ஐந்து காலண்டர்களை மாற்றிவிட்டேன்.. இன்னும் இதயத்தில் இருக்கும் அவளை மாற்ற மனதால் முடியவில்லை. எப்போது முயற்சித்தாலும், சுவற்றில் ஒட்டிய போஸ்டரை கிழிக்கும் போது, சுவரும் சின்னதாக பெயர்வதை போலவே என்னை பாதிக்கிறாள்.. ஆனாலும் என்னை விட்ட பாடில்லை.. சூரியனின் வட்டபாதையை சுற்றியே பழக்கப்பட்ட பூமி பந்து போல, அவளையே சுற்றுகிறது என் காற்றாடி மனம்.. அதிலும் ஒரு அதிசயம். பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது.. அப்படி சுற்றி சுற்றியே தலை சுற்றி மயக்கப்பட்டாலும், மறுபடியும் கனவாக விரிகிறது அவள் பற்றிய எனது நினைவுகள்..
நீண்ட அந்த நெடுஞ்சாலையிலே, மரங்கள் வரவேற்பு வளையம் போட்டுக் கவிழ்ந்து கிடந்த சோலையிலே, நடந்து நடந்து அந்த தார் ரோடு பழுதடைந்துபோனது.. ஆனால் இத்தனை காலமும் அவளை நினைத்து நினைத்து என் இதயம் என்னவோ மெருகேறியே கிடக்கிறது, தேய்த்து போட்ட தங்கம் போல.. ஒவ்வொரு முறையும் இலை உதிரும் போதெல்லாம் சின்ன சின்ன காயம்பட்ட அவ்வழி மரங்கள், நான் தனியே, அவள் இல்லாமல், அந்த சாலையிலே நடந்து செல்வதை பார்த்து தன் கிளைகளை ஒடித்துக் கொண்டது..
கண்ணாடி முன்னால், தனியாக, அன்று மலர்ந்த மலர்களின் காதுகளில், பூஞ்சோலை கிளிகளின் இசைக்கு பாட்டாய், அவளிடம் பேசுவதற்காக எத்தனை முறை, நான் பயின்றிருப்பேன். எல்லாம் அவள் வந்து இதழால் சிரித்து, செவியோர முடிகற்றைகளை ஒதுக்கியவாறே, வளைந்து என்னருகே அமர்ந்த போது, அந்த பயிற்சி பெற்ற வார்த்தைகள் சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன. அமர்ந்த பின், மெல்ல வில்லிமை தூக்கி, செவ்விதழ் சுழித்து, புருவத்தால் அவள் செய்த சைகையில் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. என் இதயத்தில் நடந்த அதிர்ச்சியில், ஏதோ பிரளயம் நடந்ததாய் நினைத்துக்கொண்டு மரத்து பறவையெல்லாம் அடித்து பிடித்து அங்கிருந்து பறந்து சென்றன..
அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு.. இடைவிடாத அந்த பரிமாறல்களின் முடிவில், எழுகையில் எனக்கு இன்னும் பசிக்கிறது, அவளுக்கோ விருந்தே கொண்டது போல் நிம்மதி இருக்கிறது.. இப்படித்தான் இருக்குமோ காதல்.. ஊரே என்னைச் சுற்றி இயங்கி கொண்டிருக்க, நானோ அவளை சுற்றி ஊர்வலம் போகிறேன். அப்படியொரு ஓய்யார பயணத்திலே, ஓரிடத்தில் ஓய்வுக்காய் நான் அமரும் வேளை கவனிக்கிறேன், அவள் என்னில் ஊர்வலம் போன பாத சுவடுகளை..
இன்னும் என் காலக்குறிப்பேடின் காகிதப் பக்கங்களில், அவள் கூந்தல் வாழ்ந்து விழுந்த மலர்களின் வாசமும், அவள் சிந்திவிட்டு போன சிவப்புதட்டின் சின்னத் தடங்களும், நேரான பக்கக்கோடுகளில் வளைந்து வளைந்து அவள் என்னில் விளையாடிய தடங்களுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.. என் நான்கு இதய அறைகளிலும் தாறுமாறாய் கிடக்கிற சின்ன பெரிய புத்தகங்களில் எல்லாம் அவளை பற்றிய குறிப்புகளே அதிகமாய் விளைந்து கிடக்கின்றன.. அதனையெல்லாம் எத்தனை முறை படித்ததோ, சிவந்து போய் கிடக்கிறது என்னிதயம்.
அவள் இதழ் சொல்லித்தான் என் பெயரின் சுவை தெரிந்தது. அவளின் அருகாமை சொல்லித்தான் என்னின் காந்தம் புரிந்தது. அவள் புன்னகை எழுதிய குறிப்பில் தான் என் அருமை எனக்கே புரிந்தது.அவள் தலைசாய்த்து பார்க்கும் பார்வையில் என் மீதான கர்வம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இன்னமும் இருக்கிறது.. அதே அளவு காதல்.. கிரிஷ்ணனுக்கு மட்டுமா அட்சய பாத்திரம் சொந்தம். இதோ என் இதயமும் ஒரு அட்சய பாத்திரம் தான்.. எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது அவளைப்பற்றிய எல்லா நினைவுகளும்.. அவள் கேர்பின் குத்தியதிலிருந்து கைகுட்டை ஒற்றிய அந்த தருணங்கள் வரை அப்படியே இருக்கிறது என்னுள் மழையில் நனைத்த மரத்தின் பச்சை இலைகளை போல.. என் மூளையில் முளைத்து கிடக்கும் கோடிக்கணக்கான நியுரான்களெல்லாம் அவளின் நினைவுகளை அடைத்து வைத்தே நிம்மதி அடைகின்றன.. அதெல்லாம் பற்றாமல் போய், உடம்பு ரத்தங்கள் ஆக்சிஜனை கடத்த மறந்து இவளின் நினைவுகளை, உச்சிக்கும் உள்ளங்காலுக்கும் தூக்கி கொண்டு ஒடுகின்றன.. வெட்ட வெட்ட முளைக்குமாம் மரம்..அட.. இவளின் நினைவுகள் கூட எனக்குள்ளே வளர்ந்தது அவ்வாறு தான்.
இன்றும் நான் நடந்து செல்கையில் அவள் என்னுடன் நடப்பதாய் நினைக்கிறேன்.. தனிமையில் தனித்துக் கிடந்த காலங்களில் அவள் என் தோளில் கை போட்டு என் தாவாங்கட்டையை, அவளின் குவித்த விரல்களால் பிடித்து கொஞ்சுவதாய் நினைக்கிறேன்.. தலையணை எல்லாம் அவள் மடியாய் எனக்கு உருவகம் ஆகிறது..
என்ன சொல்லி என்ன புண்ணியம்.. இப்படி காற்றில் மட்டுமே கவிதை பாட, வெறுங்கையால் மட்டுமே முழம் போட, எனக்கு பழகிவிட்டது. இதிலும் ஒரு சுகம்.. உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?