Saturday, September 30, 2006

சன் மியுசிக்ல அஜித் பாட்டு போடுறதில்ல..ஏன்?


ஒரு வாரமாக, யாராவது நேயர்கள் அஜித் பாட்டை கேட்டால் வேற பாட்டை கேக்க சொல்கிறார்கள், அதன் காம்பயர்கள்.. போன் செய்பவர்கள் திரும்ப ஏதும் கேள்வி கேட்டால் தொடர்பை துண்டித்து விடுகிறார்களாம்..ஏன்?

சன் மியுசிக்ல மட்டும் இந்த கொடுமையா.. வரலாறு படத்தின் டிரெய்லரையாவது போடுகிறார்களா..இல்லை அதுவும் கிடையாதா?

தமிழக முதல்வருக்கு திரையுலகமே பாராட்டு விழா நடத்தியதற்கு அஜித் போகவில்லை என்பதாலா? காரணம் எதுவாக இருந்தாலும், இது போன்ற காழ்புணர்ச்சிகளை மீடியாக்களில் ஏன் செய்கிறார்கள்.. புரியவில்லை..

இது உண்மையா என்று நன்கு அறிந்தவர்களோ இதை சன் மியுசிக்ல பாத்தவங்களோ சொல்லுங்களேன்

எனது ஊரைப் பற்றிய பதிவுகள்

11. என் கிராம ஊர்வலங்கள்
10. அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்பிய கதை..
9. திருவிழான்னு வந்தா..
8. வேட்டையாடி விளையாடி...
7. சைக்கிள் பயணங்கள்
6. கள்ளச்சாராய கதைகள் 2
5. கள்ளச்சாராய கதைகள் 1
4. தாலாட்டும் காற்றே வா..
3. ஓணான் வேட்டை
2. மைக்கும் சோடாவும்
1. கபடிக் கபடிக் கபடி...

Friday, September 29, 2006

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

அண்ணா, உங்க வாழ்க்கைல நடந்த பெஸ்ட் என்னன்னா..பாசமுடன் கேட்டாள் தங்கை தீக்க்ஷன்யா.. கேட்டதோட நிக்காம, இது தான் என்னோட பெஸ்ட், உங்களோடத இதே மாதிரி வரிசை படுத்தி சொல்லுங்க அப்படின்னா. தங்கை பாசம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழனுக்கே உரியது.. அப்படி தங்கை சொல்லை மீறாம வரிசைப்படுத்தியது தான் கீழே என்னோட பெஸ்ட் எல்லாம்..

1.The best thing to do - சும்மா மழைல நனைஞ்சு கும்மாளம் போடுறது..
2.The best gift - நல்ல நண்பர்கள்
3.The best thing I've ever heard - நானிருக்கேன் கவலைப்படாதே, நண்பர்கள் என்னிடம் சொன்னது
4.The best thing I've said - நானிருக்கேன் கவலைப்படாதே, நான் நண்பர்களிடம் சொன்னது
5.The best thing that happened to me - அமெரிக்காவுக்கு என் ஊரே சேர்ந்து வழியனுப்பியது
6.The best person I've met - சோமநாதன், என் முதல் கம்பெனியில் எனக்கு GL ஆக இருந்தவர்
7.The best friend - என் தந்தை
8.The best moment - முதன்முதலாய் நான் விமானத்தில் ஏறியதும், எப்படி இருக்குமோ என்று பயந்துகொண்டே அங்கிருந்த பணிபெண்ணை பார்த்து சிரித்ததும், (வழிஞ்சதுன்னு யாரும் கமெண்ட் போட வேண்டாம்) அந்த பெண்ணும் திரும்ப சிரிச்சது
9.The best book - கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகங்கள் எல்லாம்
10.The best blog - நான் படிக்கிற எல்லாம் (உண்மையிலே, சமாளிக்க இல்ல)
11.The best place - என் ஊர் அ.வெள்ளோடும், அந்த சில்லுன்னு காற்று தரும் சிறுமலையும்
12.The best food - கெட்டித் தயிர் விட்டு வச்ச சாதமும், நெய் விட்டு வறுத்த கருவாடும் (நினைச்சாலே நாக்குல எச்சில் ஊறுதே)
13.The best song - ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒவ்வொரு பூக்களுமே
14.The best hangout - வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர், மூன்றாம் தெருல, நாங்க தங்கியிருந்த வீட்டின் மாடிப் பகுதி தான் (புது வசந்தம் படத்துல முரளி மற்றும் எல்லோரும் தங்கி இருக்க மாடி மாதிரி)
15.The best eatout - சென்னைக்கு வந்த புதுசுல, MLA ஹாஸ்டல் பக்கத்துல சாப்பிட்ட கையேந்தி பவன்கள்..
16.The best hobby - அரட்டை அடிக்கிறது, அதுவும் சினிமா பத்தின அரட்டைனா வாய்கிழிய பேசுறது
17.The best TV show ever - விடாது கருப்பு
18.The best manager - நம்ம கடவுள் தான்
19.The best musician - இளையராஜா
20.The best gang - நண்டு சிண்டுகளாய் நாலஞ்சு வாண்டு சேர்ந்து வீட்லயோ வெளிலயோ லீவுல கொட்டம் அடிக்கிறது.. அந்த கேங் தான் பக்கா கேங்
21.The best drink - இளநீர்.. அதுவும் குடிச்சா அஞ்சு ஆறு தான்
22.The best quote - "நான் மாறும் போது தானும் மாறி நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்."
23.The best woman - என் தாய்
24.The best kid - சுஷ்மிதா (என் (சித்தி பெண்)தங்கை அருணாவின் பெண்)
25.The best poem - பாரதியின் எல்லாம், கண்ணதாசனின் தத்துவ பாடல்கள், வாலியின் சுலப வார்த்தை விளையாட்டுகள்
26.The best dancer - சின்ன குழந்தைகள் தள்ளாடி நடப்பது
27.The best movie - ஆட்டோகிராப்
28.The best actor - ஏதாவது திருட்டுத்தனம் பண்ணிட்டு அதை மறைக்க, வீட்ல தில்லாலங்குடி வேலை காமிக்கிற எல்லோரும்
29.The best vehicle - போன வருஷம் வாங்கிய SPLENDOR பிளஸ்
30.The best scene in a movie - தவமாய் தவமிருந்து படத்துல, தன் அப்பா அம்மாவை கூட்டிகிட்டு சேரன் போற சுற்றுலா காட்சி

எழுதி முடிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது, என்னோட பெஸ்ட் எல்லாம்.. அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றதால, நிறைய விஷயங்களில் அந்த தாக்கம் தெரிஞ்சது...

இதே விஷயத்தை நிறைய பேரை எழுத வைக்கலாம்னு பாத்தா பிரியாவும், தீக்க்ஷன்யாவும் நிறைய பேரை இந்த வளையத்துக்குள் இழுத்துவிட்டாங்க.. அதனால..அதனால.. பிரியா, தீக்க்ஷன்யா, அம்பி, பரணி, ஷ்யாம், சசி, நம்ம தலைவி கீதா, வேதா, பொற்கொடி, தி ரா சா சார், இந்திய தேவதை (IndianAngel), எல்லோரும் நீங்க கண்டதிலயே மிகக் கொடுமையான கனவை எழுதுங்க, நான் கண்ட கனவுன்னு..

எல்லாத்தையும் ஒண்ணா கோத்துட்டு விட்டேன்.. கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கலாம்..

Thursday, September 28, 2006

என் கிராம ஊர்வலங்கள்

எனக்கு பழைய பாடல்கள்னா ரொம்ப பிடிக்கும். எனக்கு அந்த பாடல்களை கேட்கிற வழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் எங்கள் ஊர்ல மைக் செட் போடும் அன்பர்கள் தான். என் ஊர்ல எதுன்னாலும் மொதல செய்றது நாலு சவுண்டு குழாய்களும், ரெண்டு ஸ்பீக்கர் வைக்கிறதும் தான். வாழைமரம் கட்டுறது எல்லாம் அடுத்த விஷயம் தான்.

இந்த மாதிரி மைக் செட் போடுறவங்க ஒரு நாலஞ்சு குரூப் இருந்தாலும், அவங்க போடுற முறை எப்போதுமே ஒண்ணு தான். முதல்ல சாமி பாட்டு போட்டா, ஏதோ அந்த வீட்ல நல்ல விசயம்னு தெரியும். சாமி பாட்டும் கிறித்தவர் வீட்ல அவங்க பாடல்களும் (பெரும்பாலும் 'கேளுங்கள் தரப்படும்' பாடல் தான்), இந்துக்கள் வீட்ல விநாயகர் பாட்டும் தான். இதே மாதிரி பொண்ணை அழைச்சுகிட்டு வீட்டுக்கு வர்றப்போ, 'மணமகளே மருமகளே வா வா..நீ வலது காலை எடுத்துவைத்து வா வா'ன்னு "சாரதா" படத்துல இருந்து ஒரு பாட்டு. இதே அந்த வீட்ல யாராவது அண்ணன் இருந்தா 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே..சில புத்தி மதிகள் சொல்லுறேன்'னு..ஒரு பாட்டுன்னு டைமிங்கா போடுவாங்க.

பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சுட்டு போறதுன்னா என்னன்னா..இப்போ இந்துக்கள்னா விநாயகர் கோவிலிலும், கிறித்தவர்னா சர்சிலும் வைத்து தாலி கட்டுவாங்க. அங்க இருந்து மாப்பிள்ளை வீடு வரை ஊர்வலம் இருக்கும். அந்த ஊர்வலத்துல பொண்ணு மாப்பிள்ளை நடந்தும் வரலாம்.. காரிலும் வரலாம்.. கொஞ்ச நாள் முன்னாடி யானைல கூட வந்தாங்க..அது அவங்க அவங்க வசதியை பொறுத்தது.அப்படி ஊர்வலத்துல போறப்போ அந்த மணமக்கள் முன்னாடி டிரம் செட்டுகாரவங்க மேள தாளம் உண்டு. அவங்க சில சமயம் ஆடிகிட்டும் போவாங்க.. காசு இருந்து ஏதாவது கலர் பாட்டில் (உள்ளூர் குளிர்பானங்கள்) வாங்கிக் கொடுத்தா, அதை மேளம் அடிச்சுகிட்டே, வாயால கவ்வி, பாட்டிலை திறந்து குடிப்பாங்க..

இதுமட்டும் இல்ல.. பொண்ணு மாப்பிள்ளைக்கு தெரிஞ்சவங்களோ நண்பர்களோ அவங்களுக்கு குளிர்பானமும் வாங்கி கொடுப்பாங்க.. சில பேர் மேள தாளம் காரவங்க கிட்ட ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்த சொல்லுவாங்க.. அவங்களும் அந்த பணத்தை வாங்கிட்டு இதனால "ஊருக்கு சொல்றது என்னனா, அஞ்சா நெஞ்சன், கொடை வள்ளல், இந்த வெள்ளொட்டுக்கே ராசா, பொண்ணு மாப்பிள்ளையோட மாமா பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துராருப்பா".. டண்டணக்க டணக்கு அப்படின்னு ஒரு ஹைபீட் மேளத்தோட சொல்வாங்க..இந்த ஊர்வலத்தை ஊர் மக்கள் எல்லோரும் பார்ப்பாங்க..

மொத எடுத்தவுடனே 'வீடு வரை உறவு'ன்னு "பாதகாணிக்கை" படத்துல வர்ற சோக பாட்டு வந்தா, யாரோ ஒருத்தவங்க வீட்ல இறந்துட்டாங்கன்னு நினைச்சுக்க வேண்டியது தான். அந்த பாடல் முடிந்தவுடன், சாமி பாட்டு.. அதுக்கு பிறகு யாரு, எந்த வீட்டுல இருக்கிறவரு, யாரோட அப்பா, பிள்ளை ன்னு எல்லா விவரமும் சொல்லிடுவாங்க. அதுக்கு பிறகு பழைய படங்களில் இருந்து ஒரே சோக பாடல்கள் தான். இப்படி மைக் செட் போடுறதுல கூட ஒரு நேர்த்தியை, ஒழுங்கை கடைபிடிப்பாங்க.

அப்படி இறந்தவங்களை வீட்ல இருந்து தூக்குறப்போ, கரெக்டா மறுபடியும் 'வீடு வரை உறவு' பாட்டை போட்டுருவாங்க.. அதுவரைக்கும் அழாதவங்க கூட அப்போ நிச்சயமா கண்ணீர் விடுவாங்க..

பாடல்கள் எந்த அளவுக்கு மக்களோட இரண்டற கலந்திருக்கு அப்படின்னு நான் கண்ணார பல தடவை நான் பாத்துருக்கேன்.. உணர்ந்தும் இருக்கேன்.

Wednesday, September 27, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 9

சிட்டுக்குருவி தெளிவா இருக்கு இப்போ.. தோள்பட்டை எல்லாம் சரியாகி கும்மாளமா இருக்கு. அடிபட்ட றெக்கையை சைட்ல காமிச்சு நம்மள பாத்து கிண்டலா ஒரு லுக் வேற.. எல்லாம் நம்ம நேரம்னு நினைச்சுகிட்டேன்..அப்புறம் சிட்டுக்குருவி எப்படி இருக்கன்னு கேட்டேன்.. நல்லாத்தான் இருக்கேன்.. ஏன்யா உனக்காகத் தானே காடு மேடு எல்லாம் அலைஞ்சு தெரிஞ்சு நியுஸ் கொண்டுவந்தேன். அதுல தானே அடியும் பட்டேன்.. என்னடா ஆனான்னு ஒரு பாசம் உண்டா.. என்னை பாக்க ஒரு நாள் கூட வரல நீ னு ஒரே கோபம்.. ஏ குருவி.. உன் பெரியப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி.. அது தான் வரலைன்னு அதுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதா ஆயிடுச்சு..

நீ என்னை என்ன வேணும்னாலும் சமாதானம் பண்ணலாம்..ஆனா முருகதாஸை சமாதானம் பண்ண முடியாது.. உன் மேல பயங்கர கோபத்துல இருக்காரு.. அவர் மேல எப்படி நீ அபாண்டமா பழி சுமத்தலாம.. கமல் எடுத்த எந்த படமும் அவர் சொந்த சரக்கு இல்லியாம்.. எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட தாக்கமாம்..முருகதாஸுக்கு பதிலா சிட்டுக்குருவி என்னை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சது.. சரி சிட்டுக்குருவி.. இதை இப்படியே விட்டுவிடுவோம்.. கமல் ரசிகர்களும் என்னை திட்ட வேண்டாம்.. மத்த சினிமா விஷயங்களை சொல்லு நீ.. என்று நான் சொன்னவுடன் பக்கத்தில் கப்பில் கூலா இருந்த ஆப்பிள் ஜூஸை மடமடன்னு குடித்து விட்டு, சிட்டுக்குருவி சொல்ல ஆரம்பித்தது..



கூடல் நகர்னு ஒரு படத்துல பரத் நடிக்கிறார்ல, அதுல அவருக்கு ரெண்டு வேடமாம். பாவனா, சந்தியான்னு ரெண்டு கதாநாயகிகள் வேற. படத்தோட கதை அந்த படத்தோட புதுமுக இயக்குனரோட சொந்தக் கதையாம்.. நிஜத்துல தோத்த காதலை படத்துல சேர்த்து வைக்கிறாராம்..

சென்னையில் துவங்கப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய BIG 92.7 FM விளம்பரதிற்காக நடிகை அசின் ஒரு வருஷதுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப் பட்டு இருக்காங்க. தென்னிந்திய நடிகைகளிலே விளம்பரதுக்குன்னு இவ்வளவு தொகை வாங்குவது அசின் தானாம். அப்படி இருந்து நேற்று நடந்த அதன் துவக்க விழாவுக்கு அம்மணி போகலியாம்..

இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் சில காட்சிகளுக்காக திருமதி சூர்யா..அதாங்க..ஜோதிகா, மொழி மற்றும் சிலந்தி படத்துக்காக சில நாள்களை ஒதுக்கி உள்ளார். தேனிலவு முடிந்து வந்தவுடன் சில நாட்கள் இந்த படங்களின் ஷூட்டிங்கில் நடிப்பார்.

2006 தனக்கு சரியா இல்லாததால விஜய் தனது போக்கிரி படத்தை ரொம்ப பொறுமையா எடுக்கிறாராம்.. ஒரிஜினல் படத்தோட பிரதியை போட்டுப்பாத்து எப்படி வித்தியாசம எடுக்கலாம்னு ரொம்ப மெனக்கெட்டு எடுகிறாராம்.. ரொம்ப உஷாராயிட்டார் போல.. இல்ல பயமான்னும் தெரியல..

இன்னிக்கு இவ்வளவு தான்.. போயிட்டு வர்றேன்.. இன்னிக்கு தான் நான் என் சந்தியா கிட்ட காதலை சொன்ன நாள்.. அதனால அவள கூப்பிட்டுகிட்டு ஊர் சுத்தப் போறேன்.. உன்கூட வெட்டியா பேசி என்ன ஆகபோகுதுன்னு சிட்டுக்குருவி சர்ருன்னு பறந்துடுச்சு.. சே.. போற நேரத்துல நம்மள வேற அசிங்கபடுத்திட்டு போகுதே.. இந்நேரம் நமக்குன்னு ஒரு சிந்தியாவோ விந்தியவோ இருந்தா இப்படி அசிங்கப்படதேவையில்லியே.. இரு குருவி..அடுத்த தடவை வர்றப்போ உன் றெக்கையை பஞ்சர் பண்ணிவிடுறேன்..

Tuesday, September 26, 2006

இன்னைக்கு BBCல சொல்லாம விட்ட செய்தி..

என்னமோ ஏதோன்னு நியுஸ் படிக்கவந்தவங்களுக்கு ரொம்பச் சாரி..

அமெரிக்கா வந்து கொஞ்சம் உடம்பு போட்டதால வேற வழியே இல்லாம, நான் நேற்றிலிருந்து ஜிம்முக்கு போறேன்.. இது தாங்க அந்த நியுஸ்..

நம்ம நாட்டு மக்கள் மாதிரி இல்லாம, எல்லொரும் ஜிம்முக்கு போறாங்க.. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம,"உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" படிக்காமலேயே திருமூலர் சொன்னதை கடைப்பிடிக்கிறாங்க.. எத்தனை கருவிகள் உடற்பயிற்சி செய்ய.. விதவிதமான கருவிகள்.. ஒவ்வொன்றுக்கும் பக்கத்தில், அதை எப்படி பயன்படுத்துறது, செய்தால் என்ன என்ன பலன்கள்னு ஒரு சின்ன செய்முறை விளக்கம் வேற..

எல்லாத்தையும் பயன்படுத்தினாக் கூட "ஒரு நாள் போதுமா" ன்னு திருவிளையாடல் பாட்டுத் தான் பாட வேண்டி இருக்கு.. DUBLIN COMMUNITY RECREATION CENTRE-னு பேர் உள்ள இந்த இடத்துல நீச்சல் குளம், கூடை பந்து உள்ளரங்கு மைதானம், ஜிம்னாசியம்..எல்லாம் எல்லாம் இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்யும் போது போரடிக்காம இருக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் டிவி.. சின்ன சின்ன விளையாட்டுக்கள்.. உடல் பேணுதல் பற்றிய புத்தகங்கள்..னு நிறைய விஷயங்கள் இருக்கு..

நேத்து தான் போனேன்.. பணத்தை கட்டினவுடன் போட்டோ எடுத்து அடையாள அட்டை வந்தது.. நான் டைடல் பார்க்கில் இருந்தப்போ, அட எவன்டா மாசம் அறுநூறு ரூபாய் குடுகிறதுன்னு அந்தப் பக்கம் தலை வைத்துகூட பாக்கல.. அங்க எப்படி இருக்கும்னு தெரில..

சரி விடுங்க.. உடற்பயிற்சி செய்ய வேண்டிய போலீஸ்காரவங்களே அதை பண்றதில்லைன்னு முணுமுணுக்காதீங்க.. நம்ம உடம்பை நாம தாங்க பாத்துக்கணும்.. இல்லைனா, மருத்துவமனைக்கு பக்கத்துல வயசான காலத்துல குடியேறுங்க.. அடிக்கடி ஆட்டோவுக்கு கொடுக்குற காசாவது மிச்சப்படும்.. (இவ்வளவு நாளா ஜிம் போகாம ஒரு நாள் போனதுக்கே இப்படி ஒரு அட்வைஸா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. எல்லாம் உங்க நல்லதுக்கு தான்..ஹி..ஹி..ஹி)

Monday, September 25, 2006

தமிழ் கஜினியும் பிரெஞ்ச் அமெலியும் ஆங்கில மெமென்டோவும்

2005-ல் சக்கை போடு போட்ட படங்களில் கஜினியும் ஒன்று. ரமணாவில் தேர்ந்த இயக்குனர் என்று பெயர் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதற்கு பின்பு இயக்கும் படம் என்பதால், நான் நிறைய எதிர்பார்த்தேன் கஜினியில். என் எல்லாவிதமான எதிர்பார்ப்பையும் அவர் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், படத்தை அவர் கொண்டு சென்ற விதம் மிக அருமை. அதுவும் தன் தலையில், அந்த பயமுறுத்தும் இரும்பு உலக்கையினால் நாலு அடி வாங்கிய பின்பு, அசின் சூர்யாவை பார்க்கும் அந்த ஒற்றை பார்வை மட்டுமே ஆயிரம் வசனங்கள் பேசும். இப்படி படத்தை புகழ்ந்து நிறைய சொல்லலாம். அதன் பிறகு அந்த படம் ஒரு ஆங்கில பட மெமென்டோவின் (MEMENTO) தழுவல் என்று கேள்விப் பட்டபின், முருகதாஸ் மீது இருந்த மரியாதை கொஞ்சம் தொலைந்து போனதென்னவோ உண்மை. சமீபத்தில் நான் பார்த்த ஒரு படக் காட்சி சுத்தமாக அவர் மரியாதையையும் திறமை மீது இருந்த நம்பிக்கையையும் மிகவும் குறைத்து விட்டது.

நமது நாட்டில் இருந்து லகான் படம் ஆஸ்காருக்கு சென்ற போது, இந்த படத்துக்கு ஆஸ்கார் கிடைக்காமல் தட்டி பறித்து சென்றது பிரஞ்ச் மொழியின் அமெலி (AMELIE).இந்த படம், துறுதுறுப்பான, மற்றவர்க்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு பெண்ணை பற்றிய படம். ஒரளவுக்கு கஜினியின் கல்பனா பாத்திரத்திற்கு ஒத்துப் போகக்கூடியது. அதில் அமெலி பிளாட்பாரத்தில் வழியிழந்த ஒரு விழியிழந்த முதியவருக்கு, ஒரு இடத்திலிருந்து அவ்ர் செல்லும் இடம் வரை அழைத்து சென்று விட்டு வருவார். போகும் வழியில் அமெலி பார்ப்பதை எல்லாம் அந்த விழியிழந்த முதியவருக்கு விவரித்து வருவார்.. புது ஆடை அணிந்த ஒரு பெண்ணை பற்றி, கடையில் தொங்கவிடப்பட்ட சில பொருட்கள் பற்றி, ஒரு குதிரை சிலையை பற்றி என எல்லாவற்றையும் உயிரோட்டமாக விவரிப்பார். எப்படி என்றால் கஜினியில் இதே மாதிரி ஒருவருக்கு கல்பனா கதாபாத்திரம் என்ன செய்யுமோ அதே மாதிரி..அடப்பாவிகளா... படம் தான் இன்னொரு மெமென்டோவின் ஈயடிச்சான் காப்பி என்றால் அதில் வரும் சம்பவம் இன்னொரு படத்திலிருந்தா.. அப்படி என்றால், கஜினியில் இருக்கும் காட்சிகள் இன்னும் எத்தனை படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்டது.. முருகதாஸ், நீங்கள் ஒரு இயக்குனரா இல்லை மற்ற மொழிப் படத்திலிருந்து தமிழுக்கு காட்சிகளை இறக்குமதி செய்பவரா...

சரி..ஏதோ..கஜினியில் காப்பி அடித்தது சின்ன தப்பு என்று பார்த்தால், இப்போது சிரஞ்சீவியை வைத்து எடுத்த தெலுங்கு ஸ்டாலினும் ஒரு ஆங்கில மொழித் தழுவலாமே..
(அந்த படத்தின் பெயர் பே இட் ஃபார்வர்ட்-PAY IT FORWARD).. உங்களுக்கே இது நியாயமா.. தங்களது அடுத்த படமாவது சொந்த சரக்கா இல்லை அதுவும் வேறேதும் படத்தின் தழுவலா.. ஒரு வேளை கதை டிஸ்கஷன் என்ற பெயரில் நீங்கள் உங்கள் உதவியாளர்களுடன் சேர்ந்து எல்லா மொழி படங்கள் தான் பார்கின்றீர்களா..

தங்களது தீனாவும், ரமணாவும் சொந்த சரக்கா என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை.. ஆனால் சொந்த சரக்காய் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..

உங்கள் படம் வேன்டுமென்றால் நிறைய காசுகளை அள்ளி இருக்கலாம்.. தயாரிப்பாளருக்கு நல்லதொரு மகசூலை தந்திருக்கலாம்..அனால் அது எதற்கும் நீங்கள் உரியவரா.. அருகதை ஆனவர் தானா.. அடுத்த படத்தில் பதில் சொல்லுங்களேன் முடிந்தால்..

நீங்கள் மெல்லமாய் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது, முருகதாஸ்.. உனக்கும் எனக்கும் படத்தை அப்படியே காப்பியடித்தாரே அந்த படத்தின் இயக்குனர், ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா, அவரை நீ என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்கிறீர்கள்.. நான்(ங்கள்) உங்களிடம் நிறைய எதிர்ப்பார்த்ததால் தான் இப்படி குமுறுகிறேன்.. அது தவறா..

தவறு என்பது உங்கள் பதில் என்றால், நீங்கள் வசனம் எழுதிய ரமணா படத்தில் சொல்வது போல உங்களுக்கு மன்னிப்பே கிடையாது..

நாட்டியப் பேரொளி பத்மினி உயிர் நீத்தார்

நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சடைப்பின் காரணமாய், உயிர் நீத்தார்.

இவர் எம்ஜியார், சிவாஜி, ராஜ்கபூர் போன்ற பெரிய கலைஞர்களுடன் நடித்தவர். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி செர்த்தி இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர்கள்.

நேற்று முதல்வர் கருனாநிதி திரைஉலகத்தினரால் நடத்தப்பட்ட விழாக்கு அமெரிக்காவில் இருந்து வந்தவர், இன்று மறைந்தது திரை உலக்கதை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கலை உலகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. பத்மினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Friday, September 22, 2006

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

நான் மதுரையில் பிஎஸ்சி இரண்டாம் வருடம் படிச்சுகிட்டு இருந்த நேரம். எனது சீனியருக்கு வழியனுப்பு விழாவை நடத்தினோம். அப்போ போட்ட ரெண்டு ஸ்கிட்ல போட்ட ஆட்டம் தான் கீழே இருக்க புகைப்படங்கள்.



காலேஜ்ல 'மானாமதுர மாமரக் கிளையிலே'ன்னு ஆடி பாடி திரியற ஒருவன், திடீர்ன்னு ஒரு அழகான பெண்ணைப் பாத்து 'விழியில் விழி மோதி', இதயக் கதவு திறந்து 'என்னைத் தாலாட்ட வருவாளோ'னு சுத்தி திரிஞ்சு, படிப்பை கோட்டை விடப்போற நேரத்துல பீனிக்ஸ் பறவையாய் மாறி 'வெற்றி நிச்சயம்'னு பாடுற கதை..அந்த ஸ்கிட்ல எடுத்தது தான் முதல் போட்டோ.. பச்சை கலர் டி-ஷர்ட்டுல அண்ணாந்து அந்த பொண்ணை பாத்துகிட்டு இருக்கிறது சாட்சாத் நானே தான். பெண் உடையில் இருக்கிறது என் உயிர் நண்பன் மணிகண்டன்.இந்த மாதிரி ஸ்கிட் பெரும்பாலும் எல்லா காலேஜ்லயும் நடந்திருக்கும். ரொம்ப ரகளையான ஸ்கிட் அது.ரொம்ப அனுபவிச்சு பண்ணினது..இத்தனைக்கும் ரிகர்சல்னு ஒண்ணும் பண்ணல.. எப்பவும் இருக்கிற மாதிரி சும்மா போய் நடிச்சுட்டு வந்துட்டோம்..நடிச்சுட்டு வந்த பிறகு என் கூட படிக்கிற பெண் நண்பர்கள் 'அடப்பாவி.. சும்மா பெண் வேசத்துல இருந்தவனையே இப்படி பாக்குறயே. நல்ல வேளை நாங்க நடிக்கல' னு ஒரே கிண்டல் வேற..



எங்களோட புரபசர் எல்லாம் கூட எதிர்ல பாத்துகிட்டு இருந்தாங்க.. அதனால, ஒரு கருத்து கந்தசாமி ஸ்கிட் ஒண்ணு போட்டோம்.. ஜாதி வெறியொடு அடிச்சுகிட்டு இருக்க மக்கள் ஒண்ணா எல்லொரும் ஒற்றுமையா இருக்குற மாதிரி... அந்த ஸ்கிட்ல 'ஒருவன் ஒருவன் முதலாளி'ன்னு படுறப்போ எடுத்தது தான் இந்த போட்டோ.. போட்டோ பாத்தப் பின்னாடி தான் எவ்வளவு உணர்ச்கி வசப் பட்டு இருக்கேன்னு தெரிஞ்சது..

ஏற்கனவே பல நாடகங்களில் நடிச்சிருந்தாலும், வேற எதுக்கும் என்கிட்ட மெல்லின (சாஃப்ட்?) புகைப்படங்கள் இல்லை.. இவைகள் தான் என் வலை போட்டோ பெட்டகத்தில் இருந்தவை. எப்போ பாத்தாலும் ஒரு ஐந்து நிமிஷம் இவைகளை தொடர்ந்து பாத்துகிட்டு இருப்பேன். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

Thursday, September 21, 2006

அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்பிய கதை..

என்ன தான் எங்க ஊர் சாராய வியாபாரத்துல, ஒரு காலத்துல, கொடிகட்டி பறந்திருந்தாலும், கிராமத்திற்கே உரிய பாசமும், பழக்க வழக்கமும் மாறாம இருக்கும். நான் அமெரிக்கா கிளம்ப போறேன்னு தெரிஞ்சவுடன, என் பெற்றோர்களிடமும், ஊரில் இருக்கும் என் நண்பர்களிடமும் போனில் சொன்னேன்.. அடுத்த நாள் எங்க ஊர் பஸ்ல போய் இறங்கினேன். (ஆட்டோகிராப் படத்துல சேரன், படத்தோட தொடக்கத்துல எங்க ஊர் பஸ்ல தான் வந்து இறங்குவார்).

பஸ் நிக்கிற இடத்துல இருந்து எங்க வீட்டுக்கு ஒரு முந்நூறு மீட்டர் தூரம் இருக்கும். நான் பஸ்ஸை விட்டு இறங்கினேன்.காய்கறி மார்கெட்டுக்கு போறதுக்கு, பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்த என் தூரத்து மாமா என்னை பாத்துட்டு 'என்ன கார்த்தி.. அமெரிக்கா போறியாம்ல.. பாத்து பத்திரமா போயிட்டுவாப்பா..' சந்தோசத்தோட சொன்னார்.

ஒரு ரெண்டு எட்டு எடுத்து வச்சிருக்க மாட்டேன்.. என் அப்பாவோட நண்பர் ஒருத்தர் வந்து குசலம் விசாரிச்சார். 'என்னைக்கு கிளம்புற கார்த்தி.. துணி மணி எல்லாம் வாங்கியாச்சா.. அங்க உள் டிரஸ் எல்லாம் ரொம்ப வெலையாம்.. நாலஞ்சு சேத்து வாங்கிகோப்பா..' அவருக்கு தெரிஞ்ச விசயத்தை சொன்னார்..

அடியேய் மாப்புள்ள.. இது டீக்கடையில் உக்கார்ந்து நியுஸ்பேப்பர் படுச்சுகிட்டு இருந்த ஒரு மாமா.. என்ன பிளைட்டுல பறக்க போற போல.. எவ்வளவு நாளாகும் திரும்பி வர.. பேசம எம் பொண்ணு ஒண்ணை கட்டிகிட்டு கூட்டிட்டு போயிட வேண்டியது தான.. சிரித்துகொண்டே வந்து பாத்துகொள்ளலாம் மாமா ன்னு அப்படியே கிளம்பினேன்..

நான் சின்ன வயசா இருக்கிறப்போ இருந்து எங்களோட கடைக்கு வந்து வெத்தல பாக்கு வாங்குற ஒரு பாட்டி டீக்கடைக்கு டீ வாங்க வந்திருந்தது..யாரு கார்த்தியா.. நேத்தைக்கு கடைக்கு போயிருந்தப்போ உங்கம்மா சொன்னுச்சு.. பாத்து இருய்யா.. கண்டவன் கூட எல்லாம் சேராத.. சரி பாட்டின்னு கிளம்பினேன்

என்னோட வீட்டுக்கு பக்கத்துல இட்லி, பணியாரம் சுட்டுவிக்கிற தூரத்து பாட்டி ஒருத்தவங்க.. ராசா..இந்தாயா..பணியாரம் எடுத்துக்கோ.. இதுக்கப்புறம் நீ எப்போ சாப்பிடப் போறியோ..அந்த பாட்டி பாசத்தோட பணியாரம் சுட்டு போட்டிருந்த சட்டியை தூக்கி கொடுத்தது...அப்போ..அந்த பாட்டியை பாக்கணும்.. அப்படியொரு சந்தோசம்..

ஏண்டா பேராண்டி.. அங்க எல்லாம் நல்லா மழை பெய்யுமா.. இது என் அப்பாவோட சித்தப்பா.. மனுஷன் நல்ல உழைப்பாளி.. வயலுல இறங்கி வேலையை ஆரம்பிச்சார்னா மூணு ஆள் வேலையை இவர் ஒருவரே செய்வார்..
தாத்தா பனிப்புயலே இருக்கும்னு நான் சொன்னவுடனே நம்ம சொந்தக்கரவிங்க எவனும் அங்கனகுள்ள இருக்காய்ங்களா.. ன்னு அடுத்த கேள்வி.. யாரும் இல்ல தாத்தா..நான் பதில் சொல்ல..சரி சரி இல்லைங்கிறதால சொந்தம் உண்டக்கிடாதடன்னு அவருக்கே உரிய நக்கலோட சொன்னார்..

அப்படி இப்படின்னு நான் வீட்டுக்கு போய் சேரவே அரைமணி நேரம் ஆயிடுச்சு.. அந்த ரெண்டு நாளும் என் தங்கை கல்யாணத்துக்கு வந்த பாதி கூட்டம் என் வீட்டுக்கு என்னை பாக்கவும் வழியனுப்பவும் வந்திடுச்சு.. போஸ்டர் ஒட்டாத குறை தான்.. அவங்க ஒவ்வொருத்தர் மொகத்துல இருக்கிற சந்தோசம், அவங்க வெள்ளந்தியான பேச்சு..இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு..

அன்னிக்கு சாயந்திரம் எங்க ஊர் சந்தியாகப்பர் திருவிழா.. எல்லோரும் சரியான மப்புல இருந்தாங்க.. எங்கியோ போயிட்டு வந்துகிட்டு இருந்த என்னை என் தூரத்து மாமா புடுச்சுகிட்டார்.. மாப்புள்ள..நீ அமெரிக்கா போற..எனக்குத் தெரியும்.. எப்படி தெரியும்னு கேக்குறியா.. அது தான் உன் மாமன்..என் மப்பிள்ளைக்கு மறுபடியும் முத்தம் கொடுக்க நான் இருப்பேனோ மாட்டேனோன்னு என் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தார்.. இந்த பக்காம் இன்னொரு மாமா.. 'மருமவனே..நீ போயிட்டு வர்றப்போ இந்த மாமனுக்கு ஏதாவது கட்டாயம் வாங்கிட்டுத் தான் வரணும்' னு கையைப் பிடிச்சுகிட்டு முத்தமா கொடுக்கிறார்..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. ஒரு வழியா அவங்களை சமாளிச்சுட்டு வந்தேன்..

பக்கத்து வீட்ல யார் இருக்கா.. என்ன பண்றாங்க ன்னு கூட தெரியாம இருக்கிற பட்டிணத்து வாழ்க்கைல எனக்கு எங்க ஊர் பாசமும் உபசரிப்பும் இன்னும் ஆச்சரியமா இருக்கும்.. அந்த மண்ணுக்கும் அந்த பாசத்துக்கும் நான் என்னிக்கும் தலை வணங்குறேன்..கடமை பட்டும் இருக்கேன்..

Wednesday, September 20, 2006

ஆசை ஆசையாய் வச்ச மீசை

நான் பதினோராம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்த நேரம்..மெல்ல அரும்பு மீசை கொஞ்சம் அடர்த்தி ஆக மாறிகிட்டு இருந்த நேரம். எப்போ கண்ணாடி முன்னாடி நின்னாலும், அந்த மீசையை தொட்டுப்பார்ப்பதும், அதன் நுனியை திருகி பாரதி மீசை மாதிரி முயற்சி செய்வதும் தான் வேலையா இருக்கும்.

என் பள்ளி சார்பா மதுரை ஆல் இந்திய ரேடியோவுல போட்ட நாற்றங்கால் என்னும் நாடகத்துல நான் ஒரு டாக்டர் வேஷம் போட்டேன். அதுல வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் எல்லாம் நல்ல இருந்ததால, பள்ளி ஆண்டு விழா நாடகத்துலயும் என் பெயர் இருந்தது. அது வாஞ்சிநாதன் பற்றிய நாடகம். அதுல ஆங்கில துரை கூட வேலை பாக்குற ஒரு போலீஸ் வேடம் எனக்கு..

ஆண்டு விழவுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது.. நாடக ரிகர்சல் ஆரம்பம் ஆச்சு.. என்ன பண்ணினால், எப்படி செய்தால் நாடகம் பாக்குற எல்லோரையும் கவரலாம் என்பதே, அதற்கு பிறகு என்னோட ஒரே நினைப்பாய் இருந்தது. ஒரு நாள் எங்க ஊர் டூரிங் டாக்கீஸ்ல விஜயகாந்த் நடிச்ச மாநகர காவல் படம் போட்டு இருந்தாங்க.. அதை பாத்தவுடனே, ஏன் நாம குரல் எல்லாம் மாத்தி விஜயகாந்த் மாதிரி நடிக்க கூடாதுன்னு ஒரு எண்ணம்.. அந்த நேரத்துல, ஏன் இப்பக்கூட போலீஸ் வேஷம்னாலே அது விஜயகாந்த் தான் ஞாபகம் வரும் இல்லியா.. அன்னிக்கே விஜயகாந்த் போலீஸ் வேஷதுல நடிச்ச எல்லா படங்களையும் ஒரு வாரத்துல பாத்துடுறதுன்னு முடிவு பண்ணினேன்..

எல்லா படத்தையும் ஒண்ணு விடாமல் பார்த்தேன்.. நடை, உடை, பாவனை எல்லம் அப்படியே மாத்துனேன். வீட்ல பயங்கரமா ரிகர்சல் பார்த்தேன்.. ஆனா பள்ளில ரிகர்சல் பாத்தப்போ இது எதையுமே நான் காட்டிக்கல.. எப்பவும் போல என் குரலிலயே பேசினேன்.. ஆண்டு விழாவுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த ரிகர்சல் என் தமிழ் வாத்தியார் கிட்ட, நான் விஜயகாந்த் மாதிரி பிராக்டிஸ் பண்ணின விசயத்தை சொன்னேன்.. ரொம்ப நல்ல மனுசன்.. வகுப்புலயே நான்னா அவருக்கு உயிர்.. அவர் உடனே நடிச்சு காட்டச் சொன்னார்.. நான் நடிச்சு காட்டினத பாத்து அசந்துட்டார்.. நாடகத்துக்கு, இன்னும் ரெண்டு நாளு தான் இருக்குன்னாலும், சில திருத்தங்கள் செய்தார் வசனத்துல..அதுவும் விஜயகாந்த் மாதிரி பேசணும்கிறதால கொஞ்சம் வசனம் வேற கூடியது அந்த போலீஸ் வேசத்துக்கு.. அப்போ என் நண்பர்களுக்கு கூட இது தெரியாது..

ஆண்டு விழாவுக்கு முன்னாடி நாள்.. என் தமிழாசிரியர் கூப்பிட்டு என்னை விஜயகாந்த் மாதிரி இனிமே நடிக்கலாம் சொன்ன பிறகு, செய்யப் போற ரிகர்சல்.. பசங்க எல்லாம் சுத்தி இருந்தாங்க.. ரிகர்சல் ஆரம்பித்தது.. என்னோட முத சீன் முடிஞ்ச உடனே எல்லோரும் என்கிட்ட வந்து கலக்கிட்டடா ன்னு சொன்னாங்க (அப்பாடா.. அவங்களால் கண்டுபிடிக்க முடிஞ்சதே எனக்கு இன்னிக்கும் நினைச்சாலும் பெரிய சந்தோசம்) எப்படிடா இவ்ளோ நல்லா பிராக்டிஸ் பண்ணினேன்னு ஆள் மாத்தி ஆள் மாத்தி ஒரே கேள்விகள்.. எனக்கு அந்த நிமிஷம் ரொம்ப பெருமையா இருந்தது..

ஆண்டு விழா அன்னிக்கு, நான் மேடை ஏறி நடிச்சுட்டு வந்த பிறகு, ஒரு டீச்சர் என்னை கூப்பிட்டு, விஜயகாந்த் மாதிரியே நடிச்சு பேசி கலக்கிட்டியேப்பா ன்னு சொன்னது இன்னமும் மனசுல அப்படியே இருக்கு.

இதை எல்லாத்தையும் விட, ஆசை ஆசையாய் வளர்த்த(?) மீசையை அன்னிக்கு எடுக்க வச்சுட்டாங்க..கொஞ்சம் பெரிய மீசையாய் வைக்கணும்னு ஒரு காரணம் வேற சொன்னாங்க.. அன்னிக்கு மீசை எடுத்தப்போ இருந்த வெட்கம், ஒரு தவிப்பு வேற என்னிக்கும் இருந்ததில்ல..

Tuesday, September 19, 2006

சிட்டுக்குருவிக்கு ஆபரேஷன்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 8


சிட்டுக்குருவிக்கு உடம்பு சரி இல்ல.. றெக்கையில் ஏதோ சின்ன ஆபரேசனாம்.. பறந்து வர முடியாத நிலைமை. றெக்கைல புத்தூர் கட்டு போட்டு இருக்காங்க.. நான் போய் பாக்கலாம்னு நினைச்சா, அதை அவங்க அப்பா, பக்கத்து காட்டுல இருக்கிற அவங்க பெரியப்பா வீட்டுக்கு ஒய்வு எடுக்க அனுப்பிச்சிட்டார்..அவங்க பெரியப்பா குருவிகள் மிலிட்டரில இருந்தவராம். யாராவது மனுஷங்க குருவிகளை பிடிக்க வந்த அவங்க கிட்ட இருந்து குருவிகள் இனத்தை காத்தவராம்.. அதனால் அவருக்கு மனஷங்கள்னாவே புடிக்காதாம்.. சரி..எதுக்கு வம்புன்னு நான் இருந்துட்டேன்.. ஆனா பொறுபுள்ள நம்ம சிட்டுக்குருவியோ, சினி பிட்ஸை இமெயிலில் அனுப்பிசுட்டது. எல்லோரும் சிட்ட்க்குருவிக்கு சீக்கிரம் நல்ல ஆகனும்னு வேண்டிகிட்டே எல்லா நியுசையும் படிச்சு ரசிங்க..

அஜித் நடித்த காட்பாதர் படத்தை அரசோட வரிவிலக்கு காரணமா பேர் மாத்தி இருக்காங்க வரலாறுன்னு. படம் தீபாவளிக்கு ரிலீஸ்.. இந்த வருஷம் தல தீபாவளி தான்..

ஜோதிகா, இனி நடிக்க மாட்டேன்னு சொன்ன பிறகு, அவர் நடித்த சிலந்தி மற்றும் மொழி தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏன்னா, கல்யணமான ஹிரோயினை எல்லாம் பாக்க முடியாதுன்னு 75% மக்கள் சொல்லியிருக்காங்க..

இதுவரை பாட்டு மட்டுமே எழுதி வந்த பஞ்ச் டயலாக் பேரரசு, முதன் முறையா தர்மபுரி படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கார்.. திருப்பதில நடிச்சதயே பாக்க முடியல.. இப்போ பாட்டா.. என்ன கொடுமை இது சரவணா...

பிப்ரவரி 14 படத்துல அறிமுகமான நடிகை ரேணுகாமேனன், அமெரிக்கவுல வேலை பாக்குர கம்பியூட்டர் இஞ்சினியரை விரைவில் திருமணம் செய்கிறார்.. கேரளாவில் அவரது வீட்டில் போன வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.. (சத்தியமா நான் இல்லீங்கோ)

Monday, September 18, 2006

திருவிழான்னு வந்தா..

எங்க ஊர்ல அடிக்கடி திருவிழா நடக்கும்.. சித்திரையில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவும் ஆடியில் சந்தியாகப்பர் திருவிழாவும் நடக்கும்.. இது தவிர அப்பப்போ ஏழு எட்டு குட்டி திருவிழாக்களும் உண்டு..

என் ஊர்ல கிறித்தவர்கள் 65% சதவீதமும், இந்துக்கள் 35% உள்ளனர். ஆடியில் நடக்குற சந்தியாகப்பர் திருவிழா தான் பெரிய திருவிழ.. கிட்டதட்ட ஒரு பதிமூன்று சப்பரங்கள் (தேர்) உலா வரும்.. எல்லாமே சிரீயல் செட்டிங்ஸ் போட்டது.. இரவுல அந்த இடமே ஜெகஜோதியா இருக்கும்.. நான் இங்கே கிளம்பி வருவதற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை தான் இந்த திருவிழா நடந்தது..

ஊருக்கு மேக்கால தான் சர்ச் இருக்கு.. அதுக்கு முன்னாடி இருக்க பெரிய இடத்துல தான் அந்த சப்பரங்களை நிறுத்திருப்பாங்க.. அப்படி எல்லா சப்பரங்களை ஒரே இடத்துல பாக்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வருவாங்க.. நானும் என் நண்பர்களும் அந்த சர்ச் வாசலிலேயே நின்னுக்குவோம்.. அப்பத்தான், உள்ள போறவங்களையும் பாக்க முடியும் வெளியே வர்றவங்களையும் பாக்க முடியும்.. எல்லாத்தையும் கவர் பண்ணமுடியும்.. எங்க ஊரை சேர்ந்தவங்க ரொம்ப பேர் சிறுமலையிலும் அதன் அடிவாரத்துல இருக்க தோட்டங்களிலும் இருப்பதால், இந்த மாதிரி தேர் திருவிழான்னா தான் சில பேரை பாக்கவே முடியும்..

கலர்கலராய் அழகழகான பலூன்கள், பொம்மை கார்கள், குட்டி ஏரோபிளேன்னு விளையாட்டு சாமான்கள் ஒரு புறம், சின்ன சைஸ் ராட்டினங்கள் ஒரு புறம், பிதாமகன்ல சூர்யா குலுக்குற டப்பா சூதாட்டம் ஒரு புறம்னு அங்க இருக்கிற ஒவ்வொருவர் முகத்துலயும் சந்தோசம் இருக்கும்.. ஒரு பக்கம் சாக்கரின் பவுடருல கலந்த ஜூஸ் விப்பாங்க.. வளையல் கடை.. தோடு, டிசைன் டிசைன ரப்பர் பேண்டு கடை, நடிகர் நடிகைகள் போஸ்டர் கடைன்னு ஏகப்பட்ட கடைகள் போட்டு வியாபாரம் வெகு ஜோரா நடக்கும்..அன்னிக்கு ஒரு நாள் விடிய விடிய எங்க கடையும் இருக்கும்.. ஒதுங்க முடியாத கூட்டமும் இருக்கும்.. பான்பராக்கும், பீடி சிகரட்டும் அன்னிக்கு விக்கிற மாதிரி என்னிக்கும் விக்காது..

ஒரு எட்டுமணி ஆகுற நேரத்துல, ஒரு கூட்டம் வரும் பாருங்க அது தான் ஹைலைட்டே.. வெள்ளைகலர் பேண்ட், சட்டை, சிவப்பு கலர் தொப்பி, ஒரு கூலிங்கிளாஸ், கல்ல வெள்ளைகலர்ல ஷூ.. கழுத்துல ஒரு மப்ளர்..மொகத்துல ஒரு ஒண்ணரை இஞ்ச்சுக்கு பவுடர்..இந்த கெட்டப்புல ஒரு எழு எட்டு பேர் வருவாங்க.. பாக்கவே சிரிப்பா இருக்கும்.. (இவங்களை பாக்கவே சிரிப்பா இருந்தாலும், இவங்க தோட்டத்துலயே வாழ்க்கையை போக்குறதால..இந்த மாதிரி திருவிழாவுக்கு தான் புது டிரஸ் எடுப்பாங்க.. அப்படி எடுக்கிறப்போ சினிமாவுல என்னன்ன ஹீரோ போட்டு வர்றானோ அதெல்லாம் ஒரே நேரத்துல இவங்க வாங்கிடுவாங்க.. மத்த நேரமெல்லம் இவங்களுக்கு ஒரு டவுசர் தான் டிரஸே)

நாமளும் எப்பவாவது ஊருக்கு போரதால நெரைய பேருக்கு எனக்கு அடையாளம் தெரியாது.. ஆனா அப்பா கடை வச்சு இருக்கிறதால் முக்காவாசி பேருக்கு நம்மளைத் தெரியும்..

தேவதைகள்..தாவணி அணிந்த பட்டாம்பூச்சிகள், புது உடைல, சில் சில்லுன்னு கொலுசு சத்தம் கேக்க கூட்டமா அவங்க சிரிச்சு பேசிகிட்டு போறதை பாக்கவே இந்த ஜென்மம் எடுத்த மாதிரி இருக்கும்..சும்மா வாசம் வீசுற பூக்களை தலைல அவங்க வச்சுட்டு போற அழகே அழகு தான்.. அவங்க தலைல சொருகிட்டு போறது அந்த பூக்களையா இல்லை எங்களோட மனசையுமான்னு அந்த ரெண்டுங்கெட்டான் வயசுல தெரியாது.. ஏதாவது ஒரு பொண்ணு நல்லா இருந்தாலே போதும்.. அந்த பொண்ணு போற வழிலல எல்லாம் போய் நிப்போம், அந்த பொண்ணு எங்களை பாக்குற மாதிரி.. அதுகளும் என்னடா இவிங்க நம்ம பின்னாடியே சுத்துராங்கன்னு நினச்சுட்டு மனசுல சிரிஅச்சு, எங்களை பாத்து லைட்ட உதட்ல சிரிக்கும்.. அது கண்ணு ரெண்டும் படபடன்னு அடிக்கும்.. இது போதாது எங்களுக்கு.. இப்ப யாரை பாத்து அந்த பொண்ணு சிரிச்சதுன்னு ஒரு பெரிய சண்டையே வரும்.. இந்த பக்கம் எல்லோரும் அடிச்சுகிட்டு இருக்க, ஒருத்தன் மட்டும் நைசா கூட்டதை விட்டு நழுவி, அந்த பொண்ணுக்கு பக்கத்துல போய்டுவான்.. பெரும்பாலும் இந்தமாதிரி கம்பியை நீட்டிட்டு போறது நானாத் தான் இருக்கும்..

ஒரு தடவை அப்படி போய் நின்னேன்.. உடனே அவங்க அம்மா திரும்பி பாத்தது.. அந்த பொண்ணும் பாத்தது.. அதுக்கு பிறகு அந்தம்மா பேசின வார்த்தைகளை கேட்டு நான் மயங்கி விழாத குறை தான்

நீ கடைக்கார முத்துராசு மவன் தானே.. எப்படிப்பா இருக்க.. ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன்..

(ஒரே ஊர் என்பதால, கிறித்தவர்களாய் இருந்தாலும், பொண்ணு எடுக்கிறது, கொடுக்கிறது எல்லாம் நடக்கும்.. அப்படி எப்படியோ அந்த பொண்ணுக்கு நான் அண்ணன் ஆகிட்டேன்.. அதுக்கு பிறகு, கூட்டத்துல இருந்து நான் தனியா நழுவுறதே இல்லை)

Sunday, September 17, 2006

ஒரு நடிகன் மாதிரி...

எனது நியுயார்க் நகர சுற்றுலா புகைபடங்களை காண, இங்கே உங்கள் எலியை வைத்து தட்டுங்கள்..

இந்த சனிக்கிழமை நான் ஒஹாயோ மாநிலத்தில், கனடா எல்லையை ஒட்டி, எரே (Erie) ஏரியின் நடுவில் கூட்டமாய் இருக்கின்ற புட்-இன்-பே (Put-In-Bay) எனும் தீவுக்கு சென்றேன். விரைவில் அதன் புகைப்படங்கள்.. கீழே சில சாம்பிள்ஸ்...

ஒரு நடிகன் மாதிரி போட்டோ எடுதுக்கணும்கிற ஆசை நிறைய பேரின் மனசுல இருக்கும்.. அப்படி நினைத்து நான் எடுத்துக்கொண்ட சில போட்டோக்கள்..

















எனது ஊட்டி சுற்றுலா போட்டோ சாம்பிள்ஸ் இங்கே

Friday, September 15, 2006

ஈயடிச்சான் காப்பி..

சில்லுன்னு ஒரு காதல் படத்துக்கு கொடுத்த விளம்பரம் அளவுக்கு படம் நல்லா இல்ல.. படத்துக்கு விமரிசனம் எழுதுறேன் பேர்வழின்னு மழைதுளி சுபா கிழிச்சு காயப் போட்டிருக்கார்.

சமீபத்துல ஒரு போட்டோவை வலைல பாத்தேன்.. இதை ஏற்கனவே எங்கயோ பாத்திருக்கோமேன்னு ஒரே குடச்சல் மண்டைகுள்ள.. தலையே வெடிக்கிற அளவுக்கு ஒரே யோசனை... ரெண்டு நாள் கழிச்சு சில்லுன்னு ஒரு காதல் பட போட்டோக்களை பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ என் கேள்விக்கு விடை கிடச்சது..




ஈயடிச்சான் காப்பி.. கேள்விபட்டு இருக்கேன்,, ஆனா இந்த அளவுக்கு அப்படியே காப்பி அடிக்க முடியுமன்ன்னு தெரில.. சில்லுன்னு ஒரு காதல் படத்துக்காக எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே வந்த ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட காப்பி.. குமுதம் இதழில் சொல்ற மாதிரி இந்த இரண்டு படத்துக்கிடையே ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது போல..

அ..ஆ..நான் ஒரு வித்தியாசம் கண்டுபிடிசுட்டேன்னு சொல்லி.. அந்த போட்டோ கறுப்பு வெள்ளை..இது கலருன்னு.. சொல்லி என் வயத்தெரிச்சலை கிளப்பாதீங்க..

சும்மா கண்டுபிடிச்சு பாக்கலாமேன்னு பாத்ததுல, சில வித்தியாசங்கள்..

1. சூர்யா இடது கையை வாயில் வைத்திருக்கிறார்
2. ஜோ லிப்ஸ்டிக்கை கீழுதட்டில் உபயோகப்படுத்துகிறார்
3. ஜோ தனது கால்களை ஒரு பக்கமாய் வைத்திருக்கிறார்
4. சூர்யா இடது பக்கம் தலையை சாய்த்திருக்கிறார்
5. ஜோ தலையை லேசா மேல தூக்கி வைத்திருக்கிறார்

இவ்ளோ தான், என்னால முடிஞ்சது.. உங்களுக்கு ஏதும் புதுச தெரியுதா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்

Thursday, September 14, 2006

வேட்டையாடி விளையாடி...

ஒவ்வொரு வருசமும் எப்படா கால்பரீச்சை, அரைப்பரீச்சை, முழு பரீச்சை லீவு வரும்னு தவமா தவங்கிடப்பேன்.. அந்த மாதிரி லீவு நாள்ல சிறுமலை அடிவாரத்துல இருக்கிற என் அண்ணன் தோட்டதுல போய் ஆட்டம் போட. எங்க அண்ணன் தோட்டம் கிட்டதட்ட சென்னை சேப்பாக்கம் கிரிகெட்டு கிரவுண்டை விட கிட்ட தட்ட பத்து மடங்கு பெருசு..பெரும்பாலும் பாதி தோட்டத்துக்கு திராட்சை தான் போடுவாங்க.. கொஞ்சம் செவ்வந்தி பூவும், வாழையும் கூட போடுவாங்க..

அந்த சுகமான காத்து வேற எங்கேயும் கிடைக்காது.. எல்லாமே தோட்டதுக்குள்ளயே இருக்கும்.. பசிச்சா வாழத் தோட்டத்துல புகுந்து ஒரு சீப்பு பழத்தை காலி பண்ண வேண்டியது தான். தண்ணி தாகமாய் இருந்த என் அண்ணன் தோட்டதுக்குள்ள இருக்கிறவரை தண்ணி குடிச்சதில்லை.. நாலஞ்சு இளநீர் தான்.. தோட்டதுக்கு தண்ணி பாய்ச்சுறதுக்கு ஒரு பெரிய தொட்டி ஒண்ணு கட்டி இருப்பாங்க. கிட்டதட்ட 12 இஞ்ச் அகலமும் 10 இஞ்ச் நீளமும் இருக்கும்.. குளிக்கணும்னு போயிட்டா கிட்டதட்ட ஒரு மூணு மணிநேரம் உள்ளார இறங்கினா வெளியில் வர்றதே கிடையாது. எங்க பாட்டி கூட, எரும மாடு மாதிரி தண்ணிகுள்ளாறயே பொழுதுக்கும் கிடைகிறாய்ங்க பாரு..ன்னு அந்த பக்கம் கிராஸ் பண்றப்பவெல்லாம் திட்டும். அது தூரத்துல வர்றதை பாத்தாலே நாங்க தண்ணிகுள்ள போய் மறஞ்சுக்குவோம்.. பாட்டியோ விவகாரமானது. உள்ள மறஞ்சிருக்கோம்னு தெரிஞ்சாலே போதும். ஒரு குச்சியை எடுத்துகிட்டு அடிக்கும்..

அப்படி குளிச்ச பின்னாடி, திராச்சை தோட்டதுக்கு காவலுக்கு போய்டுவோம். திராச்சை தோட்டதுக்கு நடுவுல பரண் ஒண்ணு இருக்கும். அதுல ஆரம்பிச்சு திராச்சை தோட்டதோட எல்லா பக்கமும் கம்பி போகும். கம்பிக்கு இடைல, ஒரு தகர டப்பா கட்டி அதுக்குள்ள கொஞ்சம் கல்லை போட்டு தொங்கவிட்டு இருப்போம். காக்கா மாதிரி எதும் பறவைகள் திராச்சையை கொத்த வந்தா உடனே அந்த பக்கம் போகும் கம்பியை பிடிச்சு ஆட்டுவோம். உடனே பயங்கரமா சத்தம் வரும். எல்லாப் பறவையும் ஓடிடும். இது தான் நம்மளோட டூட்டி அங்கே. வள்ளிக் கதிரை காவல் இருக்கிற மாதிரி நாங்க திராச்சையை காவல் இருப்போம்.

ஆனா அப்போ மதியான சாப்பாடு வருமே அது தன் ஹைலைட்டு.. ஒரு மண்சட்டியில எருமை தயிர் விட்ட கெட்டி தயிர் சாதம்.. சும்மா கொழ கொழன்னு.. இன்னொரு சின்ன பாத்திரத்துல கும்முன்னு வாசனை வர்ற, நல்ல காரம் போட்ட நெய்க் கருவாடு.. சும்மா ஒரு கட்டு கட்டுவேன்.. அதுவும் மூணு மணி நேரம் குளிச்சதுக்கே கொலைப் பசி இருக்கும். இந்த காம்பினேசனுல, சாப்பிட்ட, சரியான டேஸ்டா இருக்கும். இன்னிக்கு வரைக்கும் அந்த காம்பினேசனை அடிசுக்க வேற எதுவுமே இல்லை.. இதை எழுதறப்ப கூட, மனசு அதுக்காக ஏங்குது.. சே.. என்ன ஒரு ரம்மியமான வாழ்க்கை அது..

என் நண்பர்கள் யாராவது வந்தாலே நான் அவங்களை அண்ணன் தோட்டதுக்கு கூட்டிட்டு போய்டுவேன். அப்படித்தான் என் கல்லூரி நண்பர்கள் கிரிஷ்ணகுமாரும், பார்த்தாவும் வந்து இருந்தாங்க.. நாங்க என் அண்ணன் கூட வேட்டைக்கு கிளம்பினோம். மதியான நேரம். ஒரு பறவையை கூட காணோம். என் அண்ணன் என்கிட்ட துப்பாக்கியை கொடுத்துட்டு ஏதாவது அடிச்சுட்டு வாங்கடான்னுட்டு போய்ட்டாரு. கொஞ்ச நேரத்துக்கு பிறகு, ஒரு மரத்துல நல்ல உயரத்துல ஒரு பறவை வந்து உட்காந்துச்சு. எங்கலுக்கு ஒரே மகிழ்ச்சி.. வேட்டைதுப்பாக்கில சாதாரணது மாதிரி ஒரு குண்டு கிடையது.. சின்ன சின்னதா நிறைய போடுவோம். அதனால குத்துமதிப்பா குறி பாத்து சுட்டா போதும்.. குறி பாத்து சுட்டோம்.. அதிசயம்.. அந்த பறவையும் அடிபட்டு கீழ விழுந்துடுச்சு.. ஐயோ.. எங்க எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம்.. ஒரே சத்தம் தான்.. சந்தோசத்துல மேல கீழன்னு குதிச்சோம்.வேகமா ஒடிப் போய் அந்த பறவையை தூக்கிகிட்டு என் அண்ணன் கிட்ட ஓடினோம். அவருகிட்ட காட்டினோம்.. அவர் கேட்ட கேள்வில எங்க முகத்துல ஈயாடல..என்ன கேட்டருனா..என்னடா இது ஆந்தையை சுட்டு கொண்டு வந்துறிகீங்க.. அதுக்கு பகல்ல கண்ணு தெரியாததாலா.. இதை கேட்டவுடன், சந்தோசமெல்லாம் போய், ஆட்டமெல்லாம் நின்று, டமால் டமால்னு எங்க இதயம் உள்ளுகுள்ள வெடிச்ச சத்தம் கேட்டது..

Tuesday, September 12, 2006

சைக்கிள் பயணங்கள்

அமெரிக்கா வந்த உங்களுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுதோ இல்லியோ கார் ஓட்டத்தெரிஞ்சிருக்கணும்..கட்டாயச் சட்டம் ஏதும் இல்லிங்க.. ஆனா தெரியலைன்னா ரொம்பக் கஷ்டம்.. நானும் இனிமேல் தான் கார் ஓட்டக் கத்துக்கணும்.. ஒரு கடைக்கு போறதுக்காக நீங்க தினமும் பாதயாத்திரை போக முடியுமா என்ன..

கார் ஓட்டக் கத்துக்கணும்ன உடனே எனக்கு நான் சின்ன வயசுல சைக்கிள் ஓட்டக் கத்துகிட்டது தான் ஞாபகத்துக்கு வருது.. கத்துகிறதுக்குன்னே ஒரு சின்ன சைஸ் சைக்கிள் ஒன்னு, சைக்கிள் கடையில நிக்கும்.. அந்த சைக்கிளுக்கு சனி ஞாயிறு ஆனா ஒரே கிராக்கி.. நான் கத்துகிட்ட சமயத்துல ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் வாடகை. பெரும்பாலும் ஊருக்கு வெளிய இருக்கிற மண் ரோடோ.. தார் ரோடோ தான் பழகுற இடம்.. பழகுறதுனா சும்மா இல்ல.. நல்லா ஓட்டத் தெரிஞ்ச, நமக்கு ஒத்து வர்ற ஒரு பையனை பிடிக்கணும்.. அவனுக்கு ஏதாவது மிட்டாயோ, குச்சிக் கிழங்கோ வாங்கித் தரணும்.. சில நாள், எங்க ஊர் கொட்டாயில நல்ல படம் வந்தா கூட்டிக்கூட போகணும்.. சில சமயம், அந்த பசங்க தம் அடிப்பாங்கன்னா அது கூட வாங்கித் தரணும். ஆனா, எனக்கு அந்த பிரச்சினை இல்ல.. எதுனாலும் என் கடையிலயே எடுத்துட்டு வந்துருவேன்.. பெரும்பாலும், எனக்கு என் மாமா பையன் தான் கூட வருவான்..

இப்போ எது பழகுறதும் பெருசு இல்ல.. அந்த சின்ன வயசுல எல்லாமே பெரிய விசயம்.. ஆன ஒரு தடவை கத்துகிட்டோம்..அப்புறம் எப்பவுமே அது மறக்காது.. சைக்கிள பேலன்ஸ் பண்றதே, ஒரு பெரிய வித்தை.. (ஒலட்டாம ஒட்டுறதுன்னு சொல்வாங்க.. இது வட்டார வார்த்தைன்னு நினைக்கிறேன்)ஹான்ட்பாரை தெக்கே திருப்பினா அது வடக்கால ஓடும்.. கிழக்க திருப்பினா மேக்கால ஓடும்.. சில சமயம், சொல்லித் தர வந்தவன் கடுப்பாகி, கீழ தள்ளி விட்டு போய்டுவான்.. போடா நீயும் நீ சைக்கிள் பழகுற விதமும், அப்படின்னு

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்க ஊர்ல சந்தை நடக்கும்.. மளிகை சாமான், பாத்திரம் பண்டம், மண்பானை, கோழி, ஆடுன்னு ஏகப்பட்ட ஐட்டங்கள் விப்பாங்க.. எங்க ஊர்ல கிறித்துவர்கள் அதிகம்னால, அவங்க சர்சுக்கு ஞாயிறு வருவதனால, அன்னிக்கு நல்ல கூட்டம் இருக்கும்.. ஊருக்கு வெளில சைக்கிள் நல்லா கத்துகிட்டா, அடுத்து ஊருக்குள்ள சுத்துறது(கத்துகிறது) தான் அடுத்த படிப்பு.. அப்படிஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள்ள நான் சைக்கிள் ஓட்டி கத்துக்கிட்டு இருந்தேன்.. நல்லாத்தான் ஓட்டிகிட்டு இருந்தேன்.. மண்பானையெல்லாம் வித்துகிட்டு இருந்த இடத்துக்கு பக்கத்துல வந்தப்போ, என்ன ஆச்சோ தெரில.. நேரா அப்படியே பானைகளுக்குள்ள சைக்கிள விட்டுட்டேன்.. சடசடன்னு ஒரு மூணு நாலு பானை உடஞ்சிருச்சு.. பானைக்கார அம்மாவோ என்ன என்னவோ சொல்லி திட்டுது.. நான் காதை பொத்தாத குறை தான்..அப்புறம் உடஞ்ச பானையை விட அதிக வெல கையில கொடுத்து அந்தம்மாவை சமாதானப் படுத்தினேன்.

அதுக்கப்புறம், நாலு பேரை ஏத்திக்கிட்டு பத்து பதினஞ்சு கிலோமீட்டர்னு காடு கழனின்னு ஊர் சுத்தி இருந்தாலும், பானை மேல மொத மொதலா ஏத்தின அந்த நாளை மறக்கவே முடியாது

Monday, September 11, 2006

மச்சான் பேரு அம்பி

எனக்கு அசின் காதலியானதால, அசினுக்கு அம்பி சகோதரன் ஆனதால, அம்பி எனக்கு மச்சான்.. அம்பிக்கு அவங்க அக்கா அசின் மாதிரியே என் மேல ரொம்ப பாசம்.. பின்ன.. நான் எப்போ மச்சான்னு கூப்பிட்டாலும், இல்ல இல்ல.. நீங்க என் குடும்பத்துல ஒரு ஆள் அப்படின்னு உடன்பிறப்பே, தம்பியே அப்படின்னு கூப்பிடுறார்.. நீங்களே சொல்லுங்க அவர் அப்படி கூப்பிட்டாலும், நான் அப்படி கூப்பிட முடியுமா..


நான் இங்கே வந்துட்டதால, பாருங்க சூர்யா-ஜோதிகா கல்யாணத்துக்கு கூட என்றம்மணி தனியாத்தான் போனாங்க.. சூர்யா கூட கேட்டாராம்.. எங்க கார்த்தின்னு.. அப்படி சூர்யா கேட்டவுடனே கண்ணெல்லாம் கலங்கிடுச்சாம்.. போன் பண்ணி ஒரே அழுகை.. மனசுக்கு கஷ்டமாயிடுச்சு...

(சும்மா சும்மா எல்லா பதிவுலயும் வந்து உடன்பிறப்பு, தம்பின்னு அம்பி பின்னூட்டம் மூலமா புலம்புறத பாத்தா எனக்கே ரொம்ப கஷ்ட்டமாயிடுச்சு.. அது தான் ஒரு தனி பதிவு எழுதுனா என் மனசும் அமைதியாகும்... அம்பிக்கும் ஆறுதல் சொன்ன மாதிரி இருக்கும்ல. அது தான் இந்த பதிவு)


சூர்யா ஜோதிகா கல்யாணதிற்காக வந்த தல அஜித்-ஷாலினி ஜோடியை பாத்தா இப்போதான் கல்யணம் ஆன மாதிரி இளமையா இருக்காங்க.. தல பாத்து.. கண்ணு பட போகுது..


ரெண்டு ஜோடியையும் பாருங்க.. ச்சும்மா.. கண்ணுல ஒத்திக்கலாம் போங்க
சூர்யா ஜோதிகா இருவரும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்..

Saturday, September 09, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 7

நல்ல தூக்கத்தில் இருந்தேன்.. ஜன்னல் டொக் டொக்ன்னு தட்டுற சத்தம் கேட்டது.. சலிப்புடன் எழுந்து பாத்த நம்ம சிட்டுக்குருவி, முறைத்து பார்த்தவாறு நின்று இருந்தது. ஜன்னலை திறந்து அதை உள்ளே அழைத்தேன்.. எவ்வளவு அரும்பாடுபட்டு உனக்கு சினிமா செய்தி கொண்டுவந்தா நீ எப்படி தூங்குறியே ஒரே கத்தல்.. அது கோபத்தைக் குறைக்க கொஞ்சம் குறைக்க, தர்ப்பூசணி போட்டேன்.. இப்போ குளிர்ச்சி அடைஞ்சு, சினிமா நியுசா கொட்ட ஆரம்பிச்சது..

தொண்டையை கணைத்துகொண்டே.. நம்ம ஜேஜே பூஜா அவங்க கடவாப்பல்லு துறுத்துகிட்டே இருந்ததால அதை ஆபரேஷன் மூலமா எடுத்துட்டாங்க..ன்னு ஒரு அதிர்ச்சியான செய்தியோட ஆரம்பிச்சது.. பூஜா சிரிச்சாலே ஒரு அழகு தான் இல்லியானு நம்மளப் பாத்து சிட்டுக்குருவி நக்கல வேற பண்ணுது..

தமிழ் கத்துக்கொடுக்க நீ போறியான்னு குருவி கேட்டது.. யாருக்குன்னு கேட்டேன்.. வேற யாருக்கு.. இப்போதைக்கு தமிழ் ரசிகர்களோட கனவு 'கன்னி'வெடி நமீதாவுக்கு தான்.. அப்படின்னது.. நானும் ஹி..ஹின்னு தலையாட்டினேன்.. தனக்கு தமிழ் கத்துகொடுத்தவர் இறந்துட்டதால நமீதா புது தமிழ் வாத்தியார் தேடுறங்களாம்.. குருவி கையிலேயே என்னோட அப்பிளிகேஷனை கொடுத்தேன்.. அ..ஆன்னு நமீதாவுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமே அது தான்..

நம்ம தல அஜித், போன வாரம் ஏவிஎம் நிறுவனம் கொண்டாடிய திருப்பதியின் வெற்றி விழாவுக்கு, அழகாய், புதுசாய், புத்துணர்ச்சியாய், தனது மனைவி ஷாலினியுடன் வந்து எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தார். (குருவி:ச்ச்சோ சுவீட் தல..)



அஜித், தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜிக்காக நடிக்க இருக்கும் படத்திற்கு கிரீடம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் தொடங்கி அடுத்த வருடம் மேய் 1, அஜித் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். ஜோடியாக ஷ்ரேயா அல்லது நயன்தார (குருவி: சிம்பு ஒகே சொல்லியச்சா.. என்ன நக்கல் பாருங்க இந்த குருவிக்கு) நடிக்கலாம். ஒளிப்பதிவை திரு கவனிக்க செல்வா கலையை கைப்பற்ற, ஆன்டனி எடிட்டிங் செய்கிறார். யுவன் இசை பொறுப்பை ஏற்றிருக்கிறார்.



லொள்ளு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஜொள்ளூ இயக்குனர் SJ சூர்யாவை கதாநாயகனாய் போட்டு ஒரு சொந்த படம் எடுக்கிறார். படத்தின் பெயர் வியாபாரி. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சென்னை சிட்டியை கலக்கி கொண்டிருப்பதாக கேள்வி. இந்த படத்தில் SJ சூர்யாவுக்கு ஜோடியாக நமீதா, மாளவிகா மற்றும் பக்கத்து மாநில நாயகி ஒருத்தரும் நடிக்கிறார்கள். ஒரு நல்ல போஸ்டர் மட்டும் இங்கே.. மற்ற ஜொள்ளு போஸ்டர்களுக்கு இங்கே செல்லவும். தாய்குலங்களும் இங்கே வருவதால் அது மாதிரி போஸ்டர் எப்போதுமே இங்கே தவிர்க்கப்படுகிறது. சே..என்னே சிட்டுகுருவியின் நல்ல எண்ணம்.

அடுத்த செய்தி என்னன்னா மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன்னு வித்தியாசமான தலைப்பை கொண்ட படத்தின் தலைப்பு எம் மகன் என்று மாற்றப்பட்டது. எல்லாம் வழக்கம் போல வரி விலக்கு காரணமாய் தான். எம்டன் என்பது இரண்டாம் உலகப் போரின் போது சென்னைக்கு அருகில் மூழ்கிப்போன ஒரு நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்பதால் வரி விலக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. படம் நன்றாக இருப்பதாய் கேள்வி.

ரொம்ப தூரம் பறந்து இந்த மாதிரி நியுஸ் எல்லாம் புடிக்கிறதால இறக்கை எல்லாம் வலிக்கிறது என்று சொல்லி என்னிடம் இருந்து ஐயோடெக்ஸ் வாங்கி கொண்டு சிட்டுக்குருவி பறந்தது.

Thursday, September 07, 2006

ஒரு பம்பரம் தான் விடப்போறேன்

நீ வேணும்டா செல்லம் படத்துல இருந்து...
எப்படியும் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட போறேன்..
இப்பவே ஏத்துகிட்ட முழுசா என்னைத் தாறேன்..

சாணக்யா படத்துல இருந்து...
தருவியா தரமாட்டியா
தரலைன்னா உன் பேச்சுக் கா கா
ஒரு பம்பரம் தான் விடப்போறேன்
உன் பாவாடை நாடாவ தருவியா

கேடி படத்துல இருந்து...
உன்ன பெத்தா ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வயபொளக்கும் ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்


வல்லவன் படத்துல இருந்து
அம்மாடி ஆத்தாடி
உன்னை எனக்கு தர்றியாடி

இப்படி பாடல்கள் எழுதும் பாடலாசிரியர்களை என்ன செய்வது.. இந்த வரிகளுக்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவாக இருக்கும்.. இப்போதைக்கு இவைகள் மகாப் பெரிய தப்புகள் இல்லை என்றாலும், இதுவே தொடர்ந்தால் இதையும் தாண்டி இவர்கள் படைப்புக்கள் போகாமல் இருக்குமா..

ஒரு விஷயதிற்காக இவர்களை பாராட்டவேண்டும்.. இந்த பாடல்களில் ஆங்கில வார்த்தைகளை தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்.. முழுவதும் சுத்த தமிழ் வார்த்தைகள்..

Wednesday, September 06, 2006

தாவணி போட்ட தீபாவளி

தழைய தழைய பாவாடை தாவணி, கூந்தலில் ஒற்றை ரோஜாவோ, இல்லை ஒரு முழ மல்லிகை பூவோ, இரு வில்லெனும் புருவத்தை பூட்டி வைத்திருக்கும் சாந்து பொட்டு, காதோரம் லோலாக்கு, எந்தப் பவுடரும் போடாத முகம், பாக்குற நம்மளை பவுடராக்கும் முகம், இது தமிழ் பெண்களின் அழகு.. எந்த உருவதிற்கும் சட்டென பொருந்திவிடும் உடை தாவணி.. இந்த தாவணிக்கு இருக்கும் அழகு சேலைக்கு கூட இல்லை.. எனக்கு ஆனந்தம் படத்துல, சிநேகா போட்டு வர்ற தாவணி காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.. (சிநேகாவையும் தான்)

ஆனா இந்த வாரம் நியுயார்க் போயிருந்தப்போ, தாவனி ந்போட்ட இந்திய பெண்கள் மட்டுமல்ல.. நாங்களும் அழகு தான் என்பது போல் இருந்தார்கள் நியுயார்க் பெண்கள். நான் போயிருந்த முதல் நாள், சனிக்கிழமை ஒரு மழை நாள்.. எல்லா வீதிகளிலும் நடந்தே சென்றோம்.. மழையில் நனைந்தே சென்றோம். அது உண்மையில் ஒரு இனிய அனுபவம்.. நிறைய விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. கலர் கலராய் ஒரு கையில் குடை.. லெதர் ஷூ.. முழுக்கை ஜெர்கின், முழங்கால் வரை.. தோளில் விழுந்து புரளும் அலை அலையான செந்நிற கூந்தல்.. காதில் சின்னதாய் ஒரு தோடு (ஸ்டட்). கண்களில் பழைய MGR காலத்து நாயகிகளின் பெரிய அளவு கண்ணாடி..ஒரு நளின நடை.. இதுவரை கிணற்றுத்தவளையாய் இருந்துவிட்டேனோ என்று மனம் வருந்தும் அளவு அழகழகாய் பெண்கள்.. மழையில் நனையும் ரோஜாக்கள் போல..

ஒரு உண்மை மட்டும் புரிந்தது.. இந்தியா என்றாலும், அமெரிக்கா என்றாலும், ரோஜா ரோஜா தான்.. அழகு அழகு தான்..

நான் சென்ற இடமெல்லாம், எழுபது சதவீதம் இந்திய மக்களே.. தங்கள் அம்மா அப்பாவை இங்கே கூடிவந்தவர்கள் அழைத்து சென்று காண்பிக்க இது மாதிரி மூன்று நாட்கள் போதுமானவை.. ஒரு இடத்தில் அங்கிருந்த காவலாளி கேட்டே விட்டார்.. என்ன இன்று இந்திய மக்களின் கூட்டம் இவ்வளவு என்று..அந்த அளவு நம்ம மக்கள் கூட்டம்..

ஒரு மரங்கள் உயர்ந்த காடுகளில் போகையில் எப்படி மரங்களை அண்ணந்து பார்த்து ஆச்சரியப்படுவோமோ அது மாதிரி, இங்கே கான்கிரீட் காடுகள்.. ஒவ்வொரு கட்டிடமும் அடுத்த ஒன்றுக்கு சளைக்காமல், உயர்மாய், விண்ணை துளைத்து இருக்கிறது.. எல்லா இடத்திலும் பணம் நன்றாகவே பாய்ந்திருக்கிறது.. முதன்முதலில் 2001-ல் சென்னை வந்த போது எனக்கு LIC யே மலைப்பை இருக்கும்.அண்ணா சாலையே சொர்க்கமாய் தெரியும்..
அதுவும் சுதந்திர தேவி சிலைக்கு படகில் போகும் வழியில் நியுயார்க்கை பார்த்தால் நமது கண்களெல்லாம் அளவை மீறி விரிய வேண்டி இருக்கும்... ஆனால் அங்கே வானத்தை தாங்கி கொண்டு உயரமாய் நின்ற உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. நினைத்து பார்த்ததை அந்த கட்டிடங்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது போட்டோவில் பார்த்த போது, என்னையும் மீறி நெஞ்சம் கலங்கியது.. ஒரு தீவிரவாத எண்ணத்தின் விளைவு எப்படி இருக்கும் என்று கண்முன்னே பார்த்தபோது, எதிர்கால உலகை நினைத்து அஞ்சாமல் இருக்க முடியவில்லை.

Tuesday, September 05, 2006

கள்ளச்சாராய கதைகள் 2


முதல் பாகம் கள்ளச்சாராய கதைகள் 1

என்கிட்ட லைசென்ஸும் இல்ல..வண்டிக்கு ஆர்சி புத்தகமும் இல்லை.. காட்டச்சொன்னாங்க.. எனக்கு வேற வழி இல்லாமா என்னுடைய கல்லூரி அடையாள அட்டையை காண்பித்தேன்.. இருவரும் ஒருவரை ஒருவரை பாத்துகிட்டாங்க.. என்னது, இந்த சாராய ஊருல இருந்து கிட்டு எம்சிஏ படிக்கிறியா.. பரவாயில்லியேன்னு சொல்லி அப்பா யாரு..வீடு எங்கே இருக்குன்னு கேட்டுட்டு என்னை விட்டுட்டாங்க..

எவ்வளவு நடந்தாலும், ஒவ்வொரு போலீஸுக்கும் தனி சம்பளம்.. ஸாரி..கிம்பளம் வேறு.. ஊரின் மத்தியில் இருக்கும் வீதியில் புல்லட்டில் சாரய முதலாளி வருகிறார்.. எதிர்புறம் சைக்கிளில் போலீஸ்காரர் வருகிறார்..சாராய முதலாளியை பாத்தவுடன் இவர் சைக்கிளிலிருந்து கீழ இறங்கி, அவரிடம் செல்கிறார். முதலாளியும் புல்லட்டை நிறுத்தி விட்டு, ஆனா அதிலிருந்து இறங்காமல் இருக்கிறார்.. அந்த போலீஸ்காரர் பவ்யமாய், சென்று ஏதோ சொல்ல, அவர் தனது சட்டைப்பையில், பணத்தை எடுத்து கொடுக்கிறார்.. போலீஸ்காரரும் வாங்கி கொண்டு சிரித்தபடியே சைக்கிளிலேறி செல்கிறார். இது எங்க ஊரில் அடிக்கடி நடக்கும் ஒரு சாதரண சம்பவம்..

என் அப்பா வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் அடங்கிய ஒரு ஸ்வீட் ஸ்டாலை நடத்தி வருகிறார்.. அந்த ஸ்வீட் ஸ்டால் தான் எங்கள் குடும்பத்தின் எல்லாவிதமான தேவைகளையும் தீர்த்து வைக்கிற அச்சயப் பாத்திரம்.. ஒரு முறை என் அம்மா கடையில் இருந்தார்..நான் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தேன்.. இரண்டு பேர் வந்து, இங்கே எங்க கஞ்சா கிடைக்கும் என்று கேட்டனர். நானும் அவர்களுக்கு வழி எல்லாம் சொன்னேன்..அவர்கள் போன பிறகு, என் அம்மா என்னை பயங்கரமா திட்டி தீர்த்துட்டாங்க.. வந்தவங்க போலிஸா இருந்தா இந்நேரம் உன்னையும் பிடிச்சுகிட்டு போயிருப்பாங்களேன்னு..அவங்களுக்கு ஒரே கவலை...

ஆனா இப்போ தமிழக அரசே மதுவிக்கிறதால கள்ளசாரயத்தை கடுமையா தடை பண்ணிட்டாங்க.. அப்படி யாராவது காய்ச்சுனா, கஞ்சா கேசுல போட்டுறதா மிரட்டல்.. கஞ்சா கேஸ் கொஞ்சம் மோசமானது.. இப்போ எல்லோரும் விவசாயம் பாக்குறங்க.. மில்லுக்கும் வேலைக்கு போறாங்க.. என்கிட்ட தமிழக அரசே மதி விக்கிறதை தப்பா பேசினா, எங்க ஊர் மாறுனதை தான் நான் கதையா அவங்களுக்கு சொல்லுவேன்.

எங்க ஊர் மதுரை திண்டுக்கல் ரோட்டுல, எட்டாவது கிலோமீட்டர்ல, ரோட்டுல இருந்து ஒண்ணரை கிலோமீட்டர் உள்ளே சிறுமலை அடிவாரத்துல இருக்கிற அ.வெள்ளோடு எனும் கிராமம்.

நியுயார்க் பதிவுகள் விரைவில்...

Friday, September 01, 2006

கள்ளச்சாராய கதைகள் 1

ரெண்டு வருசதுக்கு முன்னாடி எங்க ஊர்ல எல்லோருடைய கையிலும் பணம் புரளும்.. எல்லா கடையிலும் வியாபாரம் நல்லா நடக்கும்.. நிறைய லாபம் கொழிக்கும். வருஷதுக்கு நாலு அஞ்சு திருவிழா நடக்கும்.. மூன்று ஜல்லிக்கட்டு நடத்துவாங்க.. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் ஒடிப் போய் நடக்கும் கல்யாணங்கள் கஷ்டம் இல்லாம நடக்கும்.. ஊருக்கு வெளில மதுரை ரோட்டுல இருக்கிற தியேட்டருல படம் பாக்க மக்கள் கூட்டம் கூட்டமா போவாங்க.. ஊரே ஒரு மாதிரி சந்தோசமா இருக்கும்.. சாகப்போறோம்னு தெரிஞ்சா கூட கோழிகளெல்லாம் சிறகடித்து பறந்து வாழ்ந்தன.. ஆடுகள் எல்லாம் கூட்டம் கூட்டமாய் குதித்தி கும்மாளமிட்டன.. சூரியன் கூட எங்க ஊருகு மேல வர்றப்போ ரொம்ப குளிர்ச்சியா இருக்கும்.. மொத்ததில் மக்கள் எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க..

இப்படித்தான் வெளியில் இருந்து பாக்குறப்போ ஒவ்வொருத்தருக்கும் தெரிந்தது.. ஏன்னா பணம் இருந்தா எல்லாம் இன்பமயம்னு மக்கள் எண்ணம் இருந்த சமயம். இப்படிபட்ட ஒரு திரிசங்கு சொர்க்கத்தில் மக்கள், வாழ்ந்ததெல்லாம், கள்ளசாராயம் கொடி கட்டி பறந்த காலம். எங்க ஊர் கள்ளசாராயம் நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரத்து பகுதிலிருந்து குடிமகன்களை கூட அழைத்துவந்தன, ருசி பாக்க.. பஸ்சுல ஏறினா, பின்பகுதி முழுவதும், குடிமகன்களுக்கு என்று இடஒதுக்கீடு எல்லாம் இருந்தது அப்போ.. இந்த சகதியில் விழாத மக்கள் கூட இதைப் பத்தி எல்லாம் கவலை படமாட்டர்கள்.. நமக்கென்ன என்று ஒரு எண்ணம்.. மேலும், அடுத்த ஊர் குடிமகன்கள் பல நேரம் எங்க ஊர் விதிகளின் ஓரத்தில் மப்பில் விழுந்து தூங்கியும் விடுவர்.. மாத சம்பளம் வங்குவோரால், முதல் வாரம் முழுவதும், வார சம்பளம் வங்குவோரால் எல்லா வாரமும், தினக் கூலிகளால், பணமும், மக்களின் எண்ணிக்கையும் ஊரில் நிறைய இருக்கும்.. எங்க ஊர் கள்ளச்சாராயம் விற்பவர் மற்றும் அந்த சரக்கை காய்ச்சுவோர் வீடுகளில் புது புது சாமான்கள் வந்து இறங்கும். பத்து வருடங்களுக்கு முன்னால் எங்க ஊருல டிவி அவர்கள் வீடுகளில் மட்டும் தான் இருக்கும்..

நான் அப்போ எம்சிஏ, மதுரை தியாகராஜா பொறியியற் கல்லூரில படிச்சுகிட்டு இருந்த சமயம். தினமும் கல்லூரிக்கு வீட்டிலிருந்து போய் வந்த நேரம்.. வீட்டிலிருந்து வண்டியை எடுத்து, சின்னாளபட்டி பிரிவிலிருந்த ஒரு இடத்துல நிறுத்திவிட்டு, பஸ் பிடிச்சு கொடைரோடு போய், பெங்களூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சு, மதுரை போய், அங்க இருந்து மறுபடியும் பஸ் பிடிச்சு கல்லூரி போவேன்.. ஒரு நீண்ட பயணமாய் இருக்கும் அது.. அப்போ எங்க ஊருல பயங்கர போலீஸ் ரெய்டு நடதுகிட்டு இருந்த சமயம்.. கிட்டதட்ட் ஒரு அறுபது என்பது திருட்டு வண்டிகளை எங்க ஊர்ல பிடிச்சாங்க.. நான் சின்னாளபட்டி பிரிவிலிருந்து வண்டியை எடுத்து எங்க ஊருக்கு பக்கத்துல வந்தப்போ, ரெண்டு போலீஸ்காரங்க என் வண்டியை நிறுத்தினாங்க.. என்கிட்ட லைசென்ஸும் இல்ல..வண்டிக்கு ஆர்சி புத்தகமும் இல்லை.. போட்டு காச்சப் போறாங்கன்னு ஒரு பயம் மனசுக்குள்ள.. அந்த வயத்துல ஒரு பய உருண்டை உருண்டது.. என்ன நடக்கபோகுதோ..

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு..
நியுயார்க் டூருக்கு பிறகு...