Thursday, May 24, 2007

பாதயாத்திரையில் அவளின் சந்திப்பு

பாதயாத்திரை போவதென்பது பக்தி கலந்த ஒரு அலாதியான விஷயம். எங்க ஊர்ல வேளாங்கண்ணி மாதாவிற்கும் பழநி முருகனுக்கும் மாலை போடுவார்கள். இப்பொழுது சபரிமலை ஐயப்பனுக்கும் மாலை போட்டு விரதமிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து இந்த வருஷம், பங்குனி முடிந்ததோடு கடந்த இருபது வருஷமாக பழநிக்கு மாலை போட்டு பாதயாத்திரை சென்று வருகிறார்கள், எங்கள் ஊரிலிருந்து.

எனக்கு எட்டு வயது இருக்கும் போது முதன் முதலாக பழநிக்கு பாதயாத்திரை போனேன். எங்கள் ஊரிலிருந்து பழநிக்கு 61 கிலோமீட்டர். முதல் நாள் சாயந்திரம் கிளம்பினா, அடுத்த நாள் இரவு தான் பழநி போய் சேருவோம். எங்கள் ஊரிலிருக்கும் சில பேர் அடுத்த நாள் பத்து மணிகெல்லாம் ஊரில் இருப்பார்கள், சாமியை பார்த்துவிட்டு. தினமும் சிறுமலைக்கு ஏறி இறங்கி பழக்கம் அவர்களுக்கு. அவ்வளவு அசுர நடையர்கள் அவர்கள்

அந்த சின்ன வயதில் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியல. என்னுடன் சேர்ந்து நடந்து வந்த என் மாமா, சித்தப்பாக்கள் தான் என்னை தூக்கி சென்றனர். இதே மாதிரி தான், ஜானகி எம்.ஜி.ஆர் மதுரையில் முதல் மாநாடு தமுக்கம் மைதானத்தில் நடத்திய போதும் என்னை இதே போல் தான் அவர்கள் அந்த மாநாட்டு திடலில் தூக்கிய வண்ணம் இருந்தனர்.. அடுத்த முறை போனபோது அவர்கள் என்னை சுமக்க முடியாத அளவு நான் வளர்ந்து விட்டேன். அதனால் பாதி தூரம் நடந்தும் மீதி தூரம் பஸ்ஸிலுமாக சென்றேன்..

மூன்றாவது முறையாக நான் பதினோராவது வகுப்பு படிக்கும் போது பாதயாத்திரை சென்றேன். எப்போதும் பங்குனி உத்திரத்திற்கு நடந்து செல்பவன், அந்த தடவை என் நண்பர்களுடன் சேர்ந்து தைப் பூசத்திற்கு சென்றேன். அந்த பாதயாத்திரை இன்னும் மறக்க எனது இளமைகால நாட்களின் சம்பவங்களில் ஒன்று. நல்ல அனுபவம். பல ஊர்களிலிருந்து வரும் நிறைய பேரிடம் இரண்டற கலந்துபழகும் வாய்பு கிடைத்தது.

அப்படி பாதயாத்திரை சென்று திரும்பி வரும் வேளையில், திண்டுகல்லிற்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தோம். எங்கள் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைசி நிறுத்தம் செல்வதற்கு ஏறுபவர்களுக்கு தான் அமர இடம் கிடைக்கும். இடையில் இறங்கும் ஆட்களை வண்டியில், வண்டி கிளம்பும் வரை ஏறவிட மாட்டார்கள். அதுவரை எனக்கும் அது கொடுமையான அனுபவத்தை தந்த விஷயம். அன்றைக்கும் அதுவே எனக்கு அழகான மலரும் நினைவுகளாய் இன்று என்னை நினைக்க வைக்கும் அளவிற்கு தருணம் அது.

நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக ஒரு பொண்ணுங்க கூட்டம் வந்தது. எல்லாம் கேரளாவை சேர்ந்தவர்கள். ஓட்டன்சத்திரம் பள்ளியில் படிப்பவர்கள் போல. ஆயிரம் விண்மீன்கள் இருந்தாலும் பளிசென்று நிலா தெரிவது போல, என் அருகில், வட்ட முகம், கரு கரு விழிகள் (அப்படியே கேரளத்து கண்கள்), கவுன் போட்டுகொண்டு ஒருவள் இருந்தாள். பார்த்தவுடன், ஃபெவிகால் உதவியில்லாமல் நெஞ்சில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் பாந்த முகம்..சாந்த முகம்..காந்த முகம்.. பஸ்ஸிள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவள் சிரிக்கும் போதெல்லாம், கண்டெக்டர் தனது சில்லறை பையை கீழே கொட்டிவிட்டாரோ என்று நினைக்கத்தோனும்.

நானும் அந்த வயதுக்கே ஊரிய குறும்புடன் அந்த பெண்ணுடன் அரைமணி நேர பயணத்தை கண்களில் பேசிய கடந்தேன். இந்த இடைப்பட்ட வெளியில், அவளுக்கும் தெரிந்துவிட்டிருந்தது, அவளுக்காய் ஒரு ஜீவன் மெழுகாய் பக்கத்தில் உருகுகிறது என்று.. அவள் பஸ்ஸை விட்டு இறங்கும் போது கடைசி படியில் நின்றுகொண்டு, என்னை திரும்பி பார்த்த ஒரு பார்வையில், இதயம் ஒரு முறை துடிப்பை நிறுத்தி அந்த பிரிவை தாங்காமல் கதறியது.அவள் முகம் இப்போது மறந்து போனாலும், அப்போது எனது வாலிப வயசில் அவள் உருவாக்கிய, அவள் எனது மனதின் தெருக்களில் நடந்து போன அந்த பாதச்சுவடுகள் இன்னமும் அப்படியே இருக்கிறது. எப்போதெல்லாம் பழநி பாதயாத்திரை பற்றி நினைப்பேனோ அப்போதெல்லாம், அந்த நினைவுக் குதிரையில் ராணியாய் சவாரி செய்து வருவாள் அவள். எப்படி நமக்கே தெரியாமல் நமது இதய சிம்மாசனத்தில் தற்காலிகமாக எத்தனையோ பேர் உட்கார்ந்து சென்றிருப்பார்கள் அதில் இவளும் ஒருவள்.

Wednesday, May 23, 2007

கொலைகாரனை கண்டுபிடிக்க உதவிய ஆர்குட்

இந்த செய்தியை பற்றி வளவள கொழகொழன்னு நான் பேசுறதை விட, நேரா இந்த இடத்துக்கு போய் நீங்களே படிச்சுக்குங்க நண்பர்களே..

Tuesday, May 22, 2007

குதிரை பந்தயங்கள்

சில சமயங்களில் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்வது சற்றே அலுப்பை தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. இத்தனை மாதங்களில், கிட்டதட்ட பதினைந்து மாதங்களில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டதே இல்லை, இங்கே எழுதுவதில். ஆனால், புதிய பொறுப்புகளும், வேலை பளுவும் இந்த முறை இந்த இடைவெளியை ஏற்படுத்தியதென்பது உண்மை.. எழுதவில்லை என்றால் கூட பரவாயில்லை, நாட்டாமை மாதிரி எல்லா நண்பர்களின் பதிவிற்கும் சென்று பின்னூட்டமாவது இடலாம் என்றால் அதற்கும் வழியில்லை.. பத்து ஆணி இருக்கும் போதே, இன்னும் நூறு ஆணியை நம்ம முன்னால் கொட்டிவிடுகிறார்கள்.. புடுங்கு ராசா என்று தட்டிக் கொடுக்கிறார்கள், பலியாட்டிற்கு கழுத்தில் பூமாலை போடுவதை போல...

இரண்டு வாரங்களுக்கு முன்னால், கோடைகால சுற்றுலாவை துவக்கிவைக்கும் முகமாக இரண்டு நாட்கள் மினி சுற்றுலா சென்று வந்தேன் நண்பர்களுடன்.. அமெரிக்காவில் வருடத்திற்கு மூன்று முறை நடக்கும் டெர்பி ஷோவிற்கும் போகும் வாய்ப்பு கிட்டியது. வருடத்தின் முதலில், இது கென்டகி மாகாணத்தில் இருக்கும் லூயிவில்லில் நடந்த அந்த குதிரை போட்டிக்கு (நம்ம கிண்டி குதிரை ரேஸ் மாதிரிதாங்க) சென்றோம்.. காலை பதினொரு மணிக்கு ஆரம்பிக்கும் ரேஸ், ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை நடத்தப் பட்டது. இதற்கிடையில் அந்தந்த போட்டிகளுக்கு, உங்களுக்கு பிடிக்கும் குதிரை மேல் பணத்தை கட்டலாம்.. எந்த சுற்றில் எந்த குதிரை ஜெயிக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். பெரும்பாலும் அதன் படி தான் நடக்கிறது.. அப்புறம் அதற்கேன், இப்படி ஒரு போட்டி என்பதும் விளங்காதது தான்.

அன்று மட்டும் இந்த குதிரை பந்தயத்தை காண வந்தவர்களிடம் வசூலித்த நுழைவு கட்டணமே (நுழைவு கட்டணம் 40 டாலர்) பத்து பணிரெண்டு லட்சம் டாலர்களை கடந்திருக்கும்.. சுற்றியிருப்பவர்கள் நன்றாக பரப்பதற்கு வசதியாக ராட்சத திரையில் வீடியோவாகவும் இதை ஒளிபரப்புகிறார்கள். உள்ளே பீர்கள், நம்ம ஊர் தண்ணீர் பந்தலை போல, சின்ன சின்ன ஷாமியான பந்தல்களின் கீழே விற்கப்படுகிறது.

நான் இருந்த ஒரு நான்கு மணிநேரத்தில் கிட்டதட்ட நானூறு வகையான தொப்பிகளை கண்டேன் அங்கே.. %^$ வந்திருக்கும் மக்கள் எல்லோரும், நானிருப்பது அமெரிக்காதான் என்பதை பறைசாற்றினார்கள். மும்தாஜ், ரகசியா எல்லாம் தோற்றுவிடவேண்டும், இவர்களின் ஆடை சிக்கனத்தில்.. மாலை ஆறு மணிஅளவில் தான் பெரிய போட்டியே நடக்கும். அதுவரை வசூலித்த காசையெல்லாம், மொத்தமாக போட்டு நடக்கும் போட்டியது.. நாங்கள் அங்கிருந்து ஸ்மோக்கி மலைக்கு செல்லவேண்டியிருந்ததால், மதியம் இரண்டுமணியளவிலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.. ஆனால் அதற்கு பிறகு தான் கூட்டம் கட்டுங்கடங்காமல் பெருக ஆரம்பித்தது... உள்ளேறும் கூட்டம் ஐநூறென்றால், வெளியேறுவது இருபதாய் கூட இல்லை.

இத்தனை வருட காலம் சென்னையில் இருந்தும் கிண்டியில் நடக்கும் போட்டியை பார்த்ததே இல்லை.. இன்னும் கிண்டியில் ரேஸ் நடக்கிறதா இல்லை தடை செய்துவிட்டார்களா? நமக்கு குதிரை மீது பணம் கட்ட ஆசையில்லை என்றாலும், இது போன்ற குதிரை பந்தயத்தை கிண்டியில் பார்க்கவேண்டுமென்பது சிறுவயது ஆசை.. மிஸ்டர் பாரத்தில் ரஜினி என்னம்மா கண்ணு என்று பாடும் போதும், ஜல்லிக்கட்டில் சத்யராஜ், மலேசியா வாசுதேவனை துரத்தும் போதும், பார்த்தது தான் இந்த கிண்டி மைதானத்தை.. அதன் பிறகு, பஸ்ஸில் வேளச்சேரியில் இருந்து கிண்டிக்கோ, சைதைக்கோ போகும் போது எட்டி பார்த்ததுண்டு.. உள்ளூரில் நிறைவேறாத ஆசை வெளிநாட்டில் வந்து நிறைவேறி இருக்கிறது..

இந்த இடைவெளியில், என் மச்சான் அம்பியின் திருமணம் இனிதே சென்னையில் நடந்தேறியது.. வாழ்த்துக்கள் மச்சான்!

இன்று, மே 23-இல் பிறந்த நாள் கொண்டாடும் அமைச்சர் பொற்கொடிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Monday, May 14, 2007

பிறந்தநாள் புகைப்படங்கள்

FAIR & LOVELY இல்லீங்கோ.. கேக்கு தானுங்கோ




முட்டையபிஷேகம் இவனுக்கே..

யாரோ..தப்பா முட்டை தக்காளி எல்லாம் போட்டு ஆம்லேட் ரெடி பண்ண ட்ரை பண்ணிட்டாங்கப்பா




வாழ்த்த வந்த நண்பர்கள் கூட்டம்





தொலைபேசி மூலம் வாழ்த்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து பாசத்தோடு வாழ்த்து, தாமத வாழ்த்து.. இப்படி இவனை வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. நன்றி..

இன்று தங்கமணியின் கரம் பற்றி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொட் தொடங்கும் அம்பிக்கு பிளாக் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

Saturday, May 12, 2007

அபிஷேக நேரத்தில்...

ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி, இங்க இருக்க யாருக்கவது ஒருத்தனுக்கு பிறந்தநாள்.. யாருக்கு பிறந்தநாள்னாலும் ராத்திரி பனிரெண்டு மணிக்கு, கேக் வெட்டுறது எங்க வழக்கம். எப்போ பாத்தாலும் சும்மா முழுகுவர்த்தி அணச்சு, கேக் வெட்டுறதுன்னு சின்னபுள்ளத்தனமா நடந்துகிட்டு இருந்தது.. வந்த புதுசுல நான் அமைதியா இருந்தேன்.. இங்க இருக்க மக்கள் நல்லா பழக்கமானங்க.. அவ்ளோ தான்.. அதுக்கு பிற்கு கேக் வெட்டின பிறகு, முட்டை, தக்காளி, தக்காளி சாஸ்.. இன்னும் என்ன என்ன கைல கிடைக்குதோ அதெல்லாம் அபிஷேகமாய் தலையில் இறங்கும்.. அடுத்து வந்த ஒவ்வொரு பிறந்த நாள்லயும் அது அதிக ஆச்சு.. ஷேவிங் கிரீம், கெட்டுப்போன வாழைப்பழம், அன்னிக்கு வச்ச குழம்புன்னு ஒரு பெரிய மசாலா ஐயிட்டங்களே இறங்கும்.. இவ்வளவு செஞ்ச நமக்கு, என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப்பாருங்க...

நேத்து நைட் சமயல் ரூம்ல என்ன என்ன இருக்கோ எல்லாம் நம்ம மேல பூசிட்டாங்க.. பாக்குறதுக்கு அந்நியன் படத்துல சிக்கன் 65 போடுறதுக்கு முன்னாடி ஒருத்தன் மசாலா ஐயிட்டங்கள் பூசி இருக்க மாதிரி நம்ம மேல கெட்ட ஐஸ்கிரீம், அழுகின வாழைப்பழம், சேவிங் கிரீம், தக்காளி சாம்பார் எல்லா அபிஷேகமும் நடந்தது.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு சும்மாவா சொல்றாங்க...

நேத்து இரவு புது நம்பரை காமிச்சுகிட்டு, ஒரு போன்கால்.. எடுத்தா ஒரு பொண்ணோட ஸ்வீட் வாய்ஸ்.. அட.. ஹலோ..யாருன்னு கண்டுபிடியுங்க.. ஆஹா! நம்மளை வச்சு காமெடி கீமடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே..
G3யா..
இல்ல..
மை பிரண்ட்..
தல..நானே தான்..
இப்படித்தான் நேத்து முழுக்க நமக்கு சர்பிரைஸ்.. நம்ம மேல பாசத்தை வச்சு வாழ்த்துச் சொன்னாங்க..

நம்ம பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

நம்ம தோழி மை பிரண்ட் நம்ம மேல பாசத்தை காட்டி போட்ட போஸ்டை பாருங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்கள் விரைவில்..

Monday, May 07, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 4

மூன்றாம் பகுதி

சின்ன வயசுல நான் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது வழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. எல்லோரும் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது விளையாண்டது கண்ணாமூச்சி விளையாட்டாத்தான் இருக்கும். இதுலயே நான் இன்னும் கொஞ்சம் வித்தியாசமா விளையாடி இருக்கேன். அதுக்கு பேரு பணியார கண்ணாமூச்சி.

ரெண்டு அணியா இருந்தா தான் இது நல்லா இருக்கும். ஒரு அணி ஒரு இடத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் காத்திருக்கணும். இன்னொரு அணி எல்லாப் பக்கமும் போய் பணியாரம் மாதிரி சின்ன சின்ன தாய் மணலை குவிச்சு வச்சுட்டு வருவாங்க. இந்த விளையாட்டுக்கு எல்லையெல்லாம் உண்டு. இந்த தெருக்கள் தான் அப்படின்னு ஒரு வரமுறை வச்சு தான் விளையாடுவாங்க. அப்படி பணியாரம் சுடப் போன அணி வந்து சொன்ன பிறகு, கத்திருந்த அணி அந்த பணியாரத்தை கண்டுபிடிக்கப் போவாங்க. எத்தனை பணியாரத்தை அவங்க கண்டுபிடிக்கிறாங்க அப்படிங்கிறதுல தான் பாயின்டே.

இது இல்லாம பச்சக் குதிரை. இந்த விளையாட்டு ஒரு தடவை விளையாண்டு அப்படியே என் நெஞ்சு தரைல பட நான் விழுந்து.செத்தடா நீன்னு அலறியதெல்லாம் உண்டு. ஒவ்வொரு தடவையும் தாண்டுற உயரம் கூடறப்ப எல்லாம் நம்ம மனசு சேர்ந்து பயத்துல குதிக்கும்.

கோலிகுண்டு எல்லோரும் விளையாடுறது. பெரியவங்க காசு வச்சு பந்தயம் கட்டி விளையாண்டா சின்ன பசங்க எல்லாம் சினிமா பிலிம்க்காகவும், குத்துப் படத்துக்காகவும் விளையாடுவோம். குத்துப்படம் விளையாட்டே தனி தான். தீப்பெட்டி மேல ஒட்டுற அந்த வண்ண பேப்பர், சீட்டு தான் மூலதனம். அதுமாதிரி நிறைய கம்பெனி பேப்பர் விப்பாங்க. அதை எல்லாம் நாம கைல வச்சுக்கனும். எதிராளியும் வச்சு இருப்பான். ஒவ்வொரு படமா எடுத்து வைப்பான். இப்படி எடுத்து வச்சு விளையாடுறப்போ, நாம எடுத்து வைக்கிற படத்தையே எதிராளியும் வச்சா, அதுக்கு கீழ இருக்க எல்லாப் படமும் அவனுக்குத் தான் சொந்தமே. ஆயிரம் சீட்டு இருந்தாலும் சில நேரம் போண்டியா ஆனதெல்லாம் உண்டு.

எல்லோருக்கும் தெரிஞ்ச விளையாட்டு கிட்டி தான்.அதாங்க கில்லி. எங்க ஊர் பக்கம் அதை கிட்டின்னு தான் சொல்வாங்க. அந்த கில்லியை வச்சு அடிக்கிறதுக்குன்னே பல ஸ்டைலே இருக்கும். சில பேர் பின்னால திரும்பி குழில இருந்து தள்ளுவாங்க. சில பேர் சோடா குத்துன்னு, அந்த நீள குச்சியின் முனையை பூமில அழுத்தி நடுல ஓங்கி அடிப்பாங்கா. ஆனா இதுல ஆபத்து நிறைய இருக்கு. இன்னும் தழும்பு இருக்கு ரொம்ப பேருக்கு இது விளையாடினதுல.

பம்பரம் விளையாடாதவங்களே இருக்க முடியாது. பம்பரத்தை கைல வச்சு, சாட்டை சுத்தனும். அதை சுத்தி பம்பரத்தை கீழ சுத்த விட்டு, மறுபடியும் சாட்டையால எடுக்கனும். அப்படி எடுக்காதவங்க பம்பரத்தை ஒரு சின்ன வட்டம் போட்டு நடுல வைப்பாங்க. அந்த பம்பரத்தை, ஆக்கர் குத்தி, அதாங்க ஆணியை வச்சு குத்தி உடைக்கனும். இது தாங்க பந்தயம்.இப்படி எத்தனையோ பேரோட பம்பரம் ரெண்டா எல்லாம் உடஞ்சிருக்கு.

இதெல்லாம் விட ஒரு குரூப் சின்ன பசங்க இருக்காங்க. இந்த பில்லி சூனியம் எங்க ஊர்ல செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க அந்த சூனியத்தை எலுமிச்சம் பழம், மைதா மாவுல உருவம், வெத்தல பாக்கு வச்சு பூஜை பண்ணிட்டு சில சில்லறை காசெல்லாம் வச்சு முச்சந்தில போட்டுட்டு போயிடுவாங்க. இந்த பசங்க என்ன பண்ணுவாங்கன்ன, அந்த பொருட்களை சுத்தி வட்டமா நின்னு ஒரு பெரிய வட்டமா சிறுநீர் கழிச்சுட்டு அந்த காசை எடுத்துட்டு போயிடுவாங்க. ஆனா அவங்களை அந்த சூனியம் ஒண்ணும் பண்ணாது. சில பேர் அதை வெறும் காலால தாண்டி பட்ட அவஸ்தையை நேர்லயே பாத்திருக்கேன். எங்க ஊர்ல சவரம் பண்றவர் காலைல காபி குடிக்க வெறும் காலால நடந்து வந்து அதை மிதிச்சுட்டார். ஒரு நாலு மணி நேரத்துல அவரோட காலு பலூன் மாதிரி வீங்கி போய் தண்ணி தண்ணியா கொட்டுது. அந்த அளவுக்கு அதுக்கு வீரியம் உண்டு. ஆனா நான் பாத்த வகைல இந்த பசங்களொட சிறுநீர் அதை எல்லாம் முறிக்ககூடியாதாகவே இருந்திருக்கு.

எங்க ஊர்ல இந்த மாதிரி செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. இதை சாமி பாக்குறதுன்னு சொல்வாங்க. நிறைய பேர் வெளியூர்ல இருந்து எல்லாம் வந்து பாத்துட்டு போவாங்க. இதை வைத்து லட்சம் லட்சமா சம்பாரிச்சவங்க இருக்காங்க என் ஊர்ல. அவங்க கிட்ட நீங்க உங்களோட எதிர்காலத்தை பத்தியோ, உங்க கஷ்டத்தை போக்கவோ போகணும்னா வெத்தலை பாக்கு, எழுமிச்சை பழம், திருநீரு, பத்தி சூடம் வாங்கிட்டுப் போனா போதும். அவர் நீங்க கேட்டத நடத்திக்கொடுப்பார். இப்படி பல பேருக்கும் பண்ணி பிரசித்தி அடஞ்சவங்க நிறைய சம்பாரிக்கவும் செய்றாங்க.

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Friday, May 04, 2007

திரைப்பட வினாடி-வினா 5

போன வாரம், இடியாப்ப சிக்கல் கேள்விகள் என்று நிறைய நண்பர்கள் கருத்து சொன்னதால் இந்தவாரம் நேரடி கேள்விகள்..

1.டாக்டர் மாத்ருபூதம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் எது?

2.சிம்ரனுடன், தேரே மேரே சப்னேவில் நடித்த இன்னொரு கதாநாயகி, தமிழில் நடித்த முதல் படம் எது?

3.எஸ்.ஏ.ராஜ்குமார் முத்ன் முதலில் சொந்த குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது?

4.ராமராஜன் நடித்த முதல் தமிழ் சினிமா எது?

5.கே.எஸ்.ரவிகுமார் வில்லனாக நடித்த முதல் படம் எது?

வழக்கம்போல, திங்கட்கிழமை விடைகள்..

உங்க எல்லோருடைய ஆசியினால், நம்ம வலைப்பக்கம் ஒரு லட்சம் ரன்களை (ஹிட்டுகளை) அடிச்சிருக்கு..

நன்றி நண்பர்களே...

Wednesday, May 02, 2007

ஆணி ஆணி எங்கெங்கிலும் ஆணி



எல்லாரையும் ஆணியை புடுங்கச் சொன்னா, நம்மள அடிக்கச் சொல்றாங்கா.. ஒன்றா..ரெண்டா, அனுமார் வால் மாதிரி நீன்டுகிட்டே போகுது வேலைகள்.. அடியடின்னு அடிக்கிறேன்.. இன்னும் தீர்ந்தபாடில்லை..

எல்லா ஆணியையும் அடிச்ச பின்னாடி மறுபடியும் நம்மளையே புடுங்கவும் சொல்வாங்களோ..?

மக்களே.. இங்கே இப்படி ஆணி அடிக்கிறதால தான் உங்க பதிவுக்கெல்லாம் வந்து கும்மி அடிக்க முடியல..

கொசுறாய் ஒரு விளம்பரப் படம்

Tuesday, May 01, 2007

தல, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (அரிய புகைப்படங்களுடன்)

போன முறை, இதே நாளில் 'தல'க்கு பரமசிவனும் திருப்பதியும் வந்த நேரம். ஒரு மனிதன் தன்னை இந்த அளவுக்கு மாற்றிகொள்ள முடியுமா என்று வியந்த விஷயம். ரெட் படத்தில் ஏற்றப்பட்ட உடம்பு எங்கே, இப்படி இளகி இளைத்து மறு அவதாரம் எடுத்த பரமசிவன் எங்கே என்று நனவு என்று தெரிந்தும் நான் என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். திருப்பதியில் பேரரசு போதைக்கு ஊறுகாய் ஆனாலும், வரலாறு தீபாவளிக்கு வந்து படைத்த வரலாற்றில் தல அஜித் தலை நிமிர்ந்தார்.

(தனது 29வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடிய போது)

இன்னமும் கேலி பேசாதோர் இல்லை.. சன் மியூஸிக்கில் வேண்டுமென்றே அஜித் பாடல்களை போடாமல் அஜித் ஓரங்கட்டப்பட்டார்.. (அஜித், சன் டிவி கலாநிதிமாறனை சந்தித்ததாக படித்தேன் ஒரு இதழில்.. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று) பொங்கலுக்கு வந்த ஆழ்வாரும் சற்றே அவருக்கு சோதனை தந்தது. இப்படி போன வருடம் ஏற்றங்களையும் இறக்கங்களையும் அஜித்திற்கு தந்த வருடம்.

இந்த வருடம் கிரீடமும், பில்லாவும் காத்திருக்கிறது. தல, உங்கள் படங்களை உங்களை விட நாங்கள் அதிகமாய் எதிர்பாக்குறொம்.. நீங்க கலக்குங்க தலைவா.. நாங்கள் துணையிருக்கிறோம்..


இத்தனை துயர்கள் வந்தாலும் உறவுகள் போல அஜித்திற்கு உறுதுணை, அவரது ரசிகர்கள் தான்.. தோளுக்கு தோளாய் அவருக்கு ஆதரவும் வெற்றிகளின் போது கைகள் குலுக்கி வாணவேடிக்கையும் தரும் அதே நேரம், தோல்விகளின் போது தோளாக நின்று அவருக்கு பெரும்படைகளாக இருக்கின்றனர்..


தன்னம்பிக்கை கொண்டு, கீழே விழுந்தாலும் எழுந்து ஓடும் குதிரையாய் இருக்கும் தல அஜித், நடிக்கும் படங்களின் கதைகளை மட்டும் ஒழுங்கா கேட்டு நடித்தால் இன்னும் தொடலாம் சிகரத்தை..

தல, பல வெற்றிப்படிகள் ஏறி சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள் தல...

தல, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!