Saturday, March 31, 2007

வாஜி வாஜி சிவாஜி - புதிய பட ஸ்டில்கள்









படங்களுக்காக, பிஹைன்ட்வுட்ஸ்.காம் தளத்திற்கு நன்றி

Friday, March 30, 2007

கதை சொல்ற கதையும், பார்த்தாலே பரவசமும்

இத்தனை கதை சொல்றீங்களே.. எப்படி இப்படி உங்களால சூப்பரா கதை சொல்லமுடியுது மாம்ஸ்.. அந்த கதையை கொஞ்சம் சொல்லக்கூடாதான்னு என் மாப்ள 'கர்ண பரம்பரை' பரணி கேட்க, மாப்ள கேட்டு நாம என்னிக்காவது இல்லைன்னு சொல்லியிருக்கோமா.. அது தான் அதைப் பத்தி எழுதலாமேன்னு, ஆரம்பிக்கிறேன், நான் கதை சொல்ற கதையை..

நமக்கு இப்ப மட்டுமில்ல.. சின்ன வயசுல இருந்து இது ஒரு பொழப்பாத் தான் இருந்தது.. அதுவும் நான் கதை சொல்ல ஆரம்பிச்சா, முன்னாடி சின்னதா ஒரு கூட்டமே உருவாகிடும்.. என் நாடு, என் மக்கள்னு நம்ம முருகன் மாதிரி அது ஒரு தனி உலகம்.. என் தெருல இருக்க வாண்டுகள் எல்லாம் நைட் ஏழு மணிக்கு மேல நம்ம வீட்டுக்கு முன்னால கூடிடும்.. ராஜா காலத்து (ஒரு மானை பார்த்து இளவரசன் நந்தகுமாரன் வில்லால் குறி பார்க்கிறான்.. வில்வித்தையில் தேர்ந்தவன்.. நூறு பறவை வானத்துல போனாலும் சொல்ற பறவையை விழவைக்கிற வித்தையாளன்.. அவன் குறி வைப்பது தெரியாமல் மான் மேய்ந்துகொண்டிருக்கிறது.. இவன் அம்பை எய்ய, அது காற்றை கிழித்துகொண்டு மானை நோக்கி பாய்கிறது.. அந்த அம்பு மானை நெருங்க, மான் எதைக் கண்டோ பயந்து துள்ளி ஓடுகிறது.. அப்போது தான் மானிற்கு பின்னாடி இருந்த முனிவர் இவன் கண்களுக்கு தெரிகிறார்.. இவன் அதிர்ச்சியில் இருக்க, விட்ட அம்பு அவர் இதயத்தை துளைக்கிறது.. இது உபாலதேசத்தில் ஒரு கபாலம்னு நான் அவங்களுக்கு சொன்ன கதையில் ஒரு பகுதி)கதையிலிருந்து எதிர்கால விஞ்ஞான உலகம் வரை நாம அளக்குறது தான் வேலை.. இதுக்காக நாம எதும் தனியா குத்த வச்சு யோசிக்கிறதில்லை.. போறபோக்குல சரளமா வரும்.. நான் கதை சொல்றதைப் பாத்து பக்கத்து வீட்டு பாட்டி, கதை கேட்ட நாயை செருப்பால அடிக்கனும் ஒரு பழமொழியை வேற சொல்லிட்டு போகும்..

நான் என் ஐயா கிட்ட கதைகேட்டு வளர்ந்தவன்.. அவர் கதை சொல்றதுல நம்மளை விட பெரியவர்.. ஒரு தடவை ஒரு கதையை கிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் அரை மணிநேரமாக சொன்னவர்.. வாய்வழிகதைல கூட அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் வச்சு கலக்கியவர்.. அதுல இருந்து தான் கொஞ்ச நஞ்சம் நமக்கு வந்ததுன்னு நினைக்கிறேன்.. ஆனா அவர் சுதந்திர போராட்ட காலத்து உண்மைகதைகளை சொன்னப்ப எனக்கு நம்ம நாட்டு மேல அப்படி ஒரு மரியதை உருவாச்சு. அவ்வளவு கஷ்டப்பட்டதை இப்போ எப்படி பயன்படுத்துறாங்கன்னு எனக்கு கோபம் கூட வரும்..

இப்படித்தான் நான் எம்.சி.ஏ படிக்கிறப்போ ஒரு கதை நடந்தது.. அப்போ பார்த்தாலே பரவசம் படம் ரிலீஸ் ஆன சமயம்.. நான் கம்பியூட்டர் லேப்ல இருந்தேன்.. லேப் மூணு மணி நேரம் இருக்கும். நாம என்னிக்கு லேப்ல புரோகிராம் போட்டிருக்கோம்.. தினமும் ஏதாவது கூத்து தான் போடுவோம்.. அங்க தொட்டு இங்க தொட்டு ஒரு நாள் அஸிஸ்டண்ட் புரபசர் தலையிலே கையை வச்சாச்சு.. சக்க போரடிக்க, மெதுவா சினிமா டாபிக்கை எடுத்துவிட்டேன்.. அவங்க அப்படியே மெல்ல நம்ம கதையை கேட்க ஆரம்பிச்சாங்கா.. நான் பார்த்தாலே பரவசம் படத்தோட கதையை சொல்ல ஆரம்பிச்சேன்.. எனக்கு உண்டான கெட்ட பழக்க என்னென்னா, படத்தோட கதையை சொல்ல ஆரம்பிச்சா, கேமரா ஆங்கிளோட தான் சொல்வேன்.. அப்படி லெப்ட்ல, மேலயிருந்து மாதவனை ஃபோகஸ் பண்ற கேமரா, மெல்ல சிம்ரனை முகபாவத்தையும் கவர் பண்ணும்னு கதை சொல்ல ஆரம்பிச்சேன்.. மூணு மணிநேர படத்தோட கதையை இரண்டு மணி நேரம் சொன்ன ஆள் நானாத் தான் இருப்பேன்.. அவங்களும் குறுக்க குறுக்க கேள்வியெல்லாம் கேப்பாங்க.. மேடம்..நீங்க பாடம் எடுக்குறப்போ நான் இப்படி கேள்வியா கேட்பேன்னு சொல்லி அவங்க வாயை வேற அடச்சிடுவேன்.. அப்பவும் கேட்டா பதிலை சொல்லிபுட்டு, அடுத்த தடவை கிளாஸ்ல நான் கேள்வி கேக்கப்போறதா செல்ல மிரட்டல் வேற விடுவேன்.. நாம இரண்டு மணி நேரம் சொன்ன கதை கேட்டுட்டு, கட்டாயம் படத்தை பாக்கபோறதா வேற சொன்னாங்க.. இதோட விட்டிருந்தா அவங்க சந்தோசமா இருந்திருப்பாங்கா.. என்கிட்ட கேட்கக்கூடாத கேள்வியை வேற கேட்டுட்டாங்க.. இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்த அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டாங்க.. நான் என் முகத்தை அப்பாவியா வச்சுகிட்டு, நான் இன்னும் படமே பாக்கலைனு சொன்னேன் பாருங்க, மொத்த லேப் அதிர்ற மாதிரி என் நண்பர்கள் சிரிச்சாங்க.. அதுக்கு பிறகு என்னிக்குமே கதை சொல்லு கார்த்தின்னு அவங்க என்கிட்ட கேட்டதில்ல..

இது இல்லாம, நாம முழிச்சிருக்க நேரம் விடுற கதை போதாதுன்னு நமக்கு வர்ற கனவுகள் வேற முழுநீள கதைகள் தான்.. கனவெல்லாம் சின்னதா தான் வரும்னு சொல்வாங்க.. நமக்கு மட்டும் வில்லன் நம்மளை துரத்துறதுல இருந்து, தப்பிக்கிற நேரத்துல ரெண்டு ஹிரோயின் கூட டூயட்டோட கனா வரும்.. ஆபீசுல டீ நேரத்துல நம்ம கனா கதையை கேக்கலைனா, என்ன இன்னைக்கு காபில சக்கரையே இல்லைன்னு மக்கள் கேப்பாங்கன்னா பாத்துக்கங்களேன்..

இப்படித்தான், ஒரு தடவை, என் அம்மாச்சி வீட்டு நிலத்துல கடலை போட்டிருந்தாங்க.. நான் அப்போ பத்தாவது முழு பரீட்சை லீவுல அவங்க வீட்டுக்கு போயிருந்த சமயம், கடலையை புடுங்கினாங்க.. நான் அங்க இருந்த எல்லாம் நாளும் காட்டுக்கு போயி, கடலை புடுங்க வந்தவங்களோட கடலை புடுங்குவேன்.. அப்போ அவங்களுக்கு தினமும் ஏதாவது கதை சொல்வேன்.. அவங்களுக்கும் வேலை அலுப்பு தெரியாம போகும்.. அதுக்கு அடுத்த வருஷம், அதே ஆளுக வேலைக்கு வந்தப்ப, எங்க உங்க பேரன் வரலையா.. அவர் இருந்தா வேலை செய்ற அலுப்பே இருக்காதுன்னு என் அம்மாச்சிகிட்ட சொல்லி இருக்காங்க.. அப்புறமென்ன, என் அம்மாச்சி அதை அதுக்குபிறகு பத்து வருஷமா வர்றவங்க கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க..

Thursday, March 29, 2007

திரைப்பட வினாடி-வினா 1

எல்லா பதிவுலையும் போட்டிகள் வைக்கிறாங்க.. மக்களும் தங்களுக்கு தெரிஞ்சத சொல்லி கைதட்டு வாங்குறாங்க.. நாம இப்படியே கதை சொல்லிகிட்டே இருந்தா, வாய்யா வயசானவரேன்னு சொன்னாலும் சொல்வீங்க.. அது நமக்கும் நல்லது இல்லைன்னு முடிவு, பண்ணி உங்களையெல்லாம், சிந்திக்க வைக்க, சுவத்துல தலையை முட்டி யோசிக்க வைக்கத் தான் இந்த வினாடி-வினா (அதாம்பா, குவிஸ்) போட்டி..

ரெடியா.. ஸ்டார்ட் மியுஸிக்..

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படத்தை இயக்கிய இயக்குநரின் சமீபத்திய படம் எது?

2. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் முதல் தமிழ் திரைப்பட பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?

3. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா முதன் முதலில் பிண்ணனி இசையமைத்த படத்தின் கதாநாயகன் யார்?

4. இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?

5. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி திரைப்பட பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் நாயகன்-நாயகி பெயர் என்ன?

என்ன பாக்குறீங்க.. நாமதான் ஸ்டார்ட் மியுஸிக் சொன்னோம்ல... அது தான் எல்லாமே இசை சம்பந்தப்பட்ட கேள்விகள், இந்த முறை..

எல்லாம் ரெடியா.. எங்க பதிலை சொல்லுங்க பாக்கலாம்.. பதில் சொல்றது மட்டுமில்லாமல், கூட ரெண்டு பின்னூட்டமும் போடுங்கப்பா.. இதுக்கு பதில் சொன்னா என்ன தருவீங்கன்னு கேட்டா, பதில் அன்னிக்கும் ஒண்ணு தான்.. இன்னைக்கும் ஒண்ணுதான்.. அம்பி, ஊருக்கு போயிட்டு கொண்டுவர்ற அல்வா தான்..

பதில்கள் திங்கட்கிழமை வெளியாகும் (இந்த பில்டப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று முறைக்காதீங்க மக்கா)

Wednesday, March 28, 2007

கன்யாகுமரி கலாட்டக்களும், ஆர்.எஸ்.எஸ் மாநாடும்

பேருந்தில் ஏறிவிட்டாலே, தூங்கி போய்விடுவதென்பது என் பால்ய வயது வேலை.. அது இருபது நிமிட பயணமென்றாலும் சரி, இரண்டு நாள் பயணமென்றாலும் சரி.. அதுவும் எங்கள் ஊரின் மேடு பள்ள சாலையிலே என்னால் சொகுசாக தூங்கமுடிகிறதென்றால், தேசிய நெடுஞ்சாலை பயணத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.. அது சொர்க்கத்தில் தூங்குவது போல இருக்கும். ஆனால் பத்து பனிரெண்டு வயதிற்கு பிறகு, அப்படியெல்லாம் தூங்குவது கிடையாது.. எங்கே போனாலும் வேடிக்கை பார்ப்பதும், கடக்கின்ற ஊர்களை மனத்திலே இருத்திக்கொள்வதும் தான் என் வேலையாக இருந்தது..

மிக முக்கியமாக, சுற்றுலாவில் இரவானாலும் கூட தூங்குவது கிடையாது. கிராமத்தில் இருந்து சுற்றுலா செல்வதென்பது மிகவும் அரிதான விஷயம். ஒரு முறை, நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடப்பதற்காக ஆட்கள் திரட்டும் பணி நடந்துவந்தது. போதுமான ஆட்கள் சேரவில்லை என்பதால், அதை ஒரு சுற்றுலாவாக மாற்றினார்கள். சுற்றுலாவிற்கான பாதி செலவை நாம் போட்டால் போதும் என்று முடிவானது.மதுரை, திருச்செந்தூர், கன்யாகுமரி அங்கேயிருந்து சுசீந்திரம் வழியாக நாகர்கோவில் மாநாடு செல்வதென்று முடிவானது. எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் சற்று அதிகம். அதுவும் 1990-களில், எங்கள் ஊரில் நடந்த சில மத பிரச்சினைகளுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் கொஞ்சம் நன்றாக வேரூன்றிவிட்டது. தினமும் மாலை வேளைகளில் பயிற்சிவகுப்புகள் எல்லாம் கூட நடந்து வந்தது. அப்படியான காலங்களில் தான், நான் சிறிது காலம் சிலம்பம் கற்றுக்கொண்டேன்.. சிலம்பம் எடுத்தும் வணக்கம் சொல்லவும், யாராவது எதிர்த்தால் என்னை காத்துக்கொள்ளும் அளவும் எனக்கு சிலம்பம் கற்றுத்தரப்பட்டது..

எங்கள் ஊரின் மேற்குபகுதியில், ஊர் கிணற்றின் அடியில், தெருவிளக்கின் கீழே தான் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகள் நடந்தது. நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேரவில்லையென்றாலும், எனது அநேக நண்பர்கள் அதில் தான் இருந்தார்கள்.. சகா என்பதும், ஜி என்பதும் தான் அவர்களுக்குள் அழைக்க பயன்படும் வார்த்தைகள்.. பின்னாளில் அது ஊருக்குள் இருக்கும் எல்லோருக்கும் பொதுவானதொரு சொல்லாக மாறிவிட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது கிளைகளை எங்கள் ஊரில் பரப்ப காரணமாய் இருந்தவர்கள், கல்யாணம் செய்துகொண்ட பின்னர், அதனின் தாக்கம் மெதுவாக குறைந்து போய்விட்டது.. இன்னமும் அது இந்துத்துவா மற்றும் பாரதிய ஜனதா கட்சி என்னும் பெயரில் அங்கங்கே சத்தமில்லாமல் தூங்கிகொண்டு தான் இருக்கிறது..

இப்படியாக, அந்த முறை, திருச்செந்தூர், கன்யாகுமரி எல்லாம் சுற்றிப் பார்த்தோம். எங்கள் கூட வந்த எல்லோருக்கும், என்னையும் சேர்த்து, கன்யாகுமரி சென்றது அது தான் முதல் அனுபவம். விவேகானந்தர் பாறைக்கு, படகில் செல்வதற்கு முன், வழியில் ஒருவன் பிளாஸ்டிக்காலானா ஒரு ஃப்லூட்டை விற்றுக்கொண்டிருந்தான்.. அதற்கு முன்னால் மற்றொரு இடத்தில் அதன் விலை கேட்ட போது, முப்பது ரூபாய் என்று சொன்னதால் நாங்கள் வாங்கவில்லை. என் கூட வந்திருந்த என் அண்ணனின் பையன் விடாமல் கேட்டதால் (அழுததால்), நின்று விலை கேட்டால், இவன் அந்த ஃப்லூட்டிற்கு ஐம்பது ரூபாய் என்றான். அடப்பாவிகளா என்று நாங்கள் அதிர்ந்து போனோம்.. என் இன்னொரு அண்ணன் நக்கலாக இப்பத்தான் இதை பத்து ரூபாய்க்கு காந்தி மண்டபதுல சொன்னாங்க என்றார். அதற்கு அவன் சொன்ன பதில் எங்களை ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஒரு சேர உண்டாக்கியது. அப்படியா.. அப்பன்னா ஒரு ரெண்டு ரூபாய் சேர்த்து பனிரெண்டு ரூபாய் வாங்கிக்கோ சார் என்றார். என் அண்ணன் விடாமல் பேசி பத்து ரூப்பாய்க்கு வாங்கி வந்தார். ஏன் இப்படி அநியாய விலை சொல்றீங்கன்னு கேட்டதுக்கு, அப்பத்தானே சார் நீங்க விலை குறைச்சு கேட்குறப்போ எங்களுக்கு கட்டுபடியாகும்னு ரொம்ப அசால்டா பதில் சொல்றான். பத்து ரூபாய் எங்க இருக்கு..ஐம்பது ரூபாய் எங்க இருக்குன்னு நாங்க நினச்சுகிட்டோம். அன்றிலிருந்து,எங்கே இது மாதிரி பாதசாரி கடைல விலை கேட்டாலும் அவன் சொல்ற விலையை விட பாதிக்கும் கீழ தான் கேட்குறதுன்னு முடிவு பண்ணினோம்.

விவேகானந்தர் பாறையில, மண்டபத்திற்கு மேல போற படிக்கட்டுக்கு ரெண்டு பக்கத்திலையும் ரெண்டு யானை சிலைகள் இருந்தன.. நானும் என் தம்பியும் (அண்ணன், தம்பிக எல்லாம் என் சித்தப்பா, பெரியப்பா மக்க.. நம்ம பங்காளிக) ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம். இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க.. ஆஹா. நம்ம மக்கள் இன்னும் மாறலையான்னு நினைத்துகொண்டு, உள்ளே போய்விட்டோம். அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க.. யாராவது வேண்டுதல் வச்சு மொட்டை அடிக்காம இருந்தா சரின்னு நினைச்சு மனசுக்குள் சிரித்துகொண்டோம்.

அங்கிருந்து சுசீந்தரம் சென்று, பிறகு நாகர்கோவில் சென்றடைந்தோம். அன்றைய ஆர்.எஸ்.எஸ் மாநாடு ஒரு ஊர்வலத்தோடு கிளம்பியது.. நாங்களும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். இந்தியாவில் அதிசயமான காரியம் ஒன்று அந்த மாநாட்டில் நடந்தது. சொன்ன நேரத்துக்கு மாநாடு ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட முன்பின் இல்லை. அதே மாதிரி சரியான நேரத்துக்கு முடித்தார்கள். இந்த மாதிரி எல்லோரும் சரியான நேரத்தை கடைபிடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைத்துகொண்டேன். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.. அதை பார்த்தால் ஏதோ இயந்திர மனிதர்களின் அணிவகுப்பு போல இருந்தது, கட்டுகோப்பாக. நாங்கள் எல்லாம் அந்த அணிவகுப்பு நடந்த மைதானத்தை சுற்றியே உட்காரவைக்கப்பட்டோம். இதுபோல அடிக்கடி நடப்பதால் தான், நாகர்கோவிலில் பாரதிய ஜனதா நன்றாக வேறூன்ற முடிந்தது என்று பின்னாளில் அங்கே, அவர்கள் வெற்றிபெற்ற போது நினைத்துகொண்டேன்.

Tuesday, March 27, 2007

மாமான்னு சொல்ல ஒரு ஆளு

2004-ம் வருட தீபாவளி காலங்களில், எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. எங்கள் ஊரின் பக்கத்து ஊரில் இருப்பவர் பல காலங்களுக்கு முன்னே, சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.அவர் இந்திய வான்படையில் வேலை பார்த்துவிட்டு, தாம்பரம் பக்கத்தில் இருக்கும் சேலையூரில் வீடுகட்டி குடியேறிவிட்டார். கிட்டதட்ட பதினைந்து வருட காலங்கள் பஞ்சாபில் பணியில் இருந்தவர். அவர் எனக்கு பெண் பார்ப்பது பற்றி கேள்விப்பட்டு, அவரின் தம்பியை முதலில் எங்கள் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். வந்தவர் என் அப்பாவிடம் பேசிவிட்டு, என் கைபேசியின் எண் வாங்கி சென்றார். அதன்பிறகு, இரண்டு நாள் கழித்து பெண்ணின் தந்தை எனக்கு தொலைபேசியிருந்தார். பெண் பார்க்க வருமாறு அழைத்தார். நான், முதலில் பெண்ணின் ஜாதகமெல்லாம் பார்த்து விட்டு தான், எங்கள் வீட்டில் பெண் பார்க்க வருவார்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், தினமும் இரண்டு முறை எனக்கு கால் செய்து அழைத்தவண்ணம் இருந்தார். என் தந்தையின் நண்பர் வீட்டிற்கு வருவது போல, அவர் வீட்டிற்கு வருமாறு கூறினார். இவர் இவ்வளவு முறை அழைத்ததால், என் பெற்றோற்களும், சரி, சென்று வா என்றார்கள். என் மனதுக்குள் சொல்லாத ஒரு நெருடல் இருந்தால், அவர் வீட்டிற்கு என் நண்பனை அழைத்துகொண்டு சென்றேன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அதன் பிறகு பெண்ணை அழைத்து வந்தார்கள். அவள் நடந்து வந்த நளினமும் அந்த மென்மையும் எனக்கு முதல் பார்வையிலே பிடித்துவிட்டது. படிக்கும் உங்களுக்கு ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், சோனியா அகர்வாலின் மெல்லிய சாயல் இருக்கும். (உனக்கெல்லாம் சோனியாவா என்று முறைக்காதீர்கள்) கிட்டத்தட்ட பதினைந்து வருடகாலம், பஞ்சாபில் இருந்ததால், அந்த பெண்ணிடம் வடநாட்டு சாயல் இருந்த காரணத்தினால், சோனியா அகர்வால் போல் எனக்கு தெரிந்ததில் தப்பில்லை. அதன் பிறகு, எல்லோரிடமும் சொல்லிகொண்டு விடை பெற்றோம்.

அவர்களுக்கும் என்னை பிடித்துப் போய்விட, எனக்கும் பிடித்து போய் விட, பெண்ணின் ஜாதகத்தை என் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்தது. எங்கள் ஊரின் அருகில் தேவழகர்பட்டி என்னும் ஊரில், ஜாதகம் பார்ப்பவர் இருக்கிறார். இவர் சொன்னால் அது தொண்ணூறு சதவிகிதம் சரியாக இருக்கும். எங்கள் குடும்ப விஷயத்தில் அது நூறு சதவிகிதம். நான் எம்.சி.ஏ படிக்கின்ற காலத்தில், காலேஜில் கேம்பஸ் இன்டர்வியூற்கு வந்த நிறுவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.அதுவும் பல நிறுவனங்கள், எம்.சி.ஏ என்றால் எட்டிக்காயை பார்ப்பது போல வேண்டாம் என்றார்கள். அப்போது, இரட்டை கோபுரம் இடிந்த சம்பவமும் நடந்ததால், கணினித்துறையே பாதளத்தில் கிடந்த நேரம். சரி, எப்போது எனக்கும் வேலை கிடக்கும் என்று அவரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சென்றால், அவர் 2002, ஏப்ரல் 29 முதல் அதே வருட செப்டம்பர் 9-குள் வேலை கிடைக்கும். ஆனால் அது நிரந்தர வேலை யில்லை என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே, நான் ஒரு நிறுவனத்தில் மே 1-இல் டெம்பரரி வேலையில் சேர்ந்தேன். அவரின் கணிப்பு எந்த அளவிற்கு சரி என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும். என் அப்பா அவரிடம் இந்த பெண்ணின் ஜாதகத்தை காண்பிக்க, அவர் இந்த இடம் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என் அப்பா கொஞ்சம் யோசிப்பதை பார்த்த அவர், பையனுக்கு பிடித்துப்போய்விட்டதா என்று கேட்டு, பெண்ணின் ருதுவான ஜாதகத்தை கொண்டு வரச் சொன்னார். அதை கொண்டு சென்றாலும், அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்படி அந்த பெண்ணை கட்டினாலும், சில காலங்களுக்கு மட்டுமே குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அந்த நிலையில் என் அப்பா மிகவும் பயந்து போய்விட்டார். அதாவது அதற்கு அவர் சொன்ன ஒரு சின்ன உதாரணம் என்ன வென்றால், வீட்டிற்கு நான் வர தாமதமாக இருந்தாலும் அந்த பெண் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்க்க மாட்டாளாம். சாப்பாடு கூட, அங்க வைத்திருக்கிறேன், சாப்பிட்டுக்கோங்க என்பது போல் சொல்லிவிடுவாளாம்.. அதாவது, கணவன் மனைவினிடையே அந்த பாசம், பற்று இருக்காதென்று சொல்லிவிட்டார். சரி என்று நாங்களும் அவர்களிடம் ஜாதகம் பொருந்தி வரவில்லை என்ற காரணத்தை சொல்லிவிட்டோம்.

கிட்டதட்ட, ஆறு மாதங்களுக்கு பிறகு, எங்களுக்கு கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த பையனையே கல்யாணம் செய்துகொண்டதாக. அப்போது தான் புரிந்தது, அந்த பெண்ணின் தந்தை அன்று ஏன் அவ்வளவு அவசரப்பட்டார் என்று. அன்றைய தேதியிலிருந்து, வீட்டில் உள்ளவர்களுக்கு, அந்த ஜாதகம் பார்க்கும் நபர் மீது மிகவும் நம்பிக்கை வந்துவிட்டது. எனக்கும் அது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகத் தான் இருந்தது. நாம் பிறந்த நேரத்தையும், தேதியையும் வைத்து எப்படி இதையெல்லாம் கணிக்கிறார்கள் என்று அப்படி ஒரு மலைப்பு எனக்கு ஜோசியத்தின் மீது இன்னும் இருக்கிறது.

நேற்று இந்திய நேரப்படி, காலை பத்தரை மணி அளவில் என் தங்கை ஒரு அழகிய ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள். பல மணி நேரம் பொறுத்தும், சுகப்பிரசவம் ஆகாததால், ஆபரேசன் செய்து தான் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்கள். அந்த மருத்துவமனையில் அவ்வளவு லேசில் ஆபரேசன் செய்துவிட மாட்டார்கள், மற்ற காசு பிடுங்கும் மருத்துமனைகள் போல. (திண்டுக்கலில் காட்டாஸ்பத்திரி என்று தான் அந்த மருத்துமனையை எல்லோரும் அழைப்பார்கள். எனக்கும் சரியான பெயர் நினைவில் இல்லை. செயின்ட் ஜான் மருத்துவமனை என்று நினைக்கிறேன்) மாமான்னு சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு.. அப்படியொரு இனம் புரியாத, வார்த்தையில் வடிக்க இயலாத, மகிழ்ச்சி மனசுக்குள்..

அப்போது தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. சுகப்பிரசவம் என்றால் அந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது சரி. ஆனால் இது போல ஆபரேசன் செய்யும் போது, அந்த நேரத்தை வைத்து வாழ்க்கையை ஜாதகத்தில் கணிப்பது சரியாக இருக்குமா?

Monday, March 26, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 3

இரண்டாம் பகுதி

ஸ்பென்சர் பிளாசா -

மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால், எனது பள்ளித் தோழன்.. அவனை பார்த்தவுடன் ஆச்சர்யம் ஒரு பக்கம்.. அதிசய பார்வை மறு பக்கம்.. என்னடா அப்படிப் பாக்குற.. மறந்துட்டியா.. என்று கேட்டான் பிரகாஷ்.. என்னுடன் ஆறாம் வகுப்பு மட்டும் படித்தவன்.. மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஊர் சொன்னான்.. அப்போது நானும் அவனும் ஒரே மாதிரி.. இந்த நாகரீகங்கள் எல்லாம் அப்போது எங்களுக்கு, அண்ணாந்து பார்த்து அதிசயப்படும் ஜெட் விமாங்கள் போல, உணர்வைத் தரும். சென்னையிலிருந்து இளையராஜா என்ற பையன் (அண்ணா நகர் என்று நினைக்கிறேன்) ஒவ்வொரு முறை ஊருக்கு சென்று வரும் போதும், புதுசாய் பேண்ட், கால் பேண்ட் மாடல்கள் இருக்கும். அதை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு ஆச்சர்யப்பட்டு தெரிந்து கொள்வோம். அப்படி என்னுடைய எண்ணத்தோடு இருந்தவன், இப்போது பார்த்தால் பக்கா சென்னைவாசி.. காதில் சின்ன கடுக்கன், கிழிந்த ஜீன்ஸ் பெண்ட், வுட்லேண்டஸ் ஷூ, எண்ணெய் வைக்காத பரட்டை தலை.. விழுந்து விடுவதை போல தவாங்கட்டையில் பிரெஞ்சு தாடி.. என்னால் உண்மையில் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அட! இந்த அதிர்ச்சியோடு அவன் சொன்னது சொல்ல முடியாத குற்ற உணர்வையும் கிளப்பியது..


இந்த பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு தெரியாது. ஆனால், நல்ல வேலையில் சேர்ந்த பிறகு, இவனளவுக்கு கடுக்கனோடு மாறலைனாலும், சென்னை மக்களுக்கு ஏத்த மாதிரி மாறனும்.. நீளச் சட்டை, பலூன் பேக்கிஸ் வகையறாக்களுக்கு விடைகொடுக்கணும்னு நினச்சுகிட்டேன். இவ்வளவு நாட்கள் அதற்கு வாய்ப்பு வரவில்லை.. இனிமேல், இடத்திற்கு தகுந்த மாதிரி நாம நம்ம உடைகளை மாற்றி கொள்ளவேண்டும் என்று நினைத்துகொண்டேன்.. ஆனால் உள்ளிருக்கும் மனசு எப்பவும் சிப்புக்குள் இருக்கும் முத்து மாதிரி வச்சுக்கணும்னு நினச்சேன்.. என்ன தான் பாசி படிந்து, வண்ணங்கள் சிப்பியில் படிந்தாலும், அது உள்ளிருக்கும் முத்தின் வெள்ளை நிறத்தை மாற்றாது அல்லவா, அதைப்போல..

அன்று ஒருவழியாக, ஸ்பென்சரின் எல்லாத் தளங்களையும் சுற்றி விட்டு, வெகு தாமதமாகத் தான் அறைக்கு கிளம்பினோம். நானும் என் நண்பன் குமரனும் ஸ்பென்சரில் இருந்து கிளம்பி எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்துகொண்டிருந்தோம். சாந்தி தியேட்டரின் எதிர்புறம், தபால் அலுவலகம் இருக்கும் இடத்தில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. சுரங்கப்பாதையின் அந்த கூண்டின் பக்கவாட்டில் மக்கள் நடந்து போக சிறிது வழி வைத்திருந்தார்கள். சுரங்கப்பாதையின் வலது புறம் சாலை இருப்பதால் எல்லோரும், இடது பாதசாரி வழியையே பயன்படுத்துவார்கள். நாங்களும் அவ்வழி செல்ல நுழைகையிலும், அங்கே அந்த மெல்லிய வெளிச்சத்தில் இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள் என்று நினைத்த வேளையில், ஒருவள் வேகமாக நடந்து எங்களை நோக்கி வந்தாள். அருகில் வரவரத் தான் எங்களுக்கு புரிந்தது, அவர்கள் அரவாணிகள் என்று. வந்தவர் என் நண்பனின் கைபிடித்து ஏதேதோ சொல்ல ஆரம்பிக்க, நானும் என் நண்பனும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைத்தோம். ஆனால், அதற்குள் இன்னும் இருவர் வந்து எங்களை வளைக்க ஆரம்பிக்க, நாங்கள் அவர்களின் இடையில் புகுந்து ஓட்டமெடுத்தோம். அதன் பிறகு ஒரு நாள், என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது, சாந்தி தியேட்டர் சுரங்கப் பாதை இதற்கு சிறந்தது என்று.

இரவு நேர எம்.எல்.ஏ ஹாஸ்டல் ரொம்ப அமைதியானது. எல்லா அறையிலும் விளக்குகள் விடிய விடிய எரிந்தாலும் உள்ளிருந்து எந்த சப்தங்களும் வராது.. நாங்களும் சூரியன் இல்லையென்றால் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும் என்ற சென்னையின் கலாச்சாரதிற்கு பழக்கப்பட்டிருந்தோம். சில சமயம் சில அறைகளின் உள்ளே பாட்டில்கள் உருளும் ஒலி இருக்கும்.. தூக்கம் வராத சில இரவுகளின் போது, இரவு நேர பெண்களின் வருகையை கூட நான் கவனித்திருக்கிறேன். ஓமந்தூரார் இல்லத்தின் உள்ளே, எம்.எல்.ஏ ஹாஸ்டலின் உள்ளே, இரவு நேரங்களில் விலைமாதர்கள் தொந்தரவு இருக்கும் என்று ஒரு வாரைதழில் படித்தேன். ஆனால் நான் அங்கு இருந்த ஐந்து மாத காலங்கள் அப்படி எந்த சம்பவம் நடந்ததை நான் கண்டது கிடையாது. பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் புதிய எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் இடையே மரங்கள் சூழ்ந்த பகுதியில் இது போல் நடப்பதாக சொல்லப்பட்டது.

இந்த வேளையில், என் புராஜெக்ட் தேடும் பணியும் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள், என் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண், என் தோழியின் அறையில் தங்கியிருந்த காரணத்தால், பழகியதில் எனக்கு தங்கையாகி இருந்தாள். அவளிடம் என் ரெசியுமை கொடுத்து புராஜெக்ட் தேடச் சொல்லியிருந்தேன், அவளின் மாமா சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால். அவளிடம் இருந்து எனக்கு இ-மெயில் வந்திருந்தது. ஏன் இன்னும் அவள் மாமா சொன்ன கம்பெனியில் இருந்து அழைப்பு அனுப்பியும் அந்த கம்பெனியில் புராஜெக்டில் சேரவில்லை என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடா, அவர்கள் அனுப்பிய இ-லெட்டரை நான் மறந்து ஏதும் அழித்துவிட்டேனோ என்று. ஊருக்கு கால் பண்ணியும் கேட்டேன், அப்படி கடிதம் எதுவும் வந்ததா என்று. ஆனால் அவர்களும் வரவில்லை என்றார்கள். அந்தப் பெண் அனுப்பிய இ-மெயில் இருந்த தொலைபேசிக்கு டயல் செய்தேன்.. ஆண்டவா, இப்படி கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்று வேண்டினேன்.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Saturday, March 24, 2007

ஜில்லென்று மலேசியாவும் கும்மென்று பார்க்க திரைப்படங்களும்

விளம்பரப்படம் எடுக்கிறது மாதிரி ஆகிடுச்சுப்பா.. பதிவுக்கு ஆளை திரட்டி வந்து, பின்னூட்டம் போடவைக்கிறது.. பதிவோட தலைப்பை இது மாதிரி கொடுத்தா தான், பின்னங்கால் பிடறியில் அடிக்க எல்லோரும் ஓடிவர்றாங்க.. சில பேர் அப்படி வந்தும், உள்ளேன் ஐயான்னு ஒரு பின்னூட்டமும் போடுறது இல்லை.. சரி..நீங்க கல்லை தூக்குறதுக்கு முன்னாடி விஷயத்துக்கு வர்றேன்..

மலேசியா பத்தி நிறைய தெரிலைனாலும், அங்க இருக்க பினாங் பத்தி என் ஐயா தினமும் நிறைய கதை சொல்லி இருக்கார். அவர் அவரோட இளவயதில் அங்கு சென்று தான் கிட்டதட்ட ஆறு மாதங்கள் மேஸ்திரி வேலை பார்த்ததாகச் சொல்வார். அப்புறம் உடம்பு சரியில்லாமல் போன காரணத்தால், அப்படியே தாய்நாடு திரும்பி வந்து சொந்த அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டார். இந்த அத்தை பொண்ணை பண்ணிக்கமாட்டேன்னு சொல்லித் தான் பினாங் அவர் சென்றது அடுத்த கதை. ம்ம்.. அவர் மட்டும் அப்பவே அங்கேயே செட்டில் ஆகியிருந்தா இந்நேரம் நானும் மலேசியாவை பத்தி நிறைய விஷயங்கள் எழுதுவேன். ஆனா, அப்படி எனக்கு எந்த மனக் குறையும் வராம, மலேசியாவின் கடுகு முதல் காட்டாறு வரை, அதன் நீள அகலத்தை நமக்காக அளந்து சொல்லப்போறாங்கா, நம்ம மை பிரண்டும், துர்காவும்.. ஜில்லென்று ஒரு மலேசியா அப்படின்னு புதுசா ஒரு வலைப்பக்கத்தை ஆரம்பிச்சு, கதைக்க போறாங்க.. வருங்காலத்துல, 2007, மே மாசம் என்னப்பா நடந்தது மலேசியாவில்னு யாராவது கேட்டா, இங்கே போப்பான்னு அவங்களுக்கு இந்தப் பக்கத்தோட சுட்டியை கொடுத்திடலாம்.. இது நிச்சயமாய் ஒரு வரலாற்றுப் பதிவாய் இருக்கும்னு நினைக்கிறேன். இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைக்கு, அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் முயற்சியில் தளராமல், விக்ரமாத்தித்தன் வேதாளத்தை விடாமல் பிடித்து வந்து கதை சொன்ன மாதிரி, உங்களுக்கு மலேசியாவின் காற்றை சுவாசிக்கத் தரப்போகிறார்கள்.

இது உங்களை சந்தோசப் படுத்தும் ஒரு விஷயம். நிறைய திரைப்படத்தோட சுட்டிகள் இங்கே இருக்கு.. நீங்க இந்த வலைப்பக்கத்திலேயே கூட அந்தப் படங்களைப் பாக்கலாம்.. நான் இப்போத்தான் எம்.ஜி.யாரின் குடியிருந்த கோயில் படத்தை பாத்துட்டு வர்றேன்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி (அம்பி, இது உனக்காக இல்லை..) எல்லாப் படங்களும் இலவசம் தான்.. எல்லா மொழி திரைப்படங்களும் ஒரு இடத்துல கிடைக்குது.. போங்க.. படங்களை பாருங்க.. நல்ல என்ஜாய் பண்ணுங்க, நண்பர்களே

Update : இதுவும் வீடியோ மற்றும் டிவி சேனல் சுட்டிகள் நிறைய இருக்குங்க www.techsatish.com

படிச்சிட்டு அப்படியே போனா எப்படி.. பின்னூட்ட மொய் எழுதிட்டு போங்கப்பா..

Friday, March 23, 2007

அரசியல் பயணங்களும் அனிதாவின் நினைவுகளும்

முதன் முதலாக நான் தேர்தல் பிரச்சாரம் பண்ணியது என்னுடைய பத்தாவது வயதில். அப்போது என் தாத்தாவின் நண்பர் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். என் தாத்தா பத்திர எழுத்தாளராக இருந்ததால், எங்கள் பஞ்சாயத்து மட்டுமல்ல, திண்டுக்கல்லை சுற்றி இருக்கிற அதிகமான கிராம மக்களுக்கு தெரிந்தவர். அதனால் சனி, ஞாற்றுகிழமைகளில் அவரும் தனது நண்பருக்காக, எங்கள் பஞ்சாயத்தில் இருக்கின்ற எல்லா ஊருக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அவர் கூட நானும் செல்வேன். ஒரு மினி வேனில் தான் அழைத்துசெல்வார்கள். என் கூட, என் வயதையொத்த இன்னும் சில பசங்களும் இருந்தார்கள். வேன் ஒரு ஊரின் எல்லையை தொட்டவுடன் நாங்கள் கத்த ஆரம்பிப்போம் கோஷங்களை. 'இந்த படை போதுமா'விலிருந்து, 'போடுங்கம்மா ஓட்டு பம்பரச் சின்னத்தை பார்த்து' வரை உரக்க சொல்வோம். அந்த அந்த ஊருக்கு எங்கள் வேன் போனவுடன் அந்த ஊரில் இருக்கும் மற்ற சின்ன பசங்களும் எங்கள் கூட சேர்ந்துகொள்வார்கள். மொத்தமாக நாங்கள் ஒன்று கூடி அந்த ஊரின் எல்லா வீதிகளிலும் கோஷங்களை கத்தியபடி செல்வோம். ஒரு சுற்று முடிந்து வந்த பிறகு, எங்களுக்கு காபி, டீயோ, மிக்க்ஷர் பாக்கெட்டோ, உள்ளூர் குளிர்பானங்களோ தருவார்கள். எனக்கு இந்த திண்பண்டங்களில் எல்லாம் எங்கள் கடையிலே இருப்பதால் பெரும் நாட்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பிரச்சாரத்துக்கு சென்ற போது தான், என் பஞ்சாயத்தின் எல்லா ஊரையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.. அதுவரை எனது ஊரும் திண்டுக்கல்லும், இடையில் இருக்கும் சில ஊர்கள் மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.

இந்த ஊர்களைத் தவிர, நான் கான்வென்டில் படித்த போது, என் கூட படித்தவர்களின் ஊர் பேரும் தெரியும். முக்கியமா, ஒடிசலா, கிராப் வெட்டப்பட்டு என்கூட ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த அனிதாவின் ஊர் நல்லாவே தெரியும். முதல் முதலா த்ரிஷாவை லேசா லேசா படப் போஸ்டர்களில் பார்த்தபோது, அவளை பெரிய பிள்ளையாகி பார்த்த மாதிரி இருந்தது. என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள். அவள் என் பக்கத்தில் தான் உட்காருவாள். அப்போ என் வகுப்புல என்னோட சேர்த்து நாலு பேரு பெயர் கார்த்தி. அதனால என்னை எல்லோரும் 'எம்'னு தான் கூப்பிடுவாங்க.. ஏற்கனவே எனக்கு ஆறாம் வகுப்புக்கு மேல 'வி.எம்'னு கிடைத்த இன்னொரு பெயர் தெரியும் உங்க எல்லோருக்கும்.. கார்த்தி என்ற பேர் அவ்வளவு பிரசித்தி என் வயதில்.. அனிதா திண்டுக்கல் பக்கத்தில் இருக்கும் சிலுவத்தூர் என்ற ஊரில் இருந்து பேருந்தில் வந்து செல்வாள். ரொம்ப நல்ல பிரண்ட். நான் கொஞ்சம் சுட்டி. முன்னாடி உட்கார்ந்து இருக்க ரெண்டு பொண்ணுங்க சடையையும் சேர்த்து கட்டிவிட்டுருவேன். யாராவது சண்டைக்கு வந்த, அது கூட தெரியாத அளவுக்கு நீங்க ஏன் இருக்கீங்கன்னு எனக்கு சப்போர்ட்டுக்கு வருவாள்.. அப்போ எல்லாம் பிரியப்போறோம் அப்படிங்கிற சோகம் எல்லாம் கிடையாது. அதனால அப்போ ஒண்ணும் தெரியவில்லை, அஞ்சாவது முடிச்சு திரும்பி வர்றப்போ. அதற்கு பிறகு, ஒரு பதினைந்து வருஷத்துக்கு அப்புறம், தூரத்து சொந்தத்தின் கல்யாணத்திற்காக அந்த ஊருக்கு போனேன். அந்த ஊர் பெயரை பார்த்தவுடன் அவள் முகம் தான் நெஞ்சில் வந்தது.

அப்படி பல ஊர் பெயரை நான், இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் தெரிந்து கொண்டேன். அந்த தேர்தலில் என் தாத்தாவின் நண்பர் தான் வெற்றிபெற்றார். எனக்கெல்லாம் பயங்கர சந்தோசம். நானும் தேர்தல் பிரச்சாரம் பண்ணினோம்ல. என் அப்பா பக்கா அதிமுககாரர். எம்ஜியார் இறந்த பிறகு, ஜானகி எம்ஜியார் தலைமையில் இருந்த அதிமுக(ஜா) பிரிவில் திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். பல கட்சிக்கூட்டங்களுக்கும் செல்வார். ஒரு முறை என்னை காந்திகிராம தம்பித்தோட்டம் பள்ளியில் சேர்த்துவிட்டு, என் அப்பா பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன் (இரண்டு முறை திண்டுக்கல் எம்.பியாக இருந்தவர். சில காலம், அதிமுக பொருளாளராகவும் இருந்தவர்), என் அப்பாவின் பெயர் சொல்லி அழைத்து காரில் ஏற்றிக்கொண்டு, எங்களை எங்களது பிரிவில் இறக்கிவிட்டார். அப்போது தான் எனக்கே தெரியும், என் அப்பாவுக்கு மாவட்ட அளவில் கட்சியில் இருந்த நல்ல பெயர். அதன் பிறகு அடிக்கடி கட்சி கூட்டத்திற்கு சேர அழைப்பு வரும். நாங்கள் கடை வைத்திருப்பதால், அடிக்கடி அப்பா அப்படி செல்வது சிரமமாக இருந்தது. அதன் பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

1996-இல், ரஜினியின் வாய்ஸிற்கு பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பிறகு, கட்சியை பலப்படுத்த எல்லாக் கட்சியிலும் இருப்பதுபோல இளைஞர், மகளிர், மாணவ அணியினை உருவாக்கினர். எங்கள் ஊரில், எனக்குத் தெரிந்து இன்னமும் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருக்கும் ஒருவர், எங்கள் கடைக்கு அடிக்கடி வருபவர் அவர், என்னிடம் வந்து தமிழ் மாநில காங்கிரஸில் சேர ஆர்வமா என்று கேட்டார். அப்போது ரஜினியின் ஆதரவு இருந்தது அந்த கட்சிக்கு. நான் அப்போது கல்லூரியில் பி.எஸ்.சி முதல் வருடம் படித்துகொண்டிருந்தேன். அவர் கேட்டதற்கு சரி என்று பதிலும் அளித்து விட்டேன். அவர் கொடுத்த விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்தும் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு என்னை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் ஒன்றியத் தலைவராக நியமித்து ஜி.கே.மூப்பனார் மற்றும் அப்போது திண்டுக்கல் மாவட்ட மாணவ அணித் தலைவர் (அவர் பெயர் மறந்துவிட்டது) கையெழுத்துடன் கடிதம் வந்திருந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம் ஒரு புறம் சிரிப்பு ஒரு புறம். அடப்பாவிகளா! கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட பதவிகளின் எண்ணிக்கை அதிகம் போலும் என்று நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு இரண்டு கூட்டதிற்கும் சென்று வந்தேன்.. அதன் பிறகு என் அம்மா இதெல்லாம் படிக்கிற காலத்தில் வேண்டாம் என்று சொன்னதால், அழைப்பிதழ்கள் வந்தாலும் போவதை நிறுத்திவிட்டேன். அவர்களும் ஆறு மாதங்களுக்கு பிறகு அழைப்பிதழ் அனுப்புவதை நிறுத்தியும் விட்டனர்.

எனக்கு சினிமா எப்படியோ அது போல தான் அரசியலும். ஒரு நாளிதழை படிக்க எடுத்தால், முதலில் சினிமா செய்திகளையும் அடுத்து அரசியல் செய்திகளையும் படிப்பேன். ஆனால் பெரும்பாலும் அரசியல் பற்றி யாரிடமும் தர்க்கம் செய்யமாட்டேன். ஆனால் நண்பர்களிடம் காரசார விவாதம் இருக்கும். எனது அரசியல் வாழ்க்கை(?) இப்படித்தான் இருந்தது, சென்னைக்கு வந்து ஒரு வேலையில் சேருகின்ற வரை.

Thursday, March 22, 2007

நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் மேடைப்பேச்சு

நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் துடுக்குத்தனமான, குறுப்புத்தனமான மேடை பேச்சை நான் என்றுமே ரசிப்பேன்.. அதில் சுவை இருக்கும்.. கேட்போரை கவரும் வல்லமை இருக்கும். ஒரு முறை கருணாநிதிக்கு திரைஉலகம் எடுத்த விழாவில், எல்லோரும் பாடல், ஆடல் என்று தங்களது திறமைகளை காண்பித்துக்கொண்டிருக்க, இவர் செய்தது ஒரு சின்ன புதுமையான விஷயம். கலைஞர் இதுவரை அதிகமுறை மேடைபேச்சு பேசியிருப்பார். அதையெல்லாம் முன்னிருக்கும் எல்லோருக்கும் வாங்கி கொடுப்பது ஒலிவாங்கி(மைக்) தான். அந்த ஒலிவாங்கி கருணாநிதியை பார்த்து பேசினால் எப்படி இருக்கும் என்பதான ஒரு கற்பனை பேச்சு. நமது சிறு வயதில் நான் சென்று வந்த சுற்றுலா, நான் ஆறு பேசுகிறேன் என்னும் கட்டுரை தமிழ் பாடத்தில் எழுதியது போல, அந்த ஒலிவாங்கி அதனுடைய கண்ணோட்டத்தில் கருணாநிதியை பற்றி சொல்வது போல ஒரு சின்ன நிகழ்ச்சி. அருமையான கற்பனை.

ஏதாவது ஒரு விழாவில் அவர் பேசுவதாக தெரிந்தால், அதை ஆவலோடு பார்ப்பேன். சமீபத்தில் மாயக்கண்ணாடி பாடல் தொகுப்பு விழாவில் அவர் பேசுவதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்பவும் போல அவரது பாணி பேச்சு.. ஒலிவாங்கியை பிடித்தவுடன், அவர் சொன்னது.. மாலை வணக்கம்.. இதுல வணக்கம் உங்களுக்கு, மாலை இளையராஜாவுக்கு.. முன்னே இருந்த கூட்டம் தன்னை மறந்து கைதட்டியது.. சாதாரண ஒரு வணக்கத்தில் இப்படி ஒரு மேட்டரா.. நான் வலையில் தான் இதை பார்த்துக்கொண்டிருந்தாலும் நானும் என்னை மறந்து கைதட்டினேன்.

இது போல பல விஷயங்கள். இளையராஜா ஜெயா டிவிக்கு செய்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான். நிகழ்ச்சியை இவரது பேச்சு இன்னும் உயிரோட்டமாக நடத்தி சென்றது. நிச்சயமாய் இதைப் பார்த்தவுடன் உங்களுக்கும் பார்த்திபனின் பேச்சற்றல் சில நினைவுக்கு வரலாம். பகிர்ந்துகொள்ளலாமே நண்பர்களே.

Wednesday, March 21, 2007

வலையில் உலவும் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள்

இன்று நினைக்காத ஒன்று நிகழ்ந்தது.. வலையில் எங்கு பார்த்தாலும் சிவாஜி பாடல்கள்.. இரண்டு நாளைக்கு முன்னாடி தான், பாடல்கள் ஏப்ரல் 4-ல் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார்கள். அதற்குள் எப்படி வலையில் இவ்வளவு சாதாரணமாக உலவுகிறது மூன்று பாடல்கள். இதற்கு நமது நண்பர் ஃபில்பர்ட், குமுறலுடன் தனியாக ஒரு பிண்ணனி கதை சொன்னாலும், இது உண்மையான பாடல்களாக இருக்காது என்பது என் எண்ணம். அப்படி உண்மை என்றால், இருந்துவிடக்கூடாது என்பது என் வேண்டுதல். மூன்று பாடல்களும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் ஈர்க்கக்கூடியதாக இல்லை. ஏப்ரல்-4 வரை காத்திருக்கிறேன், இன்னும் நம்பிக்கையுடன்..

[தயவுசெய்து யாரும் எங்கு கிடைக்கிறது இந்தப் பாடல்கள் என்று கேட்காதீர்கள். நிச்சயமாய் நான் சொல்வதாய் இல்லை. சொல்லக்கூடிய மனநிலையும் இல்லை]

கிரிக்கெட் ஆடிய வசந்த காலங்கள்

கிரிக்கெட் காய்ச்சல் இப்போ மருத்துவருக்கும் அடிக்கிற மாதம் இது. தோனி தும்முறது முதல் கும்ளே கும்மி அடிக்கிறவரை எல்லாமே இப்போ தலைப்பு செய்திகள். ஆனா இந்த கிரிக்கெட் எங்க ஊருக்குள் நுழையாத காலம் நான் ஆறாவது, ஏழாவது படித்த வருஷங்கள். எங்கள் ஊரிலும் லகான் படத்தை போன்ற அணி ஒன்று இருந்தது.

கிரிக்கெட் விளையாடுவதற்கு உபகரணங்கள் எல்லாமே எங்கள் ஊரில் கிடைக்கும் பொருள்கள் தான்.. ஆரம்ப காலங்களில், தென்னை மட்டை.. பிறகு, எங்கள் ஊர் தச்சரிடம் செய்து வாங்கிய மட்டை.. இந்த மட்டை செய்வதற்கு அந்த தச்சரிடம் பல நாள் தவங்கிடப்போம். அவரும் ஏதாவது வீட்டிற்கு கதவையோ ஜன்னலையோ செய்துகொண்டிருப்பார், நாங்கள் போகும் போதெல்லாம். அவருக்கு வெற்றிலை பாக்கு, அவருக்கு பிடித்த நிறுவனத்தின் மூக்குப்பொடி, புகையிலை, மலபார் பீடி என்று கேட்பதை எல்லாம் வாங்கித் தருவோம். ஆனால் அப்படி வேப்பமரத்தினால் செய்யப்படும் அந்த மட்டை ரொம்பவும் எடை அதிகமாக இருக்கும். வருகிற பாலை தூக்கி அடித்தால் மட்டையின் பளு காரணமாக அது சுலபமாக நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களை தந்துவிடும். இதே வகையில் தான், நாங்கள் ஸ்டெம்புகளையும் செய்வோம்.

அப்போது கிரிக்கெட் என்பது படித்த மக்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக எங்கள் ஊரில் கருதப்பட்டது. அதனால் நாங்கள் விளையாண்டால் அதை சுற்றி நின்று பார்ப்பதற்கு, ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நூறு கேள்விகள் கேட்பதற்கு ஏகப்பட்ட ஆட்கள் இருப்பார்கள். அதுவும், நாங்கள் பெரும்பாலும் பள்ளி சென்று வந்த சாயங்கால வேளைகளிலும் வார இறுதிகளிலும் விளையாடுவதால், எங்கள் ஆட்டத்தை காணவே பெரும் கூட்டம் இருக்கும். அடிக்கின்ற பந்தை பொறுக்குப் போடுவதென்பது நின்று பார்க்கும் ஒவ்வொரு சின்ன வயசுபசங்களுக்கும் பிடித்தமான காரியம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எங்கள் ஊர் கிறித்துவ பேராலய வளாகத்தில் தான். பேராலயத்தை ஒட்டி எங்கள் ஊரின் இடைநிலைபள்ளியும் (எட்டாம் வகுப்புவரை தான் இருக்கும்.) இருப்பதால், அந்த மைதானத்தில் தான் எங்களது ஆட்டங்கள் நடக்கும். இந்த நேரத்தில் எங்களது கிரிக்கெட் ஆட்டத்தை ஊக்குவித்து எங்கள் கூட சேர்ந்து விளையாண்ட பாதிரியார் ஜேம்ஸ் மைக்கேல் ராஜை இங்கே நினைவு கூர்ந்தே ஆகவேண்டும். அவருக்கு கிட்டதட்ட நாற்பதை ஓட்டிய வயது. நாங்கள் பல நாட்கள் விளையாடும் பொழுது, அந்த பந்து பள்ளிக்குள் விழுந்துவிடும். அவரிடம் அனுமதி பெற்றுத்தான் அந்த பந்தை எடுத்து வருவோம். அப்படித் தான் எங்களுக்கு அவர் பழக்கமானார். அதன் பிறகு அவர் எங்கள் கூட சேர்ந்து விளையாடுவார். அவரே பந்துகளையும் வாங்கி வந்து தருவார். கிரிக்கெட் ஆட்டத்தின் சில நுணுக்கமான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். மற்ற நாட்டின் ஆட்டங்களை பார்க்கவைத்து எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும், எதனால் அவர்கள் அவுட் ஆனார்கள் என்பதையும் விளக்குவார். எங்களுக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயரையே அடைமொழியாக வைத்து, (நாங்கள் விளையாடும் பாணியின் அடிப்படையில்) அந்த பேர் சொல்லியே கூப்பிடுவார். அப்படி எனக்கு கிடைத்த பேர், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் பூன் பெயர். நான் மட்டையை சுழற்றினால் அது அவரை போலவே இருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் அவருக்கு பின் வந்த பாதிரியார்கள் யாரும் எங்களுடன் ஒட்டவில்லை. நாங்களும் பேராலய வளாகத்தில் விளையாடுவதை விட்டுவிட்டு ஊரின் வெளியே இருக்கும் பயன்படாத புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்தோம். அப்படி விளையாட நாங்கள் ஆரம்பித்த போது கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது.

எங்கள் ஊரில் இருந்து திண்டுகல்லிற்கு மற்றும் சின்னாளப்பட்டிக்கு படிக்கச் செல்லும் மாணவர்களே கிரிக்கெட் விளையாடினோம். அப்புறம் நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்த போது, மற்றவர்களையும் விளையாட ஊக்குவித்தோம். ஆடு மேய்ப்பவர்களுக்கும் இந்த விளையாட்டை சொல்லிக்கொடுத்தோம். முதலில் அவர்கள் கிரிக்கட் மட்டையை கில்லி விளையாட்டிற்கு பிடிப்பதைப் போலத் தான் பிடிப்பார்கள். மெல்ல அவர்களுக்கு இந்த விளையாட்டு பிடித்து போய், கிரிக்கெட்டோடு ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள். நஞ்சை வயல்களில் அவ்வப்போது உழுவதால் அது ரம்பத்தை போல மெடு பள்ளமாகத் தான் இருக்கும். அதை சமநிலைப் படுத்துவதற்கு தென்னை மரத்தை, உருளையாக பயன்படுத்தினோம். அதில் குடம் குடமாக பக்கத்து வயலில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து ஊற்றி சமனநிலை படுத்தினோம். அந்த கிராமத்து பிட்சை நாங்கள் உருவாக்க எங்களுக்கு கிட்டதட்ட இரண்டு வாரகாலங்கள் ஆனது. வார இறுதிகள் மற்றும் பள்ளிவிட்டு வந்த பின் நாங்களும், மற்ற நேரங்களில் ஊரிலே இருக்கும் மற்ற நண்பர்களும் இந்த வேலையை செய்தோம்.

இப்படியாக கஷ்டப்பட்டு தயார் செய்த பிறகு, ஒரு மாதமோ இரண்டு மாதமோ தான் விளையாடி இருப்போம். அதன் பிறகு தென்மேற்கு பருவமழை பெய்தது. ஒரு நாள் பள்ளி விட்டு நாங்கள் அந்த வயல் மைதானத்தை கடக்கும் போது, அந்த வயலின் சொந்தக்காரர் அதில் டிராக்டர் விட்டு உழுதுகொண்டிருந்தார். எங்களின் மைதானம், இத்தனை காலங்கள் வியர்வை சிந்தி தயார் செய்த மைதானம், சில சோள விதைகளையும் அவரை விதைகளை பயிராக்க அழிக்கப்பட்டுகொண்டிருந்தது. அந்த இனம் புரியாத வயசில் எங்களின் எல்லோருடைய நெஞ்சங்களும் சொல்ல முடியாத சோகத்தில் உடைந்துகிடந்தது. அதன் பிறகு விளையாட இடம் சரிவர கிடைக்காமல் வெவ்வெறு இடங்களில் விளையாடினோம். இதனிடையே, பக்கத்து ஊர்களுக்கும் போட்டிகளுக்காக சென்று வருவோம். பிறகு, எல்லோரும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வேறு வேறு ஊர்களுக்கு கல்லூரி படிக்கச் சென்றதால், எங்கள் ஊரில் நான் கிரிக்கெட் விளையாடி கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போன வருடம், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பையன்கள் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு கோப்பை வாங்கி இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு என் உள்ளம் மகிழ்ந்து போனது. என்னைப் போலவே, அப்போது எங்களது அணியில் இருந்த மற்றவர்களும் இதை கேட்டு மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

[இந்தியாவில் உலககோப்பை நடந்த காலத்தில் தான் எங்கள் ஊரின் மிக அதிகமான நபர்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலம். கிரிக்கெட் பற்ரிய ஆர்வம் அப்போது தான் அதிகமாக பரவியது. இப்போது கிட்டதட்ட முக்கால்வாசி பேர், இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள்]

Tuesday, March 20, 2007

இந்தியா உலக கோப்பையை வெல்லும். எப்படி?

இது இ-மெயிலில் வந்த விஷயம். இங்கே கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு, நெஞ்சில் பால் வார்ப்பதற்காக போடப்பட்டுள்ளது

1981-ம் வருடம்

1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
5. After 1 year Italy won soccer world cup
6. 2 years later India won the world Cup!!!(Prevented a WI hat-trick)

2005-ம் வருடம்
1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
5. After 1 year Italy won soccer world cup(after 24 years)
6. 2 years later will India win the world Cup ?????(preventing an Australian Hat-trick)

இந்த பதிவு ஆங்கிலத்தில் இருப்பதற்காக மன்னிக்க.. எல்லாவற்றையும் தமிழில் (நன்றி : நாகை சிவா) மொழி பெயர்க்க முடியவில்லை..

அப்படியானால், அடுத்த தடவை இதெல்லாம் நடந்தால் தான் இந்தியா உலக கோப்பையை வெல்லுமான்னு சின்னபுள்ளத்தனமா கேக்கப்படாது.. முதல்ல இந்த தடவை வாங்கட்டும்..பாக்கலாம்

Monday, March 19, 2007

இது 'CAR'கால கதைகள்

என் கிராமத்தில், சிறு வயதில், மோட்டார் வாகனங்களை பார்ப்பதே அபூர்வம். தினமும் அரைமணிக்கொரு தடவை வரும் பஸ் தான் எங்களுக்கு தெரிந்து மோட்டார் வாகனங்கள். மற்றபடி வேறு எங்கே சென்றாலும் சைக்கிள் தான். சில சமயம் பக்கத்து ஊரில் டூரிங் டாக்கீஸில் படம் பார்க்க, ஒரே சைக்கிளில் நாலு பேர் போன சம்பவம் எல்லாம் உண்டு. அப்போது பைக்குகள் வைத்திருந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான். மற்றபடி திண்டுக்கலிலிருந்து எங்கள் ஊர் கடைகளுக்கு சரக்கு கொண்டு வருவது மாட்டு வண்டிகள் தான். இரண்டு மாடுகள் பூட்டிய, மரத்தினால் ஆன பெரிய சக்கரங்கள் கொண்ட வண்டிகள் இதற்கென பயன்படுத்தபட்டு வந்தன. பின்னாளில் அதெல்லாம் டயர் பொருத்தபட்ட வண்டிகளாக மாறிவிட்டன.. மணல், செங்கல் எடுத்து வரும் சொற்ப வண்டிகளே மர சக்கரங்கள் (தரையில் படும் அதன் வெளிப்புறங்கள் இரும்பினால் ஆனவை) கொண்டவை.. இப்போது அந்த வண்டிகளையும் பார்க்க முடிவதில்லை.

அடுத்து, சைக்கிளுக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள்.. கிராமங்களில் டி.வி.எஸ் 50-யும் M-80 தான் அதிகம் இருக்கும். இவைகள் தான் அசாத்திய சுமைகளையும் சுமந்து செல்ல உதவும்.. கரமுரடான பாதைகளுக்கும் கட்டுறுதியான சவாரி.. நாங்களும் M-80 தான் வைத்திருந்தோம். என் நண்பர்கள் வந்துவிட்டால், லோடு ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அந்த அகல நீளமான கேரியரில் ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு மலைப் பாதைகளில் செல்வோம். எவ்வளவு லோடு அடித்தாலும் மட்டேன் என்று அடம் பிடிக்காமல் எங்களை சுமந்து செல்லும். சொற்ப எண்ணிக்கையில் புல்லட்கள் இருக்கும். தட தடன்னு சத்தத்துடன் இந்த வண்டிகள் என் சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும். இந்த வகை வண்டிகளை ஓட்டுவதற்கு எனக்குள் அதிகமான ஆசைகள் இருந்து வந்தது ஒரு காலத்தில்.. ஆனால் இன்று வரை அது நிறைவு பெறவில்லை. புல்லட்களின் உருவத்தை பார்த்து சற்று பயமாகவும் இருக்கும். ஆனால் இங்கே அமெரிக்கா வந்த பிறகு இங்கு அவர்கள் ஓட்டும் இரு சக்கர வண்டிகளை பார்த்து, புல்லட்டோடு ஓப்புமை செய்கிறேன்.. கட்டெறும்பு பக்கத்தில் சித்தெறும்பு.

சைக்கிள்களும், இரு சக்கர மோட்டார் வாகனங்களும் றெக்கை கட்டி பறந்த காலங்களில், கார்களை பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நேரங்களில், எங்கள் ஊருக்கு அவ்வப்போது வருவது திரைப்பட சுவரொட்டிகளை மூங்கில் தட்டிகள் சுமந்து வருபவை தான். பக்கத்தில் இருக்கும் சின்னாளப்பட்டி மற்றும் திண்டுக்கலில் ஏதேனும் படம் ஐம்பது நாட்களை தாண்டிவிட்டால் இது போன்று கார்களில் வந்து விளம்பரம் செய்வார்கள். அந்த கார்களின் தலையில் இரண்டு ஒலிபெருக்கிகள் இருக்கும். அதில் அந்த படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இடையிடையே பெரிய வீதிகளின் சந்திப்புகளில் காரை நிறுத்தி, ஒலிவாங்கி (மைக் - சமீபத்தில் தெரிந்து கொண்ட ஒரு தமிழாக்க வார்த்தை) பிடித்து படத்தின் அருமை பெருமைகளை பேசுவார்கள். அப்படியே துண்டு பிரசுரங்களையும் தருவார்கள். இப்படி கார்கள் வந்தவுடன் ஊரில் இருக்கும் எல்லா சின்ன பிள்ளைகளும் காரைச் சுற்றித் தான் நிற்பார்கள். கூட்ட கூட்டமாய் அந்த துண்டு பிரசுரங்களை வாங்க பலத்த போட்டியே இருக்கும். கார் கிளம்பும்போது அந்த காரின் பின்னே எல்லோரும் ஓடுவார்கள். அந்த கூட்டத்திலே நான் இருந்திருக்கிறேன் பல முறைகள்.

என்ன இன்று ஒரே கார் கதையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா.. அந்த எம்பெருமான் முருகனின் கருணையினால், கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு காரின் உரிமையாளனாக ஆக்கப்பட்டேன். வாழ்வின் அடுத்த கனவொன்று நிறைவேறியது. கார், நிசான் அல்டிமா 98-ம் வருட மாடல். கிட்டதட்ட 84000 மைல்கள் பயணித்துள்ளது. சிறு வயதில், நடராஜா சர்வீஸ்.. அடுத்து, சைக்கிள்.. அப்புறம், M-80.. சென்னை வந்த பிறகு, ஸ்ப்ளெண்டர்.. இப்போது, கார்.. ஆண்டவன் நம்மை ஒவ்வொரு படிக்கட்டாக மெதுவாக ஏற்றுகிறான் என்று அறிந்து சந்தோசம் கொண்டேன்.. அப்பா, அம்மாவிடம் சொன்ன போது அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

இங்கே அந்த மகிழ்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே! விரைவில் அதன் புகைப்படங்களை இங்கே இடுகிறேன்!

Sunday, March 18, 2007

அவ பிம்பிள் அழகுடா!

நயன்தாரா - வல்லவனையும் சாய்க்கும் அழகு.. நாட்டாமையையும் வீழ்த்தும் அழகு.. சமீபத்தில் தனுஷ் கூட இவர் நடிக்கும் யாரடி நீ மோஹினி படத்தின் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.. பார்த்துக்கொண்டிருந்தேன்.. பார்த்துக் கொண்டே இருக்கிறேன் (மன்னிக்கவும் நாட்டாமை..) என்ன ஒரு அழகு! அந்த பிம்பிள் அழகுடா யப்பா சாமி!





இவள்
விழி வெளிச்சத்தில்
விழுந்தே இறக்கலாம்
என்று
பறக்கிறது
விட்டில் பூச்சி மனசு!

பிள்ளையார்
என்றே
அந்த
பிம்பிளைச் சுற்றி
வட்டமடிக்கிறது
பேதை மனசு!

மேலே
படத்தில்
கூட இருப்பது
இவளின்
அண்ணன் தானே!

ஆம்
என்றால்
உரக்கச் சொல்லுங்கள்!
இல்லை என்றால்
பதில்
தெரியாத மாதிரி
நடித்து விடுங்கள்!

பாவம்
எந்தன்
மெழுகு மனசு!
அவள்
போட்டோவில்
பார்ப்பதற்கே
இப்படி உருகுகிறது!

Saturday, March 17, 2007

தாலி கட்டா தாரம்

எனக்காய்
எப்போது காத்து
கிடப்பாள்...

நான்
வந்து
கை வைத்தால்
பாடுவாள்
ஆடுவாள்
எனக்காய்
எல்லாம் செய்வாள்...

அலுவலகம் சென்று
வீடு
திரும்பும் வரை
தூங்கி கிடப்பாள்...

வந்தவுடன்
ரஜினி முதல்
ராஜேந்தர் வரை
செய்திகள்
சொல்வாள்...

கிரிக்கெட் முதல்
கில்லி வரை
அரட்டை அடிப்பாள்...

அவளைச் சுமந்து
அப்படியே
ஷோபாவில்
வைத்து மடியில்
தாங்குவேன்...

இவள்
மேனியில்
என்
விரல்கள்
விளையாண்டால்
அது தான்
புதுக்கவிதை!

எல்லாம்
சொல்லிவிட்டேன்
யாரது
என்று
உங்கள் மனம்
தெரிந்திட
துடிக்கிறதா..

அவள்,
HP பெற்றெடுத்த
பெவிலியன் 6000..

அக்டோபர்
இறுதியில் தான்
தாலி கட்டாத
தாரமானாள்..

எல்லோரும்
சொன்னார்கள்
லேப்டாப் என்று..
இப்போதெல்லாம்
இது
இல்லையென்றால்
இதயம்
அடிக்கவில்லை
லப்-டப்..

ஆணி அடித்து அடித்து கைகளும் மனசும் காய்ந்து விட்டது. வேறு வழியில்லாமல் இப்படி ஒரு மொக்க கவிதை. மாப்ள பரணி சொல்ற மாதிரி இதை படிப்பதெல்லாம் உங்கள் தலைவிதி.. ரெண்டு வார்த்தை திட்டிட்டு போங்க மக்கா..

எப்போதும் போல இன்னைக்கும் ஒரு கேள்வி.. தலைப்பில் இருக்கிற இலக்கண விஷயம் என்ன, சொல்லுங்கள்...

Thursday, March 15, 2007

மாயக்கண்ணாடி - இசை தொகுப்பு பற்றிய பார்வை

சேரன், கடந்த பத்து வருடங்களில் ஏழு படங்கள் தான் இயக்கி இருந்தாலும், அவரின் எல்லாப் படங்களும் தியேட்டர்களில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், தன்னுடைய பாணி இயக்கத்தில் (கமர்ஷியல் என்னும் வட்டத்துக்குள் இருந்தாலும் ஆபாசம் என்பதை கொஞ்சம் கூட கலக்காதவர்), கருத்துக்கள் சொல்லி சமுதாயத்துக்கும் இந்த மனித சமுதாயத்தின் உறவுகளை புரிந்து கொள்ளும் திறனையும் கொண்ட அருமையான படங்களை தந்துள்ளார். தேசிய கீதம் என்ற படத்திற்கு பிறகு இளையராஜா இசை இயக்கத்தில் மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், சேரன். படத்தின் இதர இறுதி வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பாடல்கள் கடந்தவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையை விமர்சனம் பண்ணும் அளவுக்கு நமக்கு இசையில் ஞானம் கிடையாது. ஆனால் இளையராஜா என்னும் இசை ஊற்றில் தான் இத்தனை காலங்கள் நம் வாழ்க்கை வளர்ந்தது என்பதும் அதை தேடி நாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.

இன்ட்ரோடக்க்ஷன் (அறிமுகம்) - இளையராஜா

இது முழுக்க முழுக்க படத்தை பற்றியும் சேரன் பற்றியும் இளையராஜா தனது சொந்த கருத்துகளை கூறுகிறார்.. படத்தின் இசை அமைக்கப்படும் போது நடந்த சுவையான விஷயங்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். முதன் முதலாக இப்படி ஒரு படத்தை பற்றி, தொலைக்காட்சிகளில் படத்தை பற்றி விளம்பரம் மற்ற நடிகர்கள் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர் பேட்டி கொடுப்பது போல, இதில் இளையராஜா பேசியிருக்கிறார். இது இந்த படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இளையராஜாவை பொறுத்தவரை புதுமையான விஷயம்.

காதல் இன்று - இளையராஜா

இன்றைய காதலை பற்றிய பாடல்.. அழகான வரிகள்.. இளையராஜாவின் குரலில் இது போன்று பாடல்கள் கேட்டு நீண்ட நெடு நாட்களாகிவிட்டது. இசையும் பாடலுடன் அருமையாக ஒத்துப் போகிறது. இசையை விட பாடுபவரின் குரல் வலிமையாக இருக்கும் ஒரு சில பாடல்களில். அது இளையராஜா பாடும்போது நன்றாக தெரியும், ஒரு வேளை அவர் இசை என்பதாலா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் பார்லர்களிலும் ஏசி தியேட்டர்களிலும் முடிந்துவிடுகின்ற இன்றைய காதலையும் கல்லில் செதுக்கியதாய் இருக்கும் அன்றைய காதலையும் பற்றி சொல்கிறது இந்தப் பாடல்.

காசு கையில் - இளையராஜா

முதல் பாடலான "காதல் இன்று"வின் அதே இசை படிவத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. அது காதலை பற்றிச் சொன்னால், இந்த பாடல் காசு இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றும் இல்லை என்று சொல்லும் பாடல். இதையும் இசைஞானியே பாடியுள்ளார். இசைஞானிக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை என்று நமக்கு புரிய வைக்கும் பாடல். அப்படி ஒரு தனி ஆவர்த்தனம் செய்கிறார் பாடலில்.

ஒரு மாயலோகம் - திப்பு மற்றும் மஞ்சரி

ஆழ்மனசை கொள்ளையடிக்கும் கிதாரின் ஒலியில், மேற்கத்திய இசையின் வடிவத்தில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த படத்தின் ஏனைய பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்டினத்து வாடை அதிகம் கலந்ததாய் இருக்கிறது. திப்புவும் மஞ்சரியும் அருமையாய் பாடியிருக்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் - கார்த்திக் மற்றும் ஷ்ரேயா கோஷல்

மெலடி என்றால் மேஸ்ட்ரோ தான்.. அவரை அடித்துகொள்ள ஆளே கிடையாது. இந்த கூற்றை மறுபடியும் நிரூபிக்கும் பாடல் இது. கார்த்திக்கின் குரலும் ஷ்ரேயாவின் குரலும் ஒரு புல்லாங்குழலில் வழிந்தோடும் காற்றை போல நமது காதுகளில் வழிகிறது, இந்த புத்தம் புதிய இசை. தாளங்கள் சரியான அளவில் அமைக்கப்பட்டு இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் வகை இசை அமைந்துள்ளது. இந்த பாடல் முழுக்க அழகன் படத்தில் மம்மூட்டி, பானுப்பிரியா மாதிரி செல்போனை பேசிக்கொண்டே இருப்பதை போல இருக்கும் என்பது என் சின்ன கூற்று, இளையராஜா பேசியதிலிருந்து.

உலகிலே அழகி - விஜய் யேசுதாஸ் மற்றும் நந்திதா

காதுகளுக்கு வலிக்காமல், மெல்ல அப்படியே தேன் வழிந்து ஓடி இதயம் தொடுவது போல் இருக்கிறது விஜய் யேசுதாஸின் குரல். அவர் கூட, இணைந்து பாடியிருக்கிறார் குயில் நந்திதா. மெல்ல மெல்ல படர்ந்து காலை நேரத்தை பனியது மூடுவது போல், நம்மை மூழ்கடிக்கிறது இந்தப் பாடல். இந்த பாடலில், தபேலாவும் வீணையும் நம் மனசை மகுடியாய் ஆட வைக்கிறது. முந்திகாலத்தில் KJ யேசுதாசுக்கு இருக்கும் வலிமை இப்போது விஜய்க்கும் மெல்ல தொற்றிக்கொண்டது. இன்னும் சில காலங்களுக்கும எல்லோர் மனதையும் வருடும் இந்த இசை மயிலிறகு.

ஏலே எங்க வந்த - இளையராஜா மற்றும் குழுவினர்

நடிகனாகி உலகை ஆள வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்திறங்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கான பாடல். வேகத்திலான இசையுடன் கால்களை நடனமாட விடும் இந்த பாடல் இந்த இசை ஆல்பத்தில் முதலில் இருக்கிறது. இந்த பாடலையும் இசைஞானியே பாடியுள்ளார். இந்த மாதிரி பாடல்களை மேஸ்ட்ரோ பாடி மாமாங்கம் ஆகிவிட்டது. முதன் முதலாய் இந்த பாடலை கேட்ட போது, சிவாஜி, சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு படத்தில் வரும் ஹே ராஜ ஒன்றானோம் இன்று என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் கேட்க கேட்க மனது முழுவதும் மெல்ல ஒருவித துள்ளலை நிரப்புகிறது இந்த பாடல்.

மாயக்கண்ணாடி ஆரம்பித்த நாளில் இருந்தே எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இந்த இசை ஆல்பம் அதில் இன்னும் நிறைய எண்ணெய் ஊற்றியுள்ளது. இந்த தொகுப்பு நிச்சயமாய் இளையராஜாவுக்கு உள்ளுக்குள் ஒரு புதிய தெம்பைத் தரும். இதில் அவர் தன்னை இன்னும் புதுப்பித்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகள் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இசைஞானி சொல்வதை போல சில இடங்களில் வெற்று வார்த்தைகள் வைத்து கவிஞர்கள் நிரப்புவது போல, இதில் ஒன்றும் இல்லை.. அதை சேரனும் அனுமதிக்கவில்லை. (உதாரணம் : பாட்ஷா படத்தின் ஆரம்ப பாட்டில் வரும் ஜுமுக்குயின்னா ஜுமுக்குத் தான்) ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதே வீரியத்தை படத்திலும் நாம் பார்க்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

Wednesday, March 14, 2007

வேலைச் சுமை

ஆணி புடுங்குறது ஆணி புடுங்குறது அப்படின்னு சொன்னா, இவனுக்கு அப்படி என்ன பெரிய வேலைன்னு எல்லோரும் நினைக்கலாம்.. நான் சொன்ன புரியாதுன்னு தான், இந்த படத்தை போட்டிருக்கேன்.. இதுக்கு பேரு தான் வேலைச் சுமை என்பதோ..

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.






இப்போதெல்லாம் என் நியுரான் மனிதர்கள் பாடுவது ஜாவா பல்லவியையும் ஆரக்கிள் ஆராதனைகளையும் தான். என் கைகள் பிள்ளையார் மாதிரி மௌஸ் ஏறியே கிடக்கிறது.

Monday, March 12, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 18 [சூடான சினிமா பகுதி மீண்டும்]

இந்த வாரம் நேர்ல சிட்டுக்குருவியால நேர்ல வரமுடியாததால வரமுடியாததால, சிட்டுக்குருவி அனுப்பிய பேக்ஸ் சினி செய்திகள் சுடச் சுட உங்களுக்காக..

* அஜித்தின் பில்லா-2007-இல் பிரபு நடிக்கிறார். ஒரிஜினல் படத்தில் பாலாஜி நடித்த போலீஸ் வேஷத்தில் நடிக்கிறார் பிரபு.

* ரஜினியின் சிவாஜி படத்தின் வெளிநாட்டு உரிமையை லண்டனை சேர்ந்த அயன்காரன் நிறுவனம் 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது வரை, ஒரு சில ஹிந்தி படங்கள் மட்டுமே, இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சந்திரமுகி 6 கோடி ரூபாய்க்கு விற்றது.

* திமிரு படத்தின் இயக்குநர் தருண்கோபி இயக்கத்தில் உருவாகம் காள என்ற படம் தான் சிம்புவின் அடுத்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது லிங்குசாமியின் அடுத்த படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சிம்புவிற்கும் நயனுக்கும் இடையில் நடந்து வரும் மோதல் ஐ.நா சபை வரைத் தெரியும். இப்போது சிபுவின் எதிரியான தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நயன் நடிப்பதால் சிம்புவால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று டைட் செகியூரிட்டி போடப்பட்டுள்ளது.

* விரைவில் கில்லி கூட்டணியில், விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் ஒரு புதுப் படம் வெளிவரப் போகிறது. இந்த படத்தை ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிக்கிறார்.

* ஜீவா இயக்கும், ஜெயம் ரவி நடிக்கும் தாம் தூம் படத்தில் முக்கிய வேடத்தில் இப்போது மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார்.

* ரிலையன்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து கிரீடம் உட்பட ஐந்து படங்கள் எடுக்கவுள்ளது. அதற்காக 30 கோடி கொடுத்து அவரை புக் செய்துள்ளதாக சிட்டுக்குருவி சொல்கிறது.

* மணிரத்னத்தின் அசிஸ்டண்ட் கார்த்திக் இயக்கும் படத்தில் மம்மூட்டி நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார்.

சிட்டுக்குருவி சொந்த வேலையாக அடிக்கடி நமக்கு செய்திகள் தராமல் இருந்தது. இனிமேல் வாரம் ஒரு முறை வந்து செல்வதாக வாக்கு கொடுத்துள்லது. சிட்டுக்குருவியும் ரஜினி ரசிகர் என்பதால், ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி தான், என்று நம்புவோம் அதன் வாக்கை.

Sunday, March 11, 2007

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் - ஒரு பார்வை

டி.ஆரை பற்றி ஏகப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அவர் கதாநாயகனாக இப்படி எல்லாம் நடிக்க வேண்டுமா.. அதற்கு பதில் ஒரு காலத்தில் மற்றவர்களின் படங்களுக்கு எல்லாம் இசையமைத்தாரே.. அது போல இப்போது செய்யலாமே, என்று வீராசாமி வருவதற்கு முன்னால் நான் நினைத்ததுண்டு. ஆனால் வீராசாமி என்னுடைய அந்த ஆசையிலும் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுவிட்டது. ஒரு பாடல் கூட அவரின் பழைய சுறுசுறுப்பில் இல்லை. இசையும் ஏதோ புதுசாய் வந்தவரின் கைவண்ணம் போல இருந்தது. என் ஆசை மைதிலியும், ஒரு தாயின் சபதமும் தந்த பாடல்கள், இன்று கேட்டாலும் கால்களை பூமியில் பதித்து நம்மை ஆடவைக்கும் வல்லமை கொண்டது.

ஒரு வேளை சினிமா உலகில் எல்லோருக்கும் ஒரு பருவகாலம் இருக்கிறதோ.. பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் எடுக்கின்ற படங்கள் கூட, இன்றைய காலங்களில் தியேட்டர்களில் ஓடுவதில்லை. பழைய இயக்குநர்கள் இது மாதிரி புதியதாக படம் எடுக்க நினைத்து எடுத்த படம் எல்லாம் அந்து நைந்த துணியானது தான் மிச்சம். ரஜினிக்கும் கமலுக்கும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த SP முத்துராமன் கடைசியாக எடுத்த படமான பாண்டியன், ரஜினியின் தோல்விப்படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

டி.ராஜேந்தரை எனக்கு இசையின் வழியாக கொஞ்சம் பிடிக்கும். அந்த காலத்தில் தமிழ் திரை உலகில் மெனக்கட்டு நல்ல வித்தியாசமான இசைத் தொகுப்புகளை கொடுத்தவர். உண்மையில் நல்ல சங்கீத புலமை கொண்டவர். டி.ஆரின் தமிழ் சுவை கொண்ட பாடல் வரிகளும் மிகவும் பிரசித்தம். மைதிலி என் காதலி படத்தில் வரும் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் என்னும் பாடலின் வரிகள் சாம்பிளுக்காக...

தடாகத்தில் மீன்ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ...


இதை கண்ட
வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ..

இந்த பாடல் அதே படத்தில் மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே என்னும் பாடலின் சில வரிகள்..

மதம் கொண்ட
யானையின் பாதத்தில்
சேனைகள்
சிதைவதை நான்
நியாயம் என்பேன்..

இதம் சிந்தும்
பாவையின் பார்வையில்
காளையர்
சிதைவதை நான்
மாயம் என்பேன்..

இதில் வரும் வார்த்தை விளையாட்டுக்களையும் அவரின் கற்பனை சக்தியையும் நீங்கள் உணரலாம். இதெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். இன்னும் மற்ற பாடல்களை கேட்டால் நீங்கள் உணரலாம். அதுவும் ஒவ்வொரு பாடல்களிலும் வரும் சின்ன சின்ன இசை ஜெர்க்குகளும், ஓசைகளும் 'அட' போடவைக்கும். இப்போது அந்த ஞானமெல்லாம் எங்கே போயிற்று?

இவரைப் போல தயாரிப்பில் இருந்து இசை வரை எல்லா விஷயங்களையும் முயற்சி பண்ணியவர் K. பாக்யராஜ். இது நம்ம ஆளு, பவுனு பவுனு தான், ஆராரோ ஆரிராரோ போன்ற படங்களுக்கு சொந்த இசை அமைத்தார். ஆனால் டி.ஆரின் இசை அளவுக்கு பாக்யராஜின் இசை பிரமலமாகவில்லை என்று தான் சொல்லவேண்டும். டி.ஆரின் இசையை கேட்டாலே இது அவரின் இசை தான் என்று அடுத்துச் சொல்லும் அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கும். சில பாடல்களுக்கு சொந்த குரல் வேறு கொடுத்திருக்கிறார். மைதிலி என் காதலி படத்தில் வரும் அட பொன்னான மனசே பூவான மனசே இவரின் குரல் தான். சில நாட்களுக்கு முன்னால் கவனித்த விஷயம், இது நம்ம ஆளு படத்தில் வரும் பச்சமலை சாமியொன்னு உச்சிமலை ஏறுது, பாக்யராஜ் சொந்த குரலில் பாடியது. (இந்த பாடல்களின் சுட்டிகளை விரைவாக கண்டுபிடிக்க உதவிய ஆனந்தின் புதிய கருவிக்கு ஒரு சலாம்)

டி.ராஜேந்தர் அவர்களே, மகன் த்ரிஷாவுடன் ஆட்டம் போடும் வேளையில் நீங்கள் மும்தாஜ் (தொடாமல் நடித்தாலும்) கூட டூயட் தேவையா? உங்கள் படங்களை எடுத்தவுடன் நீங்கள் ஒருமுறையாவது பார்ப்பதுண்டு.. வீராசாமி படத்தை பார்க்க கலைஞரை அழைத்து வந்து படத்தை போட்டு காண்பித்தீர்களாமே.. அவரும் படத்தை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் போல..

அட! யார் என்ன சொன்னாலும் அடுத்த படத்திற்கு நீங்கள் ரெடியாகி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். தமிழ்நாடு தங்காதப்பா சாமி! ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்றேன்..

நண்பர்களே.. வந்தது வந்துட்டீங்க.. டி.ராஜேந்தர் வெளிப்படத்திற்கு இசையமைத்த படங்களின் பட்டியலை கொஞ்சம் சொல்லுங்க.. (வெளிப்படம் என்றால் இவர் இயக்காமல் இசை மட்டும் அமைத்த படங்கள். இவரின் இசையில் சிலப் படங்கள் மிகப் பெரும் வெற்றியை அடைந்தன.) இதுக்கு நமக்கு பதில் தெரியும்பா.. மாதுரி பாட்டை வைத்து கேட்ட கேள்விக்கு எனக்கு இன்னும் பதில் தெரியலை சாமிகளா!

Friday, March 09, 2007

தமிழாய் அவளும் என் இதய இலவம்பஞ்சும்

தன்னை விட
ஆறு மடங்கு
பாரத்தை
சுமக்குமாம்
எறும்பு..
உன்னை
சுமப்பதில் சுகமாகி
போனதடி
என் இதய
இலவப்பஞ்சு!

ஒரு கையிலே
ஒரு பொருளை
ஒரு நாள் முழுவதும்
ஒரு கணமும் விடாது
தூக்கி நின்றால்
கை வலிக்கும்
என்பது
அறிவியலார் சொன்னது!

நீயே சொல்
வருடங்களாய்
உன்னை சுமக்கும்
என் உள்ளம்
அவரின் வாதத்தை
பொய்யாக்கியதோ!

மனித உடம்பு
காந்தம்
என்று
ஆறாம் வகுப்பு
அறிவியலில்
அறிந்து வைத்திருக்கிறேன்!

அதற்காக
சூரியகாந்தியாய்
உன் சுற்றத்தையே
சுற்றி வருகிறதே
பட்டாம்பூச்சி இதயம்!

உனது
நெற்றிப் பொட்டு
மெய்யெழுத்தின்
அழகுப் புள்ளி..

உனது
கழுத்து தொடங்கி
கால் வரை
தமிழின்
ஒய்யார
வளைவுகள்..

ஒற்றைக் கொம்பு
எழுத்தெல்லாம்
உன் குதிரை வால்
சடையோ!

நீண்டு சுழித்து
வரும்
உயிர்மெய்
எழுத்தெல்லாம்
உன்
பேரழகு கொண்டையோ!

நீ இதழ்
குவித்து
தரும்
முத்தமெல்லாம்
'உ'வன்னா வகையறா
எழுத்துகளோ!

நீ அஜந்தா
ஓவியமாய்
வளைந்து நின்றால்
ஓவன்னா!

தமிழை அமுதென்றார்
பாரதியின் தாசன்!
உன்னை பார்த்த
பின்புதான்
படித்தேன்
தமிழுக்கு
ஏசுபிரான் போல
உயிர்தெழும் சக்தி
இருக்கிறதென்பதை!

நீ
எப்படி நினைக்கிறாயோ
அப்படியே
நீ ஆகிறாய்
என்றார்
சுவாமி விவேகானந்தர்!

அப்படித் தானடி
எனக்கு நீ!

எதனைப்
பார்த்தாலும்
அதில் நீ!
அதுவாய் நீ!

உருவமற்ற நீர்,
இருக்கும்
பாத்திரத்தின்
உருவத்தை
கொள்வதாய்,
நீ நீராகிறாய்!

தமிழ் படித்தாலும்
நீயே
அறிவியலும் அறிதலிலும்
நீயே!

யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
எனக்கான வீதிகளின்
சுவர்களில் எல்லாம்
மாற்றி எழுதிவிட்டேன்
சர்வமும் அவள்மயம் என்று!

அங்கே
பூ விக்கும்
பெண்முதல்
இங்கே
என் முக கண்ணாடி
வரை
எல்லோருக்கும்
தெரிந்து போய்விட்டது!

நான் காதலில்
இருக்கிறேன் என்று,
உன்னைத் தவிர!


டிஸ்கி : உங்க ஊர் ஆணியா எங்க ஊர் ஆணியா.. கிலோ கணக்குல ஆணிகள்.. அதனால் தான் உங்க பதிவுகளுக்கெல்லாம் என்னால் தினமும் வந்து கும்மி அடிக்க முடியவில்லை.. இதோ இன்றிலிருந்து 'ஆணிகளற்ற உலகத்தில்' சில காலங்கள்..

Thursday, March 08, 2007

ஐம்பதும் ஐம்பதும் ஐலேசா

நமது கழகத்தின் தன்மானச் சிங்கம், நாட்டாமை என்று எல்லோராலும் பாசமுடன் அழைக்கப்படுபவர், பகார்ட்டியை பாலாய் குடு(டி)ப்பவர், போர்களத்தில் பூரி கட்டையின் விழுப்புண்களை உடலெல்லாம் கொண்டவர், முகிலின் பாசமிகு அப்பா, பிளாக் உலகத்தின் தனிகரற்ற முதல்வர் ஷ்யாம் அவர்கள் தனது ஐம்பதாவை பதிவை வெற்றிகரமா போட்டிருக்கிறார். எல்லோரும் அவர் பதிவுக்கு போய் நல்ல ஒரு ஓ போட்டுட்டு கும்மியும் அடிங்கப்பா!

அதே நேரத்தில், போட்ட பந்துகளை எல்லாம் சிக்ஸருக்கு விரட்டி, உலக கோப்பை அது உங்கள் கோப்பை என்று, கிரிக்கெட் உலக கோப்பையை பற்றிய செய்திகளையும், கருத்தாய்வுகளையும் அள்ளி வீசி வரும் நமது பதிவுலக சச்சின் மணிகண்டன் தனது ஐம்பதாவது பதிவை போட்டிருக்கிறார். உங்க கமெண்டரியை அள்ளி வீசுங்க!

நாட்டாமை முதல்வர் ஷ்யாமுக்கும், கிரிக்கெட் மணிகண்டனுக்கும் உங்கள் சார்பாக மக்கா..அடிச்சு தூள் கிளப்புங்கப்பா என்று வாழ்த்துகிறேன்..

Wednesday, March 07, 2007

விடை சொல்லுங்கள் திரையிசை கேள்விக்கு

இந்த பாடல் உங்களுக்கு எந்த தமிழ் பாடலை நினைவு படுத்துகிறது? இதே இசை, மெட்டு ஒரு தமிழ் பாட்டின் வழியாக நமது காதிலே பாய்ந்திருக்கிறது.



பழைய தண்ணி கருத்திருச்சு என்னும் பாடல் ஏதோ ஒரு புதிய பாடலாக உருவெடுத்துள்ளது. இந்த பாடலுக்கு பா.விஜய் தான் வரிகளைத் தந்திருக்கிறார். உங்களால் அது எந்த பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

விடைகளை பின்னூட்டதிலே இடுங்கள்...

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர் கவிதை ஓட்டம்

என் உள்ளம் உளறியதை நான் இங்கே உளறியிருந்தேன்.. அதன் பிறகு அந்த தலைப்பே ஒரு கவிதை என்று என் மாப்ள பரணியும் அதைத் தொடர, கவிதை புயல் வேதாவும் அவர் பங்குக்கு அழகான ஒரு கவிதையை பிரசவித்திருந்தார். ஒரு புள்ளியில் தானே ஒரு அழகான பயணமே என்பது புரிந்துகொண்ட நம்ம நண்பர் காலெண்டர் கவி மணிபிரகாசும் தன் உள்ளத்தை உளற விட்டிருக்கிறார். உணர்ச்சியான வரிகளில் உலவ விட்டிருக்கிறார்.

ரெடி! ஸ்டார்ட்! கோ! நீங்களும் உங்க மனசை பறக்கவிட்டு, நச்சென்று ஒரு கவிதையை எழுதலாம்..

ஆரம்பம் இங்கே
போதையானது இங்கே
மூன்றாவதாய் முகிழ்த்தது இங்கே
நாங்காவது கியர் போட்ட கவிதை இங்கே...

அடுத்தது யார்? அந்த பெண்ணின் கண்களில் வழியும் போதையை பருகிய கிறக்கத்தில் உளறப் போவது எந்த உள்ளம்..

பாரெல்லாம் உண்டாம் தமிழ்நாட்டு டாஸ்மாக்கில். அதற்காக அவள் விழி போதை பருகிவிட்டு அவள் மடியெனும் பாரில் தான் கிடப்பேன் என்று இன்னும் என் மனது பிடிக்கிறது அடம்! அவள் இன்னும் இடம் தராததால் இப்போது இருப்பதோ அந்த சந்நியாசி மடம்!

Tuesday, March 06, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 2

முதல் பகுதி

தினமும் நாங்கள் சிஃபி ஹப்பில் போய் மெயில் செக் செய்வது, ஏதாவது நிறுவனத்தில் இருந்து சேதி வந்திருந்தால் அவர்களை போய் பார்ப்பது, இது தான் எங்களது வேலை. இதற்காக சிஃபியில் ஐம்பது ரூபாய் பேக்கேஜ் வாங்கி வைத்திருந்தோம். மெயிலில் செய்தி வந்த இடங்கள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் சில நேரம் வெட்டியாக ஊரைச் சுற்றியிருக்கிறோம். ஒரு முறை என் நண்பனுக்கு சிட்லபாக்கத்தில் ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து புராஜக்ட் தருவதாக அழைத்திருந்தார்கள். சரி போகலாமே என்று எல்.ஐ.சியில் பஸ் பிடித்தோம். அங்கே இருந்து சிட்லபாக்கம் போவதென்பது ஒரு பெரிய சுற்றுலா. நான் எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகளின் கருணையினால் ஐம்பது நிமிடத்தில் மதுரைக்கு சேர்த்துவிடுவார்கள். இங்கே நாங்கள் சிட்லபாக்கம் வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அது முதல் தடவை சென்னையை சுற்றுவது. அதனால் டி.எம்.ஸ், தேனாம்பேட்டை, சைதபேட்டை, கிண்டி, ஏர்போர்ட் (இந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் நான் சீட்டில் இருந்து மெல்ல எழுந்து ஏதாவது ஏரோபிளேனை உயர்ந்த காம்பவுண்டு சுவர்களுக்கு பின்னால் பார்க்க முடிகிறதா என்று எட்டிப் பார்ப்பேன்)பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என்று எல்லா இடங்களை மனதுக்குள் குறித்துக்கொண்டே வந்தேன். எந்த ஊருக்கு புதிதாக சென்றாலும் போகும் வழி ஊர்களையும், அந்த ஊரை பற்றி முன்னமே எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறோமா என்றும், நான் எண்ணிப்பார்ப்பது வழக்கம்.

சிட்லபாக்கத்தில் இறங்கி கிட்டதட்ட ஒரு மைல் தொலைவு நடந்து சென்றோம். ஒரு மாடி வீடு வந்தது. வெளியே அந்த நிறுவனத்தின் பெயர் பலகை இருந்தது. உள்ளே சென்றோம். ஒரு வீட்டின் ஹால் மற்றும் அறைகளுக்குள் கம்பியூட்டர்கள் வைக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். நாங்கள் சென்று அந்த கம்பெனியின் மேனேஜரை பார்த்தோம். அவர் புராஜெக்ட் தருவதாகவும், ஆனால் அதற்கு நாங்கள் ஐந்தாயிரம் பணம் கட்டவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். புராஜெக்டுக்காக சென்றால், இது போல பல நிறுவனங்கள் பணம் கேட்ட கதை எங்களுக்கும் நடந்திருந்ததால் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினோம். கீழே வந்த பிறகு தான் ஞாபகம் வந்தது, என் ரெசியூம் அவர்கிட்ட இருப்பது. நான் மறுபடியும் அந்த மேனேஜரை பார்த்து, கொடுத்த ரெசியூமை திரும்ப வாங்கி வந்தேன். அப்போதெல்லாம் ஒரு ப்ரிண்ட் எடுக்க கிட்டதட்ட ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வர ஆகும். எப்படியும் பணம் கொடுத்து இங்கே புராஜெக்ட் செய்யப் போவதில்லை.. எதுக்கு பணத்தை வேஸ்ட் செய்யவேண்டுமென்று அது தான் திரும்ப வாங்கி வந்தோம்.

எல்.ஐ.சியை படத்தில் மட்டுமே பார்த்து வந்த எனக்கு, அதன் பிறகு எல்.ஐ.சி ஒரு பெரிய விஷயமாக இல்லை. இந்த குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கும். அழுது ஆர்பாட்டம் பண்ணும். ஆனால் அந்த பொருள் கையில் கிடைத்துவிட்டால் சிறிது நேரம் தான் ஆர்வமெல்லாம். அது போன்றதொரு நிலையில் தான் என் மனமும் எல்.ஐ.சியை நினைத்தது. பஸ் ஏறவும் இறங்கவும் அங்கே தான் செல்வேன் என்பதால் எனக்கு இப்போது அது சலித்து விட்டது. ஆனால் ஸ்பென்சருக்கு போகாததால் அதற்கு செல்லலாமென்று ஒரு நாள் வார இறுதியில் கிளம்பினோம். ஞாயிற்றுக்கிழமை தான் ஸ்பென்சர் களைகட்டும் என்று நண்பர்கள் அடிக்கடி சொல்லியிருந்ததால் அன்றைக்கே கிளம்பினோம். ஸ்பென்சர் பிளாசா, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து நடக்கும் தூரம் என்பதால், நாங்கள் நடந்தே தான் சென்றோம்...

ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன. அதென்ன கிராமத்து உடைகள் என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது. கிராமத்து மனிதர்களின் சட்டைகள் எப்போது முட்டிவரை நீண்டு இருக்கும். நான் சட்டை தைக்க போகும் போதெல்லாம் என் அம்மா, வளர்ற பையன்னு சொல்லி நீளமா தான் தைப்பாங்க.. அப்புறம் மதுரைல காலேஜ் சேர்ந்த பிறகு, நீளம் கொஞ்சம் குறைந்ததென்னவோ உண்மை தான். இப்படி ஒவ்வொரு உடை ஸ்டைலும் நான் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து தான் வருகிறேன் என்பதை ஊருக்கு முரசு கொட்டி சொல்லும். அப்புறம் சட்டையை இன் செய்ய ஆரம்பித்ததில் இருந்து இந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மறுபடியும் பேண்ட் மாடல் பிரச்சனை தரும். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் பிடித்தன எனக்கு, மக்களோடு ஒன்றாக இணைவதற்கு...

ஸ்பென்சர் பிளாசா நவநாகரீக உலகமாக தெரிந்தது. அவர்களின் உடைகளும் பேச்சுகளும் என்னை மெதுவாக நத்தை கூட்டுக்குள் நத்தை சுருங்கி கொள்வது போல மாற்றியது. மெல்ல ஏதோ ஒரு தெரியாத உலகத்தில் நுழைந்து விட்டமோ என்ற குறுகுறுப்பும் படபடப்பும் என்னை ஆட்டுவித்தது. அந்த ஏசி பிளாசாவிலும் முகம் திட்டு திட்டாய் வேர்க்க ஆரம்பித்தது. தரை தளத்தில் எல்லோரும் அடித்து பிடித்து, சிற்றுண்டிகளை வாங்கி கொண்டிருந்தார்கள். மெல்ல விலைப்பட்டியலை பார்த்தேன். எங்கள் ஒரு நேர உணவின் விலையது.. அப்படியே அங்கிருந்து மெல்ல நகன்று எல்லாத் தளங்களுக்கும் சென்று வந்தோம். மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால்..

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Sunday, March 04, 2007

மந்திரிசபை மாற்றம் - இரண்டாம் பகுதி

மந்திரிசபையின் மாற்றத்தின் முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்கள் நம்மை திக்கு முக்காட வச்சது. கிட்டதட்ட தமிழ் நாட்டில இருக்க சட்டசபை இடங்களை விட அதிகமாகவே பின்னூன்ட்டங்கள் கிடைத்துள்ளன. இத்தனை கமெண்டுகளும் நமது பிளாக் முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளுக்கு (அப்படின்னா என்னான்னு கேட்கப்படாது.. சும்மா கொள்கை வச்சுகிட்டு அதை கடைபிடிக்காம இருக்கிறதை விட கொள்கையே இல்லாம பிளாக் தேச மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கொள்கையாகும்) கிடைத்த வெற்றி என்றே நினைக்கிறேன். கட்சியின் சின்னத்தை என்ன என்று உள்ளாட்சி அமைச்சர் கேட்டுட்டார். இதுக்கு பதிலையும் நான் சொல்றதை விட நம்ம மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம் (நாட்டாமை முதல்வரே.. நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க)அப்படியே கொடி வண்ணத்தையும் சொல்லுங்கப்பா மக்களே

சரி.. இப்போ மிச்சம் இருக்க மற்ற துறைகளுக்கு.... என்னடா இதெல்லாம் ஆர்பாட்டம் இல்லாத துறையா இருக்கேன்னு யாரும் நினைக்காதீங்க.. ஏற்கனவே பயங்கர வேலை இவங்க எல்லாம் பாக்குறதால இவங்களுக்கு ஈசியா இருக்கட்டுமேன்னு இந்தத் துறைகள்.

சமூக நலத் துறை அமைச்சர் : நண்பர் SLN

லண்டனில் இருந்துகிட்டு லண்டன்ல பொழியிற பனியை பற்றியும் எழுதுவார். சென்னை வெயிலையும் ஹாட்டா எழுதுவார். திடீர்னு எல்லா புண்ணிய தலங்களையும் ட்ரிப் அடிச்சு ஒரு பதிவை போடுவார்.

பால் மற்றும் மீன் வளத் துறை அமைச்சர் : கோல்மால் கோபால்

போன தடவை இருந்த அதே துறை தான். இடையில் மாடு வளர்ப்பது எப்படின்னு ஒரு ட்ரெய்னிங்குகாக ஒரிசா புவனேஷ்வர் போயிருந்தார். இப்போ சென்னை டைடல் பார்க்குல அதை செயல் படுத்துறார். அந்த பணியை இவரே மறுபடியும் தொடர்வார்

உணவு மற்றும் சுற்றுபுறத்துறை அமைச்சர் : SKM

ஹோம் டெபார்ட்மெண்ட்.. ரொம்ப வருஷ அனுபவம். இந்த துறையை இவரைவிட வேற யாருக்கு தர்றது?

காடுகள் மற்றும் கனிம வளர்ச்சித் துறை அமைச்சர் : கோபிநாத்

புது அமைச்சர். புதுசா நம்ம ஜோதில ஐக்கியமானவர். அதனால கஷ்டமில்லாத இந்த துறை இவருக்கு.. ஆனா ரொம்ப பொறுப்பான துறை..

கூட்டுறவுத் துறை அமைச்சர் : தங்கை தீக்க்ஷண்யா

தங்கை இப்போ ரொம்ப பிசி. அதனால ரொம்ப கஷ்டப்படுத்த விரும்பல.

எல்லாத் துறையும் ஓவர். அப்போ சட்டசபையை கவனிக்கிறது யாரு. இருக்கவே இருக்காங்க கொடுமை புகழ் உஷா. போனதடவை கொடுமை ஒழிப்புத் துறை அமைச்சரா இருந்தாங்க. எல்லோர் கொடுமையையும் ஒழிச்சாங்க.. ஆனா இவங்க முன்னாடி ஊர்கொடுமையெல்லாம் பிரேக் ஆடுது. அது தான் இந்த தடவை நமக்கு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்போ அவங்க தான் சபாநாயகர். துணை சபாநாயகரா தோழி ரம்யா.

அட! என்னாச்சு அம்பிக்கு ஒண்ணுமில்லையான்னு நீங்க எல்லாம் கேக்குறது புரியுது. என் மச்சானுக்கு இல்லாமலா..நம்ம கிட்ட இருக்க 15 எம்.பி சீட்டை வச்சுகிட்ட என்ன பண்றது. அது தான் மத்திய அமைச்சர் போஸ்ட் ஒரு ஏழு கிடைச்சது. உள்ளூர் பிளாக்கை ஆண்டா மட்டும் போதுமா, தேசிய அளவுல பேரெடுக்க வேண்டாமா..

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் : அம்பாசமுத்திரம் அம்பி

இதுல தான்பா இந்த தொலைபேசித் துறையும் இருக்கு. இனிமே உன் காட்டுல.. இல்ல..இல்ல..காதுல தேன் மழை தான்.. அம்பி, உன்னை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள எல்லாம் அடைக்கல.. நம்ம கட்சியோட பேரை செங்கோட்டையிலும் பரப்புபா..

கப்பல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் : நண்பர் KK

எல்லா பிளாக்கும் போய் சரளமா பின்னூட்டம் கொடுப்பார்.. ரொம்ப கருத்தான விஷயங்களையும் எழுதுறார். நம்ம நாட்டாமை பேரை உடம்புல பச்சைகுத்திகிட்டு இருக்கார் போல.. அந்த அளவுக்கு நாட்டாமை மேல இவருக்கு பற்று.. அதனால அவர் கூட இணைந்து பணியாற்ற KK

நிதித் துறை இணை அமைச்சர் : தோழி சேதுக்கரசி

நம்மளோட எல்லாப் பதிவுக்கும் வந்து, படிச்சு பின்னூட்டம் போடுவார். நிறைய விஷயங்களை சுட்டிக்காட்டி இருக்கார், நம்ம பிளாக்கை மேம்படுத்த.

மற்ற மத்திய மந்திரிபதவியை நம்ம தோழமை கட்சிக்கு கொடுத்தாச்சு. இதுக்கு G3 தான் தலைவிங்கிறதால (கட்சி பேர் என்னங்க) அதுக்கு அவர் தான் பெயர் சிபாரிசு பண்ணுவார். பார்ப்போம் யாருக்கு கொடுக்கிறார்னு.

அப்புறம் இந்த சென்னை மேயர் பதவிக்கு நம்ம நண்பர் கோப்ஸ் பெயர் முன்மொழிவோம் நம்ம கட்சி சார்பா.

நம்ம கட்சிக்கு நீங்க கொடுத்து வர்ற ஆதரவை பார்த்தி ஐ.நா சபையே ஆடிகிடக்கு. அவங்க கூட பேச்சு வார்த்தை நடத்த தான் நம்ம (வாழ்நாள்)தலைவி கீதா கிளம்புறாங்க அமெரிக்காவுக்கு. அவங்க பயணம் வெற்றியடையவும் நாம் வாழ்த்துறோம்.

வேற யாருக்காவது வாரியப் பதவியோ வட்ட செயலாளர் பதவியோ வேணும்னா பின்னூட்டதுல சொல்லுங்க நண்பர்களே..

என்றும் நம்ம பிளாக் முன்னேற்ற கழகத்திற்கு உங்களின் பொன்னான ஆதரவை தருமாறு கழகத்தின் சார்பாக வேண்டுகிறோம். இந்த பகுதிக்கும் உங்கள் பொன்னான பின்னூட்டங்களை இட்டு கட்சியின் மானத்தை இமயமலை உயரத்திற்கு பறக்கவிடுங்க..

தலைவி கீதா புகழ் ஓங்குக! நாட்டாமை நாமம் வாழ்க!

மக்களே.. அப்படியே அம்பி எழுதிய மத்திய மந்திரிசபை பதவி ஏற்பு நிகழ்ச்சியையும் பார்த்துட்டு வந்துடுங்க

Friday, March 02, 2007

பிச்சைக்காரனின் பிதற்றல்கள்

ஒரு
ஊமையின்
சேகரிக்கப்பட்ட
வார்தைகளாய்
அவன்
தட்டில்
ஓசையுடன்
விழுகின்றன
சில்லறை காசுகள்!

அவன்
நிலை எண்ணி
அந்த
சில்லறைகள் கூட
கைகொட்டி
சிரிக்கின்றனவோ!

அந்த
அழுக்கு உடம்புக்குள்
மூழ்கி போனதோ
அவனின்
வெளிச்ச எதிர்காலங்கள்!

கிழிசல்கள்
எல்லாம்
வாழ்க்கையின்
போர்களங்கள்
இவனுக்கு பதில்
ஆடைக்கு
தந்த
விழுப்புண்களோ!

காலணி தைப்பவன்
தன்னை கடப்போரின்
கால்களையே
பார்ப்பது போல்,
கடக்கும் மனிதர்
கைகள்
சட்டைபைக்குள்
நீளுமோ
என்று
கண்களில்
தேடிகிடக்கிறான்!

வெளியில்
தெரிந்து
இவன்
எடுக்கிறான் பிச்சை..

எத்தனையோ பேர்
சுவர்களுக்குள்
கையூட்டு
கையேந்தல்களில்!

கோயில்களின்
வாசல்களில்
கழற்றி விடப்படும்
செருப்புகளில்
ஆரம்பித்து
கேகிறது
இவனின்
அம்மா! தாயே!
என்னும் ஒரு கூவல்!

இவன்
குரல் கேட்டு
மனிதர்
காசுகள் கடாசினரோ
தெரியாது!

ஆனால்
அந்த தெய்வமும்
கல்லாகி போனதோ
என்றதோர்
எண்ணம் இவனுக்கு!

கஞ்சனின்
கோடியும்
இவனின்
சில்லறைகளும்
வைத்திருப்பவருக்கு
உதவுவதில்லை!

கோயில்
வாசலில்
இவனின்
கையேந்துவது
வழக்கமான
சில்லறையையா?
இல்லை
உள் சென்றோர்
வாங்கி வரும் வரங்களையா?

Thursday, March 01, 2007

சூரியன் FM - கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!

உங்களுக்கே தெரியும், உங்களை குஷிப்படுத்த என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் தேடிக்கொடுப்பது தான் நம்ம வேலை.. இதோ இப்போ அடுத்த விஷயம்!

நீங்க அமெரிக்காவுல இருங்க, சூடான்ல இருங்க, துபாய்ல இருங்க இல்ல ஆஸ்திரேலியா, லண்டன்ல கூட இருங்க.. நீங்க எங்க இருந்தாலும் இருந்த இடத்துல இருந்தே இப்போ சென்னை சூரியன் FM கேட்கலாம்!

கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!

உங்க கிட்ட விண்டோஸ் மீடியா ப்ளேயர் இல்லைனா, அதை தரை இறக்கம் செய்ய வேண்டும் சூரியன் FM கேட்க.. இது இந்திய நேரப்படி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

நன்றி : தீவு