொன்னபடி கேட்கின்ற புது வண்டிகள் (நான் ஓட்டி சென்றது ஏழு பேர் உட்காரக்கூடிய கிரைஷலர் டவுன் கன்ட்ரி.. மில்வாக்கியில் இருக்கும் தங்கை நண்பர்களோடு சிகாகோ செல்லும் திட்டம் இருந்ததால் பெரிய வண்டியாக எடுத்துக்கொண்டேன்) என்ற சாதகங்கள் இருக்கும் இடத்திலேயே ஏழு மணி நேர பயணம் அலுப்பை கொடுத்தது. நிச்சயமாக, இப்படிப்பட்ட நெடுந்தூர வண்டிகளை இயக்கும் எண்ணற்ற ஓட்டுநர்களுக்கு (குறிப்பாக இந்தியாவில்), இதுவரை நன்றி மனதினுள் கூட சொல்லாமல் இருந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.. அவர்களுக்கு இந்த பதிவின் என் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

இந்த பயணத்தில் என்னுடன், எனக்கு ஆதரவாக என்னுடன் பயணித்தது இசை தான்.. இசையினால் எந்த அளவுக்கு துணையாக, ஆறுதலாக இருக்க முடிகிறது என்பதை கண்கூடாக அனுபவித்து கொண்டேன். எண்பதுகளில் வந்த கொண்டாட்ட பாடல்கள் தனிவகை.. காக்கிச் சட்டை சிங்காரி சரக்கு, சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் மனதிற்கு அவ்வளவு தெம்புகளையும்
உற்சாகத்தையும் தந்தது என்றால் அது மிகையில்லை.. இப்படி குத்தாட்ட பாடல்கள் ஒருவகை என்றால், மனதை மயிலிறகால் வருடும் இளையராஜவின் மெல்லிசை அடுத்த வகை.. ஒரு இசைத்தட்டு முழக்கம் மிகுந்ததாவும், அடுத்தது இப்படி மெல்லிசைகளுமாய் கேட்டவாறே என் பயணம் அமைந்தது..

இப்போது இங்கே இலையுதிர்காலம் என்பதால், மரங்கள் எல்லாம் வண்ணம் மாறி, அருமையாய் தெரிந்தன.. ஒவ்வொரு காட்சிகளும், வண்ண இலைகள், மரம் முழுவதும் இத்தனை பூக்களா என்று வியக்க வைத்து, கண்ணை வாரிச் சென்றது.. விஸ்கான்ஸின், இல்லினாய்ஸ் மாநிலங்களை விட, வடகிழக்கே வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலங்களை இந்த இலையுதிர்காலத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேள்வி.. இந்த முறையும் அங்கெல்லாம் சென்று மகிழ, கொடுத்து வைக்கவில்லை எனக்கு.. நானிருக்கும் ஒஹாயோவில் இப்போது தான் மெல்ல இலைகள் உருமாறி, மாறியவைகள் மரத்தை வண்ணமடித்தது போதும் என்று தரையெல்லாம் வண்ணமடிக்க உதிர்ந்து கொண்டிருக்கின்றன..

இதையெல்லாம் சேமித்து வைக்க என் மூன்றாவது கண்ணை இன்னும் திறக்க வில்லை.. திறந்த பின், சில நிழற்படங்களை (டிஜிட்டல் யுகத்தில் நிழற்படம் என்று சொல்லலாமா) இங்க உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.. பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்களின் கருத்துகள், குடுவையின் கீழ் இருக்கும் தண்ணீரை பருக கற்களை ஒன்றன்பின் ஒன்றாக இட்ட காக்கைகு உதவியதாக இருக்கும்.

எனது பழைய பதிவுகளுக்கும் சென்று, படித்து பின்னூட்டமிட்ட சேதுக்கரசிக்கும் என் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

Sunday, February 04, 2007

சின்ன விருந்தும் அதில் சமைத்த உணவு வகைகளும்

சிக்கன் சூப்
முட்டைகோஸ் சூப்

வெங்காய பக்கோடா
பெப்பர் சிக்கன்
மெதுவடை

காலிஃப்ளவர் கறி
கத்திரிக்காய் சாதம் (வாங்கி பாத்)

பிரான் கறி
சிக்கன் கிரேவி

சாதம்
சப்பாத்தி
வத்தல் குழம்பு
அவித்த முட்டை
சிக்கன் குழம்பு
ரசம்

சேமியா பாயாசம்
கோலோப் ஜாமூன்

இதெல்லாம் என்னன்னு பாக்குறீங்களா.. நம்ம ரூம்ல, இங்க இருக்கவங்களையெல்லாம் கூப்பிட்டு சின்ன விருந்து ஒண்ணு கொடுத்தோம்.. அதுக்கு தயார் செய்த வகைகள் தான் இவைகள்..

அதனால் தான் நேற்று இங்கே பதிவிட முடியவில்லை..
எல்லோருக்கும் உணவிடும் வேலை இருந்ததால்..

அதன் பிறகு கிட்டதட்ட மூன்று மணி நேரம் அரட்டைகளும் சின்ன சின்ன யூனோ, பிக்சனரி, அந்தாக்சரி போன்ற விளையாட்டுகளும் ஆடி இப்போது தான் விருந்தே முடிந்தது.

Sunday, January 21, 2007

புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது

டேய் கார்த்தி.. எழுந்திரு.. என்ஜாய் பண்ணனும்னா வெளிய பாரு.. சரியான உறக்கத்தில் இருந்தேன். நண்பனின் குரல் என்னை எழுப்பியது. சோம்பலுடன் எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே பனி மழை.. அதுவும் ஏற்கனவே தரையெல்லாம் மூடி மரத்தில் வெள்ளைப்பூ பூக்க ஆரம்பித்தது. இத்துணை நாட்களாய் வெளியேறாத பனிக் குருவி கீச் கீச்சென்று மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருந்தது.. தானாகவே கண்கள் அந்த முதல் விழிப்பிலேயே பிரகாசமானது. அவசர அவசரமாய் குளித்து விட்டு வழக்கம் போல போட்டோ செசனுக்கு கிளம்பினோம்.



எப்பவும் டிசம்பர் மாதம் 15 முதலே பனி பெய்ய ஆரம்பித்துவிடும். இங்கிருக்கும் மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் வெள்ளை கிறிஸ்துமஸ்னு பனியோடு கொண்டாடுவார்கள். இந்த தடவை அப்படி கொண்டாட முடியவில்லை என்று எல்லோருக்கும் ஒரு வருத்தம். ஜனவரி ஆகியும் பனி பெய்ற மாதிரி தெரிவதில்லை. சரி.. அடுத்த வருசம் இங்கே இருப்போமான்னு தெரில.. இந்த தடவை பனியை பார்க்காமலே இந்திய போற மாதிரி ஆகிடுமோன்னு பார்த்தா, இப்படி நல்லா தூங்குற காலை நேரத்துல சட்டுன்னு வானத்தை பொத்துக்கொண்டு பனி மழை.. அந்த பனி மழையை பார்க்கவே சிறு குழந்தையாகி பனியோடி விளையாட வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் பரவியது..



குடியிருக்கும் அபார்ட்மன்ட்டை விட்டு வெளியே வந்தால், கிட்டதட்ட நாலு, அஞ்சு இஞ்ச் உயரத்துக்கு பனி பெய்திருந்தது. இன்னமும் இறகு போல பனி மழை பெய்து காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது.. அந்த பனியில் இறங்கியது தான் தாமதம்.. மனசுக்குள் அப்படி ஒரு உற்சாக ஊற்று ஓடியது.



கிட்டதட்ட ஒரு மணி நேரம் பனியில் பந்து விளையாடினோம். பனியையே எறிந்தும் விளையாடினோம். பார்க்கும் சின்ன சின்ன இடங்களில் எல்லாம் பனி அப்படி அப்பிகிடந்தது. ரொம்ப நாள் ஏக்கம் மனசுக்குள் தீர்ந்த ஒரு திருப்தி இருந்தது.

அந்த என் உற்சாக போட்டோக்களை இங்கே உங்கள் மனசுக்குள் கண் வழியே ஏற்றுகிறேன் நண்பர்களே.

Thursday, January 18, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (இரண்டாம் பகுதி)

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)



லிங்கன் அவர்களின் நினைவு மண்டபத்தை பார்த்து வியந்தவாறே நாம், வலது பக்கம் நடந்தால் அங்கே கொரியா போரின் நினைவிடம் ஒன்று இருக்கிறது.. அங்கே கைகளில் துப்பாக்கி ஏந்திய, கண்களில் அந்த வீரம் மின்ன, பதினைந்துக்கும் மேற்பட்ட வீரர்களின் சிலைகள் உள்ளன. தினமும் இங்கே கொரியா நாட்டு தூதரகத்தின் சார்பாக மலர்வளையம் வைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தின் பக்கவாட்டில் கறுப்புக்கலர் கற்களால் ஒரு சுவர் அமைக்கப்பட்டு அதில் பல வீரர்களில் உருவங்கள் பதிக்கப்பட்டிருகின்றன. இது மட்டுமில்லாமல் "சுதந்திரம் சும்மா கிடைப்பதில்லை" என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.



இதன் மறுபுறத்தில், லிங்கன் மண்டபத்தின் இடது பக்கத்தில் வியட்னாம் போரின் நினைவிடமும் இருக்கிறது. இங்கே போரில் போராடிய பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தினமும் அன்றைய தேதியில் மறந்து போன வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக மலர்ச்செண்டு வைக்கிறார்கள். நாட்டின் தலைநகரம் என்பதால் எல்லா இடங்களில் தேசப்பற்று சார்ந்த விஷயங்களே மிகுதியாக தெரிகிறது. இந்த நினைவு இடங்களுக்கு எல்லாம் நாம் சென்று திரும்பும் போது, காதுகளில் துப்பாக்கி ஓசையும் பீரங்கி முழக்கங்களும், கண்களில் போர்க்களத்தின் காட்சிகளும், இதயத்தில் அவர்களின் நாட்டுபற்றும் அதற்கு அவர்கள் தந்த விலையும் இமயமாக எழுந்து நிற்கிறது..

(நம்ம ஊரில் இன்னமும் தலைவர்கள் சிலைக்காக அடித்துக் கொள்வதை கண்ட அந்த கணங்கள் இந்த மாதிரி இடங்களில் ஞாபகம் வர மிகவும் வருந்தினேன்..)



இந்த இடத்திலிருந்து அப்படியே நேரா நடந்து போனால், எலிப்ஸ் பூங்கா வரும்.. அதன் மேல்பக்கத்தில் தான் வெள்ளை மாளிகை. உள்ள விட மாட்டாங்கன்னு தெரியும்.. அதனால வெளில இருந்தே பார்த்தோம்.. வெளியில் இருந்து பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒன்றும் பெரிய விஷயங்கள் இதில் இருப்பதாக தெரியவில்லை.. ஜனாதிபதி இருக்கிறார் என்பதை தவிர. ஆனால் வெள்ளைமாளிகையை நமது ராஷ்ட்ரபதி பவனோடு ஒப்பீடு செய்தால் எனக்கு ராஷ்ட்ரபதி பவன் தான் பிடித்திருக்கிறது.. ஒவ்வொரு முறையும் ராஷ்ட்ரபதி பவனில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்று வந்தவர்கள், அதை பற்றிச் சொல்லும் போதும் அவர்களுடன் நாமும் சென்று வந்ததை போல இருக்கும். ஆனால் அதெல்லாம் வெள்ளை மாளிகையில் இருக்கிறதா என்று பக்கத்தில் குடியிருக்கும் நமது நாட்டாமை தான் சொல்ல வேண்டும். ஆனால் நம்ம ஊருக்கு போனால் எல்லோரிடமும் காட்ட வேண்டுமே அதனால்.. வெள்ளை மாளிகை முன்பு சராமாரியாக புகைபடங்கள் எடுத்துக் கொண்டேன். அதை எடுத்துக் கொண்டு ஊரில் காண்பித்தால் தான் நான் அங்கே சென்று வந்ததாக நம்புவார்கள். நான் நியுயார்க் மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் அடங்கிய டிவிடி எங்கள் ஊரில் வீடு வீடாய் சுத்திக்கொண்டிருக்கிறது. என்னை பாக்கவில்லை என்றாலும் அமெரிக்காவின் பல இடங்களை பார்க்கலாமே என்று தான் அவர்கள் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



வெள்ளை மாளிகையை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, அமெரிக்க பாராளுமன்றத்தை பார்க்க கிளம்பினோம். அதன் போகும் வழிகளில் இருந்த கட்டிடங்கள் எல்லாம் மிரட்டலாய் இருந்தன. அழகாய் வடிவமைக்கப் பட்டு, உயரமாய், நமது மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களை போல எல்லாக் கட்டிடங்களிலும் தூண்கள் நின்று அந்த கட்டிடங்களை தாங்கி கொண்டிருந்தன. சிவப்பு நிற வண்ணத்தில் சில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாய் இருந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தின் அருகில் செல்ல சில பாதுகாப்பு காரணங்களால் போக முடியவில்லை என்பதால் தூரத்தில் இருந்தே பார்த்து வழக்கம் போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். என்னதான் வெயில் காலங்களில் ஊரை சுத்தி பார்த்தாலும் இந்த மாதிரி ஒரு அழகிய ரசிப்பதற்கேற்ப வானம் கருப்பு ஆடை அணிந்து கிடக்கும் இந்த வேலையில் நகரின் தெருக்களில் நடப்பது சுகமானது.



அதுவும் வருடத்தின் முதன் நாளில் இப்படியொரு இனிய பயணம் அந்த வருடமெல்லாம் வசந்தமே என்று நெஞ்சுக்கள் ஒரு சந்தோச விதயை தூவின. அந்த சந்தோச விதை இன்று மரமாய் விளைந்து நிற்கின்றன. அப்படியே பரவி இனிய பூக்களை தூவுகின்றன ஒவ்வொரு நாட்களிலும் நடகின்ற பாதையில் பரப்புகின்றன. அந்த சந்தோச வாசனை படிக்கின்ற எல்லோர் மனசிலும் கலந்து வாழ்வு செழிக்க, காற்றில் கலந்து எங்கும் குடியிருக்கும் இறைவனின் அருளால் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

Saturday, January 06, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)

இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்.. வெளியில் சற்று முன் பெய்த மழை இன்னும் உள்ளே அந்த பாதிப்பை தந்து கொண்டுதான் இருந்தது. காலையில் புது வருஷத்தில் வாஷிங்டன் நகரமே அந்த மழையினால் கழுவப்பட்டிருந்தது.. வானம், ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை.. இந்த மாதிரி பருவ நேரத்தை அவ்வளவு எளிதாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.. ஒவ்வொரு துளியாக மரங்கள் பூமிக்கு அனுப்பும் அந்த பொழுது வைரமுத்து பொன்மாலை பொழுது என்று எழுதிய அந்த பாட்டின் தருணத்தை விட ரசிக்க வைப்பது. ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு, ஊர் சுத்த கிளம்ப ஆரம்பித்த சமயமே வானம் மழை சாரல் மலர்களோடு எங்களை வறவேற்க தயாராய் இருந்தது. முதலில் ஒயிட் ஹவுஸை பார்க்க வேண்டும் என்று கூகிளில் எடுத்த மேப்பை கையில் வைத்துகொண்டு ஆரம்பித்தோம்..


(பிரதிபலிப்பு குளத்தில் தெரியும் வாஷிங்டன் நினைவுச் சின்னம்)

நீண்ட தூர நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவதை விட இது மாதிரி நகரச் சாலைகளில் ஓட்டுவது சற்று சிரமம். ஒரு இடத்தில் திரும்ப மறந்தாலும் அந்த வீதியின் பெயரை கவனிக்காமல் விட்டாலும், மறுபடியும் அந்த இடத்துக்கு வருவதற்கு, நமது கார் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும். வழக்கம் போல எப்படியோ எங்கேயோ வழியை தொலைத்துவிட்டோம். ஆனால் ஹோட்டலில் எடுத்த சிட்டி மேப் கைகொடுத்தது. எப்போதும் இது மாதிரி புதிய நகரத்துக்கு சென்றால் அங்கு ஓட்டலின் வரவேற்பறையில் இருக்கும் எல்லாவிதமாத கையேடுகளையும் எடுத்துக்கொள்ளுதல் இந்த மாதிரி நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.. அதை வைத்து ஓயிட் ஹவுஸ் சென்று சேர்ந்தோம். அங்கே புஷ் நம்மை வறவேற்க தயாராய் காலை மழை போலவே காத்து கிடந்தார் என்று சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை. என்ன என்ன இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அதெல்லாம் நடக்கும் தூரத்திலே இருந்ததால் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கிளம்பினோம்.


(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தெரியும் லிங்கன் நினைவு மண்டபம்)

முதலில் வாஷிங்டன் நினைவுச் சின்னம். தனது முதல் ஜனாதிபதிக்காக அமெரிக்கா எழுப்பிய அழகான, அமெரிக்காவின் பழைய கட்டிட கலைக்கு சான்றாக விண்ணை துளைக்குமாறு வானளாவ நிற்கிறது, இந்த வெள்ளைவண்ண நினைவுச் சின்னம். உள்ளே செல்லும் முன் எல்லாவகையிலான பாதுகாப்பு சோதனைகளுக்கும் நம்மை உட்படுத்துகின்றனர். இது கிட்ட தட்ட 160 மீட்டர் உயரம் கொண்டது. உள்ளே உச்சிவரை செல்லுமாறு லிப்ட் வசதியும் உண்டு. இதன் உச்சியில் இருந்து வாஷிங்டன் நகரத்தின் எல்லா பழம் பெரும் சின்னங்களையும் காணலாம். இந்த உயரிய நினைவு சின்னத்தை வெறும் கற்களை அடுக்கியே கட்டி உள்ளனர். முழுப் பூச்செல்லாம் கிடையாது. ஒரு தொழிற்சாலை புகைகூண்டு வடிவத்தை ஒத்து இது இருக்கிறது. உள்ளே, உச்சியிலே பார்ப்பதற்காக நான்கு திசைகளிலும் பாதுகாப்பான கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன. அதுவும் நாங்கள் போயிருந்த போது அப்போதிருந்த வானிலை காரணம நன்றாக எதனையும் அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. ஆனால் கண்களை உரசியவாறு சென்றது மேக மூட்டங்கள். இந்த உயர்ந்த சின்னத்தின் பக்கவாட்டில் செயற்கை முறையிலும் வெண்புகைகளை உருவாக்குகின்றனர். உள்ளே லிப்ட் மூலம் இறங்கும் போதும் பக்கவாட்டு சுவர்களில் சில நினைவு சின்னங்களையும் சில கற் ஓவியங்களையும் பதித்திருப்பதை நாம் காணலாம். அதுவும் 150 வருஷதுக்கு முன்னலேயே இப்படி ஒரு அற்புத, வாயை பிளந்து வியக்க வைக்கிற சின்னத்தை உருவாக்கிய, பெயர் மறந்து போன அந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில்.. பின்னே பசிபிக் கடல் தூண்.. அதனை சுற்றிய மாநிலத் தூண்கள்)

இந்த நினைவு சின்னத்தின் வடக்கு பக்கம் ஓயிட் ஹவுஸும், கிழக்கு பக்கம் அமெரிக்க பாராளுமன்றமும், தெற்கு பக்கம் ஜெப்பர்சன் நினைவு கட்டிடமும், மேற்கு பக்கம் லிங்கன் நினைவு மண்டபமும் இருக்கிறது. இந்த நான்கு திசைகளையும் உயரத்தில் இருந்து, வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து நீங்கள் பார்க்கலாம். நாங்கள் வழக்கம் போல இந்த சின்னத்தை சுற்றி ஒரு நடை வந்து, எங்களது போட்டோ செஷன்களை முடித்தோம். ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாம் சென்று வந்ததற்கு அடையாளங்கள் இந்த புகைபடங்கள் தானே. அங்கிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நடந்தால் அழகிய நீரூறுக்களுடன் இரண்டாம் உலகப் போருக்கான நினைவிடம் இருக்கிறது. இது வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலும், லிங்கன் நினைவு மண்டபத்திற்கு இருநூறு அடி முன்னாலும் உள்ளது. இந்த இடத்தை சுற்றி அமெரிக்காவின் எல்லா மாநிலத்துக்கும் தனித் தனியான தூண்கள் ஒரு அரை வட்ட வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது. எல்லா தூண்களிலும் அந்த மாநீலத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தூண்களையும் முறுக்கேறிய மாதிரி கற்கயிறுகளாலேயே இணைத்தும் உள்ளனர். இந்த அரை வட்டத்தின் கிழக்கு முடிவில் பசிபிக் என ஒரு பெரிய தூணும் கிழக்கில் அட்லாண்டிக் என்னும் தூணும் கட்டப்பட்டு ஒரு முழுமையான அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நீரூறிலும் நீர் கீழிலிருந்து மேல் சென்று மறுபடியும் கீழ் விழுவதை காணுகையில், இரண்டாம் உலகப் போரில் போரிட்ட ஒவ்வொரு போர் வீரனின் வேகத்தையும், அவனது துடிப்பையும் அவனது எழுச்சியையும் பறைசாற்றுவதாகவே உள்ளது.

(அந்த அழகான நடைபாதையில்)

இரண்டாம் உலகப்போரின் நினைவிடத்தை கடந்து, லிங்கன் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஒரு நீளமான பாதை ஒன்று வளைந்து வளர்ந்த மரங்களால் சூழப்பட்டு, இரு பக்கமும் உயர வெள்ளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த மரங்கள் இலைகளை பூமிக்கு அனுப்பிவிட்டு குளிர்காலத்துக்காக மொட்டை அடித்துவிட்டு வேண்டுதலுடன் நிற்பது போல் இருந்தாலும், நாங்கள் சென்றிருந்த அந்த நேரத்தில் அழகாய் தெரிந்தது. அந்த நடைபாதையில் நடந்து போகையில் அப்ப கைபிடித்து குழந்தை வயதில் நடந்த அந்த காலத்தை நினைவூட்டியது எனக்கு.

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தண்ணீரில் லிங்கன் மண்டபம் மிதப்பது போல் எடுத்த ஒரு புகைப்படம்)

இந்த நினைவிடத்தில் இருந்து, வளர்ந்து விரிந்த மரங்களிடையே அமைந்த நடைபாதையில் நடந்தால் லிங்கன் நினைவிடத்தை அடையலாம். இந்த இரண்டு நினைவிடத்தையும் இணைப்பது ஒரு பெரிய செவ்வகக் குளம். லிங்கன் நினைவிடம், இந்த குளம், வாஷிங்டன் நினைவுச் சின்னம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பிரதிபலிப்பு குளம் அதாவது ரிப்லெக்டிங் பூல் என்று பெயரிட்டுள்ளார்கள். போசாக்கான யானையின் கால்களை விட கிட்டதட்ட பதினைந்து மடந்கு பெரிதான பத்திற்கும் மேற்பட்ட தூண்களால் கட்டபட்டுள்ள இந்த லிங்கன் நினைவு மண்டபத்திலிருந்து பார்த்தால் வாஷிங்டன் நினைவுச் சின்னம் இந்த குளத்தில் படுத்துகிடப்பது போல் பிரதிபலிக்கும். லிங்கன் நினைவு மண்டபத்தில் அவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலையும் அவரது மற்றும் அவரை பற்றிய வாசகங்களும் உட்கட்டிட சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடமும் அமெரிக்க கட்டிட கலையை இறுமாப்பு கொண்ட கர்வம் கொண்ட ஒரு துறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

படங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டுங்கள்

(தொடரும்)