Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Wednesday, March 21, 2007

வலையில் உலவும் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள்

இன்று நினைக்காத ஒன்று நிகழ்ந்தது.. வலையில் எங்கு பார்த்தாலும் சிவாஜி பாடல்கள்.. இரண்டு நாளைக்கு முன்னாடி தான், பாடல்கள் ஏப்ரல் 4-ல் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார்கள். அதற்குள் எப்படி வலையில் இவ்வளவு சாதாரணமாக உலவுகிறது மூன்று பாடல்கள். இதற்கு நமது நண்பர் ஃபில்பர்ட், குமுறலுடன் தனியாக ஒரு பிண்ணனி கதை சொன்னாலும், இது உண்மையான பாடல்களாக இருக்காது என்பது என் எண்ணம். அப்படி உண்மை என்றால், இருந்துவிடக்கூடாது என்பது என் வேண்டுதல். மூன்று பாடல்களும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் ஈர்க்கக்கூடியதாக இல்லை. ஏப்ரல்-4 வரை காத்திருக்கிறேன், இன்னும் நம்பிக்கையுடன்..

[தயவுசெய்து யாரும் எங்கு கிடைக்கிறது இந்தப் பாடல்கள் என்று கேட்காதீர்கள். நிச்சயமாய் நான் சொல்வதாய் இல்லை. சொல்லக்கூடிய மனநிலையும் இல்லை]

Thursday, March 15, 2007

மாயக்கண்ணாடி - இசை தொகுப்பு பற்றிய பார்வை

சேரன், கடந்த பத்து வருடங்களில் ஏழு படங்கள் தான் இயக்கி இருந்தாலும், அவரின் எல்லாப் படங்களும் தியேட்டர்களில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், தன்னுடைய பாணி இயக்கத்தில் (கமர்ஷியல் என்னும் வட்டத்துக்குள் இருந்தாலும் ஆபாசம் என்பதை கொஞ்சம் கூட கலக்காதவர்), கருத்துக்கள் சொல்லி சமுதாயத்துக்கும் இந்த மனித சமுதாயத்தின் உறவுகளை புரிந்து கொள்ளும் திறனையும் கொண்ட அருமையான படங்களை தந்துள்ளார். தேசிய கீதம் என்ற படத்திற்கு பிறகு இளையராஜா இசை இயக்கத்தில் மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், சேரன். படத்தின் இதர இறுதி வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பாடல்கள் கடந்தவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையை விமர்சனம் பண்ணும் அளவுக்கு நமக்கு இசையில் ஞானம் கிடையாது. ஆனால் இளையராஜா என்னும் இசை ஊற்றில் தான் இத்தனை காலங்கள் நம் வாழ்க்கை வளர்ந்தது என்பதும் அதை தேடி நாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.

இன்ட்ரோடக்க்ஷன் (அறிமுகம்) - இளையராஜா

இது முழுக்க முழுக்க படத்தை பற்றியும் சேரன் பற்றியும் இளையராஜா தனது சொந்த கருத்துகளை கூறுகிறார்.. படத்தின் இசை அமைக்கப்படும் போது நடந்த சுவையான விஷயங்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். முதன் முதலாக இப்படி ஒரு படத்தை பற்றி, தொலைக்காட்சிகளில் படத்தை பற்றி விளம்பரம் மற்ற நடிகர்கள் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர் பேட்டி கொடுப்பது போல, இதில் இளையராஜா பேசியிருக்கிறார். இது இந்த படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இளையராஜாவை பொறுத்தவரை புதுமையான விஷயம்.

காதல் இன்று - இளையராஜா

இன்றைய காதலை பற்றிய பாடல்.. அழகான வரிகள்.. இளையராஜாவின் குரலில் இது போன்று பாடல்கள் கேட்டு நீண்ட நெடு நாட்களாகிவிட்டது. இசையும் பாடலுடன் அருமையாக ஒத்துப் போகிறது. இசையை விட பாடுபவரின் குரல் வலிமையாக இருக்கும் ஒரு சில பாடல்களில். அது இளையராஜா பாடும்போது நன்றாக தெரியும், ஒரு வேளை அவர் இசை என்பதாலா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் பார்லர்களிலும் ஏசி தியேட்டர்களிலும் முடிந்துவிடுகின்ற இன்றைய காதலையும் கல்லில் செதுக்கியதாய் இருக்கும் அன்றைய காதலையும் பற்றி சொல்கிறது இந்தப் பாடல்.

காசு கையில் - இளையராஜா

முதல் பாடலான "காதல் இன்று"வின் அதே இசை படிவத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. அது காதலை பற்றிச் சொன்னால், இந்த பாடல் காசு இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றும் இல்லை என்று சொல்லும் பாடல். இதையும் இசைஞானியே பாடியுள்ளார். இசைஞானிக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை என்று நமக்கு புரிய வைக்கும் பாடல். அப்படி ஒரு தனி ஆவர்த்தனம் செய்கிறார் பாடலில்.

ஒரு மாயலோகம் - திப்பு மற்றும் மஞ்சரி

ஆழ்மனசை கொள்ளையடிக்கும் கிதாரின் ஒலியில், மேற்கத்திய இசையின் வடிவத்தில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த படத்தின் ஏனைய பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்டினத்து வாடை அதிகம் கலந்ததாய் இருக்கிறது. திப்புவும் மஞ்சரியும் அருமையாய் பாடியிருக்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் - கார்த்திக் மற்றும் ஷ்ரேயா கோஷல்

மெலடி என்றால் மேஸ்ட்ரோ தான்.. அவரை அடித்துகொள்ள ஆளே கிடையாது. இந்த கூற்றை மறுபடியும் நிரூபிக்கும் பாடல் இது. கார்த்திக்கின் குரலும் ஷ்ரேயாவின் குரலும் ஒரு புல்லாங்குழலில் வழிந்தோடும் காற்றை போல நமது காதுகளில் வழிகிறது, இந்த புத்தம் புதிய இசை. தாளங்கள் சரியான அளவில் அமைக்கப்பட்டு இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் வகை இசை அமைந்துள்ளது. இந்த பாடல் முழுக்க அழகன் படத்தில் மம்மூட்டி, பானுப்பிரியா மாதிரி செல்போனை பேசிக்கொண்டே இருப்பதை போல இருக்கும் என்பது என் சின்ன கூற்று, இளையராஜா பேசியதிலிருந்து.

உலகிலே அழகி - விஜய் யேசுதாஸ் மற்றும் நந்திதா

காதுகளுக்கு வலிக்காமல், மெல்ல அப்படியே தேன் வழிந்து ஓடி இதயம் தொடுவது போல் இருக்கிறது விஜய் யேசுதாஸின் குரல். அவர் கூட, இணைந்து பாடியிருக்கிறார் குயில் நந்திதா. மெல்ல மெல்ல படர்ந்து காலை நேரத்தை பனியது மூடுவது போல், நம்மை மூழ்கடிக்கிறது இந்தப் பாடல். இந்த பாடலில், தபேலாவும் வீணையும் நம் மனசை மகுடியாய் ஆட வைக்கிறது. முந்திகாலத்தில் KJ யேசுதாசுக்கு இருக்கும் வலிமை இப்போது விஜய்க்கும் மெல்ல தொற்றிக்கொண்டது. இன்னும் சில காலங்களுக்கும எல்லோர் மனதையும் வருடும் இந்த இசை மயிலிறகு.

ஏலே எங்க வந்த - இளையராஜா மற்றும் குழுவினர்

நடிகனாகி உலகை ஆள வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்திறங்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கான பாடல். வேகத்திலான இசையுடன் கால்களை நடனமாட விடும் இந்த பாடல் இந்த இசை ஆல்பத்தில் முதலில் இருக்கிறது. இந்த பாடலையும் இசைஞானியே பாடியுள்ளார். இந்த மாதிரி பாடல்களை மேஸ்ட்ரோ பாடி மாமாங்கம் ஆகிவிட்டது. முதன் முதலாய் இந்த பாடலை கேட்ட போது, சிவாஜி, சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு படத்தில் வரும் ஹே ராஜ ஒன்றானோம் இன்று என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் கேட்க கேட்க மனது முழுவதும் மெல்ல ஒருவித துள்ளலை நிரப்புகிறது இந்த பாடல்.

மாயக்கண்ணாடி ஆரம்பித்த நாளில் இருந்தே எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இந்த இசை ஆல்பம் அதில் இன்னும் நிறைய எண்ணெய் ஊற்றியுள்ளது. இந்த தொகுப்பு நிச்சயமாய் இளையராஜாவுக்கு உள்ளுக்குள் ஒரு புதிய தெம்பைத் தரும். இதில் அவர் தன்னை இன்னும் புதுப்பித்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகள் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இசைஞானி சொல்வதை போல சில இடங்களில் வெற்று வார்த்தைகள் வைத்து கவிஞர்கள் நிரப்புவது போல, இதில் ஒன்றும் இல்லை.. அதை சேரனும் அனுமதிக்கவில்லை. (உதாரணம் : பாட்ஷா படத்தின் ஆரம்ப பாட்டில் வரும் ஜுமுக்குயின்னா ஜுமுக்குத் தான்) ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதே வீரியத்தை படத்திலும் நாம் பார்க்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

Sunday, March 11, 2007

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் - ஒரு பார்வை

டி.ஆரை பற்றி ஏகப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அவர் கதாநாயகனாக இப்படி எல்லாம் நடிக்க வேண்டுமா.. அதற்கு பதில் ஒரு காலத்தில் மற்றவர்களின் படங்களுக்கு எல்லாம் இசையமைத்தாரே.. அது போல இப்போது செய்யலாமே, என்று வீராசாமி வருவதற்கு முன்னால் நான் நினைத்ததுண்டு. ஆனால் வீராசாமி என்னுடைய அந்த ஆசையிலும் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுவிட்டது. ஒரு பாடல் கூட அவரின் பழைய சுறுசுறுப்பில் இல்லை. இசையும் ஏதோ புதுசாய் வந்தவரின் கைவண்ணம் போல இருந்தது. என் ஆசை மைதிலியும், ஒரு தாயின் சபதமும் தந்த பாடல்கள், இன்று கேட்டாலும் கால்களை பூமியில் பதித்து நம்மை ஆடவைக்கும் வல்லமை கொண்டது.

ஒரு வேளை சினிமா உலகில் எல்லோருக்கும் ஒரு பருவகாலம் இருக்கிறதோ.. பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் எடுக்கின்ற படங்கள் கூட, இன்றைய காலங்களில் தியேட்டர்களில் ஓடுவதில்லை. பழைய இயக்குநர்கள் இது மாதிரி புதியதாக படம் எடுக்க நினைத்து எடுத்த படம் எல்லாம் அந்து நைந்த துணியானது தான் மிச்சம். ரஜினிக்கும் கமலுக்கும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த SP முத்துராமன் கடைசியாக எடுத்த படமான பாண்டியன், ரஜினியின் தோல்விப்படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

டி.ராஜேந்தரை எனக்கு இசையின் வழியாக கொஞ்சம் பிடிக்கும். அந்த காலத்தில் தமிழ் திரை உலகில் மெனக்கட்டு நல்ல வித்தியாசமான இசைத் தொகுப்புகளை கொடுத்தவர். உண்மையில் நல்ல சங்கீத புலமை கொண்டவர். டி.ஆரின் தமிழ் சுவை கொண்ட பாடல் வரிகளும் மிகவும் பிரசித்தம். மைதிலி என் காதலி படத்தில் வரும் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் என்னும் பாடலின் வரிகள் சாம்பிளுக்காக...

தடாகத்தில் மீன்ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ...


இதை கண்ட
வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ..

இந்த பாடல் அதே படத்தில் மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே என்னும் பாடலின் சில வரிகள்..

மதம் கொண்ட
யானையின் பாதத்தில்
சேனைகள்
சிதைவதை நான்
நியாயம் என்பேன்..

இதம் சிந்தும்
பாவையின் பார்வையில்
காளையர்
சிதைவதை நான்
மாயம் என்பேன்..

இதில் வரும் வார்த்தை விளையாட்டுக்களையும் அவரின் கற்பனை சக்தியையும் நீங்கள் உணரலாம். இதெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். இன்னும் மற்ற பாடல்களை கேட்டால் நீங்கள் உணரலாம். அதுவும் ஒவ்வொரு பாடல்களிலும் வரும் சின்ன சின்ன இசை ஜெர்க்குகளும், ஓசைகளும் 'அட' போடவைக்கும். இப்போது அந்த ஞானமெல்லாம் எங்கே போயிற்று?

இவரைப் போல தயாரிப்பில் இருந்து இசை வரை எல்லா விஷயங்களையும் முயற்சி பண்ணியவர் K. பாக்யராஜ். இது நம்ம ஆளு, பவுனு பவுனு தான், ஆராரோ ஆரிராரோ போன்ற படங்களுக்கு சொந்த இசை அமைத்தார். ஆனால் டி.ஆரின் இசை அளவுக்கு பாக்யராஜின் இசை பிரமலமாகவில்லை என்று தான் சொல்லவேண்டும். டி.ஆரின் இசையை கேட்டாலே இது அவரின் இசை தான் என்று அடுத்துச் சொல்லும் அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கும். சில பாடல்களுக்கு சொந்த குரல் வேறு கொடுத்திருக்கிறார். மைதிலி என் காதலி படத்தில் வரும் அட பொன்னான மனசே பூவான மனசே இவரின் குரல் தான். சில நாட்களுக்கு முன்னால் கவனித்த விஷயம், இது நம்ம ஆளு படத்தில் வரும் பச்சமலை சாமியொன்னு உச்சிமலை ஏறுது, பாக்யராஜ் சொந்த குரலில் பாடியது. (இந்த பாடல்களின் சுட்டிகளை விரைவாக கண்டுபிடிக்க உதவிய ஆனந்தின் புதிய கருவிக்கு ஒரு சலாம்)

டி.ராஜேந்தர் அவர்களே, மகன் த்ரிஷாவுடன் ஆட்டம் போடும் வேளையில் நீங்கள் மும்தாஜ் (தொடாமல் நடித்தாலும்) கூட டூயட் தேவையா? உங்கள் படங்களை எடுத்தவுடன் நீங்கள் ஒருமுறையாவது பார்ப்பதுண்டு.. வீராசாமி படத்தை பார்க்க கலைஞரை அழைத்து வந்து படத்தை போட்டு காண்பித்தீர்களாமே.. அவரும் படத்தை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் போல..

அட! யார் என்ன சொன்னாலும் அடுத்த படத்திற்கு நீங்கள் ரெடியாகி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். தமிழ்நாடு தங்காதப்பா சாமி! ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்றேன்..

நண்பர்களே.. வந்தது வந்துட்டீங்க.. டி.ராஜேந்தர் வெளிப்படத்திற்கு இசையமைத்த படங்களின் பட்டியலை கொஞ்சம் சொல்லுங்க.. (வெளிப்படம் என்றால் இவர் இயக்காமல் இசை மட்டும் அமைத்த படங்கள். இவரின் இசையில் சிலப் படங்கள் மிகப் பெரும் வெற்றியை அடைந்தன.) இதுக்கு நமக்கு பதில் தெரியும்பா.. மாதுரி பாட்டை வைத்து கேட்ட கேள்விக்கு எனக்கு இன்னும் பதில் தெரியலை சாமிகளா!

Wednesday, March 07, 2007

விடை சொல்லுங்கள் திரையிசை கேள்விக்கு

இந்த பாடல் உங்களுக்கு எந்த தமிழ் பாடலை நினைவு படுத்துகிறது? இதே இசை, மெட்டு ஒரு தமிழ் பாட்டின் வழியாக நமது காதிலே பாய்ந்திருக்கிறது.



பழைய தண்ணி கருத்திருச்சு என்னும் பாடல் ஏதோ ஒரு புதிய பாடலாக உருவெடுத்துள்ளது. இந்த பாடலுக்கு பா.விஜய் தான் வரிகளைத் தந்திருக்கிறார். உங்களால் அது எந்த பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

விடைகளை பின்னூட்டதிலே இடுங்கள்...

Sunday, February 25, 2007

தமிழ் பாடல்களை தேடும் புதிய கருவி

நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்..

எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது.

இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங்கள் படிக்கலாம்.

இந்த சுட்டிகள் KAPS எழுதும் சம்பார்மாபியா பக்கங்களிலிருந்து...

பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Sunday, February 04, 2007

வசீகர குரலோன் விஜய் ஜேசுதாஸ்

கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்களில் இருக்கும், அந்த குரலில் இருக்கும், வசியத்தில் மயங்கி போகாதவரும் உண்டோ இவ்வுலகத்தில்.. அதுவும் அவரும் இளையராஜாவும் சேர்ந்த பிறகு வெளிவந்த திரைப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். அழும் குழந்தைக்கு தாயின் நாக்கு சுழல வரும் தாலாட்டு மயக்கம் தந்து தூங்கச் செய்வதை போல, கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்கள் அழும் மனசுக்கு மயிலிறகு தடவல்கள். குவிக்கப்பட்ட சீட்டுக்கட்டில் பச்சைக்கிளி ஒன்றை மட்டுமே பொறுக்கிப் போடுவதை போல, அவர் பாடியதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டு நான் அதிர்ஷ்டம் சொல்லும் பச்சைக்கிளியாக விரும்பவில்லை. இரவு நேரத்தில் எத்தனையோ முறை நிலவும் நானும் தனித்துக் கிடந்த காலங்களில் செவிகளில் புகுந்து மனசைத் தொட்டு, மெய் முழுவதும் பரவி, எனக்குள் இன்னொரு உயிரையும் துணையாக தந்திருக்கிறது அவரின் குரல். அவர் பாட்டை கேட்டு காட்டுக்குயிலெல்லாம் சில காலம் மரமேறி பாடுவதில்லை என்று காட்டுக்குள் இருந்து சோகமாய் வந்த தென்றல் என் காதுக்குள் சொன்னதுண்டு.

இப்படி பாடல்களின் மூலம், தன் குரலின் மூலம் நம் மனசை தொட்ட கே.ஜே.ஜேசுதாஸ் இப்போதெல்லாம் பாடாமல் இருப்பது, காற்று சிலகாலம் விடுமுறை எடுத்துச் சென்றதை போல, ஒரு வெற்றிடம் ஏற்பட்டுப் போனது இசையுலகில். ஆனால் 'ராம்' தந்தது இவரின் இன்னொரு பிம்பம். இவரின் குரலின் இளைய பிள்ளை. அதுவும் அடுத்த தலைமுறை இசையில் முளைத்த புதுக் கூட்டணியுடன்.. ஆம்.. யுவனின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடிய ஒவ்வொரு பாடலும் குயிலுக்கு பிறந்தது குயிலே தான் என்று உலகுக்கு சொல்லியது. அதுவும் முதல் பாடலே நிழலினை நிஜமும் பிரிந்திடுமா என்று எல்லோர் காதுகளிலும் புகுந்து மனசை நிறைத்து, முதல் பாடலிலே கேட்ட அவர்களின் புருவத்தை ஆச்சரியத்தால் பாதி நெற்றிவரை உயர்த்தியது.

விழுந்து கிடந்த ஒரு வெற்றிடத்தை இவரின் வருகை நிறைத்து போனது. அதுவும் இவர் யுவன் கூட இணைந்த எல்லாப் பாடலும் மகுடி நாதமாய் நம் மனதை ஆடவிட்டது. தாவணி போட்ட தீபாவளி என்று இவர் பாடியதை கேட்டு அந்த தீபாவளியே, தாவணி போட்ட தீபாவளியே சொக்கிப் போனது. ஜேசுதாஸுக்கு ராஜா ஒரு மேடை போட்டு கொடுத்ததை போல, விஜய்க்கு யுவன் ஒரு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்.

தீபாவளி படத்தில், யுவனின் இசையில் இவர் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்ததாக பாடியது, காய்ந்து கிடந்த கல் மனசையும் பிளந்து ஒரு ஆற்றை உண்டாக்கி விட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சென்று யார் சொன்னது.. இதோ இப்போதெல்லாம் சக்கரம் போல, இந்த பாடலைத் தான் சுழல விடச் சொல்லி மனசு கேட்கிறது.

இப்படி ஒரு அருமையான, மயக்கும் பாடலை கேட்ட பின்பு, என் மாப்ள பரணி அந்த பாடல் வரிகளையே பதிவாய் போட்டிருந்தார். அதே மயக்கத்துடன் இப்போது நானும். தயவு செய்து யாராவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். விஜய் ஜேசுதாஸின் குரலின் போதை அங்கு கிடைக்கும் சரக்கை விட அதிகமாய் இருக்கிறது.

Sunday, January 07, 2007

மடை திறந்து பாயும் நதியலை நான் - ரவுசான புதுசு

சில சமயம் காலத்திற்கு ஏற்ப சில பழைய விஷயங்கள் மாற்றப்படும் போது, அதுவும் ரசிக்க வைக்கும் வகையில் பரிமாறப்படும் போது, நமக்கு ஏனோ அந்த புது விஷயங்கள் பிடித்துவிடுகின்றன.இது இட்லியை வைத்து கொண்டு சுடச்சுட இட்லி உப்புமாவாய் தருவதை போல சில சமயங்களில் இருக்கிறது. ரீமேக் பற்றி பல கருத்துகள் இருந்தாலும், சில சமயம் அந்த முரண்பாடான கருத்துக்களை முதுகுக்கு பின்னால் அனுப்பிவிட்டு, இதை எல்லாம் ரசிக்கவே மனம் விரும்புகிறது.

நிழல்கள் படத்தின் மடை திறந்து பாயும் நதியலை நான் பாட்டின் காட்சி



நிழல்கள் படத்தில் பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று வண்ணக் கனவுகளுடன் வாழும் சந்திரசேகருக்கு, ஒரு தயாரிப்பாளருக்கு மெட்டுக்கள் போட்டு காட்டும் வாய்ப்பு தரப்படுகிறது. அப்போது மடை திறந்த வெள்ளம் போல மனதில் பிரவாகமெடுத்து, வருகிறது மடை திறந்து பாயும் நதியலை நான் என்னும் பாடல். அப்போது புழக்கத்தில் இருந்த கருவிகளை வைத்தே அருமையாக தந்திருப்பார் இசைஞானி. உற்சாக பிரவாகம் எடுக்கும், துள்ளல் இசை பாடல். இப்போது கேட்டாலும் நமது இதயம் அந்த இசையினால் துள்ளுவதென்னவோ உண்மை. இளையராஜா அவர்களின் இசைக்கு இது போன்ற பாடல்கள் மிகப் பெரும் எடுத்துக்காட்டு. அதுவும் அந்த பாடலில் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்னும் வரிகளுக்கு இளையராஜாவே முகம் காட்டுவது இன்னும் சிறப்பாய் இருக்கும். இந்த பாடலை கேட்கும் போது, அந்த மடை திறந்த வெள்ளத்தில் நானும் அடித்து செல்வதை போல் உணர்வேன். மேல உள்ள அந்த படத்தின் பாடல் காட்சியை பார்க்கும் போது, நானே அந்த பாடலில் குதிப்பதாய், பறப்பதாய் கனவில் வாழ்கிறேன்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த பாடலை அமெரிக்காவில் வாழும் சில நண்பர்கள் (அவர்களை பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியது) மேற்கத்திய இசை வடிவத்தில் அருமையாக மாற்றி இருந்தனர். மிகவும் ரசிக்க வைத்த அந்த வீடியோ தான் கீழே உள்ளது. இங்கே இருக்கும் மக்கள் போல நடனம், செய்கைகள் கொண்டு அருமையாக எடுத்துள்ளனர். அவர்கள் இதற்காக எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது இதை பார்த்தலே புரியும்.

புது வடிவ பாட்டும் அதன் காட்சியும்




இது போன்ற இளங்கலைஞர்களுக்கு, இன்னும் சிறப்பாய் தனித்துவ இசைகள் தந்து, புது இசை வடிவங்களை தந்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மேல உள்ள பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது - இதை பற்றிய தகவல் தந்த பெத்தராயுடுவிற்கு நன்றி.

Thursday, December 28, 2006

உங்ககிட்ட இளையராஜாவோட அரிய பாட்டு ஏதும் இருக்கா?

இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லாப் படங்களிலிருந்தும் பாடல்களைத் திரட்டும் பணியினை என் நண்பர்களோடு நானும் செய்து வருகிறேன். இளையராஜா பற்றியும் அவரது இசை ஞானம் பற்றியும் அதிகம் சொல்லத் தேவை இல்லை.. அவரின் எத்தனையோ பாடல்கள் நம் உள்ளம் முழுவதும் கேட்காத பொழுதும் பரவி கிடக்கிறது. அதுவும் அவர் எண்பதுகளில் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் இன்று கேட்டாலும் கேட்கின்ற காதுகளில் ஈ மொய்க்கும் சுவை மிகுந்தது. அதுவும் இளையராஜா எஸ்பிபியோடி இணைந்து கொடுத்த மெலடி பாடல்கள் பல நமது தனிமைக்கு துணையாய் இருந்திருக்கிறது.

அவரின் பாடல்கள் சேகரிக்கும் பணியிலே இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாய் வெறும் சினிமா பதிவுகளை மட்டுமே பதித்திருக்கிறேன். பல்சுவை விரும்பிகள் பலர், மனதுக்குள் என்னடா இவன் இப்படி சினிம பதிவாய் போடுகிறானே என்று நினைத்து கூட இருப்பார்கள். இப்போது கிட்டதட்ட பாடல் சேகரிக்கும் பணி முடிவடையப் போகிறது. இந்த தொண்ணூறு சதவீத பாடல்களை தேடுவது பெரிய வேலையாய் இல்லை. ஆனால் மிச்சமுள்ள 550 பாடல்களை சேகரிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.. அதுவும் சத்யராஜின் அமைதிப் படை படத்தில் இரண்டு பாடல்கள் தவிர வேற எதையும் எந்த வளைதளத்திலும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.

அப்படிப்பட்ட சில பாடல்கள் உங்களிடம் இருந்தால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அட..நீங்க வேணும் என்றாலும் எங்க கிட்ட கேளுங்க.. இந்த புத்தாண்டிலிருந்து சினிமா பதிவுகள் மட்டுமல்லாது மற்ற பதிவுகளையும் பழைய வேகத்தோடு தருவேன் என்றும் நினைக்கிறேன்.

சில விட்டுப் போன பாடல்களும் படங்களும்

உன்னைத் தேடி வருவேன் மாலை முதல்
ஒரியா ஒரியா
ஒரு நாளில்
வழியா வந்த
ஏண்டியம்மா

உள்ளே வெளியே ஆரிராரோ பாடும் உள்ளம்
கண்டுபிடி
சொல்லி அடிக்கிறது
உட்டாலக்கடி உட்டாலக்கடி

அமைதி படை அட நானாச்சு
முத்துமணி
வெற்றி வருது


அம்மன் கோவில் திருவிழா தெய்வம்
தேசமுது
மதுரை
(இன்னும் பட்டியல் நீளும்)

Monday, December 25, 2006

கற்பூர நாயகியே கனகவல்லியும் யுவன் ஷங்கர் ராஜாவும்



என்னவாயிற்று யுவன் ஷங்கர் ராஜாவுக்கு. வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு பாடலை காப்பி அடிக்க வேண்டும் என்று வரைமுறை வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. தாஸ் படத்தில் இளையராஜாவின் நீங்கள் கேட்டவை படத்தின் அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி என்ற பாடலை, வா..வா..நீ வராங்காட்டி போ போ என்று மாற்றி போட்டவர், இரண்டு நாட்களுக்கு முன், வெளியான ஹரி இயக்கி, விஷால் நடிக்கும் தாமிரபரணி படத்தில் மற்றொரு தவறைச் செய்திருக்கிறார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ஒரு முறையாவது கேட்டிருப்பர் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய கற்பூர நாயகியே கனகவல்லி என்னும் பாடலை. அந்தப் பாடலை அப்படியே மேற்கத்திய இசை வாத்தியங்களுடன் கருப்பான கையாலே என்னை பிடிச்சான் என்று இசைத்திருக்கிறார். இதை கண்டுபிடிக்க யாருக்கும் எந்த இசைஞானமும் தேவை இருக்காது. எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லும், இயக்குநர் கேட்டதால் அப்படி இசைத்தேன் என்னும் அதே பல்லவியை தான் இவரும் சொல்லப்போகிறார.. என்ன காரணம் யுவன் சொன்னாலும் நல்ல இசைகளினால் மெல்ல உயரிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் இவருக்கு இது நிச்சயம் சறுக்கலே.

(ஆனால் இந்தப் பாட்டிற்கு முன், கற்பூர நாயகியே பாட்டை கேட்டுவிட்டு நாயகி இந்த டூயட்டை கனவு காண்பது போல் டைரக்டர் ஹரி படமாக்கி இருந்தால் நான் பொறுப்பல்ல)

Tuesday, December 19, 2006

இன்று முதல் ஆழ்வார் பாடல்கள்



ஆழ்வார் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ ராஜகாளியம்மன் பிலிம்ஸ் நிறுவனம், படம் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதால் தங்களின் கடன்களை அடைத்து நிலம், பொருள்களையும் மீட்டெடுத்து இருக்கின்றது





படங்கள் எல்லாம் தி ஹிந்து மற்றும் தினதந்தியில் வெளிவந்த படத்தின் விளம்பரங்கள்

Sunday, December 17, 2006

போக்கிரியின் பாடல்கள் - பாமரனின் விமர்சனம்

விஜய் படத்தின் பாடல்கள் என்றுமே நன்றாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே உண்டு. (புதிய கீதை போன்ற படங்களை தவிர்த்து பார்த்தால்) அந்த எண்ணத்தை பொய்யாக்கப் போவதில்லை என்று வந்திருக்கிறது மணிசர்மாவின் இசையில் போக்கிரி பாடல்கள்.. இந்த போக்கிரியின் ஆல்பம் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.. நிறைய பாடகர்கள் புதுசாய் தெரிகிறார்கள்.. இளமையாய் உற்சாகமாக இருக்கிறது அவர்களின் குரல்கள்..

வசந்த முல்லை போல வந்து ஆடிடும் வெண்புறா
பாடியவர்கள் : ராகுல் நம்பியார், வி. கிரிஷ்ணமூர்த்தி

ராகுல் நம்பியாரின் குரல் விஜய்க்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.. அவரின் உச்சரிப்பும், புது வித ஸ்டைலும் கேட்கும் ஒவ்வொருத்தரின் தலையையும் அசைய வைக்கும் வல்லமை கொண்டது.. அதுவும் பாடலின் ஒவ்வொரு வரிகளும் யதார்த்த, ருசிகரமாகவும் உள்ளது.. இந்த வருடத்தின் எல்லா சேனல்களிலும் இடைவிடாமல் இந்த பாட்டு ஓடும்.. மொத்தத்தில் பாடலின் வரியை போலவே பாட்டு நமது நெஞ்சங்களை வசந்தமை நெகிழவைக்கும்.. வளரும் எல்லா திறமையும் ராகுல் நம்பியாருக்கு (வேறு ஏதேனும் பாட்டு பாடி இருக்காரா) உண்டு.. அவருக்கு ஒரு ஷொட்டு.. இந்த ஆல்பத்தின் முதலிடம் இந்த பாட்டுக்குத் தான்

ஆடுங்கடா என்னை சுத்தி...
பாடியவர்: நவீன்

இது நிச்சயமாய் விஜயின் அறிமுக பாடல் என்பது பாட்டின் ஆரம்பத்திலேயே புரிந்து விடுகிறது.. தரை தப்பட்டை மேளம் முழங்க இந்த பாடலை நவீன் பாடியிருக்கிறார். பாட்டின் வரியே சொல்லிவிடுகிறது.. பாடப் போறேன் என்னை பத்தி.. கேளுங்கடா வாயைப் பொத்தின்னு..(பாட்டை கேக்குறதுக்கு இந்த தண்டனை வேறயா) அதனால அப்படித்தான் நானும் இந்தப் பாட்டை கேட்டேன்.. குத்து இசையோடு எப்பவும் விஜய் படங்களில் வரும் அறிமுகப் பாடல் என்பதால் ரொம்ப சொல்றதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல.. அடிக்கடி போக்கிரி பொங்கல்ன்னு கோரஸ் சத்தம் வருது.. அதனால இந்தப்படத்தின் ஏதாவது ஒரு போஸ்டரிலாவது இந்த வாசகம் வரும் என்பது இப்பவே நாம் சொல்லிவிடலாம்.. குழந்தை தொழிலாளர்கள், சேரியில்லா ஊரு, தீண்டாமை ஒழிப்புன்னு வழக்கம் போல ரஜினி மாதிரி ஓபனிங் பாட்டு தத்துவங்கள் உண்டு இதுலையும்...

மாம்பலமாம் மாம்பலம்
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், சுசித்ரா

இது கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரும் விஜய் படத்தின் அக்மார்க் குத்து பாட்டாய் இருக்குமென்று நினைக்கிறேன். அதனால சில பாடல் வரிகள் கூட அது போலவே இரட்டை அர்த்தங்கள் பொதிந்ததாய் இருக்கிறது.. குத்துப் பாடல் என்று சொல்லிவிட்டதால் அதைவிட பெரியதாக சொல்வதற்கு இந்த பாடலில் ஒன்றும் இல்லை..

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா

இது அழகான மெலடி கலந்த ஒரு டூயட் பாடல். இசையும் வார்தைகளும் சரிவிகதமாய் இருந்து பாட்டுக்கு இன்னும் வலுசேர்க்கிறது.. இந்த பாடலில் அரக்க பரக்க நடன காட்சிகள் இருக்க வாய்ப்பில்லை. மிகவும் நளினமான நடன அசைவுகள் தான் இருக்கும். அதுவும் இயக்குநர் பிரபுதேவா என்பதால் சில சுவாரஸ்யமான நடன காட்சிகளை காணலாம் என்று நினைக்கிறேன்.. நிச்சயம் ஒரு வெளிநட்டு இடத்தை பார்க்கும் வாய்ப்பை இந்த பாட்டு உங்களுக்கு தரும்.

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் (ரீமிக்ஸ்)
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா


இது போன பாட்டின் ரீமிக்ஸ் பாடல்..

என் செல்லப் பேரு ஆப்பிள்
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா

இந்த பாடல் கேட்கும் போது நிறைய பாடல்கள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தாலும் ஜே ஜே படத்தின் மே மாதம் பாட்டு சாயல் அதிகமாக இருக்கிறது.. அது மட்டுமல்ல, சுசித்ரா (அந்த பாட்டை பாடிய ரேடியோ மிர்ச்சி சுசித்ரா) தான் இதையும் பாடி இருப்பதால் அந்த எண்ணத்தில் இருந்து தப்பிக்க முடிவதில்லை.. இது இளமை துள்ளல் கொண்டு கொஞ்சம் மாடர்ன் காஸ்டியூம்கள் கொண்டு அசின் ஆடியிருப்பார்னு நினைக்கிறேன். மற்றபடி சொல்வதற்கு அதிகமாக இந்த பாட்டில் ஒன்றும் இல்லை..

டோலு டோலு தான் அடிக்கிறான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுசிதா

ஆல்பத்திலேயே ரேட்டிங்கில் மிகவும் கீழே இருக்கும் பாட்டு இது தான்.. ஒண்ணும் பெரிதாக எழுதுவதற்கு இதில் ஒன்றும். ரொம்பவும் மாடர்ன் இசை கலந்த இந்த பாட்டு எல்லோரையும் கேட்க வைக்குமா என்பது சந்தேகமே..

வசந்த முல்லை பாடலைத் தவிர இசை கணக்கில் வேற எதுவும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.. விஜய் ரசிகர்களின் மனதை கவர ஆடுங்கடா பாட்டு உதவும்.. விஜய் படத்தின் பாடல்களை கொண்டே அது படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சொல்லிவிடலாம். நிறையப் பாடல்கள் இருப்பதால் படத்தில் ஏதேனும் ஒரு பாடல் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன பாடல்களோடு போக்கிரி தீம் பாடலும் மணிசர்மாவின் குரலில் உண்டு, போனசாக.. ஆனால் பிரபுதேவா படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் பாடல்களில் விஷூவல் ட்ரீட் சில இருக்கலாம்..இருக்கும்..

(ஏற்கனவே சொல்லிக்கிட்ட மாதிரி...நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்..அத மனசுல வச்சுத்தான் இந்த விமர்சனம் எழுதி இருக்கேன்)