Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, November 14, 2007

இலை உதிரும் காலம்


ஒவ்வொரு இலைகளாக
உதிர்வதற்கு
தயாராய்
மரத்தில்,
மீன் பிடிக்க
அடுத்தடுத்து
குதிக்க
காத்திருக்கும்
பெங்குவின்
கூட்டம் போல...

பக்கத்து
பாசமிகு
இலைகள்
என்றைக்கோ
வண்ணங்கள் மாறி
உதிர்ந்து
சருகாய்,
மரத்துக்கடியில்..
பாதை வழியில்..

அடாது
மழை பெய்ததால்
நீர் எடை
சுமக்காமல்
கழிந்து
கீழ் கவிழ்பவைகள்
என
சில இலைகளும் உண்டு..

அவைகள்
விழுந்ததையும்
காற்றில்
அலைந்ததையும்
தலை
குப்புற நின்று
பார்க்கிறேன்,
நேற்று பெய்த
மழையின்
நீர் சொட்டு
என்னிலிருந்து
கண்ணீர் திட்டாய்...

என்றைக்கோ ஒருநாள்
நீயும்
இது போலத் தான்
என்று
மனசு மணியடிக்கையில்
இன்னும் உதிர
காத்திருக்கனுமா என்று
உள்ளூர
ஒரு உதறல்...

ஆனாலும்
மரத்தின்
வேர்கள் தரும்
தண்ணீர் மோகங்கள்
ருசியாகவே
என
ஆசை மனதின் சபலம்..

உதிர்ந்து
நாங்கள் போய்விட்டதால்
மரத்திற்கு
வருத்தமில்லை,
உடம்பில்
அம்மை தழும்பாய்
நாங்கள் இருந்த இடங்கள்,
புள்ளி கல்லறைகள்...

அடுத்த பருவத்தில்
புதிதாய்
முளைக்கும்
இன்னும் ஆயிரம்
இலைகள்..

மரமதை
புவியென எண்ணுகையில்
என்னை
கீழ் நின்று
அண்ணாந்து பார்க்கும்
மனிதனை போல
ஆனதோ
என் வாழ்க்கை?

சும்மா போட்டிக்கு படங்களை போட்ட போது, ஏன் கவிதை எழுதக்கூடாது என்று உசுப்பி விட்ட தோழி பிரியாவிற்கு நன்றி

Sunday, July 08, 2007

புத்தன் நான்..

ஒவ்வொரு
செல்லிலும்
ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..

எல்லாம்
உன்
ஒற்றை பார்வை
ஏற்றி வைத்த
சுமையடி!

இது
கழுதை சுமையல்ல!
தாய்மை!

Wednesday, April 18, 2007

பற்றியெரிந்தேன் நான்...

ஆயிரம் மெழுகுவர்த்திகள்
இருந்தும்
அந்த
அறையில்
வெளிச்சம் இல்லை..

அவள் வந்தாள்
பிரகாசமானது
அறை..

பற்றியெரிந்தேன்
நான்..

Saturday, April 07, 2007

விழுதுகளே வேராக...

தானிருக்கும்
வரை
விழுதுகளில்
வாழாது
ஆலமர வேர்..

தவ்வியோடும் வரை
தரையில்
தன்
குட்டிகளை
விடுவதில்லை
கங்காரு...

தானாக
பாய்ந்தோடும் வரை
தன் குட்டியை
தூக்கி செல்லுமாம்
குரங்கு!

அறிவு,
ஆறுக்கும்
ஒன்று
குறைவாக பெற்றாலும்,
பெற்றதால்
இவைகள்
தன்
பிள்ளைகளை
பிழைப்புக்கு
அனுப்புவதில்லை!

குழந்தையிவன்,
பென்சில்
பிடிக்கும்
கரங்களில்
பீடி சுற்றுகிறான்!

அவன் அப்பனோ
அதை
புகையாய்
விடுகிறான்!

பஞ்சாய்
இருக்கும்
பிஞ்சு
கரங்கள்
நஞ்சு
போகின்றன,
உளிகள்
பிடித்தும்
கயிறுகள்
இழுத்தும்...

பக்கத்து வீட்டு
பையன்
கான்வென்ட் போக
இவன்
கனவுகள் கூட
கழுவுகின்ற
டீ கிளாஸை சுற்றியே!

சுத்தியல்
தூக்குகின்றன
பூக்கள்..
இதை
புத்தியில்
புரிவார்களா
மாக்கள்?

இவர்கள்
வளரும் முன்
தேய ஆரம்பித்த
பாக்கெட் சைஸ் நிலவுகள்..

மலரும் முன்
வாட ஆரம்பித்த
மெக சைஸ் பூக்கள்..

நிலவுகளையும்
பூக்களையும்
ரசிக்காமல்
இப்படியா
பழுதுபடுத்துவது?

இப்படி
தன்
குழந்தையை
வேலைக்கு
அனுப்புவோரை
என்னவென்று சொல்வது?

முதுகில்
எலும்பு
இல்லாதவர்கள்..
கண்ணிருந்தும்
குருடர்கள்..

இல்லை..
இல்லவே இல்லை..

அடுத்த
செடியின் மீது
படர்ந்து
அது
சமைக்கும்
ஆகாரத்தை
உறிந்து
தானுன்டு
வாழும்
மனித ஒட்டுண்ணிகளே
இவர்கள்..
பதர்கள்..

குறைந்த
சம்பளம்
என்பதால்
குழந்தைகளை
வேலைக்கு
வைப்பதையும்
தவிருங்கள்..

அவர்கள்
படிக்கட்டும்...
எந்த
படிக்கட்டும்
ஏறி
அவர்கள்
தொடட்டும்
வானத்து
நிலவை..
என்னும்
எதிர்கால
வசந்த வாழ்க்கையை..

எங்காவது
குழந்தை
தொழிலாளர்கள்
இருந்தால்
காவல்துறைக்கு
சொல்லுங்கள்..

எப்படியாவது
அவர்தம்
வாழ்க்கையில்
இருளை போக்க
நல்ல
விளக்கொன்று
ஏற்றுங்கள்..

இப்போது
வேண்டுமானால்
அவர்கள்
அகல் விளக்கு..
பாரதியின்
அக்னிகுஞ்சு போல,
நாளை
இந்தியாவின்
ஒளி விளக்கு..

Wednesday, April 04, 2007

மொத்தப் பூக்களின் ஒத்த உருவமே..

நானும்
ஒரு
கைதிதான்..
உன்
இதயத்தில்
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..

உன் காதோரம்
வளைந்து
கிடக்கும்
முடிகற்றைகளில்
எப்போதும்
என் மனம்
ஊஞ்சலாடுது..

அப்படி
ஆடுகையில்,
உன்
காதில்
காதலை
சொல்ல வருகிறேன்..

பக்கத்தில்
வந்ததும்
என்னோடு
சேர்ந்து
மனசும்
ஆடுகிறது
ஊஞ்சல்..

மொத்தப் பூக்களின்
ஒத்த உருவமே..
நீ தான்
பூக்களுக்கு
இரவல் தந்தாயோ
மென்மையை..

ஆப்பிளுக்கு
தந்தாயோ
வண்ணத்தை..

பறக்கும்
பறவையை கூட
மயக்கி
கடிக்க சொல்லுது
உன் கன்னங்கள்..

பறவைக்கே
அப்படி என்றால்
பாமரன்
எனக்கு..
சொல்வதற்குள்ளே
அந்த
கன்னங்களில்
வழுக்கி விழுகிறது
என் இதயம்!

அப்படி
விழுந்த இடம்
உன் இதயம்!

அங்கே
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..

(ப்ரியா.. இப்போது சந்தோசமா.. கவிதை எழுதியாச்சு.. எனக்கும் என் கனவு பெண்ணுக்கும் எந்த ஊடலும் இல்லை..)

Sunday, April 01, 2007

ஏப்ரல் மாத பிளாக் தலைப்பு கவிதை

அவள் வரும் வழியெல்லாம் மலர் தூவி வைக்கிறேன்.. என்னை பார்த்து அவ்வழி மரங்கள் இலையடித்து சிரிக்கின்றன, பேதையென்று.. பூங்கா வலம் வர யாராவது பூக்களால் பாதையமைப்பார்களா என்று..

மரங்களுக்கென்ன தெரியும், அவள் தான் என்னை பேதையாக்கி இப்படி பாதையமைக்கச் சொன்னதென்று..

Sunday, March 18, 2007

அவ பிம்பிள் அழகுடா!

நயன்தாரா - வல்லவனையும் சாய்க்கும் அழகு.. நாட்டாமையையும் வீழ்த்தும் அழகு.. சமீபத்தில் தனுஷ் கூட இவர் நடிக்கும் யாரடி நீ மோஹினி படத்தின் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.. பார்த்துக்கொண்டிருந்தேன்.. பார்த்துக் கொண்டே இருக்கிறேன் (மன்னிக்கவும் நாட்டாமை..) என்ன ஒரு அழகு! அந்த பிம்பிள் அழகுடா யப்பா சாமி!





இவள்
விழி வெளிச்சத்தில்
விழுந்தே இறக்கலாம்
என்று
பறக்கிறது
விட்டில் பூச்சி மனசு!

பிள்ளையார்
என்றே
அந்த
பிம்பிளைச் சுற்றி
வட்டமடிக்கிறது
பேதை மனசு!

மேலே
படத்தில்
கூட இருப்பது
இவளின்
அண்ணன் தானே!

ஆம்
என்றால்
உரக்கச் சொல்லுங்கள்!
இல்லை என்றால்
பதில்
தெரியாத மாதிரி
நடித்து விடுங்கள்!

பாவம்
எந்தன்
மெழுகு மனசு!
அவள்
போட்டோவில்
பார்ப்பதற்கே
இப்படி உருகுகிறது!

Saturday, March 17, 2007

தாலி கட்டா தாரம்

எனக்காய்
எப்போது காத்து
கிடப்பாள்...

நான்
வந்து
கை வைத்தால்
பாடுவாள்
ஆடுவாள்
எனக்காய்
எல்லாம் செய்வாள்...

அலுவலகம் சென்று
வீடு
திரும்பும் வரை
தூங்கி கிடப்பாள்...

வந்தவுடன்
ரஜினி முதல்
ராஜேந்தர் வரை
செய்திகள்
சொல்வாள்...

கிரிக்கெட் முதல்
கில்லி வரை
அரட்டை அடிப்பாள்...

அவளைச் சுமந்து
அப்படியே
ஷோபாவில்
வைத்து மடியில்
தாங்குவேன்...

இவள்
மேனியில்
என்
விரல்கள்
விளையாண்டால்
அது தான்
புதுக்கவிதை!

எல்லாம்
சொல்லிவிட்டேன்
யாரது
என்று
உங்கள் மனம்
தெரிந்திட
துடிக்கிறதா..

அவள்,
HP பெற்றெடுத்த
பெவிலியன் 6000..

அக்டோபர்
இறுதியில் தான்
தாலி கட்டாத
தாரமானாள்..

எல்லோரும்
சொன்னார்கள்
லேப்டாப் என்று..
இப்போதெல்லாம்
இது
இல்லையென்றால்
இதயம்
அடிக்கவில்லை
லப்-டப்..

ஆணி அடித்து அடித்து கைகளும் மனசும் காய்ந்து விட்டது. வேறு வழியில்லாமல் இப்படி ஒரு மொக்க கவிதை. மாப்ள பரணி சொல்ற மாதிரி இதை படிப்பதெல்லாம் உங்கள் தலைவிதி.. ரெண்டு வார்த்தை திட்டிட்டு போங்க மக்கா..

எப்போதும் போல இன்னைக்கும் ஒரு கேள்வி.. தலைப்பில் இருக்கிற இலக்கண விஷயம் என்ன, சொல்லுங்கள்...

Friday, March 09, 2007

தமிழாய் அவளும் என் இதய இலவம்பஞ்சும்

தன்னை விட
ஆறு மடங்கு
பாரத்தை
சுமக்குமாம்
எறும்பு..
உன்னை
சுமப்பதில் சுகமாகி
போனதடி
என் இதய
இலவப்பஞ்சு!

ஒரு கையிலே
ஒரு பொருளை
ஒரு நாள் முழுவதும்
ஒரு கணமும் விடாது
தூக்கி நின்றால்
கை வலிக்கும்
என்பது
அறிவியலார் சொன்னது!

நீயே சொல்
வருடங்களாய்
உன்னை சுமக்கும்
என் உள்ளம்
அவரின் வாதத்தை
பொய்யாக்கியதோ!

மனித உடம்பு
காந்தம்
என்று
ஆறாம் வகுப்பு
அறிவியலில்
அறிந்து வைத்திருக்கிறேன்!

அதற்காக
சூரியகாந்தியாய்
உன் சுற்றத்தையே
சுற்றி வருகிறதே
பட்டாம்பூச்சி இதயம்!

உனது
நெற்றிப் பொட்டு
மெய்யெழுத்தின்
அழகுப் புள்ளி..

உனது
கழுத்து தொடங்கி
கால் வரை
தமிழின்
ஒய்யார
வளைவுகள்..

ஒற்றைக் கொம்பு
எழுத்தெல்லாம்
உன் குதிரை வால்
சடையோ!

நீண்டு சுழித்து
வரும்
உயிர்மெய்
எழுத்தெல்லாம்
உன்
பேரழகு கொண்டையோ!

நீ இதழ்
குவித்து
தரும்
முத்தமெல்லாம்
'உ'வன்னா வகையறா
எழுத்துகளோ!

நீ அஜந்தா
ஓவியமாய்
வளைந்து நின்றால்
ஓவன்னா!

தமிழை அமுதென்றார்
பாரதியின் தாசன்!
உன்னை பார்த்த
பின்புதான்
படித்தேன்
தமிழுக்கு
ஏசுபிரான் போல
உயிர்தெழும் சக்தி
இருக்கிறதென்பதை!

நீ
எப்படி நினைக்கிறாயோ
அப்படியே
நீ ஆகிறாய்
என்றார்
சுவாமி விவேகானந்தர்!

அப்படித் தானடி
எனக்கு நீ!

எதனைப்
பார்த்தாலும்
அதில் நீ!
அதுவாய் நீ!

உருவமற்ற நீர்,
இருக்கும்
பாத்திரத்தின்
உருவத்தை
கொள்வதாய்,
நீ நீராகிறாய்!

தமிழ் படித்தாலும்
நீயே
அறிவியலும் அறிதலிலும்
நீயே!

யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
எனக்கான வீதிகளின்
சுவர்களில் எல்லாம்
மாற்றி எழுதிவிட்டேன்
சர்வமும் அவள்மயம் என்று!

அங்கே
பூ விக்கும்
பெண்முதல்
இங்கே
என் முக கண்ணாடி
வரை
எல்லோருக்கும்
தெரிந்து போய்விட்டது!

நான் காதலில்
இருக்கிறேன் என்று,
உன்னைத் தவிர!


டிஸ்கி : உங்க ஊர் ஆணியா எங்க ஊர் ஆணியா.. கிலோ கணக்குல ஆணிகள்.. அதனால் தான் உங்க பதிவுகளுக்கெல்லாம் என்னால் தினமும் வந்து கும்மி அடிக்க முடியவில்லை.. இதோ இன்றிலிருந்து 'ஆணிகளற்ற உலகத்தில்' சில காலங்கள்..

Wednesday, March 07, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர் கவிதை ஓட்டம்

என் உள்ளம் உளறியதை நான் இங்கே உளறியிருந்தேன்.. அதன் பிறகு அந்த தலைப்பே ஒரு கவிதை என்று என் மாப்ள பரணியும் அதைத் தொடர, கவிதை புயல் வேதாவும் அவர் பங்குக்கு அழகான ஒரு கவிதையை பிரசவித்திருந்தார். ஒரு புள்ளியில் தானே ஒரு அழகான பயணமே என்பது புரிந்துகொண்ட நம்ம நண்பர் காலெண்டர் கவி மணிபிரகாசும் தன் உள்ளத்தை உளற விட்டிருக்கிறார். உணர்ச்சியான வரிகளில் உலவ விட்டிருக்கிறார்.

ரெடி! ஸ்டார்ட்! கோ! நீங்களும் உங்க மனசை பறக்கவிட்டு, நச்சென்று ஒரு கவிதையை எழுதலாம்..

ஆரம்பம் இங்கே
போதையானது இங்கே
மூன்றாவதாய் முகிழ்த்தது இங்கே
நாங்காவது கியர் போட்ட கவிதை இங்கே...

அடுத்தது யார்? அந்த பெண்ணின் கண்களில் வழியும் போதையை பருகிய கிறக்கத்தில் உளறப் போவது எந்த உள்ளம்..

பாரெல்லாம் உண்டாம் தமிழ்நாட்டு டாஸ்மாக்கில். அதற்காக அவள் விழி போதை பருகிவிட்டு அவள் மடியெனும் பாரில் தான் கிடப்பேன் என்று இன்னும் என் மனது பிடிக்கிறது அடம்! அவள் இன்னும் இடம் தராததால் இப்போது இருப்பதோ அந்த சந்நியாசி மடம்!

Friday, March 02, 2007

பிச்சைக்காரனின் பிதற்றல்கள்

ஒரு
ஊமையின்
சேகரிக்கப்பட்ட
வார்தைகளாய்
அவன்
தட்டில்
ஓசையுடன்
விழுகின்றன
சில்லறை காசுகள்!

அவன்
நிலை எண்ணி
அந்த
சில்லறைகள் கூட
கைகொட்டி
சிரிக்கின்றனவோ!

அந்த
அழுக்கு உடம்புக்குள்
மூழ்கி போனதோ
அவனின்
வெளிச்ச எதிர்காலங்கள்!

கிழிசல்கள்
எல்லாம்
வாழ்க்கையின்
போர்களங்கள்
இவனுக்கு பதில்
ஆடைக்கு
தந்த
விழுப்புண்களோ!

காலணி தைப்பவன்
தன்னை கடப்போரின்
கால்களையே
பார்ப்பது போல்,
கடக்கும் மனிதர்
கைகள்
சட்டைபைக்குள்
நீளுமோ
என்று
கண்களில்
தேடிகிடக்கிறான்!

வெளியில்
தெரிந்து
இவன்
எடுக்கிறான் பிச்சை..

எத்தனையோ பேர்
சுவர்களுக்குள்
கையூட்டு
கையேந்தல்களில்!

கோயில்களின்
வாசல்களில்
கழற்றி விடப்படும்
செருப்புகளில்
ஆரம்பித்து
கேகிறது
இவனின்
அம்மா! தாயே!
என்னும் ஒரு கூவல்!

இவன்
குரல் கேட்டு
மனிதர்
காசுகள் கடாசினரோ
தெரியாது!

ஆனால்
அந்த தெய்வமும்
கல்லாகி போனதோ
என்றதோர்
எண்ணம் இவனுக்கு!

கஞ்சனின்
கோடியும்
இவனின்
சில்லறைகளும்
வைத்திருப்பவருக்கு
உதவுவதில்லை!

கோயில்
வாசலில்
இவனின்
கையேந்துவது
வழக்கமான
சில்லறையையா?
இல்லை
உள் சென்றோர்
வாங்கி வரும் வரங்களையா?

Tuesday, February 27, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

நீ
உலா வரும்
வீதியெல்லாம்
விரவி கிடக்கும்
கற்கள் கூட
கண் முழித்து
உயிர்தெழுகின்றன
ராமர்
பாதம் பட்டு
உயிர்தெழுந்த அகலிகையாய்...

நீ
தொட்டுச் செல்லும்
கெட்டிப் பொருளும்
கட்டித் தங்கமாகிறது
மிடாஸ்
கை பட்டதாய்...

உனது
அழகின்
ஆரம்பம் மற்றும்
முடிவை ஆராய
புறப்பட்ட
தென்றலும்
தலை கவிழ்ந்து
வருகிறது
பரமனின்
அடி முடி தொட
கிளம்பிய
ஹரி பிரம்மாவாய்...

அதிசயங்கள்
அருமையாய் செய்யும்
நீ
என்னை மட்டும்
அவஸ்தைகுள்ளாக்குவது
ஏனடி?

கொதிக்கின்ற நீருக்குள்
குதிக்கின்ற
பொருளாய்
என் உள்ளம்
உன்னை கண்டதும்
தன்னை இழக்குதடி..

உன்னைத் தொட
நீளும்
எனது பார்வை
தொட்ட பின்
தொடர்ந்து
உன்னுள்ளே
உறங்கிக் கிடக்குதடி..

அந்த
உறக்கத்தின்
பொழுதெல்லாம்
வாலாட்டி
கிடக்குதடி
என் மனம்..

ஆட்டோவில்
ஆயிரம் பேர்
அணிவகுத்து
வந்தாலும்
பார்வையிலே
சாய்ப்பேனடி..

அந்த
நேர் பார்வை கூட
உன்
பார்வை கண்டதும்
காலடியில்
படுத்து கிடக்குதடி?


நீ
சிந்தி விட்ட
பார்வையிலே
பற்றிகொண்ட
பருவக்காடாய்
கொழுந்துவிட்டெறியுதடி
எனது மெய்?

உன்
முத்த ஈரங்கள் தான்
மொத்த நெருப்பையும்
அணைக்குமோ..

உள்ளுக்குள்
எரியும் தீயை
அணைத்துவிடடி..
என்னை மெல்ல
பக்கம் வந்து
அணைத்துவிடடி..

Friday, February 16, 2007

கிட்டு மாமாவிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உலக மலரெல்லாம்
உன் பெயர்
சொல்லி
இன்று
பூக்கட்டும்!

பொங்கி ஓடும்
தேச ஆறெல்லாம்
இன்று
உன் பெயர்
சொல்லி
கொண்டாடி குதிக்கட்டும்!

அலையும்
காற்றெல்லாம்
புல்லாங்குழல்
நுழையாமல்
கீதம் இசைக்கட்டும்!

கலைந்து கிடக்கும்
முகிலெல்லாம்
நியுஜெர்சி மீது
மழையாக
உன் பெயர்
சொல்லி பொழியட்டும்!

தாரை தப்பட்டை
இல்லையென்று
நினைத்தால்
இடியும் மின்னலும்
குறுக்கே வந்து முழங்கட்டும்!

ஷ்ரேயாவைப் போலவே பூச்செண்டோடு நாங்களும் களிப்புற சொல்கிறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமு!

Thursday, February 15, 2007

400வது பதிவிற்காக ஒரு சின்ன சர்வே

ஆமாங்க.. சும்மா ஒரு சின்ன சர்வே தான்..
இதுவரைக்கும் நாம இங்கே நடத்தினதே இல்லேல..அதுனால..


1.இதுவரை இங்கே பதிவிடப்பட்டதில், உங்களுக்கு பிடித்தது எது?
(டக்குன்னு மனசுக்குள்ள வரணும்.. அப்படி ஏதும் இல்லைன்னாலும் பரவாயில்ல.. இ.பி.கோ செக்க்ஷன் 333 படி, அப்படின்னு எந்த போன்டா சட்டமும் உங்க மேல பாயாது..)

2.பிடித்த வகைகள்?
அ. சினிமா
ஆ. கதை
இ. கவிதை
ஈ. அனுபவச் சிதறல்கள்


இந்த ரெண்டு கேள்வியை யோசிக்கவே நான் வேதாளம் பிடிக்க போன விக்ரம் (ஹிஹிஹி.. விக்கிரமாதித்தன் கொஞ்சம் சுருக்கமா) மாதிரி ஆகிட்டேன்..

அப்படியே வழக்கம் போல பின்னூட்டத்துல சொல்லுங்களப்பா...

அட.. சர்வே மட்டும் போட்டா என்ன ஆகுறது, அது தான் உங்களுக்கு தேங்காய் உடைக்கணும்னு ஆகிடுச்சு.. அத இப்படி கவிதைல இருந்து ஆரம்பிப்போமே

மனம்
ஒரு குரங்குன்னு
சொன்னவன்
யாரென்று
தெரிந்தால்
என்னிடம் சொல்லுங்கள்..

அவளை
கண்டவுடன்
நாய் மாதிரி
வாலாட்டியும்,
குதிரை மாதிரி
கடிவாளம் போட்டும்,
பூனையைப் போல
பதுங்கி பதுங்கி
நடக்கிறதே
என் மனசு?

Tuesday, February 13, 2007

எனை வெல்லனும் வா - காதலர் தின ஸ்பெஷல் 4

பகலில்
விண்மீன்கள்
விழித்திருக்க,
நிலவும் கூட
வானத்தில் படுத்திருக்க,
சூரிய விளக்கில்
சுற்றம் சூழ
வந்திருக்க,
அவள்
சங்கு கழுத்தில்
மஞ்சள் கயிறொன்று
நான்
கட்டினேன்.

அவ்வளவு தூரம்
ஏறி
யாரும்
வானத்துக்கு
அட்சதை தராததால்,
அது
மழையாக
எங்கள் மேல்
அட்சதை தூவியது.

அந்த
மழையில்
முகிழ்த்த
மலரெல்லாம்
நன்றிக்கடனாக
எங்கள் மேல்
தானாக
விழுந்து
பூமழை தூவியது.

நானும் அவளும்
நிலவும் சூரியனும்
ஆனோம்.

அந்த
முதல் நாள்
இரவிலே,

கட்டிலை சுற்றி
மலர்களும்
மலர்களின் மேல்
மங்கையும் நானும்...

விளங்காத
விஷயங்கள்
மலர்ந்த
நாள் முதல்
மனதிலே இருக்க,
விளங்கும் பொருட்டு
விளக்கை அணைத்தோம்.

வெங்குச்சா
கல்லிரண்டு
முட்டிக்கொண்டால்
முளைத்து விடும்
நெருப்பைப் போல,
எங்கள்
மூச்சுக்காற்று
முட்டிக்கொண்டதில்
பற்றிக்கொண்டது
பக்கத்து வீட்டு
பந்தலொன்று.

அவளை
உதட்டால்
அளந்துவிட,
பிறை
நெற்றியிலிருந்து
புறப்பட்ட
என் உதடுகள்
அவள்
உதடு கண்டதும்
மென்படுக்கையென
சில மணி நெரம்
படுத்துக் கிடக்கிறது.

அடடா..
விட்ட வேலை
என்ன ஆவது
என்று
வருந்தி
அங்கிருந்து
ஆரம்பித்து
மொட்டுகள் மீது
முட்டி நின்றது..

அவளது விரல்கள்
மெல்ல
என் உதடு
தொட்டு மூடுகிறது..

சொன்னது போதும்
எனை
வெல்லனும் வா என்று
வரவேற்கிறது..

ஐந்தாண்டுகள் கழித்து-
தாவியொன்று
தவழ்ந்தொன்று
என்று
இரண்டு முயல்கள்
இந்த
இரண்டு மான்களுக்கு.

அழகிய
பல்கலைகழகமானது
அந்த கூடு
அதுவே
எனது சிறு வீடு.

Monday, February 12, 2007

குங்குமத்தால் ஒரு புள்ளி - காதலர் தின ஸ்பெஷல் 3

எலுமிச்சை நிற
சுடிதாரில்
குட்டை டாப்ஸில்
அவள் வந்தாள்..

அப்படி அவள் வந்ததில்
அப்படியே
நான் வியந்து நின்றதில்
சிலையென நினைத்து
சில காக்கைகள்
என் மீது
எச்சிமிட்டு சென்றன..

காலேஜ் நோட்டை
மார்போடு
அவள் அணைத்து
வருகையில்,
எனக்கு கிடைக்காத
இடமென,
அந்த தவமென,
அந்த ஏட்டை
எரிக்க
தீக்குச்சி தேடுகிறேன்..

தேசிங்கு ராஜா போல
எனது
இயந்திரக் குதிரையில்
அவளை
கடத்திச் செல்கிறேன்..

சின்ன சின்ன
வேகத் தடைகளை
மெதுவாக
கடக்கையில்
உண்டான பயத்தில்
என் இடுப்பை
அவள்
பற்றுங் கணத்தில்
அதன் பின்னே
வந்த
வேகத் தடைகள்
எங்கள் வேகத்தை
தடை செய்யவில்லை..

வண்டியின்
வேகம் காட்டும்
ஸ்பீடோமீட்டர்
எங்கள்
இதய துடிப்பை
அளக்க நினைத்து
வழியிலே
அதன் முட்களை
பறிகொடுத்திருந்தது..

முதன் முறையாய்
என் தேவதையுடன்
நகர்வலம்
செல்கிறேன்..

எப்படித் தான்
இந்த
பறவைகளுக்குத் தெரிந்ததோ..
பறந்து வந்து
போகும் பாதையில்
பூக்களைத் தூவுகின்றன..

முதலில்
என்னை விட்டு
எட்டியே அமர்ந்திருந்தாள்..

என்னோடு
அந்த
வேகத் தடையில்
முட்டியவள்
அதன்பிறகு
காற்றைக்கூட
எங்கள்
இருவரிடையே
இருக்கவிடவில்லை..

பூக்களினாலான
தலையணையில்
தலை வைத்திருக்கிறேன்..
அவள்
மடி,
மலர் என்பதை
அண்ணா சாலையில்
ஹோர்டிங் வைத்தா
சொல்ல வேண்டும்...

அப்படி
படித்திருக்கும்
காலங்களில்,
அவள்
முகம் காட்டாது
சில
என் பார்வைகளுக்கு
திரைச்சீலை
இழுத்து விட்டிருந்தது..

மெல்ல குனிந்து,
அவள்
இதழால்
என் இதழை
தைக்கிறாள்,
முத்தம் என்னும்
முத்தான பெயரால்..

அப்படி
முத்தங்களை
அவிழ்த்துகொண்டிருந்த
அந்த
இதழ்கள்
என்ன
சக்கரை ஆலையா?

சட்டென்று
உடலின்
சக்கரை அளவு
அறுநூறை
தாண்டியது..

கொஞ்ச
நேரம்
அவள்
உதடுகள்
ஒட்டியதற்கே
தனது
காலனி மக்களை
கூட்டிக்கொண்டு
கட்டெறும்பு கூட்டம்
என் இதழை
மொய்க்க ஆரம்பித்தது..

அவளை
கொஞ்சம்
நினைத்துப் பார்த்தேன்..
உலக
தேன்களுக்கு
அவள் தான்
மொத்த ஊற்றோ!
ஹோல்சேல் டீலரோ!

அந்தப் பக்கம்
அலைந்த
வண்டு கூட
தேன் கிடைக்குமா
என்று
விசாரித்துப் போனதாம்
அவள்
இதழ் குவியலிடம்..

அப்படிக் கேட்கும்
கணத்தில்
பக்கத்தில்
இருந்த
கண்களை பார்த்தவுடன்,
கருப்பு நிறத்தில்
பூக்களா என்று
தங்கள் கூட்டத்தோடு
மாநாடு போட
கிளம்பிவிட்டதாம்...

இந்த
சந்தேகத்தை
தீர்த்து வைத்து
எந்த தருமி
பொற்காசுகளை
அள்ளப் போகிறானோ
வண்டு மஹாராஜாவிடம்..

அட!
ஒரு பானை
சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
என்பார்கள்..
அவளின்
ஒரு பாகத்தை
சொல்வதற்குள்
என்
தமிழுக்கு
தன் உதடு
சுளுக்கி விட்டதாம்..

மீதியை
சொன்னால்
மாண்டு போகுமோ!
என் தமிழை
வாழ வைக்க
இத்தோடு
இதற்கு
வைக்கிறேன் முற்றுப்புள்ளி!

அவள்
நெற்றியில்
நாளை வைக்கிறேன்
குங்குமத்தால் ஒரு புள்ளி!

[நாளை அனைவரும் வருக! இந்த காதல் ஜோடிகளை அன்பு இதயத்தால் வாழ்த்துங்கள்!]

Saturday, February 10, 2007

காதல் உளறல்கள் - காதலர் தின ஸ்பெஷல் 2

தையல் இயந்திரமாய் அவளுக்கான கனவுகளை என் இதயம் நெய்கிறது... தண்டவாளம் அருகே நடந்து சென்றாலும் என் இதயத்தின் ஓசை தான் ஊரையே எழுப்புகிறது... அது அவளை வரவேற்க வெடிக்கப்படுகிற இதயத்தின் வாணவேடிக்கை என்று காதுகளை திறந்து வைக்கிறேன்... நான் சொல்வது உண்மை.. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை என்று நான் வளர்த்த காதலின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.. அவளை முதன் முதலாக பார்த்தவுடன் என் இதயமும் ஈரலும் இடம் மாறி, ஈரல் இப்போது ரத்தத்தை சுத்திகரிக்கப் பழகி விட்டது.

அவள் நடக்கும் பாதையில் எல்லாம் அனைவரின் பார்வைகளும் அவள் பின்னே ஊர்வலம் போகின்றன. அந்த ஊர்வலத்தில் சிக்கிய குழந்தையாய் என் பார்வை மிதிபட்டு போகிறது. கருப்பு விழுதென தலையிலிருந்து கீழிறங்கும் அவள் கூந்தல் பிடித்து, மெல்ல மேலேறி, அவள் செவிகளில் சொல்லிவரத் துடிக்கிறது மிதிபட்ட எனது பார்வைகள், நான் அவளை காதலிக்கிறேன் என..

ஊரையே எழுப்பிய எனது இதயத்தின் ஓசை அவளையும் திரும்பி பார்க்க வைத்தது. நான் நினைத்துகொண்டேன், சூரியகாந்தி இப்போது தான் பரிதியின் பக்கம் பார்வையிட ஆரம்பிக்கிறது என்று. அவள் என்னை தேடித் தேடி பார்வை துழாவல்களை துவங்கும் போது, நத்தை தன் கூட்டுக்குள் முடங்குவது போல, நான் என்னை மறைத்து கொள்கிறேன். அவள் பார்க்காதவாறு நான் அவளை பார்த்து, அவள் மனசுக்குள் மெல்ல என்னை பற்றிய நினைவுச் செடியை ஊன்றி வைக்கிறேன். அது இப்போது பூக்க ஆரம்பித்து ஊருக்கே சொல்லிவிட்டது அது வெளிவிடும் வாசத்தில், அவள் காதல் செடியை சுமக்கிறாள் என்று.

ஒரு நாள், மழை.. மழையில் நனையவே விருப்பம் கொண்ட நான், குடை இருந்தும் நனைந்து வந்தேன். நான் நனைவதை பார்த்து, அச்சத்தில் மழையே என்னைவிட்டு சற்று தள்ளியே பொழிந்தது. தூரத்தில், தெருவிளக்கின் வெளிச்சங்கள் நிலவுக்கு ஓளி தர, குடை பிடித்து அவள் வந்தாள். நானும் அவளும் ஒரு புள்ளியில் சேர்ந்தோம். குடையில்லாமல் நான் வருவதை பார்த்து, என்னை குடைந்து விடும் வகையில் பார்த்தாள். குடைக்குள் வருமாறு அவள் என்னை விழியால் வரவேற்க, குடைபட்ட நான் குடைக்குள் ஒதுங்கினேன். கரைக்க மட்டுமே பழகிய மழையின் கைகளுக்கு ஒரு தாஜ்மஹாலை கட்டவும் தெரிந்திருக்கிறது. பூமியை தைத்து மட்டுமே பெய்து வந்த மழை ஊசிக்கு இரு இதயத்தை ஒட்டவும் தெரிந்திருக்கிறது.

அந்த ஈரமான மழை நாளில் தான், எங்களுக்குள் காதல் தீ பற்றிகொண்டது. விஞ்ஞானமே வியந்து போகும் அளவுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் எங்கள் இதயங்கள் இடம் மாறின. இந்த ஆச்சர்ய நிகழ்ச்சிக்கு அவள் பிடித்து வந்த குடையே கூடாரம், வான்மழையே ஆதாரம். அங்கே எங்கள் பார்வைகள் சந்திந்து கொண்டதில் பிறந்த மின்சாரக் கீற்றில், தரை விழுந்ததோ மின்னல், என ஊர் போர்வைக்குள் புகுந்துகொண்டது. வானம் கிழிபட்டு பொத்துக்கொண்டது.

அந்த நேரம், நெருங்கி அவளைப் பார்க்கும் போது தான் எனக்குள் கருவுற்றது ஒரு பயம். மீனிற்கு தண்ணீர் என்றால் கொள்ளைப் பிரியம். இந்த மழை நீரை நம்பி எங்கே அவள் கயல்விழிகள் வழுக்கி விழுமோ, நீந்தித் திரிய என்று. அப்புறம் அவள் விழித் தூண்டிலில் என்னைப் பிடித்து, ஊஞ்சலென ஆடவிட்ட போது தான் எனக்கு புரிந்தது. அடடா! இது சிறை படும் மீனல்ல, சிறைபடுத்தும் மீனென்று.

தேவதை அனுப்பிய பிள்ளையாருக்கு தேங்காய்கள் உடைத்தேன். சிதறிய தேங்காய்கள் பார்க்கும் போதெல்லாம், அவள் சிரிக்கும் போது சிதறும் என் இதயம் நினைவுக்கு வருகிறது. அதில் தெரிகிறது அவளது உதட்டின் தடங்கள், சிதறியதை தைத்துவிட்டு போன அடையாளங்கள்.

நிலைக்கண்ணாடி முன் நிலைகொள்ளாமல் ஆயிரம் முறை நான் தலை வாரிக்கொண்டதில், என் தலையும் சீப்பும் இப்போது காதலிக்கின்றன. கழற்றி கழற்றி மாற்றி மாற்றி ஆடைகள் அணிந்து கொண்டதில் என் தேகமும் உடைகளும் காதலிக்கின்றன. எனக்குள் ஊற்றெடுத்த காதல் மெல்ல காற்றில் பரவி எல்லோருக்கும் அதை ஊசியேற்றுகிறது. இப்போது என் தோட்டத்து முருங்கைப் பூவும் முல்லை பூவும் காதலிக்க ஆரம்பித்ததாக, அவள் தலையில் குடியேறிய ரோஜாப் பூ சொல்லிவிட்டு சென்றது..

மது அருந்தினால் உளறுவார்கள் என்று சொல்லக் கேள்வி. அட! அவள் உதட்டுப் பழங்களுக்கு அவ்வளவு சக்தியா என்ன! நேற்று வரை ஒழுங்காய் எழுதி வந்த நான் இப்போது என்ன எழுதுவது என்று திணறுகிறேன். வெறும் காகிதத்தை கையில் வைத்துக்கொண்டு கவிதை எழுதிவிட்டதாய் ஒரு பதிவையும் போடுகிறேன்.

சரி! மறந்து விடுங்கள் இந்த பதிவை! தூரமாய் தெரியும் இடத்திற்கு வாருங்கள், என் இதயத்தை கண்காட்சிக்கு வைத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் முகவரியை பதித்துவிட்டுப் போங்கள். நாளை அந்த முகவரிகள் எனக்கு உதவலாம்!

Thursday, February 08, 2007

நடுங்கியபடி நான், நாணியபடி அவள் - காதலர் தின ஸ்பெஷல் 1

மற்றவர் முன்
கபடியாடும் எனது
உதடுகள்
உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை..

நேர் பார்வையில்
நோக்கியே
உலகம் பார்க்க
பழகிய நான்
உன்னைக் கண்டதும்
பூமி பார்த்து
பள்ளம் பறிக்கிறேன்..

ஆற்றில் மீன் பிடித்து
ஆட்டம் போட்ட நான்
உன் கயல்விழிகளில்
சிறை பட்டு
நீந்த மறந்தேன்..

ஆயிரம் பேர் கொண்ட
கூட்டத்தோடு
குலாவிக் கிடந்த நான்
உன் கூந்தல் காடுகளில்
கூடு கட்டுகிறேன்..

இப்படி நிறம்
கொண்ட ஆப்பிளை
எந்த கடையிலும்
பார்த்ததில்லை..
கடிக்கச் சொல்லும்
உன் சிவந்த
கன்னம் மட்டுமே
எனக்குத் தெரியும்..

என்னை
கடந்து போன போது
நீ
நடந்து சென்ற
உன் ஒவ்வொரு
பாதச் சுவடுகளிலும்
மறுபடியும்
நடந்து பார்க்கிறேன்..
யாரெங்கே
ரோஜாக்களை
மலர விட்டது..

இப்படியெல்லாம்
தமிழின் முதுகேறி
கவிதை என்று
பல
கிறுக்கி வைத்திருக்கிறேன்

இந்த
காதலர் தினத்திலாவது
காதல் குதிரையேற
காதலி
கிடைப்பார்களா..

நடுங்கியபடியே
நான் கொடுக்க
நாணியபடியே
இந்த கவிதையை
வாங்க..

இருந்து
விட்டு போகட்டும்
என்று
இப்போது தான்
பிள்ளையாரை
சுற்றி வருகிறேன்..

காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்

கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..

அப்படி
அவள் கிடைத்தாலும்
அவளின் முதல்
பார்வையிலே
என்
இதயமும் ஈரலும்
இடம் மாறியதா
என்று
இங்கு
எழுதியும் வைக்கிறேன்..

காதலர் தின ஸ்பெசல் பதிவுகள் எல்லாம் மொத்தமாய் ஒரு கதையாகச் சொல்லப் போகிறேன்.. இது தன் நிழல் அமர்ந்த இடத்தில் ஒரு நிஜம் அமராதா என்று ஏங்கும் ஒருவனின் இதய இசைக் கோலத்தின் முதல் புள்ளியே..

[நாளை மறுபடியும்]

Tuesday, January 30, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில் 2

முதல் பகுதி

காதல் என்ற வானத்தில் பறவைகள் ஏராளம். நாங்கள் மட்டுமல்ல, என் வகுப்பில் இன்னும் சில பறவைகளும் இருந்தன. எங்களை போல காதலை மண்ணுக்குள் புதைத்து வளர்க்காமல், தேசிய கொடியை போல உயரத்தில் பறக்க விட்டு வாழ்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் அவர்கள் இருவரும் விளையாட்டுபிள்ளைகள். தினமும் நூறு முறை சண்டையிடுவார்கள். ஆயிரம் முறை சேர்ந்துகொள்வார்கள். அவர்களும் அந்த சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.

அவள் என்னை கையசைத்து அழைக்க, டிரைவரின் எதிர்புறம் அமர்ந்திருந்த நான் அவள் இருக்கை நோக்கி நடந்தேன். ஓடிய திருடனை பிடிக்க போலீஸ் போகும் போது இடையில் திடீரென ரயில் வண்டி வந்துவிடுவதை போல, திடீரென்று என் நண்பனின் காதலி, எனக்கும் தோழி தான், கோபமாக வந்தாள் பின்னிருக்கையில் இருந்து. நான் என்னவளின் இருக்கை பக்கத்தில் வர, அவள் பக்கத்தில் இவள் வந்து அமர்ந்தாள். விதி என்பதன் சதங்களையும், அது அடிக்கும் நாலையும் ஆறையும் பார்த்து கை தட்டுவதா, தலையில் கொட்டுவதா என்று தெரியாமல், வந்த வழியே திரும்பினேன். அவள் என்னைப் பார்த்தாள். அதில் என்றையும் விட ஏமாற்றமும், கண்களின் ஓரம் ஒரு துளி நீரும் தேங்கி நின்றது. முதன் முதலாய் எனக்காய் அவள் இதயத்தின் கூட சேர்ந்து கண்களும் அழ ஆரம்பித்தது. தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன. மறுபடியும் என் இருக்கையில் அமர்ந்து இருக்கையில், வேகமாக வந்த என் நண்பன், அவளின் காதலன், அவள் இருக்கையின் கீழே அமர்ந்து, அவள் மடியில் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தான். நான் என்னவளை பார்த்தேன்.

எதிர்புறம் வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்தில், அவள் முகம் மறைந்து மறைந்து தெரிய ஆரம்பித்தது. மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவை போல அந்த இருட்டான வாகனத்தில் எனக்கு அவள் தெரிந்தாள். இடுப்பேறி அமர்ந்து பருப்பு சாதம் சாப்பிட்டு நிலவை கண்டு ஏமாந்து போகும் கைகுழந்தையை போல நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள்-

நேற்று நடந்த ஏமாற்றங்கள் நெஞ்சில் நிறைந்து கிடந்தாலும், அதற்கு அவள் காரணமில்லை என்று புரிந்திருந்தது மனசுக்கு. காலையில் வழக்கம் போல கேன்டீனில் நான் சாப்பிட, அவளை துணைக்கு அழைத்தேன். அவளும் வந்தாள். நான் என்றும் போலவே அவள் கூட பேசிக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கூட நடந்து வருவதை நிறுத்தினாள்.

கோபமா என்று கேட்டாள்.. உன் மீதில்லை என்றேன்.. சுற்றுலாவை விடு. இன்னும் இருக்கும் முப்பது நாட்களும் நான் உன்னருகே தான் இருப்பேன். நானென்ன செய்வது. நான் உன்னை அழைத்த போது, விதியை அழைத்ததாக அது வந்து என்னருகில் அமர்ந்து கொண்டது என்றாள். நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள். அதைப் பார்த்த, பக்கத்தில் இருந்த மரத்தின் இலைகளெல்லாம் மலராக மாறியது. இலையே மாறும் போது, நாமென்ன என்று நினைத்ததோ என்னவோ, அதன் வேர்களும் பூவாய் விரிந்தது.

அடுத்து வந்த அத்தனை நாட்களும் என் கூடத் தான் இருந்தாள். வகுப்பின் இருக்கையில் இருவரும் சேர்ந்தே அமர்ந்தோம். எனக்காய் ஏடுகளில் அவள் எழுதினாள். அவளுக்காய் நான் அவளை ரசித்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது பிறப்பாய் தெரிந்தது. நானும் தினமும் மூழ்கி முத்தெடுத்தேன். முத்தாய் அவளே மறுபடி மறுபடியும் கிடைத்தாள். இப்படியாக சென்ற ஒரு நாளில், மழை பெய்து தரையெல்லாம் புது வண்ணமடித்த நாளில், வகுப்பில், யாருமே இல்லாத ஒரு பொழுதில், ஜன்னலில் முகம் தேய்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் அவள். நானும் எழுதிய ஏட்டை மூடிவைத்து அவளருகில் சென்று நின்றேன். மெல்ல அவள் இடை பற்றி, பின்னால் இருந்து அணைத்தேன். நான் அணைத்தவுடன் அவளுள் இருந்த பெண்மை பிரகாசமாய் விளக்கேற்றி வைத்தது. என் மூச்சுகாற்று தான் அந்த விளக்கை ஏற்றி வைத்ததோ. மெல்ல திரும்பி, என்னைப் பார்த்து நாணமாய் சிரித்து, எனது கைகளை விடுவித்தாள். ஆனால் அதை பற்றி அவள் ஏதும் கேட்கவில்லை. நானும் ஏதும் தொடங்கவில்லை.

கடைசி நாள்-

இருவரும் ஒரே பெஞ்சில்.. அவன் கைகளை பற்றிக்கொண்டே அவள் இருந்தாள், கடலடியில் மண்ணைப் பிடித்த நங்கூரம் போல.. எதுவும் பேசவில்லை. கடிகாரத்தின் முட்கள் மட்டும் மணிக்கொரு தடவை பேசிக்கொண்டன. முத்தமிட்டுக்கொண்டன. மௌனமாகவே காற்று கூட நடை போட்டது. சூரியன் கூட என்ன செய்கிறோம் என்று எட்டி பார்த்துவிட்டு சென்றான். அன்றைய பொழுது எழுந்து செல்கையில், அவள் என் கை பிடித்து கொடுத்த முத்தமும், காதில் சொன்ன ஐ லவ் யூவும் தான் இன்று வரை என் இதயதில் உலராமலும், லப் டப் ஓசைக்கு பதிலாகவும் உயிரூட்டுகிறது

(இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது)

Monday, January 29, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்

ஏதேச்சையாகத் தான் அமைந்தது. இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று வேப்பமரத்தின் கீழே கட்டிலில் படுத்து மேலிருக்கும் இலைகளை எண்ணிக்கொண்டிருந்த அந்த பொழுதும் சரி, வீட்டில் விட்டத்தை பார்த்து பெயர்ந்த சுவர்களை கவனித்து கொண்டிருந்த அந்த மீசை முளைத்த காலத்திலும் சரி நினைத்ததில்லை நான். அது கல்லூரியில் இருந்து போன சுற்றுலா தான். ஆனால் அது ஏதோ தனியாக நானும் அவளும் நடத்திய ஊர்வலமாகத்தான் எனக்கு நெஞ்சில் பதிந்து போனது.

முதல் நாள் கிளம்பும்போதே, அவள் சொன்னாள்.. மற்றவர்களுக்காக, மற்றவர்கள் நம்மளைப் பற்றி கதைப்பார்கள் என்பதற்காக உன் கூட நான் இதுவரை, நான் நினைத்த வண்ணம் பழகியதில்லை. எல்லா உணர்ச்சிகளையும் இலை மறைத்த காயை போலவே மனதுள் அடக்கி இருந்தேன். ஆனால் பழுத்த பின், பறவைகளுக்கு தெரியாமலா போய் விடும். இதோ இன்னும் முப்பது நாட்கள் தான் இந்த கல்லூரி வாழ்க்கை. அதற்கடுத்து, நாம் இருவரும் பேசிக்கொள்வது கூட, கடவுள் பக்தன் உறவு மாதிரி தான். உன் அருகே இருக்க நினைத்த இந்த இரண்டு வருடங்களும் தூரமாய் இருந்தேன்.. ஆனால் எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமலா போய் விடும், உனது சில்லென்ற பார்வை போல.. அந்த சில்லான பார்வை தான் எனது இதயத்தை உருக்கி, ஒரு வேதியியல் அதிசயத்தை நடத்தியே விட்டது.

இந்த சுற்றுலாவில் மட்டுமாவது உன் அருகிலே நான் அமர்ந்து இந்த உலகத்தை ரசிக்கிறேன். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்து இளகிய சுவர்களை இறுக்கமாக்கி, அவசரமாய் பதிப்பித்துகொண்டது.. இன்று அதனை படிப்பதற்காக நான் அன்று அச்சிட்டுக் கொண்ட புத்தகப் பக்கங்கள் அவை.

மனசுக்குள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், நடக்காத சில விஷயங்களுக்காக அந்த ஆசைகளை எரித்துக்கொண்டோம், எங்களுக்குள் சொல்லாத காதல் முளைவிட்ட போது. இப்போது பிரிகின்ற வேளையில், வேருக்கு வேறிடம் போவது பிடிக்காமல் அந்த மண்ணோடு சில பொழுது மயங்கிகிடக்க விரும்புகிறது..

சுற்றுலாவும் இனிதே தொடங்கியது.. போகும் வழியில் ஆட்டமும் பாட்டமும், கூத்தும் கும்மாளமும் நிகழ்ந்தது. அவள் அவள் தோழியுடனும், நான் எனது நண்பர்களுடனும், எனது நண்பர்கள் அவள் தோழியுடனும் என்று ஒரு தனியுலக இளமைகொண்டாட்டங்களே அங்கு நடந்தது.. அவ்வளவு கும்மாளம் அங்கே கூத்தடித்தாலும், நானும் அவளும் மட்டும் தனித்தே கிடந்தோம். தரையில் பட்ட பாதரசம் அதன் மீது ஓட்டாதவாறு.. தாமரை இலையில் பட்ட நீர்த்துளி அதில் பட்டு நழுவுமாறு.. அவ்வப்போது அவள் என்னை பார்வையால் மென்றாள். அந்த பார்வையில் நான் மெழுகாய் உருகிப்போனேன்.

போகும் வழியில், சாப்பிட உட்கார்ந்த போது கூட, எதிர் எதிரே தான்.. அவள் ஒரு மெல்ல, மல்லிகைப்பூ இட்லி என்று சொல்வதாலோ என்னவோ, மல்லிகை பறிப்பது போல, அதை பறித்தெடுத்து, குவித்த விரல்களில் பிடித்து, இதழ் படாமல் சுவைத்தாள்.. அதை பார்த்ததாலே ஒரு தட்டு இட்லிக்கு எக்ஸ்ட்ராவாக பில்லைக் கட்டினேன்..

அவள் சொன்ன திட்டம் விதி என்னும் ஆளுக்கு கேட்டதோ என்னவோ.. அவன் வந்து பசைபோட்டு அவளருகில் அமர்ந்திருந்தான். அவளுக்கோ சுற்றியுள்ளோரை கண்டு பயம். முருங்கை மரம் ஏறி எத்தனையோ முறை வேதாளத்தை நான் பிடித்து வந்தாலும், அது மறுபடியும் மரமேறி, தலைகீழாய் ஊஞ்சலாடி, என்னை பார்த்து இளித்தது. அவள் மனதுக்குள் ஒரு தராசில் காதல் உணர்வும் மற்றொன்றில் சமுதாய பயம், பெற்றோர் பாசம், போன்றவை மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டிருந்தன.

எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கூட நாங்களிருவரும் இரண்டு ஓரத்திலும் தான்.. நான் அவளது தோழிகளுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துகொண்டேன்..அவள் என் நண்பர்களுடன் எடுத்துகொண்டாள்.. இருவரும் சேர்ந்து ஒன்று கூட இல்லை. அவள் என்னை எடுத்தாள்.. நான் அவளை எடுத்தேன்.. இப்படியே போனது அந்த பகலெல்லாம்..

சுற்றுலா சுற்றுலா என்று எல்லா இடமும் சுற்றியே வந்தோம். ஆனால் அவள் சொன்னது போல் அவளருகில் நானோ என்னருகில் அவளோ அமரவில்லை. எங்களுக்கு பதில் விதி இருவருக்கிடையில் கால் நீட்டி படுத்துக்கொண்டிருந்தது. அப்புறம் எங்கே மன்மதன் வந்து பாணமெய்வது.. ரதி வந்து நாணம் கொள்வது. திரும்பப் போகும் வழியில், சூரியன் அமெரிக்காவுக்கு வெளிச்சம் தர போயிருந்த வேளை, எங்கள் வாகனம் புறப்பட்ட இடத்தை நோக்கி பின்னால் புகைவிட்டு போய் கொண்டிருந்தது. மெல்ல என்னை சைகையால் அழைத்தாள் அவள். நானும் என் இருக்கை விட்டு, மெல்ல எழுந்தேன், அவள் அருகில் அமர..

(நான் அமர்ந்தேனா, படுத்து கிடந்த விதியை தள்ளிவிட்டு.. நாளை தொடரும்)