Wednesday, February 28, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 1

முன்னுரை :இது எனது பார்வையில் நான் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய ஒரு தொடர் பதிவு. வயல்காட்டையும் மதுரை (பெரிய கிராமம்) வீதிகளையுமே பார்த்தவன், டி.நகர் தெருக்களையும் ஸ்பென்சர் பிளாசாவில் பெண்களையும் கடற்கரை வரம்பு மீறல்களையும் கண்ணார கண்ட போது என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதுகிறேன்.. சில விஷயங்கள் என் கண்களை பெரியதாகவும் பல விஷயங்கள் கண்களை மூடவும் செய்த ஒரு அனுபவ தொடராய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நான் டைரியில் எழுதுவதைப் போல இங்கே எழுதுகிறேன். எப்பவும் தரும் உங்கள் ஆதரவையும் உயர் கருத்துகளையும் பின்னூட்டத்தில் இடவும் நண்பர்களே..

நான் எனது எம்.சி.ஏ கடைசி செமஸ்டர் புராஜெக்டுக்காக 2001 டிசம்பர் ஆறாம் தேதி சென்னை வந்து இறங்கினேன். அது எனது இரண்டாவது சென்னை பயணம். அந்த இரண்டிலும் நான் எல்.ஐ.சி பார்த்திருக்கவில்லை. மதுரையில் இருந்து நான் எனது நண்பன் குமரனும், அண்ணா சாலையில் சாந்தி தியேட்டரை தாண்டி வெயிலில் நின்றிருக்கும் அண்ணா சிலை அருகே எங்களை இறக்க்விட்டு சென்றது நாங்கள் வந்த பேருந்து. எனது நண்பரின் அப்பா, மதுரை திருமங்கலம் தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.. சென்னையில் எங்களுக்கு யாரும் தெரியாததால் நாங்கள் எனது நண்பர் தங்கியிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதென ஏற்பாடு ஆகியது. அறை எண் 16. அது பனிரெண்டுக்கு பத்து (குத்து பதிப்பாக) வகையிலான அறை. எதிர் மூலையில் கட்டில் இருக்கும். பேன் வசதியும் போன் வசதியும் உண்டு. அதனால் வீட்டில் இருந்து அழைப்பதற்கு வசதியாகவும் போயிற்று. மொசைக் தரையிலான குளியறை. ஹீட்டர் வசதி உண்டு.

அப்போது அந்த அறைக்கு வாடகை மாதம் ஆயிரத்து எண்ணூறு. முதன் முதலாக சென்னையில் வாசம். சுற்றிலும் ஒவ்வொரு தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள். நடப்பு எம்.எல்.ஏக்களுக்கு என தனி விடுதியும் உண்டு. அதுவும் கலைஞர் 96-இல் பதவி ஏற்றபோது அவர்களுக்கென தனியாக குவாட்டர்ஸ், மூன்று படுக்கை வசதி கொண்டது ஒன்றை கட்டினார். அது தான் டி.ஆரின் காதல் அழிவதில்லை படத்தில் விவேகானந்தா கல்லூரி என்று காட்டப்பட்டது.

எனக்கு எல்லாமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. பேருந்து எண்கள், வெள்ளை, மஞ்சள், எம் போர்ட் என பல வகைகள் என்று எல்லாமே என்னை வெகுவாக குழப்பியது. மதுரையில் ஏ சர்வீஸ், பி சர்வீஸ் என்று இருந்ததால் இதை விரைவாகவே புரிந்துகொண்டோம். நிஜமாகவே பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்த நிலை தான் எனக்கு. நுங்கம்பாக்கம் ரோட்டில் இருக்கும் பொட்டிபட்டி பிளாசாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் புராஜெக்டுக்காக தேர்வு இருந்தது. அதற்காக பஸ் (எப்படியோ) பிடித்து அங்கே போய் சேர்ந்தோம். பொட்டிபட்டி பிளாசா நுங்கம்பாக்கம் முடிவில் இருந்தது. நாங்கள் தி பார்க் ஹோட்டல் அருகிலேயே இறங்கினோம். இறங்கியவுடன், அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தோம். ஏதோ ரெண்டு நிமிசம் நடந்தால் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடக்கிறோம் நடக்கிறோம் நானும் எனது நண்பனும், இடம் வந்த பாடில்லை. மறுபடியும் விசாரித்தோம். இவரும் அதே மாதிரி தான் சொன்னார். கிட்டதட்ட நீண்ட நடைக்கு பிறகு அந்த பிளாசாவை கண்டுபிடித்தோம். இங்கே தான் எங்களின் முதல் பாடம். சென்னையில் யாரிடம் கேட்டாலும் எல்லா இடத்தையும் இந்த அப்படிக்கா போன வந்துவிடும் என்ற ரீதியில் தான் சொல்கிறார்கள். நடந்தால் தான் தெரிகிறது அது எவ்வளவு நீண்ட தொலைவு என்று. அதானல இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டொம்.

எனது காலணி பத்தியும் அது தன்னை தொலைத்துவிட்டு எனக்கான புது வாழ்க்கை தந்ததையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும். நான் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் சற்று உயரம் கொண்ட செருப்புகளையே அணிவது வழக்கம். அதனால் சென்னைக்கு வருவதற்கு முன்னால் அப்படியொரு தோல் காலணியை தைத்து வாங்கி வந்திருந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை. அது தேவையில்லா ஒன்று எனவும் குடும்ப நிலமைக்கு அறுநூறு ரூபாய் ஷூ பெரிய விஷயம் என்பதாலும் நான் இந்த இன்டர்வியூ வரை ஷூ வாங்கியதே இல்லை. எனது சிறு வயதில் ஆசை காரணமாக என் தந்தை வாங்கி தந்த ஷூ மட்டுமே அதுவரை எனக்காக வாங்கப்பட்ட ஒன்று. இந்த இன்டர்வியூ போவதற்கு இடம் கண்டுபிடித்தவுடன், பக்கத்தில் ஏதாவது ஷூ கடை இருக்க என்று தேடினோம். பாட்டா ஷோரூம் கண்ணில் அகப்பட்டது. உள்ளே சென்று புதியதாய் வாங்கி அப்படியே அந்த நிறுவனத்துக்குள் நுழைந்தோம். எல்லோரும் என் ஷூவில் தான் முகம் பார்த்துகொள்கின்றனரோ என்பது போல், எனது இடது இதய ஆரிக்கிள் கூச்சத்திலும், வலது ஆரிக்கிள் பெருமிதத்திலும் நிரம்பி தள்ளாடியது. நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள். இதோடு நுழைவுத் தேர்வு படபடப்பு வேற என்னைத் தொற்றிக்கொண்டது. (இன்று அணியும் நாற்பது டாலர் பதிப்பு ஷூ எப்போதும் எனது செருப்புக்காலை நினைவுபடுத்த தவறியதே இல்லை)

தேர்வு எழுதிவிட்டு மறுபடியும் வண்டி பிடித்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். எனது ஆரம்ப காலங்களில் நான் காலை உணவு உட்கொண்டதே இல்லை. அப்பா கொடுத்தனுப்பி விட்ட பணத்தை கொண்டு எந்த அளவுக்கு சிக்கனமாக இருக்க வேண்டுமோ அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தோம். இந்த மூன்று நேர உணவுகளை தவிர்த்து வேறேதுவும் நாங்கள் சாப்பிட்டோமா என்றால் அந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இரண்டு ரூபாய் காபியோ டீயோ எங்களது வயிற்றை நிரப்பியது. அதனால் மதிய உணவு அன்லிமிடட் மீல்ஸ் தான். தேர்வு முடிந்து வந்தவுடன், எம்.எல்.ஏ (இதற்கு தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பெயர் வைக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம்) விடுதியில் இருக்கும் உணவகத்தில் தான் உணவு உட்கொள்வோம். அன்லிமிடட் மீல்ஸ் பதினாறு ரூபாய், கூடவே கோழி குழம்பும் மீன் குழம்பு உண்டு. இது தான் நாங்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு. சில சமயம் அந்த குழம்புகளோடு வந்து விழும் சில கறித் துண்டுகள் இப்போது கைகளில் வாங்கும் லட்சம் ரூபாயை விட அதிகம் மதிப்பு கொண்டது, அன்றைய நாட்களில்.இரவு உணவு கையேந்தி பவன்களில் இரண்டு புரோட்டாக்களோ, இல்லை மூன்று வாழைப்பழங்களோ தான் தினமும் எங்களின் வாக்கைக்கு ஆதாரம்.. எங்கள் ஆகாரம்.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Tuesday, February 27, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

நீ
உலா வரும்
வீதியெல்லாம்
விரவி கிடக்கும்
கற்கள் கூட
கண் முழித்து
உயிர்தெழுகின்றன
ராமர்
பாதம் பட்டு
உயிர்தெழுந்த அகலிகையாய்...

நீ
தொட்டுச் செல்லும்
கெட்டிப் பொருளும்
கட்டித் தங்கமாகிறது
மிடாஸ்
கை பட்டதாய்...

உனது
அழகின்
ஆரம்பம் மற்றும்
முடிவை ஆராய
புறப்பட்ட
தென்றலும்
தலை கவிழ்ந்து
வருகிறது
பரமனின்
அடி முடி தொட
கிளம்பிய
ஹரி பிரம்மாவாய்...

அதிசயங்கள்
அருமையாய் செய்யும்
நீ
என்னை மட்டும்
அவஸ்தைகுள்ளாக்குவது
ஏனடி?

கொதிக்கின்ற நீருக்குள்
குதிக்கின்ற
பொருளாய்
என் உள்ளம்
உன்னை கண்டதும்
தன்னை இழக்குதடி..

உன்னைத் தொட
நீளும்
எனது பார்வை
தொட்ட பின்
தொடர்ந்து
உன்னுள்ளே
உறங்கிக் கிடக்குதடி..

அந்த
உறக்கத்தின்
பொழுதெல்லாம்
வாலாட்டி
கிடக்குதடி
என் மனம்..

ஆட்டோவில்
ஆயிரம் பேர்
அணிவகுத்து
வந்தாலும்
பார்வையிலே
சாய்ப்பேனடி..

அந்த
நேர் பார்வை கூட
உன்
பார்வை கண்டதும்
காலடியில்
படுத்து கிடக்குதடி?


நீ
சிந்தி விட்ட
பார்வையிலே
பற்றிகொண்ட
பருவக்காடாய்
கொழுந்துவிட்டெறியுதடி
எனது மெய்?

உன்
முத்த ஈரங்கள் தான்
மொத்த நெருப்பையும்
அணைக்குமோ..

உள்ளுக்குள்
எரியும் தீயை
அணைத்துவிடடி..
என்னை மெல்ல
பக்கம் வந்து
அணைத்துவிடடி..

Monday, February 26, 2007

ஜல்லிக்கட்டு

எங்கள் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு கொஞ்சம் பிரபலமானது. ஆனால் அலங்காநல்லூர் அளவுக்கு அல்ல. பொங்கலன்று நடக்கும் ஜல்லிகட்டு மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். அது எங்கள் ஊரில் வளர்க்கப்படுகின்ற மாடுகளை வைத்து மட்டுமே நடத்தப்படும். எங்கள் ஊரில் கிறித்துவ மக்களின் ஜனத் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொரு வீதியில் ஒரு சில குடும்பங்களால் நிர்வகிக்கப்படும் கோயில்களின் (சர்ச்) திருவிழாவும் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு முறையே ஜல்லிகட்டு நடக்கும். ஆனால் எங்கள் ஊரில் கள்ளச்சாராயம் கொடிகட்டி பறந்த காலங்களில் மூன்று ஜல்லிகட்டுகள் கூட ஒரே வருடத்தில் நடந்ததுண்டு.

ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது ஒரு பெரிய வேலை. காளைகள் இருக்கின்ற ஒவ்வொரு ஊருக்கும் சென்று அந்த காளை வைத்திருப்போரை முறையாக அழைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு அன்று இப்படி அழைக்கப்பட்டு வருகின்ற எல்லோருக்கும் அவர்கள் காளையும் அவர்களும் தங்குவதற்கு இடங்களும், சுவையான அசைவ சாப்பாடுகளும் வழங்கப்படும். அன்று எங்கள் ஊரின் எல்லா வீதிகளிலும் இந்த காளைகள் உலா வரும். ஜலங் ஜலங்கென்று கழுத்துமணி ஒலிக்க இவைகள் நடந்து வருவதை பார்ப்பதே அழகாய் இருக்கும். கிட்டதட்ட ஒவ்வொரு காளையுடன் மூன்று பேர் வருவார்கள். உங்களுகெல்லாம் தெரிந்திருக்கும், பெரும்பாலும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு தான் போட்டிருப்பார்கள். அன்று மட்டும் கழுத்துக்கும் கயிறு போட்டு அழைத்து வருவார்கள். காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும்.

சில காளைகள் அப்படி அழைத்து வரப்படும் போது முன்னங்கால்களை முன்னே தூக்கி குதித்து பார்ப்போர் வயிற்றில் புளியையும் கரைக்கும். அந்த காளையை அழைத்து வருவோரையே கீழே தள்ளி விளையாடியும் பார்க்கும். ஒரு காளையுடன் மூன்று பேர் அனுமதி, சாப்பாட்டுக்கு. அவர்களுக்கு தனியாக டோக்கன் கொடுத்திருப்பார்கள். இந்த காளைகளை வேனில் ஏற்றி தான் அழைத்து வருவார்கள். அதோடு இந்த ஜல்லிகட்டை பார்ப்பதற்கு அந்த ஊரில் இருந்தும் இருபது முப்பது பேர் இந்த வேனில் வருவார்கள். இந்த மாதிரி ஜல்லிக்கட்டுகளில் எங்கிருந்து தான் வருமோ, சாராயம் கரைபுரண்டு ஓடும்.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நடக்கும் இடத்தை விட கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு குடுவை போல இருக்கும், இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் வடிவமைப்பு. சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரங்களை வைத்து கிட்டதட்ட ஒரு ஏழடி உயரத்தில் மேடைகள் அமைக்கப்படிருக்கும். அதிலிருந்து தான் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஜல்லிகட்டை பார்ப்பார்கள். இந்த மாதிரி மேடைகள் கிட்டதட்ட ஒரு இருநூறு, முந்நூறு பேர்களை தாங்குவதாக இருக்கும். மற்ற எல்லா இளைஞர்களும் கீழே நின்று தான் பார்ப்பார்கள். மொத்தத்தில் காளையை பிடிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் சில பேர் தான். அவர்களும் துறுதுறு என்று தான் இருப்பார்கள்.

காளையை அந்த மாடு பிடிக்கும் மைதானத்திற்குள் அவிழ்த்துவிடும் இடத்திற்கு பெயர் கிட்டி. மைதானதிற்கு வெளிப்புறம் அந்த கிட்டியின் பக்கத்தில் வந்த பிறகு மாடுகளின் கயிறை எல்லாம் அவிழ்த்துவிடுவார்கள். ஏற்கனவே அவிழ்த்துவிடப்பட்ட மாடு மைதானத்தை விட்டு ஓடிய பிறகு தான் அவர்கள் அடுத்த மாடை அவிழ்த்துவிடுவார்கள். அதுவரை கிட்டியின் கதவுகளுக்கு பின்னே மாடு நின்றுகொண்டிருக்கும். புதிய மாடு வரும் போதும் அந்த மாட்டை பற்றியும் அது எந்த ஊரில் இருந்து வருகிறது என்பதனையும் சொல்வார்கள். இதற்கென மைக்கில் எப்போதும் ஒருவர் உச்சஸ்தாயில் வர்ண்ணைகளை சொல்லிக்கொண்டிருப்பார், விருமாண்டி படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் செய்வதைப் போல.

அந்த மாடு வெளிவரும் போது அதனை சுற்றி மாடுபிடிப்பவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். எந்த மாடைப் பிடித்தாலும் விழாக்குழுவினரின் சார்பாக ஒரு துண்டோ, வேஷ்டியோ தருவார்கள். அது இல்லாமல் பிடிக்கவே முடியாத சில மாடுகளுக்கு பல ஆயிரம் ரூபாயை பந்தயம் வைப்பார்கள். நான் ஒரே ஒரு ஜல்லிக்கட்டை நேரே கீழே நின்று பார்த்திருக்கிறேன். சில மாடுகள் ஆவேசத்துடன் வந்து மெதுவாக சுத்திமுத்தி பார்க்கும். அது அந்த மாடின் தெனாவட்டை காண்பிக்கும். அந்த மாதிரி மாடுகளை லேசில் பிடிக்க முடியாது. சில மாடுகள் கோபத்தில் தனது கொம்புகளை கீழே குத்தி எல்லாப் பக்கமும் வாரி இறைக்கும். சில காளைகள் நேராக கூட்டதிற்குள் நுழையும். அந்த மாதிரி நேரங்களில் காளையை பிடித்து காயப்படுபவரை விட கூட்டத்தில் சிக்கி காயப்படுபவரே அதிகம்.

முதலுதவிக்கென்று ஒரு மருத்துவர் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்கும். இந்த குழுவை அமைக்காமல் ஜல்லிக்கட்டை யாரும் அவ்வளவு எளிதாக நடத்த முடியாது. காவல்துறையிடமும் முறையாக முன் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். காளைகளுக்கு மதுபானங்கள் ஏதும் கொடுக்காமலும், அந்த உயிரனங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாதபடியும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

முந்தைய காலத்தில், காளைகளின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் தங்க சங்கிலி மாட்டப்பட்டு, அதை எடுப்பவர்கள் அதை வைத்து கொள்ளலாமென்றும், தனது பெண்களை மணந்து கொள்ளலாமென்றும் பந்தயங்கள் வைப்பதுண்டு. இந்த கதைகளை கட்டபொம்மன் காலத்திலிருந்து நாம் கண்டு வருகிறோம். உயிரைப் பயணம் வைத்து ஒரு பெண்ணை கட்டிக்கொள்வதற்கு எத்தனையோ பேர் இந்த மாதிரி போட்டிகளில் கலந்துகொள்வதுண்டாம். தான் காதலித்த பெண்ணின் தந்தை தனது காதலியை இது போன்று பந்தயம் வைத்துவிட, அந்த பெண்ணை மணக்க காளையை பிடித்து பழக்கமில்லாத ஒருவன், காளை பிடிக்க போய், தன் உயிரை இழந்தது, நான் சின்ன வயதில் பல தடவை கேட்ட கதை. அதிலும் காதலன் இழந்த துக்கத்தில் அந்த மாட்டின் முன்னே விழுந்து அந்த பெண்ணும் உயிர்நீத்தது மனதை உருக்கிய சோகக் கதை.

Sunday, February 25, 2007

தமிழ் பாடல்களை தேடும் புதிய கருவி

நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்..

எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது.

இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங்கள் படிக்கலாம்.

இந்த சுட்டிகள் KAPS எழுதும் சம்பார்மாபியா பக்கங்களிலிருந்து...

பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 3

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2

எனது சிறு வயதில், எங்கள் சிறுமலை பற்றியும் அதன் வளத்தை பற்றியும் ஏகப்பட்ட கதைகளை கேட்டுருக்கிறேன். அந்த அளவுக்கு வளங்கள் இப்போ அங்க இருக்கா, மனிதர்கள் காட்டை அழிக்க ஆரம்பித்த இந்த காலத்துலன்னு தெரியல. இப்பவே அந்த கதைகளைச் சொல்லாம என் நண்பர்களுக்கு நான் எப்போ அந்த கதைகளை இந்த பயணத்துல சொன்னேனோ அப்பவே உங்களுக்கும் சொல்றேன்.

மெல்ல சூரியன் கீழ் வானத்தில் தலையை சாய்க்க ஆரம்பித்து இருந்தான். எங்கள் பேருந்து ஆடி அசைந்து சிறுமலைபுதூர்ங்கிற ஊருக்கு வந்தது. அது தான் பஸ் போற கடைசி இடம். அங்க இருந்து மறுபடியும் திண்டுக்கல் நோக்கி கிளம்பிடும். வரும் வழியில் களைப்பில் எனது நண்பர்கள் சின்ன தூக்கத்தை போட்டிருந்தனர். நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கி பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். மக்கள் இங்கே சீக்கிரம் கூட்டுக்குள் பறவைகள் மாதிரி போய்விடுவார்களோ என்னவோ, வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.

எங்களுக்கான சில நொறுக்கு தீனிகளையும் சுடச் சுட போட்டு வைக்கப்பட்டிருந்த வெங்காய பக்கோடாவையும் வாங்கிகொண்டோம். என் அண்ணன் இரண்டு பாக்கெட் ஊறுகாயை வாங்கி வைத்துகொண்டார். ஊரை விட்டு போகும் ஒரு ஒற்றையடி பாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். அது அமாவாசையை ஒட்டிய இரவு என்று நினைக்கிறேன். அப்படியே கருப்பு வண்ணத்தை இறைத்தது போல எங்களுக்கு முன்னே இருட்டு கவிழ்ந்து கிடந்தது. நாங்கள் வைத்திருந்த டார்ச் லைட்டை பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். அருகில் நீர் ஓடும் சிறிய வாய்க்கால் தெரிந்தது. உடனே எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த என் அண்ணன் அதனருகே நின்று, தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த குவாட்டர் பாட்டலை எடுத்தார்.

அவர் ஊறுகாய் வாங்கும் போதே நினைத்தேன். இப்படி ஏதாவது 'நாட்டாமை' மேட்டர் வைத்திருப்பார் என்று. எங்கள் பையில் இருந்த பிளாஸ்டிக் டம்ளரில் குளிர்ந்த தண்ணீரை பிடித்து அதனோடு குவாட்டரை கலந்து, என் இரு அண்ணன்கள் குடிக்க ஆரம்பித்தனர். நானும் எனது நண்பர்கள் அந்த இருட்டில் வெங்காய பக்கோடாவை கொறிக்க ஆரம்பித்தோம்.

இங்கே தான் இந்த மலையின் ரகசியத்தை என் நண்பர்களுக்கு நான் சொல்ல ஆரம்பித்தேன். இது கிட்டதட்ட ஒரு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால நடந்தது. எங்கள் ஊரில் வாழும் ஒரு தச்சர், ஊர் பண்ணையார் வீட்டுக்கு பெரியதொரு கட்டில் செய்ய வேண்டுமென்று தோதான மரங்கள் பார்ப்பதற்காக சிறுமலை காட்டிற்கு சென்றார். அவர் அப்படி சென்று மரங்கள் பார்த்து வருகின்ற வேளையில் ஏதோ ஒரு கட்டை அவரது முழங்காலை கிழித்துவிட்டது. அந்த காட்டில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊருக்குள் சீக்கிரம் வந்துவிட வேண்டுமென்று, வேகமாக நடக்க ஆரம்பித்தவர், வழியில் ஏதோ ஒரு செடியின் இலையை பறித்து வழிந்த ரத்தத்தை துடைத்து வந்திருக்கிறார். அப்படி துடைத்து வந்தவர், அடிவாரம் வரும்போது பார்த்தால் அவரின் முழங்காலில் இப்போது அடிபட்ட காயத்திற்கு பதில் காயத்தோட தழும்பு தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு எவ்வளவோ கஷ்டப்பட்டும் அவரால் சரியான அந்த இலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏற்கனவே சொன்னது போல, அனுமார் லட்சுமணனுக்காக சஞ்சிவீ மலையை தூக்கி சென்ற போது அதனோட சிறப்பம்சம் வாய்ந்த மூலிகைகள் சில எங்கள் சிறுமலையில் விழுந்ததாக கதைகளுண்டு..

அங்கே அந்த இரவு நேரத்தில் நாங்கள் மறுபடியும் எங்கள் பயணத்தை தொடங்கினோம். நான் வந்து ரொம்ப காலமானதால், எனக்கு வழி ஞாபகம் இல்லை. என் அண்ணனுக்கு மட்டுமே தெரியும். அவரும் இப்போது வழி சொல்லக்கூடிய நிலமையில் இல்லை.

Friday, February 23, 2007

பிளாக் வரலாற்றில் முதன் முறையாக 300 பின்னூட்டங்களையும் தாண்டி..

ஒற்றுமை! உண்மை! உயர்வு!

ஒரு கழகத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பது தொண்டர்கள் தருகிற கோசம் அந்த வானத்தை துளைக்கும் போது தெரியும்! பதிவுலகில் பின்னூட்டங்களே அந்த கோஷம் என்பதால் அது 300யும் தாண்டி ராக்கெட் வேகத்தை பார்க்கும் போது, எங்கே நமது எல்லை நிலவல்ல, அதையும் தாண்டி தூரமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புதியதாக தொடங்கப்பட்ட நமது பிளாக் முன்னேற்ற கழகம் (பி.மு.க), சிங்கம் போல வீறு நடை போட்டு கோட்டையை அடைந்திருக்கிறது. இத்தனை பின்னூட்டங்கள அள்ளி அள்ளித் தந்து கழகம் வெற்றிவாகை சூட ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் முதல்வர் நாட்டாமை, துணை முதல்வர் வேதா மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

வாழ்க நமது பி.மு.க! வளர்க நமது கழகம்!

குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!

இந்த சூப்பர் கோஷம் எழுப்பியவர் கோபிநாத்!


[கவர்னர் ஜனாதிபதியை சந்திக்க சென்றிருப்பதால் மற்ற அறிவிப்புகள் திங்கட்கிழமை]

Wednesday, February 21, 2007

மு.கா அமைச்சரவை மாற்றம்.. யார் யார் அமைச்சர்கள்?

[கலைஞரோட அமைச்சரவைல தான் இந்த மாற்றம்னு அடிச்சு பிடிச்சிகிட்டு வந்தா ஐயாம் சாரி.. இது நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றம் கட்சியின் ஆட்சி மாற்றம் பற்றிய அறிவிப்பு]

நம்மளோட முதல் பதவியேற்பு பற்றிய பதிவு

உண்மையான தமிழ்நாட்டு அரசியல் மாதிரியே ஆகிடுச்சு.. மந்திரிசபை மாத்துறேன் மாத்துறேன்னு ரெண்டு மூணு தடவை டிஸ்கி போட்டாச்சு.. ஏன் இன்னும் பண்ணலைனு கொ.ப.செ வேதால இருந்து நம்ம மலேசியா பிரண்ட் வரைக்கும் கேட்டாச்சு.. நானும் ரொம்ப காலமா அந்த அறிவிப்பை போடலாம்னு நினைச்சு மறந்துட்டேன்.. தோ.. கச்சேரி ஸ்டார்ட்..

ஹிஹிஹி..வழக்கம்போல உங்க எல்லோருடைய பேராதரவோடு.. நான் முதலமைச்சர்னு தானே நினைக்கிறீங்க.. அது தான் இல்ல.. நம்ம கட்சி மத்த எல்லா கட்சிக்கும் முன் மாதிரியா இருக்கணும்.. அதனால நான் நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றக் கட்சியின் (பி.மு.க) தலைவனாகவே இருந்து மக்களுக்கு தொண்டாற்றப் போறேன்.. அப்போ முதலமைச்சர்?

முதலமைச்சர் : 'நாட்டாமை' ஷ்யாம்

எல்லோருக்கும் ஆச்சர்யம் தானே.. இது சும்மா விளையாட்டுக்குன்னாலும், நாம மனசுல இப்படி எல்லாம் நிஜமா நடந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு இருக்கிறதை செயல்படுத்தற நேரம். அதனால இந்த பதவிகள் எல்லாம் எல்லோருக்கும் மாறி மாறி வரணும்.. பதவி ஆசை என்பதே யாருக்கும் வராத மாதிரி பாத்துக்கணும்.. அப்போ தான் தமிழகம் சிறக்கும். அனுபவம் உள்ளவர்கள் பின்னால் இருந்து காக்கணும்.. ஒரு சின்ன நிறுவனத்துல ஒரு புரோகிராம் எழுதுறவருக்கு எத்தனை பேக்-அப் வைக்கிறோம்.. ஒரு நாட்டை ஆளுறதுல இருக்க வேண்டாமா.. அதுதான்.. தோ.. நாட்டாமை முதல்வர் ஆகிட்டார்.. (வாழ்த்துக்கள் நாட்டாமை! நயனுக்கு ஏகப்பட்ட சலுகைகள் நீங்கள் தந்தாலும், நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்வீங்கள்ல)

துணை முதல்வர் : 'கொ.ப.செ' வேதா

நம்ம கட்சிக்காக சூறாவளி சுற்றுப் பயணமெல்லாம் போய், கட்சியின் கொள்கைகளை பிளாக் உலகிற்கே சொன்னவர். உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் வரும். ஒப்புக்குத் தானே துணை முதல்வர்னு? அதெல்லாம் கிடையாது. நாட்டாமை, நயன் சூட்டிங் பாக்கவோ, நமீதா பேட்டி பாக்கவோ, இல்லை தங்கமணிகிட்ட பூரிக்கட்டையால (கட்சி நிதியில் இருந்து கொடுத்தது.. ஹிஹிஹி) அடி வாங்கி ஓய்வு எடுத்தாலோ, அப்ப இவங்க தான் முதல்வர். அது மட்டுமல்ல இவங்க கிட்டயும் சில துறைகள் தனியா இருக்கும். முதல்வர் அலுவலகம் வராத நேரங்களில், வேதா தான் முதல்வர். இவரும் கோப்புகளில் கையெழுத்து போடலாம். ஆனா அப்படி போடும் போது, இவர் என்னென்ன கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கார்ங்கிற விவரம் முதல்வருக்கு CC ல போகும்.. கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசுக்கு வாழ்த்துக்கள் கொ.ப.செ

நிதி அமைச்சர் : 'மாப்ள' பரணி

அட! சில விஷயங்கள்ல மாற்றம் செய்யாம இருக்கிறது நல்லது.. எப்படி சிதம்பரம் தான் அந்த பதவிக்கு அழகோ, அது மாதிரி மாப்ள பரணி.. (ஹிஹிஹி.. ஆனா.. இதுவரைக்கும் அசின், பாவனா படத்துக்கு மட்டுமே நிதியுதவி செய்துகிட்டு இருந்தவர், நாட்டாமைக்காக நயனுக்கும் செய்யனும்.. சரியா நாட்டாமை..சே..சே.. முதல்வா)

கல்வி அமைச்சர் : 'தலைவி' 'பஸ்ஸில் பாலபிஷேகம் கண்ட அம்மன்' கீதா

போன தடவை, இவர் அறநிலையத்துறை அமைச்சரா செய்த பணி மகத்தானது. கோயிலுக்கு செய்த அதே பணிகளை பள்ளிகளுக்கு செய்வார் நம்ம மேடம். தலமெல்லாம் சுற்றி வர்ற மாதிரியே இனி பள்ளிகளையெல்லாம் சுற்றிவருவார். இன்னொரு பெண் உ.வ.சா உதயமாகிறார்.

சட்டம் மற்றும் வருவாய்த் துறை : 'கண்ணாளனே' ப்ரியா (அவங்க எழுதுன ஒரு தொடர் அவங்களுக்கு இருந்த பழைய சுத்த சிகாமணிங்கிற பேரையே மாத்திடுச்சு பாத்தீங்களா..)

இனிமே குடும்ப வருவாயை இவங்க தான் கவனிக்கப் போறாங்க. அதனால அதோட தமிழ் நாட்டோட வருவாயையும் பாத்துக்கோங்கன்னு ஒரு பெரிய சுமையை கொடுத்தாச்சு. அதுமட்டுமல்ல, கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்காரருக்கு போடுற புது சட்டங்களை அப்படியே தமிழ்நாட்டுக்காகவும் போட்டா பிளாக் உலகம் சிறக்குமில்லையா.. அது தான் இவங்களுக்கு இந்த துறை

உள்ளாட்சித் துறை : 'ஆணி' அருண்

கிளீவ்லேண்ட்ல இவர் ஆணி புடுங்குற விஷயம், மதுரை திருமலை நாயக்கர் மஹால் வரை தெரிஞ்சு போச்சு.. சரி அதோட இந்த பிளாக் உலகிற்கும் பல நன்மைகளை செய்யட்டுமேன்னு தான் இந்த துறை.. நண்பா.. வாழ்த்துக்கள்..புதுசா பதவி ஏற்கப்போறீங்க.. நல்லா இங்கேயும் ஆணி புடுங்குங்க..

கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி' (இன்னொரு 'சி'யும் இருக்கு.. அது பத்தி விரைவில்) மணி

இவர் காலெண்டர் பத்தி எழுதுன கவிதைகள் ரொம்ப பிரபலம். அதுல இவருக்கு நம்ம கொ.ப.செ காலெண்டர் கவிஞர்னே பேர் வச்சுட்டாங்க.. அதுமட்டுமல்லாம, கற்றது கடலளவு தொடருக்காக ஒரு அழகான நன்றியுரை போட்டிருக்கார்.. நல்ல விளம்பரம் 'கடல்'கணேசன் அவர்களுக்கு..

செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட்

சும்மா இவர் மலேசியாவை பத்தி சொல்ற விஷயம் ஒன்றொன்றும் புதுசு கண்ணா புதுசு.. அமெரிக்காவை பத்தியும் தமிழ்நாட்டை பத்தியுமே நாமெல்லாம் பிளாக் எழுதுறப்போ ஒரு (நமக்கு) தெரியாத நாட்டை பத்தி அழகா நிறைய விஷயங்கள் சொல்றார். அவர் ஆப்பு வாங்கிய விஷயத்தை பத்தி எழுதின பதிவுல முதன் முதலா 50 கமெண்ட் வாங்குன சந்தோசத்துல இருக்கார். வாழ்த்துக்கள் மை பிரண்ட். இது அவருக்கு இரட்டை சந்தோசமா இருக்கும்னு நினைக்கிறேன்.

சுகாதாரத் துறை அமைச்சர் : 'சியாட்டல்' பொற்கொடி

போன தடவை மின்சாரத்துறை அமைச்சரா இருந்தாங்க.. வீட்ல வாக்கும் கிளீனரா வச்சு கூட்டுறதை இனிமே பிளாகிலையும் கூட்டப் போறாங்க.. கீ போர்ட் சுத்தமாகிடுச்சா பொற்கொடி

போக்குவரத்துத் துறை அமைச்சர் : 'பிரெஞ்சு' CM ஹனிஃப்

கிட்டத்தட்ட நாலு மாசமா நம்ம பிளாக்கை விடாம படிக்கிறவர். இவர் பதிவு எழுதினா நாம பதிலுக்கு பின்னூட்டம் போட்டு நன்றிக்கடன் செலுத்தலாம்.. பதிவும் எழுதுறது இல்ல.. அது தான் நண்பருக்கு இந்த பரிசு. நிறைய பக்கங்களுக்கு சுற்றுலா போய் பின்னூட்டம் போடுறதுலனால இவருக்கு இந்த துறை.

பொதுப்பணித் துறை அமைச்சர் : கையில் வாளும் சொல்லில் வீச்சும் கொண்ட நம்ம ஜி

என்னை மாதிரியே இவரும் கட்சிக்காக பிரமச்சாரியா இருக்கவர். (ஹிஹி.. ஆள் கிடைக்கலைங்கிறதை இதைவிட நாசுக்கா எப்படிங்க சொல்றது) சும்மா கதைகளை சரளமா எழுதுபவர். கையில் வாள் வச்சு பயமுறுத்துறதால, இந்த காவேரி பிரச்சனையெல்லாம் தீர்ப்பாருல அது தான்

விளையாட்டுத்துறை அமைச்சர் : நண்பர் மணிகண்டன்

எங்கே கிரிக்கெட் நடந்தாலும், அந்த பால் சிக்சர் தாண்டுறதுக்குள்ள பயங்கர ஸ்பீடா பதிவு போடுறவர் அந்த போட்டியை பத்தி.. உலகக் கோப்பை கிரிக்கட் முடிஞ்சவுடனே மத்த விளையாட்டை பத்தியும் எழுதுவாருன்னு நம்புவோம்.

மின்சாரத்துறை அமைச்சர் : நண்பர் ட்ரீம்ஸ்

ஷாக்கடிக்கிற பதிவுகளை போடுறவர். அதைவிட மின்சார கண்கள் கொண்ட பெண்களின் படத்தை போட்டு தனது பக்கத்தை அழகா அலங்கரிப்பவர். இவர் இந்த துறை அமைச்சரானதுனால மின்சாரம் உற்பத்தி செய்றதுலையும் ஏதாவது புதுமை செய்வார்னு நினைக்கிறேன்.. திரிஷாவை கூட்டிகிட்டு ஊர்வலம் போனா தெருவிளெக்கெல்லாம் அப்படியே தீப்பிடிக்குமே..

வீட்டுவசதி துறை அமைச்சர் : தோழி G3

இவரும் தனியா ஒரு கட்சியை நடத்தி வந்தாலும் நம்ம கட்சிலையும் ஒரு நல்ல உறுப்பினர். இப்போ என்னமோ புதுசா கவிதையெல்லாம் எழுதுறாங்க..

இசை மற்றும் தமிழ் வளர்ச்சிக்கழக அமைச்சர் : தினம் ஒரு குறள் கிட்டு மாமு

சும்மா ஒரு பக்கம் சினிமா பாடல்களுக்கு தன் குரல் தந்து பாடல்கள் தந்து கொண்டே, அடுத்த பக்கம் தினம் ஒரு குறள் னு தமிழுக்கும் இசைக்கும் ஒரே சேர சேவை செய்பவர்.

அட! என்ன இன்னும் பல பேர் (அம்பி, SKM, SLN, KK, சேதுக்கரசி, ரம்யா, உஷா, கோபிநாத் மற்றும் பலர்) பெயரைக் காணோமேன்னு பாக்காதீங்க.. எல்லாம் அடுத்த பதிவில் ஸ்வீட் சர்ப்ரைஸா.. அம்பி, அதுக்குள்ள உன் அக்கா கிட்ட போட்டு கொடுத்துறாதப்பா..

Tuesday, February 20, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17 [சூடான சினிமா பகுதி மீண்டும்]

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிட்டுகுருவியின் சினி பிட்ஸ்..

வானத்தில் இருந்து பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுவதால், பறவைகள் இறக்கைகள் சுமையாகி பறக்க சிரமப்படும் காலம்.. நம்ம சிட்டுக்குருவி அந்த சின்ன இறக்கையை வைத்துகொண்டு என்ன செய்யும்.. பாவம்..அது தான் இத்தனை நாட்களாய் வெளில தலை காட்டல.. கிட்ட தட்ட 62 நாட்களுக்கு பிறகு மீண்டும் றெக்கை கட்டி வருதைய்யா.. இதுக்கு இடையில் எத்தனையோ விஷயங்கள் கோடம்பாக்கத்தில் நடந்திருந்தாலும், சிட்டுக்குருவி இல்லாததால் நமக்கென்னவோ எல்லாம் சப்பை மேட்டராத் தான் இருந்தது.. இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்னு தொலைபேசியிருந்தது.

போன தடவை நான் பிரசெண்ட் பண்ணின அழகான ஜெர்கினை போட்டுகிட்டு சர்ருன்னு வந்தது சிட்டுக்குருவி. அப்படியொரு சந்தோசம் அது முகத்துல..

என்ன சிட்டுக்குருவி.. இந்த நண்பனை பாத்தவுடன் இவ்வளவு சந்தோசமா உனக்கு.. எப்படிப்பா இருக்க.. அழகாய் சோபாவில் புகுந்து உட்கார்ந்த சிட்டுக்குருவியைப் பார்த்து கேட்டேன்.

[அய்யோ..இல்லைன்னு சொன்னா வாங்கி வச்ச பழத்தை எல்லாம் தரமாட்டான்] ஆமா.. ஆமா.. எவ்வளவு நாளாச்சு நண்பா உன்னைப் பாத்து.. அதைவிட ஒரு சந்தோசமான விஷயம். தலைவர் படம் சிவாஜி ஏப்ரல் 12க்கே ரிலீஸ் ஆகுதுல்ல.. எங்கே தள்ளி போயிடுமோன்னு படபடப்பா இருந்தது.. அன்னிக்கு தமிழ்நாட்டுல திருவிழா தானே.. அது தான் சந்தோசம்பா..

அட.. சூப்பர் மேட்டருப்பா.. உடனே நம்ம கொலம்பஸ் டிரெக்ஸல் தியேட்டர்ல டிக்கட்டுக்கு சொல்லிவைக்கணும்பா.. இந்த தடவை தலைவர் ரஜினிக்கு கொலம்பஸ்ல சூடம் காட்டவேண்டியது தான்.. சிட்டுக்குருவி சொன்ன மேட்டர்ல அதுகிட்ட இருந்த உற்சாகம் நமக்கும் தொத்திகிச்சு..

சரி..உன் தல நியூஸ் ஒண்ணும் சொல்லிடுறேன்..இல்லைனா உனக்கு சோறு உள்ளே இறங்காதே.. பில்லா ரீமேக் படத்தோட சூட்டிங் ஏப்ரல் 15-ல ஆரம்பிக்குது.. நயன்தாரா தான் பில்லி..

பில்லியா..என்னப்பா பனில வந்ததுல உனக்கு நாக்கு குழறுதோ..

நீ, சரியான டியூப் லைட் கார்த்தி..அஜித் பில்லான்னா, அவரோட ஜோடி நயன்தாரா பில்லி தானே.. [சொல்லிவிட்டு பெரிய ஜோக் அடிச்ச மாதிரி என்னை ஒரு லுக் விட்டு தன் ஜெர்கின் காலரை தூக்கி விட்டுக்கொண்டது சிட்டுக்குருவி.. ம்ம்.. எல்லாம் தலையெழுத்து கடவுளே]

அடக்குருவி.. என் காலை வாரலைனா உனக்கு தூக்கமே வராதே.. நாம ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ் நண்பர்கள்..

அடப்போப்பா.. ஒண்ணுக்குள் ஒண்ணா இருந்தா சிம்பு-நயன்தாராவே பிரிஞ்சு போயிட்டாங்க.. அதுவும் இல்லாமே அவங்க ரெண்டு பேரும் டேட்டிங் போனப்ப எடுத்த போட்டவையெல்லாம், பிரிஞ்ச கோபத்துல நெட்ல போட்டுட்டதா நயன்தாரா, சிம்பு மேல பயங்கர கோபத்துல இருக்காங்க.. [அந்தப் படங்கள் வேண்டாமே என்று தான் இங்கே போடவில்லை]..

அட! அப்புறம் என்னப்பா ஆச்சு!

மறுபடியும் சேரணும்னு சிம்பு விட்ட தூதையெல்லாம் நயன் கண்டுக்கவே இல்லையாம் [நயன் மனசுல நாட்டமை இருக்காரோ.. ஆனா என்ன பண்ண இவ்வளவு நாளா நாட்டாமை வெயிட் பண்ணி இப்போ நமீதாவுக்கு மாறிட்டரே..]

அட! சிம்புவை விடுப்பா.. இந்த ஜெயம் ரவிக்கு எப்படித்தான் இப்படி எல்லாம் லக் அடிக்கிறதோ.. படத்துக்கு படம் புது ஹீரோயின் தான்.. இப்போ ஜீவா இயக்குற தாம் தூம் படத்துல அவருக்கு ஜோடி மும்பை இறக்குமதி கங்கானா ரானட் என்னும் நடிகையாம்.. இவர் ஹிந்தி கேங்க்ஸ்டர் படத்துல நடிப்புல(?) வெளுத்து வாங்கி இருக்காராம்..

உனக்கு தான் உன் ஆள் இருக்குல.. அப்புறம் என்ன ஜெயம் ரவியை பார்த்து பொறாமை, சிட்டுக்குருவி

அட..ஆமா கார்த்தி.. உலகத்துல இந்த விஷயத்துல பொறமை படுற உரிமையை நீ தான் மொத்த கான்ராக்ட் எடுத்திருக்கியே..

ஆஹா.. வேற மேட்டர இருந்தா சொல்லு நீ.. என்னை கலாய்க்கிறதுன்ன உனக்கு நேரம் போறதே தெரியாதே..

அட..ஆமா நேரம் ஆயிடுச்சு கார்த்தி.. வர்றேன்.. என்று அதுக்காக வாங்கி வைத்திருந்த கருப்பு திராச்சைகளை கொத்திக்கொண்டது..

கார்த்தி.. இந்த பச்சைகிளி முத்துச்சரத்துல கருப்பா அழகா சரத்துக்கு ஜோடியா வருதுல ஆன்ட்ரியா பொண்ணு.. அது யாருன்னு தெரியுதா..

இல்லையேப்பா சிட்டுக்குருவி..

வேற யாருமில்லை.. வேட்டையாடு விளையாடுல கற்க கற்கன்னு பாடுச்சே அந்தப் பொண்ணுதாம்பா.. முதல்ல சோபனா நடிக்கிறதா இருந்து, தபுக்கு மாறி கடைசில இந்த பொண்ணுக்கு அந்த வாய்ப்பு கிடச்சதாம்.. சொல்லிவிட்டு இறக்கைகளை படபடன்னு அடிச்சுகிட்டு கிளம்பியது சிட்டுக்குருவி

Monday, February 19, 2007

இயக்குனர் கௌதம் - ஒரு பார்வை

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த சில நல்ல இயக்குநர்கள் வரிசையில் காக்க காக்கவிற்கு பிறகு நான் கௌதமையும் சேர்த்துவிட்டேன். அடுத்தடுத்து, ஒரே மாதிரி மசாலா படங்களை தந்துவிட்டு, இதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள், இதை தான் ரசிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை விட அதிகம் சம்பாரித்து தருகிறதே எங்கள் படங்கள் என்று வெற்றுச் சப்பை கட்டு செய்யும் இயக்குநர்களுக்கு மத்தியில் எதையும் புதியதாக செய்யும் அருமையான இயக்குநர் கௌதமன். இவரின் படங்கள் மற்ற மசால இயாகுநர் படங்கள் விட அதிகமாகவே வசூல் செய்துள்ளது நாம் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டியது.

முதல் படமான மின்னலேவில், கதை சாதாரணமானது தான் என்றாலும் அதையும் புதுமையாக இளமையாக படைத்திருந்தார் கௌதம். அந்தப் படத்தில் இவருக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை யானை பலமாக இருந்தது. படத்தில் எல்லாமே சரியாக இருந்தது, விவேக்கின் நகைச்சுவையையும் சேர்த்து. அடுத்த படமான, காக்க காக்க பற்றி சொல்லவே வேண்டாம். முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அழகிய காதலையும், துடிப்பான ஒரு காவல்துறையையும் கண்ணுக்கு முன்னே நிறுத்தினார். இந்த படம், டெக்னிக்கல் விஷயங்களில் ஒரு மைல்கல்லாகவும், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் திரையுலக வளர்ச்சிக்கு பெரிய ஏணிப்படியாகவும் இருந்தது. ஆங்கில படங்களுக்கு இணையான மிரட்டலான காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன. படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த போது, பார்க்கின்ற எல்லா போலீஸ்காரர்களையும் கண்டு மனசுக்குள்ளே ஒரு சல்யூட் போட வைத்தது.

கமலோடு இவர் கைகோர்த்த வேட்டையாடு விளையாடுவும் காவல்துறை கதை தான் என்றாலும் அதிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது. நீண்ட தேக்கத்திற்கு பிறகு வந்தாலும், படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதுவரை தமிழில் தொடர் கொலைகாரனை பற்றிய எந்த படமும் வந்ததில்லை என்ற வெற்றிடத்தை இந்தப் படம் நிரப்பியது. எல்லாப் படங்களிலும் ஹாரிஸ் இவருக்கு, இவரின் ஆக்கத்திற்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். இதுமட்டுமல்லாது, இவர் தாமரை என்னும் பெண் கவிதையாளருக்கு பாடல்கள் எழுதுவதற்கு வழி ஏற்படுத்தி தந்து, பாடல் வரிகள் புது கருத்துகளையும் உணர்ச்சி குவியலாகவும் படைக்க காரணமாக இருந்தார். ஒரு பக்கம் பெரிய பெரிய டெக்னிக்கல் விஷயங்களை படத்தில் கொடுத்திருந்தாலும், இவர் படத்தின் பாடல்கள் (மின்னலே படத்தில் வரும் ஓரிரு பாடல்களைத் தவிர) எல்லாம் சுத்த தமிழில் அமையும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு இயக்குநர் எப்படி தனது படத்தின் எல்லாத் துறையிலும் செம்மையை எதிர்பார்க்க வேண்டும், படைக்க வேண்டும் என்று சொல்லுவதாகவே இருக்கிறது.

இவரின் படங்களின் தலைப்புகள் எல்லாமே ஏதோ ஒரு பாடலின் வரிகள் தான் என்பதை நாம் ஏற்கனவே இங்கே சொல்லி இருக்கிறோம். அதை இவரின் அடுத்த படமான வாரணமாயிரும்-மும் அந்த பார்முலாவிலே தான் இருக்கிறது. இப்போது திரைக்கு வந்து எல்லோராலும் பாரட்டப்படும் பச்சைகிளி முத்துச்சரம் பார்க்கவில்லை என்றாலும், இந்த படத்தின் கதையும் புதிய களம் தான் என்பது வரவேற்கத்தக்க விஷயம். சூர்யாவிற்கு இனிய பிரேக் கொடுத்தவர் இப்போது சரத்குமாருக்கும் தந்திருக்கிறார். சரத்குமாரின் நடிப்பை படம் பார்த்த எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

இந்தப் படம் டிரெயில்டு (DERAILED) என்னும் ஆங்கில நாவலை மையமாக வைத்தே இயக்கியதாக இவர் மன திறந்து சொல்லி இருக்கிறார். ஆனால், மையக் கருத்து மட்டுமே அந்த நாவலில் இருந்து எடுத்துக்கொண்டதாக பேட்டி தந்திருக்கிறார். மணிரத்தினத்திற்கு பிறகு, நிறைய இளம் இயக்குநர்கள் வந்திருந்தாலும், ஒரு சிலரே கௌதமை போல, விறுவிறுப்பான, நல்ல ரசிக்க வைக்கும் பாடல்களும் அதை சரியாக படம் பிடித்து தருவதிலே கில்லாடிகளாய் இருக்கின்றனர்.

கௌதமையும் அவரது டெக்னிக்கல் குழுவையும் வரவேற்போம். இன்னும் வெட்டி நியாயம் பேசும் ஏனைய இயக்குநர்களும் இப்படி தரமான படங்கள் ரசிக்கும் வகையிலே படைக்க முயற்சி செய்யட்டும்.

இப்போதே வாரணமாயிரம் படத்தை கௌதமுக்காக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

இந்த வார தமிழ்மணம் பூங்காவில்...

இந்த வாரம், தமிழ்மணம் பூங்கா வார இதழில், வெளியிடப்பட்ட பதிவு, இங்கே தர்மபுரியில் வேளாண்மை கல்லூரி மானவிகளை எரித்த சம்பவத்திற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எழுதிய தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது

உற்சாகம் தந்த எல்லோருக்கும் நன்றி!

Sunday, February 18, 2007

சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை

என் நண்பனின் அக்கா கல்யாணத்திற்காக எனது நண்பர்கள் எல்லோரும் திண்டுக்கல்லிற்கு வந்திருந்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கல்யாணம் முடிந்த பிறகு அதற்கு அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் மணக்க மணக்க கல்யாண சாப்பாடு சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து எங்கள் ஊர், பக்கம் என்பதால் என் நண்பர்களை என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். நான் விடுதியில் தங்கியே இளநிலை எல்லாம் முடித்திருந்ததால், நான் எல்லா நண்பர்கள் வீட்டிற்கும் பல தடவை சென்றிருக்கிறேன். ஆனால் அவர்கள் என் வீட்டிற்கு வருதுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.

எல்லோரும் திண்டுக்கலிலிருந்து எங்கள் ஊருக்கு பஸ் ஏறினோம். என் நண்பர்களில் இருவர் எப்போதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், இது போன்று பயணங்களின் போது மட்டும் பிடித்து வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான பிராண்டுகளை பிடிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். அதைப் பிடித்துவிட்டு மற்ற பிராண்டோடு விமர்சனமும் செய்வார்கள். அதனால் திண்டுக்கல்லில் ஏறும் போதே இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டனர்.

ஏற்கனவே தொலைப்பேசியில் நண்பர்கள் வருவது பற்றி சொல்லிருந்ததால் வீட்டில் தடபுடலாக சமையல் ரெடி ஆகி இருந்தது. போய் சேர்ந்தவுடன் என் ஊர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மோட்டர் பைக்குகள் வாங்கிகொண்டு சிறுமலைக்கு போவதாக பிளான் இருந்தது. நாங்கள் வீடு சேர்ந்த போது வண்டியெல்லாம் ரெடியாக இருந்ததால் வண்டிகள் ரெடியாக இருந்ததால், என் அப்பாவிடம் எல்லோரையும் அறிமுகம் செய்துவிட்டு கிளம்பினோம். என் அம்மா பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிவதால் அப்போது அவர்கள் வீட்டில் இல்லை. எங்களுக்கான சாப்பாடு என் அம்மாச்சி வீட்டில் தான் ரெடியாகி கொண்டிருந்தது.

எங்கள் ஊரில் இருந்து சிறுமலை அடிவாரம் கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர் இருந்தது. வண்டியில் நாங்கள் அடிவாரத்தை நோக்கிச் செல்ல செல்ல சில்லென்று காற்று, எங்களை வரவேற்றது. சிறுமலை அடிவாரத்தில் ஒரு கிறிஸ்த்துவ பாதிரியார் குடியிருந்து வந்தார். அவர் பங்களாவில் தான் எங்களது வண்டிகளை பத்திரமாக நிறுத்திவிட்டு மலையேறக் கிளம்பினோம்.

நான் ஏற்கனவே சாராயக்கதைகள்னு எங்கள் ஊரில் காய்ச்சப்படுகின்ற சாராயம் பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன். இந்த மலையில் தான் சாராயம் காய்ச்சுவார்கள். கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் ராமர் கல் என்னும் இடம் வரும். அங்கே பெரிய பாறையில் நீர் தேங்கி கிடக்கும். அங்கே இருக்கும் ஒரு வழுக்குப் பாறையில் மூன்று கோடுகள் இருப்பதால் அதை ராமர் கல் என்று சொல்லுவார்கள். நாங்கள் அந்த இடத்தை நோக்கி நடக்க நடக்க சாரயாம் காய்ச்சப்படுவதற்கான வாசனைகள் வர ஆரம்பித்தன.

நாங்கள் அந்த இடத்தை அடையவும் அங்கே சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த எங்கள் ஊர் ஆட்கள் அலறி அடித்து ஓடவும் சரியாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதும் காட்டு மிருகங்கள் வந்துவிட்டதா என எங்களுக்குள் பயம் வேற. அப்படி ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் பின்னாடி திரும்பி பார்த்தார். கூட்டத்தில் என்னைக் கண்டவுடன் "அட! கடக்கார முத்துராசு மவன்!" என்று கத்த ஓடிய எல்லோரும் திரும்ப வந்தார்கள். என் நண்பர்கள் கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருந்ததால் போலீஸ் தான் மப்டியில் வந்துவிட்டார்கள் என தலைதெறிக்க ஓடியுள்ளனர். என்னைக் கண்டவுடன் தான் அவர்களுக்கு உயிர் வந்துள்ளது.

அதன் பிறகு என் நண்பர்களுடன் அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டார்கள். சாராயம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை செயல் முறையில் காட்டினார்கள். என் நண்பர்கள் கல்லூரி கெமிஸ்டரி லேபை விட இது பரவாயில்லை என்று குஷியாகிவிட்டனர். மூன்று பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அதிலிருந்து வரும் நீராவியை இன்னொரு பானையில் ஒரு சிறிய குழாய் மூலம் சேமிக்கின்றனர். கீழிருக்கும் பானையில் தான் ஒரு வாரமாக வெல்லம், பட்டை முதலிய பொருள் எல்லாம் போட்டு ஊறவைத்த திரவம் இருக்கும். அதை காய்ச்சும் போது வரும் நீராவி தான் சாராயமாக வெளிவருகிறது.

அப்படி காய்ச்சுகின்ர சாரயம் நம் உடலை அரிப்பதற்கான காரணத்தையும் ஒருவர் செயல் முறையில் காட்டினார். ஒரு குவளையில் சாரயத்தை எடுத்து வானத்தை நோக்கி ஊற்றினார். அந்த சாரயம் கீழ் நோக்கி வரும் போது ஒரு தீப்பந்தத்தை அதில் காட்ட, அப்படியே அது பற்றி எரிந்தது. ஒரு பெட்ரோலை குடிப்பதைப் போலத்தன் இந்த சாரயத்தை குடிப்பது என்று சொன்னார்கள். அப்படி பிடிக்கப்பட்ட சாராயத்தை ஒரு பெரிய டியூபில் போட்டு அடைத்து அந்த இடத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

நேரம் ஆனதாலும் எல்லோருக்கும் பசியெடுக்க ஆரம்பித்ததாலும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு நாங்கள் கிளம்பினோம். என் நண்பர்கள் எல்லோரும் இந்த சிறுமலை ட்ரிப் வித்தியாசமானது என்று சந்தோசப்பட்டார்கள். விட்ட இடத்தில் வண்டிகளை எடுத்துகொண்டு, வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்கான விருந்து சுடச்சுட ரெடியாகி இருந்ததால் களைப்பினால் சாப்பாடி டபுளாக உள்ளே இறங்கியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நடந்த கதையை என் அப்பாவிடம் கூறிக் கொண்டிருந்தேன். என் அப்பா சற்று பயந்து போய்விட்டார். சாராயம் காய்ச்சுபவர்கள் சில சமயம் போலீஸை தாக்கிய சம்பவத்தை எல்லாம் சொன்னார். இப்போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்று சந்தோசப்பட்டார். எங்களுக்கு உள்ளே ஒரு சின்ன பயம் வந்து சென்றது. சாப்பிட்ட கோழி வயிற்றுக்குள் கொக்கரக்கோ என்று கூவியது எங்களுக்கு மட்டும் மெல்லக் கேட்டது.

டீக்கடை சம்பவமும், பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்தின செய்தியும்

எங்க ஊர் டீக்கடையில் காலையில நடக்கிற கூத்து பாக்கவே சிரிப்பா இருக்கும். அப்படி நான் கவனித்த ஒரு கூத்தை இப்ப உங்களுக்கு சொல்றேன். காலைல ஒரு ஐந்து மணிக்கு எங்க ஊர் பூசாரி கோயில்ல ரேடியோ போடுறப்பவே, எல்லா டீக்கடையும் ஓபன் ஆகிடும். எங்க ஊருல ஒரு நாலஞ்சு டீக்கடைகள் இருக்கு. அதுல முக்கல்வாசி அந்த கோயிலை சுத்தியே இருக்கு. முந்தி காலத்துல டீக்கடையில பாட்டு மட்டும் தான் ரேடியோவிலோ டேப்லயோ போடுவாங்க. இப்போ எல்லாம் ரேடியோ மாதிரி டிவி ஆகிடுச்சு. காலைல கே டிவில போடுற பாட்டோட ஆரம்பிச்சா நைட் படம் வரை தொடர்ந்து ஓடும். ஒரு ஆள் வந்து டீக்கடையில உட்கார்ந்தா முதல் காபி குடிச்சுட்டு, வர்ற பேப்பரை படிச்சுட்டு, அங்க போடுற வடை பஜ்ஜியை சாப்பிட்டு பத்து மணிவாக்குல தான் அந்த டீக்கடையையே விட்டு கிளம்புவாங்க.

அப்படி வந்து ஒரு நாள் நம்ம முருகன் உட்கார்றார். இவருக்கு வேலையே டீ குடிச்சிட்டு டீக்கடையிலே அரட்டை அடிக்கிறது தான். இவர் ஒரு குறிப்பட்ட கட்சியை சார்ந்தவர். என்ன ஆனாலும் அந்த கட்சியை விட்டுக் கொடுக்காதவர்.

"தம்பி, ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போடப்பா"

இவர் கடை பாய்லர்ல நிக்கிற டீ மாஸ்டர் கிட்ட சொல்லி முடிக்க அந்தப் பக்கம் இவரோட பங்காளி பழநின்னு ஒருத்தர் போறார்.

"யோவ் பங்கு.. என்னையா நான் உட்கார்ந்து இருக்கதை பார்த்தும் பாக்காத மாதிரி போற.. வாய்யா.. ஒரு காப்பியை குடிச்சிட்டு போகலாம்"

வேலில போற ஓணானை மடியை விடுற மாதிரிங்கிற பழமொழி இவங்களை பார்த்த பிறகு தான் சொல்லி இருப்பாங்க போல.

"தம்பி, மொதச் சொன்ன காப்பியோட இன்னொரு காப்பியை போடப்பா.. பாதி சக்கரை போட்டாப் போதும். நம்ம பங்குக்கு சக்கரை (நோய்) இருக்குல்ல.. என்ன பங்கு.. நான் சொல்றது சரி தான"

இப்படி இவர் சொன்னதுமே மெல்ல பழிநிக்கு உள்ளாற ஷூட் ஆகி இருக்கும். இத்தனை பேர் மத்தில சக்கரை பத்தி கத்தி சொன்னதுல. இருந்தாலும் கொஞ்சம் அமைதியா இருப்பார்.

அந்த நேரம் பாத்து காலைல தினசரி வரும். ஆளுக்கொரு பேப்பரா எடுத்துப் படிக்க ஆரம்பிப்பாங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நக்கல்ப்பட்ட பழநி எப்படா காலை வாரணும்னு கங்கணம் கட்டிகிட்டு இருப்பாரு. இப்போ முருகனோட கட்சியை பத்தி இன்னொரு கட்சி பேச்சாளர் மட்டரகமா பேசி இருக்கதை பேப்பர்ல இவர் படிக்க மனுஷனுக்கு குஷியாகிடும். இந்த நேரத்துல சூடா காப்பியை டீக்கடைக்கார பையன் இவங்களுக்கு தர, அந்த சூடு மெல்ல இவங்க கிட்டயும் ஏறுது.

"யெம்பா பங்கு, என்ன அந்த கட்சிக்காரன் உன் கட்சியை இப்படி பேசி இருக்கான். எவ்வளவு தைரியமா இருந்தா உன் கட்சிகாரன் எல்லாம் நாக்கை புடுங்கி செத்து போகமாட்டீங்களான்னு கேக்குறான்"

மெல்ல பழநி திரியை கொளுத்தி போடுறார்.

"அவன் கிடக்கிறான், காசுக்கு மாரடிக்கிற பய.. ஒரு தடவை என்னதான் பேசுறானானு பாக்க திண்டுக்கல்ல நடந்த மீட்டிங்கு போயிருந்தேன்.. இவன் பேச்சை கேக்க மைக் செட் போடுறவன் மட்டும் தான் இருக்கான்.. கேக்குறதுக்கே ஆள் இல்லாதப்போ எப்படி பேசுறான் பாரு"

மனுஷன் டென்ஷனாகி நாலஞ்சு கெட்ட வார்த்தைகளை அந்த பேச்சாளர் மீது விட்டிருப்பார்.

பழநிங்கிறவர் இருக்காரே, அவர் அப்பக்கூட விடமாட்டார்.

"அட பங்கு, நல்லா யோசிச்சு பாரப்பா.. அது உன் கட்சி மீட்டிங் தான"

"என்ன நக்கலா உனக்கு..ம்ம்.. நம்ம பங்காளியேன்னு உன்னை கூப்பிட்டு காப்பி வாங்கி கொடுத்தா, நான் கொடுத்த காபித் தண்ணி உள்ளாற இறங்கினவுடனே நம்மளையே நக்கல் அடிக்கிற..ம்"

முருகன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்து இருப்பார்.

"யோவ்.. சும்மா போறவன கூப்பிட்டு சக்கரை..கிக்கரைனு நீ நக்கலடிப்ப, ஒத்த ரூவா காப்பிக்கு அத நா நாக்க தொங்க போட்டு கேட்டுகிட்டு இருக்கணுமா உன் கட்சிகாரன மாதிரின்னு"

பழநி அவர் வாய்க்கு வந்தபடி பேச, அந்த இடத்துல அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு எல்லோரும் காதை பொத்துற அளவுக்கு சண்டையும் தடித்த வார்த்தையுமாத் தான் இருக்கும்.

இப்படித்தான் நிறைய நேரங்களில் டீக்கடை பஞ்சாயத்துகள் இருக்கும். இந்த சண்டைகள் சில நேரம் அடுத்த தடவை டீக்கடையில் பார்க்கும் வரை தான் இருக்கும். இல்லையென்றால், ஜென்மபகையாகி விடும்.

இதைவிட பெரியது, குழாயடி சண்டைகள் தான். இந்த வம்பு சண்டைகள் பெண்களில் இருந்து ஆரம்பிப்பதால் பெரும்பாலும் ஜென்ம பகையாகவே மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

அப்புறம், நேற்று படித்த ஒரு நகைச்சுவையான செய்தி. புரோட்டாவுக்காக மதுரையில் ஒரு குடிமகன் பஸ்ஸையே கடத்தினாராம்!

Saturday, February 17, 2007

யாஹூவின் சென்னைப் பக்கம் - சூப்பர் புகைப்படங்களுடன்

யாஹூ இந்தியாவில் இருக்கும் மாநகரங்களுக்கென புதியதாக தனித்தனியான பக்கங்களை உருவாக்கி உள்ளது. அங்கே நீங்கள் சென்றால் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழச்சிகள் மற்றும் சென்னையை சுற்றி எடுத்த புகைப்படங்கள் என்று பல கலவையான செய்திகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

அங்கே இருந்து சுட்டது தான் கீழே உள்ள படங்கள் சில.. அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அப்படியே ஒரு ரவுண்டு சென்னையை சுற்றி வந்தது போல இருந்தது..

இது திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் இருக்கும் ஒரு கடை


பச்சை விளக்குகிற்காக வெயிட்டிங்


சென்னை சென்ட்ரல் உள்ளே


சென்னைக்கு வராதவங்க கூட திரைப்படங்களில் பார்த்திருக்கும் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் ஒரு சின்னம் (?)


நம்ம மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்


போய்த்தான் பாருங்களேன் யாஹூ சென்னை பக்கத்துக்கு

Friday, February 16, 2007

கிட்டு மாமாவிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உலக மலரெல்லாம்
உன் பெயர்
சொல்லி
இன்று
பூக்கட்டும்!

பொங்கி ஓடும்
தேச ஆறெல்லாம்
இன்று
உன் பெயர்
சொல்லி
கொண்டாடி குதிக்கட்டும்!

அலையும்
காற்றெல்லாம்
புல்லாங்குழல்
நுழையாமல்
கீதம் இசைக்கட்டும்!

கலைந்து கிடக்கும்
முகிலெல்லாம்
நியுஜெர்சி மீது
மழையாக
உன் பெயர்
சொல்லி பொழியட்டும்!

தாரை தப்பட்டை
இல்லையென்று
நினைத்தால்
இடியும் மின்னலும்
குறுக்கே வந்து முழங்கட்டும்!

ஷ்ரேயாவைப் போலவே பூச்செண்டோடு நாங்களும் களிப்புற சொல்கிறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமு!

தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது

தர்மபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நீதித் துறையின் காலர்களை உயரவைத்துள்ளது. எந்த கட்சியினர் என்றும் பார்க்காமல், கழுத்தை சுற்றிய அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இந்த வழக்கில் சரியானதொரு தீர்ப்பு கிடைக்க வழிவகைகள் செய்த காவல்துறையினருக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். (அந்த காவல்துறையினருக்கு பதவி உயர்வு கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)

இந்த வழக்கில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருபதுக்கு மேற்பட்ட சாட்சிகள் பயமுறுத்தலால் பல்டி அடித்ததும், குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்போதைய அரசும் உடந்தையாய் இருந்தது என்பதும் நாடறிந்த விஷயம். இந்த சமயத்திலே, இறந்து போன மாணவிகளின் தந்தை ஒருவர் வழக்கை இடமாற்றம் செய்ய சொல்லி கொடுத்த மனு வழக்கையே திசை மாற்றி, இப்போது மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கப்படக்கூஒடியதே. இனிமேல், அரசியல் என்னும் பெயரால் வன்முறைகள் நடக்காது இதன் மூலம் என்று நம்புவோமாக.

ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் பஸ்ஸை எரிப்பது, கடைகளை உடைப்பது என்பது சாதாரண ஒரு நிகழ்சியாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அப்படி ஒரு பெரிய சம்பவங்களும் நடக்காமல் தமிழகம் இருப்பது வரவேற்கத்தக்கதே. முதலீட்டாளர்களை இது மகிழ்வித்து தொழில் வாய்ப்புகள் பெருக இது வழிவகுக்கும், நல்ல விஷயமே.

ஆனால் இவ்வளவு பெரிய சம்பவத்தை பற்றி இந்த சம்பவங்களுக்கு மறைமுக காரணமாக இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா (இவருக்கு கொடைக்கானல் பிளசன்ட் டே ஹோட்டல் விவகாரத்தில் தண்டனை கிடைத்ததற்காக நடந்த கோர சம்பவமே இது) இதைப் பற்றி ஒரு மன்னிப்புகூட கேட்காமல் (குறைந்த பட்சம் அந்த கட்சியின் தலைவி என்பதால் கூட) இருப்பது எந்த அளவுக்கு அவர் அரசியல் நடத்துகிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதையெல்லாம் விட, இந்த கோர சம்பவம் நடந்த போது, மேடைக்கு மேடை புயலென பொருமித் தள்ளிய திருவாளர் வைகோ இதைப் பற்றி இப்போது மூச்சுக் கூடவிட முடியாமல் மயான அமைதியில் இருப்பது அவர் அரசியலில் இரண்டறக் கலந்து நிறம் மாறிவிட்டர் என்பதையே தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்த துயர சம்பவத்தில் உயிர் நீத்த மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி ஆகியோரின் ஆன்மா, ஏழு ஆண்டுகளுக்கும் பின் இப்போதாவது சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புவோமாக.

Thursday, February 15, 2007

400வது பதிவிற்காக ஒரு சின்ன சர்வே

ஆமாங்க.. சும்மா ஒரு சின்ன சர்வே தான்..
இதுவரைக்கும் நாம இங்கே நடத்தினதே இல்லேல..அதுனால..


1.இதுவரை இங்கே பதிவிடப்பட்டதில், உங்களுக்கு பிடித்தது எது?
(டக்குன்னு மனசுக்குள்ள வரணும்.. அப்படி ஏதும் இல்லைன்னாலும் பரவாயில்ல.. இ.பி.கோ செக்க்ஷன் 333 படி, அப்படின்னு எந்த போன்டா சட்டமும் உங்க மேல பாயாது..)

2.பிடித்த வகைகள்?
அ. சினிமா
ஆ. கதை
இ. கவிதை
ஈ. அனுபவச் சிதறல்கள்


இந்த ரெண்டு கேள்வியை யோசிக்கவே நான் வேதாளம் பிடிக்க போன விக்ரம் (ஹிஹிஹி.. விக்கிரமாதித்தன் கொஞ்சம் சுருக்கமா) மாதிரி ஆகிட்டேன்..

அப்படியே வழக்கம் போல பின்னூட்டத்துல சொல்லுங்களப்பா...

அட.. சர்வே மட்டும் போட்டா என்ன ஆகுறது, அது தான் உங்களுக்கு தேங்காய் உடைக்கணும்னு ஆகிடுச்சு.. அத இப்படி கவிதைல இருந்து ஆரம்பிப்போமே

மனம்
ஒரு குரங்குன்னு
சொன்னவன்
யாரென்று
தெரிந்தால்
என்னிடம் சொல்லுங்கள்..

அவளை
கண்டவுடன்
நாய் மாதிரி
வாலாட்டியும்,
குதிரை மாதிரி
கடிவாளம் போட்டும்,
பூனையைப் போல
பதுங்கி பதுங்கி
நடக்கிறதே
என் மனசு?

Wednesday, February 14, 2007

காதலர் தினமும், என் 400வது பதிவும்

எங்கே என் காதலி
என்று
ஒவ்வொரு மணித்துளியும்
என் இதயம் கேட்க,
கடலின்
அலை போல
கரை வந்து தேடுகிறேன்..

அப்படித் தேடும் போது,
காதல் செய்வோரின்
கால்கள் தொட்டதிலே
முகிழ்த்ததே
அந்த
கவிதைகள் எல்லாம்.

காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்.

காதல்
செய்வோர்
முத்தம் செய்கின்றார்.

என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்.

காதலருக்கு எல்லாம்
இன்று காதலர் தினம்
என்பதால் சிறப்பு.

எனக்கோ
இது
நானூறாவது பதிவு
என்பதிலே
ஒரு சந்தோசம்..


அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே..

பி.கு: விரைவில் நம்ம அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு.. எதிர்பாருங்கள்..

அதுமட்டுமா, அடுத்த சில, 400வது பதிவிற்கான சிறப்பு பதிவுகள்.. (நம்ம நானூறாவது பதிவை எப்படி வந்து சேர்த்தேன் பாத்தீங்களா, காதலர் தினத்தோட..)

இந்த உயரம் நான் ஏறியதற்கு உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் தான் ஏணிபடிகள்.. அந்த ஒவ்வொரு படிக்கும் நான் தேங்காய் உடைக்க வேண்டாமா..

தேங்காயோடு நான் ரெடி..

Tuesday, February 13, 2007

காதல் கவிதை கேளுங்கள் ஒலி FM-இல்

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக இன்று இரவு ஈஸ்டர்ன் நேரப்படி இரவு 7:30 மணிக்கும், 12 மணிக்கும், கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒலி FM-இல், பதிவர்களின் கவிதைகள் தேன் குரல் (சும்மா சொல்லக்கூடாது.. இவங்க குரல் இனிமையை.. ஒரு முறை தான் பேசினாங்க.. தேன்கூடு கட்ற அளவு தேன்ங்க காதுல) ஷைலஜாவால் வாசிக்கப்படுகிறது. இவரும் ஒரு பதிவர் தான். பதிவர்கள் அண்ணாகண்ணன் , மதுமிதா, சிலம்பூர்யுகா,ப்ரியன். உதய்குமார், , ரிஷிசேது, மு.கார்த்திகேயன், ஆசாத், சிறில் அலெக்ஸ் போன்றவர்களின் கவிதைகள் வாசிக்கப்படுகிறது. ஆங்.. சரியா கண்டுபிடிச்சுட்டீங்க போல..

ஆமாம். இங்கே காதலர் தின ஸ்பெஷலா முதன் முதலாய் எழுதிய நடுங்கியபடி நான், நாணியபடி அவள் என்ற கவிதை வாசிக்கப்படுகிறது.

இந்த கவிதையை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கப்போற ஷைலஜாவுக்கும் ஒலி FM குழுவினருக்கும் நன்றி!

அன்றும் இன்றும் என்றும் எனக்கு உற்சாகம் தரும் பானமாய், பின்னூட்டங்களை தந்து ஆதரவளித்து வரும் இனிய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

காதல் கடலில் மூழ்கி முத்தங்கள் எடுக்கும் காதலர்களுக்கும், தேடுதல் வேட்டையில் இருப்பவர்களுக்கும்.. இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

எனை வெல்லனும் வா - காதலர் தின ஸ்பெஷல் 4

பகலில்
விண்மீன்கள்
விழித்திருக்க,
நிலவும் கூட
வானத்தில் படுத்திருக்க,
சூரிய விளக்கில்
சுற்றம் சூழ
வந்திருக்க,
அவள்
சங்கு கழுத்தில்
மஞ்சள் கயிறொன்று
நான்
கட்டினேன்.

அவ்வளவு தூரம்
ஏறி
யாரும்
வானத்துக்கு
அட்சதை தராததால்,
அது
மழையாக
எங்கள் மேல்
அட்சதை தூவியது.

அந்த
மழையில்
முகிழ்த்த
மலரெல்லாம்
நன்றிக்கடனாக
எங்கள் மேல்
தானாக
விழுந்து
பூமழை தூவியது.

நானும் அவளும்
நிலவும் சூரியனும்
ஆனோம்.

அந்த
முதல் நாள்
இரவிலே,

கட்டிலை சுற்றி
மலர்களும்
மலர்களின் மேல்
மங்கையும் நானும்...

விளங்காத
விஷயங்கள்
மலர்ந்த
நாள் முதல்
மனதிலே இருக்க,
விளங்கும் பொருட்டு
விளக்கை அணைத்தோம்.

வெங்குச்சா
கல்லிரண்டு
முட்டிக்கொண்டால்
முளைத்து விடும்
நெருப்பைப் போல,
எங்கள்
மூச்சுக்காற்று
முட்டிக்கொண்டதில்
பற்றிக்கொண்டது
பக்கத்து வீட்டு
பந்தலொன்று.

அவளை
உதட்டால்
அளந்துவிட,
பிறை
நெற்றியிலிருந்து
புறப்பட்ட
என் உதடுகள்
அவள்
உதடு கண்டதும்
மென்படுக்கையென
சில மணி நெரம்
படுத்துக் கிடக்கிறது.

அடடா..
விட்ட வேலை
என்ன ஆவது
என்று
வருந்தி
அங்கிருந்து
ஆரம்பித்து
மொட்டுகள் மீது
முட்டி நின்றது..

அவளது விரல்கள்
மெல்ல
என் உதடு
தொட்டு மூடுகிறது..

சொன்னது போதும்
எனை
வெல்லனும் வா என்று
வரவேற்கிறது..

ஐந்தாண்டுகள் கழித்து-
தாவியொன்று
தவழ்ந்தொன்று
என்று
இரண்டு முயல்கள்
இந்த
இரண்டு மான்களுக்கு.

அழகிய
பல்கலைகழகமானது
அந்த கூடு
அதுவே
எனது சிறு வீடு.

Monday, February 12, 2007

குங்குமத்தால் ஒரு புள்ளி - காதலர் தின ஸ்பெஷல் 3

எலுமிச்சை நிற
சுடிதாரில்
குட்டை டாப்ஸில்
அவள் வந்தாள்..

அப்படி அவள் வந்ததில்
அப்படியே
நான் வியந்து நின்றதில்
சிலையென நினைத்து
சில காக்கைகள்
என் மீது
எச்சிமிட்டு சென்றன..

காலேஜ் நோட்டை
மார்போடு
அவள் அணைத்து
வருகையில்,
எனக்கு கிடைக்காத
இடமென,
அந்த தவமென,
அந்த ஏட்டை
எரிக்க
தீக்குச்சி தேடுகிறேன்..

தேசிங்கு ராஜா போல
எனது
இயந்திரக் குதிரையில்
அவளை
கடத்திச் செல்கிறேன்..

சின்ன சின்ன
வேகத் தடைகளை
மெதுவாக
கடக்கையில்
உண்டான பயத்தில்
என் இடுப்பை
அவள்
பற்றுங் கணத்தில்
அதன் பின்னே
வந்த
வேகத் தடைகள்
எங்கள் வேகத்தை
தடை செய்யவில்லை..

வண்டியின்
வேகம் காட்டும்
ஸ்பீடோமீட்டர்
எங்கள்
இதய துடிப்பை
அளக்க நினைத்து
வழியிலே
அதன் முட்களை
பறிகொடுத்திருந்தது..

முதன் முறையாய்
என் தேவதையுடன்
நகர்வலம்
செல்கிறேன்..

எப்படித் தான்
இந்த
பறவைகளுக்குத் தெரிந்ததோ..
பறந்து வந்து
போகும் பாதையில்
பூக்களைத் தூவுகின்றன..

முதலில்
என்னை விட்டு
எட்டியே அமர்ந்திருந்தாள்..

என்னோடு
அந்த
வேகத் தடையில்
முட்டியவள்
அதன்பிறகு
காற்றைக்கூட
எங்கள்
இருவரிடையே
இருக்கவிடவில்லை..

பூக்களினாலான
தலையணையில்
தலை வைத்திருக்கிறேன்..
அவள்
மடி,
மலர் என்பதை
அண்ணா சாலையில்
ஹோர்டிங் வைத்தா
சொல்ல வேண்டும்...

அப்படி
படித்திருக்கும்
காலங்களில்,
அவள்
முகம் காட்டாது
சில
என் பார்வைகளுக்கு
திரைச்சீலை
இழுத்து விட்டிருந்தது..

மெல்ல குனிந்து,
அவள்
இதழால்
என் இதழை
தைக்கிறாள்,
முத்தம் என்னும்
முத்தான பெயரால்..

அப்படி
முத்தங்களை
அவிழ்த்துகொண்டிருந்த
அந்த
இதழ்கள்
என்ன
சக்கரை ஆலையா?

சட்டென்று
உடலின்
சக்கரை அளவு
அறுநூறை
தாண்டியது..

கொஞ்ச
நேரம்
அவள்
உதடுகள்
ஒட்டியதற்கே
தனது
காலனி மக்களை
கூட்டிக்கொண்டு
கட்டெறும்பு கூட்டம்
என் இதழை
மொய்க்க ஆரம்பித்தது..

அவளை
கொஞ்சம்
நினைத்துப் பார்த்தேன்..
உலக
தேன்களுக்கு
அவள் தான்
மொத்த ஊற்றோ!
ஹோல்சேல் டீலரோ!

அந்தப் பக்கம்
அலைந்த
வண்டு கூட
தேன் கிடைக்குமா
என்று
விசாரித்துப் போனதாம்
அவள்
இதழ் குவியலிடம்..

அப்படிக் கேட்கும்
கணத்தில்
பக்கத்தில்
இருந்த
கண்களை பார்த்தவுடன்,
கருப்பு நிறத்தில்
பூக்களா என்று
தங்கள் கூட்டத்தோடு
மாநாடு போட
கிளம்பிவிட்டதாம்...

இந்த
சந்தேகத்தை
தீர்த்து வைத்து
எந்த தருமி
பொற்காசுகளை
அள்ளப் போகிறானோ
வண்டு மஹாராஜாவிடம்..

அட!
ஒரு பானை
சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
என்பார்கள்..
அவளின்
ஒரு பாகத்தை
சொல்வதற்குள்
என்
தமிழுக்கு
தன் உதடு
சுளுக்கி விட்டதாம்..

மீதியை
சொன்னால்
மாண்டு போகுமோ!
என் தமிழை
வாழ வைக்க
இத்தோடு
இதற்கு
வைக்கிறேன் முற்றுப்புள்ளி!

அவள்
நெற்றியில்
நாளை வைக்கிறேன்
குங்குமத்தால் ஒரு புள்ளி!

[நாளை அனைவரும் வருக! இந்த காதல் ஜோடிகளை அன்பு இதயத்தால் வாழ்த்துங்கள்!]

Saturday, February 10, 2007

காதல் உளறல்கள் - காதலர் தின ஸ்பெஷல் 2

தையல் இயந்திரமாய் அவளுக்கான கனவுகளை என் இதயம் நெய்கிறது... தண்டவாளம் அருகே நடந்து சென்றாலும் என் இதயத்தின் ஓசை தான் ஊரையே எழுப்புகிறது... அது அவளை வரவேற்க வெடிக்கப்படுகிற இதயத்தின் வாணவேடிக்கை என்று காதுகளை திறந்து வைக்கிறேன்... நான் சொல்வது உண்மை.. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை என்று நான் வளர்த்த காதலின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.. அவளை முதன் முதலாக பார்த்தவுடன் என் இதயமும் ஈரலும் இடம் மாறி, ஈரல் இப்போது ரத்தத்தை சுத்திகரிக்கப் பழகி விட்டது.

அவள் நடக்கும் பாதையில் எல்லாம் அனைவரின் பார்வைகளும் அவள் பின்னே ஊர்வலம் போகின்றன. அந்த ஊர்வலத்தில் சிக்கிய குழந்தையாய் என் பார்வை மிதிபட்டு போகிறது. கருப்பு விழுதென தலையிலிருந்து கீழிறங்கும் அவள் கூந்தல் பிடித்து, மெல்ல மேலேறி, அவள் செவிகளில் சொல்லிவரத் துடிக்கிறது மிதிபட்ட எனது பார்வைகள், நான் அவளை காதலிக்கிறேன் என..

ஊரையே எழுப்பிய எனது இதயத்தின் ஓசை அவளையும் திரும்பி பார்க்க வைத்தது. நான் நினைத்துகொண்டேன், சூரியகாந்தி இப்போது தான் பரிதியின் பக்கம் பார்வையிட ஆரம்பிக்கிறது என்று. அவள் என்னை தேடித் தேடி பார்வை துழாவல்களை துவங்கும் போது, நத்தை தன் கூட்டுக்குள் முடங்குவது போல, நான் என்னை மறைத்து கொள்கிறேன். அவள் பார்க்காதவாறு நான் அவளை பார்த்து, அவள் மனசுக்குள் மெல்ல என்னை பற்றிய நினைவுச் செடியை ஊன்றி வைக்கிறேன். அது இப்போது பூக்க ஆரம்பித்து ஊருக்கே சொல்லிவிட்டது அது வெளிவிடும் வாசத்தில், அவள் காதல் செடியை சுமக்கிறாள் என்று.

ஒரு நாள், மழை.. மழையில் நனையவே விருப்பம் கொண்ட நான், குடை இருந்தும் நனைந்து வந்தேன். நான் நனைவதை பார்த்து, அச்சத்தில் மழையே என்னைவிட்டு சற்று தள்ளியே பொழிந்தது. தூரத்தில், தெருவிளக்கின் வெளிச்சங்கள் நிலவுக்கு ஓளி தர, குடை பிடித்து அவள் வந்தாள். நானும் அவளும் ஒரு புள்ளியில் சேர்ந்தோம். குடையில்லாமல் நான் வருவதை பார்த்து, என்னை குடைந்து விடும் வகையில் பார்த்தாள். குடைக்குள் வருமாறு அவள் என்னை விழியால் வரவேற்க, குடைபட்ட நான் குடைக்குள் ஒதுங்கினேன். கரைக்க மட்டுமே பழகிய மழையின் கைகளுக்கு ஒரு தாஜ்மஹாலை கட்டவும் தெரிந்திருக்கிறது. பூமியை தைத்து மட்டுமே பெய்து வந்த மழை ஊசிக்கு இரு இதயத்தை ஒட்டவும் தெரிந்திருக்கிறது.

அந்த ஈரமான மழை நாளில் தான், எங்களுக்குள் காதல் தீ பற்றிகொண்டது. விஞ்ஞானமே வியந்து போகும் அளவுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் எங்கள் இதயங்கள் இடம் மாறின. இந்த ஆச்சர்ய நிகழ்ச்சிக்கு அவள் பிடித்து வந்த குடையே கூடாரம், வான்மழையே ஆதாரம். அங்கே எங்கள் பார்வைகள் சந்திந்து கொண்டதில் பிறந்த மின்சாரக் கீற்றில், தரை விழுந்ததோ மின்னல், என ஊர் போர்வைக்குள் புகுந்துகொண்டது. வானம் கிழிபட்டு பொத்துக்கொண்டது.

அந்த நேரம், நெருங்கி அவளைப் பார்க்கும் போது தான் எனக்குள் கருவுற்றது ஒரு பயம். மீனிற்கு தண்ணீர் என்றால் கொள்ளைப் பிரியம். இந்த மழை நீரை நம்பி எங்கே அவள் கயல்விழிகள் வழுக்கி விழுமோ, நீந்தித் திரிய என்று. அப்புறம் அவள் விழித் தூண்டிலில் என்னைப் பிடித்து, ஊஞ்சலென ஆடவிட்ட போது தான் எனக்கு புரிந்தது. அடடா! இது சிறை படும் மீனல்ல, சிறைபடுத்தும் மீனென்று.

தேவதை அனுப்பிய பிள்ளையாருக்கு தேங்காய்கள் உடைத்தேன். சிதறிய தேங்காய்கள் பார்க்கும் போதெல்லாம், அவள் சிரிக்கும் போது சிதறும் என் இதயம் நினைவுக்கு வருகிறது. அதில் தெரிகிறது அவளது உதட்டின் தடங்கள், சிதறியதை தைத்துவிட்டு போன அடையாளங்கள்.

நிலைக்கண்ணாடி முன் நிலைகொள்ளாமல் ஆயிரம் முறை நான் தலை வாரிக்கொண்டதில், என் தலையும் சீப்பும் இப்போது காதலிக்கின்றன. கழற்றி கழற்றி மாற்றி மாற்றி ஆடைகள் அணிந்து கொண்டதில் என் தேகமும் உடைகளும் காதலிக்கின்றன. எனக்குள் ஊற்றெடுத்த காதல் மெல்ல காற்றில் பரவி எல்லோருக்கும் அதை ஊசியேற்றுகிறது. இப்போது என் தோட்டத்து முருங்கைப் பூவும் முல்லை பூவும் காதலிக்க ஆரம்பித்ததாக, அவள் தலையில் குடியேறிய ரோஜாப் பூ சொல்லிவிட்டு சென்றது..

மது அருந்தினால் உளறுவார்கள் என்று சொல்லக் கேள்வி. அட! அவள் உதட்டுப் பழங்களுக்கு அவ்வளவு சக்தியா என்ன! நேற்று வரை ஒழுங்காய் எழுதி வந்த நான் இப்போது என்ன எழுதுவது என்று திணறுகிறேன். வெறும் காகிதத்தை கையில் வைத்துக்கொண்டு கவிதை எழுதிவிட்டதாய் ஒரு பதிவையும் போடுகிறேன்.

சரி! மறந்து விடுங்கள் இந்த பதிவை! தூரமாய் தெரியும் இடத்திற்கு வாருங்கள், என் இதயத்தை கண்காட்சிக்கு வைத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் முகவரியை பதித்துவிட்டுப் போங்கள். நாளை அந்த முகவரிகள் எனக்கு உதவலாம்!

Thursday, February 08, 2007

நடுங்கியபடி நான், நாணியபடி அவள் - காதலர் தின ஸ்பெஷல் 1

மற்றவர் முன்
கபடியாடும் எனது
உதடுகள்
உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை..

நேர் பார்வையில்
நோக்கியே
உலகம் பார்க்க
பழகிய நான்
உன்னைக் கண்டதும்
பூமி பார்த்து
பள்ளம் பறிக்கிறேன்..

ஆற்றில் மீன் பிடித்து
ஆட்டம் போட்ட நான்
உன் கயல்விழிகளில்
சிறை பட்டு
நீந்த மறந்தேன்..

ஆயிரம் பேர் கொண்ட
கூட்டத்தோடு
குலாவிக் கிடந்த நான்
உன் கூந்தல் காடுகளில்
கூடு கட்டுகிறேன்..

இப்படி நிறம்
கொண்ட ஆப்பிளை
எந்த கடையிலும்
பார்த்ததில்லை..
கடிக்கச் சொல்லும்
உன் சிவந்த
கன்னம் மட்டுமே
எனக்குத் தெரியும்..

என்னை
கடந்து போன போது
நீ
நடந்து சென்ற
உன் ஒவ்வொரு
பாதச் சுவடுகளிலும்
மறுபடியும்
நடந்து பார்க்கிறேன்..
யாரெங்கே
ரோஜாக்களை
மலர விட்டது..

இப்படியெல்லாம்
தமிழின் முதுகேறி
கவிதை என்று
பல
கிறுக்கி வைத்திருக்கிறேன்

இந்த
காதலர் தினத்திலாவது
காதல் குதிரையேற
காதலி
கிடைப்பார்களா..

நடுங்கியபடியே
நான் கொடுக்க
நாணியபடியே
இந்த கவிதையை
வாங்க..

இருந்து
விட்டு போகட்டும்
என்று
இப்போது தான்
பிள்ளையாரை
சுற்றி வருகிறேன்..

காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்

கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..

அப்படி
அவள் கிடைத்தாலும்
அவளின் முதல்
பார்வையிலே
என்
இதயமும் ஈரலும்
இடம் மாறியதா
என்று
இங்கு
எழுதியும் வைக்கிறேன்..

காதலர் தின ஸ்பெசல் பதிவுகள் எல்லாம் மொத்தமாய் ஒரு கதையாகச் சொல்லப் போகிறேன்.. இது தன் நிழல் அமர்ந்த இடத்தில் ஒரு நிஜம் அமராதா என்று ஏங்கும் ஒருவனின் இதய இசைக் கோலத்தின் முதல் புள்ளியே..

[நாளை மறுபடியும்]

Wednesday, February 07, 2007

இதயம் கொண்ட அடையாளங்கள்

வெள்ளை தொப்பியும் கறுப்புக்கண்ணாடியும் எம்ஜியாருக்கு அடையாளம். தாடியும் கைத்தடியும் பெரியாரின் அடையாளம். நான்கு கோபுரத்தை மட்டுமே போட்டால் மதுரை என்பதற்கான அடையாளம். திருப்பி போட்ட சிவப்பு முக்கோணம் குடும்பக் கட்டுப்பாடுக்கு அடையாளம். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் அடையாளம் ரொம்ப முக்கியம். ஆனால் அந்த அடையாளத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. எங்காவது உதயசூரியன் என்றால் நினைவில் முந்திகொண்டு வருவது அரசியல் தான். எம்ஜியார் அடையாளப்படுத்திவிட்ட இரட்டை இலைதான் இன்னும் அதிமுக என்ற கட்சியை தாங்கிப்பிடிக்கிறது.

இதெல்லாம் தலைவர்களுக்கும் நாடறிந்த விஷயங்களுக்கும் உண்டான அடையாளங்கள். ஆனால் நம்மை சுற்றி வாழும், வாழ்ந்த எத்தனையோ பேரை, நம் நினைவுக்கு சடுதியில் கொண்டு வர ஏதோ ஒரு அடையாளங்கள் தேவைப்படுகின்றன. நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணு சேர்ந்திருக்காடா நம்ம முதல் வருஷத்துல என்று ஒரு பெண்ணை ஒருத்தன் அவன் நண்பர்களுக்குச் சொல்லிவிட்டால், அதன் பிறகு அவள் அந்த கூட்டத்தில் அப்படியே குறிப்பிடப்படுகிறாள். பத்து வருடம் கழித்து இவர்கள் சந்தித்துக்கொண்டால் கூட அந்த பேரே அவளை இவர்களுக்கு நினைவுப்படுத்தும்.

நேற்று முன்தினம் என் பள்ளி வயது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது. என் பள்ளிவயது தோழர் தோழிகள் பல பெயரின் பேர்களைவிட அவர்களின் அடையாளப் பெயரே மனதில் கல்வெட்டு போல பதிந்துகிடக்கிறது என்று. என் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த ஒருவனை சிறுவயதிலிருந்தே ஊளமூக்கா என்று கூப்பிட்டு இன்று வளர்ந்து பெரியவனாகி பார்க்கும் போதும் அதே பெயரே நிலைத்து கிடக்கிறது. அது எல்லோர் மனதிலும் ஆலமரமாய் வேரும் விழுதும் விட்டு தனது கிளைகளை பரப்பிக் கிடக்கிறது. நம்ம ஷ்யாமை எல்லோரும் நாட்டாமை என்று தான் அழைக்கிறார்கள். சில நாள் கழித்து அதுவே அவருக்கு நிலைத்துவிடும். பல நாட்கள் கழித்து, நம்ம ஷ்யாம் எப்படி இருக்கிறார் என்று யாராவது கேட்டால், ஷ்யாமா யாருப்பா அது என்று தான் கேட்கத் தூண்டும். அது தான் அவருக்கு அடையாளம். இவர் ஒரு பேண்ட் சட்டை போட்ட நவயுக நாட்டாமை. ஷ்யாமை, மேல் சட்டை போடாமல், நெற்றியிலும் உடம்பிலும் சந்தனம் பூசி, தலையில் குடுமியும் காதில் கடுக்கனும் வாயில் வெற்றிலையும், வெள்ளை வேட்டி கட்டியவராக, கிராமத்து அக்மார்க் நாட்டாமையாக நினைத்துப் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது.

நான் படிக்கிற காலத்தில் இருந்த ஒரு பேராசிரியர், பாடம் நடத்தும் போதும் எதற்கெடுத்தாலும் வாட் வாட் என்று தான் சொல்வார். சில நேரம் அவர் வகுப்பு போரடிக்கும் போது, நோட்டில் கோடுகள் போட்டு அவர் எத்தனை வாட் சொல்கிறார் என்று கணக்கெடுப்பது உண்டு. பல முறை அவர் சதமெல்லாம் அடித்ததுண்டு. அவரை இன்றும் 'வாட்' ராமனாதன் என்று தான் அழைக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு அடையாளம் என்றால் உடம்பில் ஏற்படும் அடையாளங்கள் அடுத்த வகை. கிரிக்கெட் காய்ச்சல் அப்போது பரவாத காலம். மட்டை எடுத்தால் சிலம்பை சுற்றுவதை மாதிரி தான் எனக்கு விளையாடத் தெரியும். பந்து என் கிட்ட வருகிறதோ இல்லையோ, மட்டையை சுற்றுவேன். ஒரு முறை என்னைவிட மூன்றடி தள்ளிப் போன பந்தை நான் அடிக்க நினைத்து,மட்டையை சுழற்றுகையில், என் நண்பனின் தாவங்கட்டையில் ஏற்படுத்திய காயம் அவனுக்கு இன்னும் என்னை ஞாபகப்படுத்தும் அடையாளம்.

ஒரு முறை கபடி விளையாடும் போது, வலது பக்க மேலுதட்டில், மூக்கிற்கு கீழே உண்டான காயம் இன்னும் எனக்கு அந்த நாளை ஞாபகப் படுத்தும் ஒரு அடையாளம். எதிரணி ஆளை நான் பிடிக்கையில் அவர் வாய்ப் பற்களின் ஒன்று பதிந்த தடம் தான் அது.

இப்படியாக, ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும் மனசில் உண்டான அடையாளங்கள் தான் என்றும் மறக்கமுடியாதது. இறந்து போன நண்பன் கூட வண்டியில் ஒன்றாகப் போனதும், என் ஐயாவின் கைபிடித்து நடந்தவாறு அவரின் கதைகளை கேட்டதும், அதில் ஐநூறு கேள்விகள் கேட்டதையும் என்றும் மறக்க முடியாது. வகுப்பில் அமர்ந்து பாடம் கவனிக்கும் போது, மெல்ல என் பக்கம் திரும்பி, ஒரு பக்கம் தலை சாய்த்து, பட படவென்று பட்டாம்பூச்சி மாதிரி இமைகள் அடித்து 'என் முத்தாம்' என்று உதடு சுழித்து அவள் சொன்னதில், என் இதயம் தாறுமாறாய் துடித்து விலா எலும்பில் மோதிக்கொண்ட அடையாளமும் அதிலொன்று.

[நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்..]

ஒவ்வொருக்கு ஆணிற்கு பின்னாலும், அவனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்ணிருக்கிறாள் என்று கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இப்போ தான் நேர்ல இப்போ தான் பாக்குறேன்.. கிட்டு மாமாவின் இந்த வெற்றிக்கு மாமியும் ஒரு காரணம். மாமிக்கு ஒரு ரஜினி சல்யூட்.. "வண்டி உருண்டோட அச்சாணி தேவை.. என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை" என்னும் பாடலக்கேற்ப ஓருயிராய் வாழும் கிட்டு மாமா மாமி தம்பதிக்கு வாழ்த்துக்கள் (மாமி.. அந்த ஸ்ட்ராங்க டீ நமக்கும் ஒரு கப்)

Tuesday, February 06, 2007

அஜித் நலமுற வேண்டுகிறோம்

கிரீடம் படப்பிடிப்பில் சண்டை காட்சியினை படமாக்கும் போது, ஏற்பட்ட வலியில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, 'தல' அஜித் சீக்கிரம் குணமடைந்து நலமுடன் மறுபடியும் சூட்டிங்கில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான தல ரசிகர்களின் சார்பாக இறைவனை வேண்டுகிறேன்.

அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று அவரது மனைவி ஷாலினி சொல்லிருந்தது போல், அப்படி நடக்காமல் இருந்தால் மிகவும் சந்தோசமே..

கிட்டு மாமுவும் அடிச்சிட்டாரு 200

இது 200 அடிக்கும் காலம் போல.. நம்ம கிட்டு மாமுவும் இப்போ 200+ கிளப்பில் சேர்ந்துட்டார்.. குறளை எளிமை ஆக்குபவர்.. இப்படி இவர் எளிமை ஆக்கிய குறள்கள் ஐம்பதை தாண்டி விட்டது.. பாட்டு பாடி எங்களை எல்லாம் இசை வெள்ளத்தில் மிதக்க வைப்பவர்.. அந்த ஸ்ட்ரீம் பாடல்களை அப்புறம் கேட்கிறேன் என்று சொல்லியே நாலு பாடல்களை கேட்காமல், ஐந்தாவதை கேட்டு பரவசத்தில் ஆழ்ந்து வேகமாக பின்னால் ஓடி மற்றதையும் ஆசை தீர செவி வழி கேட்டு மகிழ்ந்தேன்.. பாடுவதில் குயில் கூட்டத்தின் இளைய மகன்.. என் மாமு கிட்டுவும் அடிச்சு ஆடுறாரு 200 பதிவுகளை தாண்டி.. இவர் போற வேகத்தை பார்த்த சீக்கிரம் 1000த்தை தொட்டுடுவார் போல.. வாழ்த்துக்கள் மாமு.. இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்..

வாழ்க! வளர்க மாமு!

உலக கோப்பை 2007 பற்றிய பக்கம் - அறிமுகம்

நடக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய அனைத்து விவரங்களுக்கும் பார்க்க, மணிகண்டனின் உலக கோப்பை 2007 பக்கங்களை.. புதிய விஷயங்கள், புகைப்படங்களுடன்

Monday, February 05, 2007

பதிவுலக பெண் சூப்பர் ஸ்டாரின் 200வது பதிவிற்கான வாழ்த்து பதிவு

என்னங்க.. என் பெயரையே மாத்திட்டீங்க..காயத்ரின்னு.. இது தான் கீதா மேடம் எனக்கு எழுதிய இரண்டாம் பின்னூட்டம்.. அவர்கள் பெயரை மாற்றியதில் சற்று கோபம் அவர்களுக்கு.. இப்படித்தான் அறிமுகமானார் தலைவி இந்த தொண்டனுக்கு.. ஆங்கில பதிவாக மட்டுமே இட்டு வந்த எனக்கு, சாலையோர கைகாட்டி மாதிரி சரியான தமிழ் வழியை சொன்னவர்களில் கீதா தலைவியும் ஒருவர் (கார்த்திக்கு கைகாட்டிய கருணை பெருங்கோ என்று இவர் இன்றிலிருந்து அழைக்கப்படுவார்) அப்போது இவரது எழுத்தில் படித்த பயண கட்டுரையும், அந்த எழுத்து ஊர்வலத்தின் பின்னே நானும் நடை பயின்று எல்லா ஊரையும் செலவில்லாமல் ஊர் சுற்றி வந்ததையும் மறக்க முடியுமா.. சிவாய நமஹ என்று உள்ளமும் உதடும் அவ்வப்போது உச்சரித்து வந்தாலும், அவரின் பல தலங்களை எனக்கு அறிமுகபடுத்திய இவரின் ஆன்மீக பதிவுகளையும், அதில் வழிந்தோடி இறை பாதம் நான் கண்டதையும் மறக்க முடியுமா..

ஏன் இப்படி ஒரு பில்-டப்? பெங்களூரிலிருந்து அம்பியின் கேள்விகணையும் ரௌத்திர பார்வையும் (அவ்வளவு தொலைபேசி பேச்சுக்கிடையேயும்), எனக்கு புரியாமல் இல்லை. ஆனால், தானை தலைவி, நடமாடும் தங்க தாமரை, பெண்பால் சூரியன், பதிவுப் புயல், பின்னூட்ட பூங்கோதை, முன்ஜாக்கிரதை முத்தக்கா, இடியென முழங்கும் இடி, மின்னலென எதிர்கட்சிகளின் சிம்ம சொப்பனம், பயணப் பருந்து, ஆன்மீகப் பேரொளி எங்கள் பிளாக் உலகின் பழுத்த பிளாக்வாதி கீதா மேடம், தனது 200வது பதிவை இட்டிருக்கிறார். 450 பந்துகளில் (நாட்களில்) 200 ஓட்டங்களை (பதிவுகளை) அடித்த பதிவுலக கவாஸ்கர் இவர். இந்த பிளாக் உலகமே திரண்டு, எழுந்து நின்று, தட்டிய கைகள் சிவக்குமாறு, கைதட்டி இந்த பொன்னான விஷயத்தை கொண்டாடுகிறது.

நேற்று காலை கொலம்பஸ்ஸில் மாபெரும் ஊர்வலமும், வாஷிங்டன் திடலில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் கடலுக்கு நடுவில் நடந்த பாராட்டுக் கூட்டமும் இவர் அகில உலக சக்திக்கு எடுத்துக்காட்டு (வந்தவர்களுக்கு பிஸா மற்றும் ஒரு டின் கோக் கொடுத்த செலவான 10000 டாலரையும் நானே ஏற்று கொண்டேன் தலைவிக்காக என்று சொல்லவும் வேண்டுமோ). ஆகாயச் சூரியனுக்கு சின்ன தீப்பொறி பாராட்டு உரை வாசிப்பதை போலத் தான் இருக்கிறது என் செயல். சந்தனத்தின் வாசத்தை இந்த சம்பங்கி பூ தான் சொல்லிட முடியுமோ? ஆனாலும் ஏணி ஏறி நிலவுக்கு வர்ணமடிக்கத் தான் ஆசை. அதுவே இந்த பாராட்டுப் பதிவு..

போகும் வழியில் முட்களும், கண்ணாடி சில்களும் பரப்பிக் கிடந்தாலும் உங்கள் சிம்ம நடையை சும்மா என்று சொல்லுதல் முடியுமோ.. நடந்து வந்த பாதை சொல்லும் நீங்கள் பட்ட பாடுகளை.. எத்தனை பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போட்டு எனக்கும் போடுங்கோ என்று அழைத்திருப்பீர்கள்.. நான் ஒரு முறை உங்கள் பதிவுக்கு வரவில்லை என்றாலும் கூட அட தினமும் வரும் சூரியனை காணவில்லையே என்று பதறி இருக்கிறீர்கள்.. அந்த தாயுள்ளத்தை என்னே சொல்வேன் தலைவியே..

200 என்ன.. நீங்கள் பதிவுலக சூப்பர் ஸ்டார் என்ற வகையில், ஒரு பதிவு நூறு பதிவுக்கு சமம் என்றால், இத்தோடு நீங்கள் இட்டது 20000 பதிவுகளாயிற்றே.. யார் செய்தது இந்த அரும்பணி.. எவருக்கு வரும் இந்த திறமை.. எங்கள் பதிவுலக அம்மாவே..நீங்கள் வாழ வேண்டும்.. உங்களால் இந்த பதிவுலகம் வாழவேண்டும்.

வாழ்க! வளர்க!!

ஜூலை மாதம் பெங்களூருக்கு அரசு முறை பயணமாக தலைவி சென்ற போது, அசின் ஜொள்ளர்கள் சார்பில் அடித்த மாபெரும் போஸ்டர்.. சென்னை அண்ணா சாலையிலும், எம்.ஜி ரோட்டிலும் அப்போது நீங்கள் இந்த பெரிய போஸ்டரை பார்க்காமல் விட்டிருந்தால் இங்கே பாருங்கள்..

இது தலைவியின் 200வது பதிவிற்காக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேதா எழுதிய பாராட்டுப் பதிவும், காலெண்டர் கவிஞர் எந்தன் மண்ணின் மைந்தன் மணியின் பதிவும், உங்கள் பார்வைக்கு..

தானைத் தலைவி வாழ்க! வாழ்க!

Sunday, February 04, 2007

வசீகர குரலோன் விஜய் ஜேசுதாஸ்

கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்களில் இருக்கும், அந்த குரலில் இருக்கும், வசியத்தில் மயங்கி போகாதவரும் உண்டோ இவ்வுலகத்தில்.. அதுவும் அவரும் இளையராஜாவும் சேர்ந்த பிறகு வெளிவந்த திரைப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். அழும் குழந்தைக்கு தாயின் நாக்கு சுழல வரும் தாலாட்டு மயக்கம் தந்து தூங்கச் செய்வதை போல, கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்கள் அழும் மனசுக்கு மயிலிறகு தடவல்கள். குவிக்கப்பட்ட சீட்டுக்கட்டில் பச்சைக்கிளி ஒன்றை மட்டுமே பொறுக்கிப் போடுவதை போல, அவர் பாடியதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டு நான் அதிர்ஷ்டம் சொல்லும் பச்சைக்கிளியாக விரும்பவில்லை. இரவு நேரத்தில் எத்தனையோ முறை நிலவும் நானும் தனித்துக் கிடந்த காலங்களில் செவிகளில் புகுந்து மனசைத் தொட்டு, மெய் முழுவதும் பரவி, எனக்குள் இன்னொரு உயிரையும் துணையாக தந்திருக்கிறது அவரின் குரல். அவர் பாட்டை கேட்டு காட்டுக்குயிலெல்லாம் சில காலம் மரமேறி பாடுவதில்லை என்று காட்டுக்குள் இருந்து சோகமாய் வந்த தென்றல் என் காதுக்குள் சொன்னதுண்டு.

இப்படி பாடல்களின் மூலம், தன் குரலின் மூலம் நம் மனசை தொட்ட கே.ஜே.ஜேசுதாஸ் இப்போதெல்லாம் பாடாமல் இருப்பது, காற்று சிலகாலம் விடுமுறை எடுத்துச் சென்றதை போல, ஒரு வெற்றிடம் ஏற்பட்டுப் போனது இசையுலகில். ஆனால் 'ராம்' தந்தது இவரின் இன்னொரு பிம்பம். இவரின் குரலின் இளைய பிள்ளை. அதுவும் அடுத்த தலைமுறை இசையில் முளைத்த புதுக் கூட்டணியுடன்.. ஆம்.. யுவனின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடிய ஒவ்வொரு பாடலும் குயிலுக்கு பிறந்தது குயிலே தான் என்று உலகுக்கு சொல்லியது. அதுவும் முதல் பாடலே நிழலினை நிஜமும் பிரிந்திடுமா என்று எல்லோர் காதுகளிலும் புகுந்து மனசை நிறைத்து, முதல் பாடலிலே கேட்ட அவர்களின் புருவத்தை ஆச்சரியத்தால் பாதி நெற்றிவரை உயர்த்தியது.

விழுந்து கிடந்த ஒரு வெற்றிடத்தை இவரின் வருகை நிறைத்து போனது. அதுவும் இவர் யுவன் கூட இணைந்த எல்லாப் பாடலும் மகுடி நாதமாய் நம் மனதை ஆடவிட்டது. தாவணி போட்ட தீபாவளி என்று இவர் பாடியதை கேட்டு அந்த தீபாவளியே, தாவணி போட்ட தீபாவளியே சொக்கிப் போனது. ஜேசுதாஸுக்கு ராஜா ஒரு மேடை போட்டு கொடுத்ததை போல, விஜய்க்கு யுவன் ஒரு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்.

தீபாவளி படத்தில், யுவனின் இசையில் இவர் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்ததாக பாடியது, காய்ந்து கிடந்த கல் மனசையும் பிளந்து ஒரு ஆற்றை உண்டாக்கி விட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சென்று யார் சொன்னது.. இதோ இப்போதெல்லாம் சக்கரம் போல, இந்த பாடலைத் தான் சுழல விடச் சொல்லி மனசு கேட்கிறது.

இப்படி ஒரு அருமையான, மயக்கும் பாடலை கேட்ட பின்பு, என் மாப்ள பரணி அந்த பாடல் வரிகளையே பதிவாய் போட்டிருந்தார். அதே மயக்கத்துடன் இப்போது நானும். தயவு செய்து யாராவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். விஜய் ஜேசுதாஸின் குரலின் போதை அங்கு கிடைக்கும் சரக்கை விட அதிகமாய் இருக்கிறது.

சின்ன விருந்தும் அதில் சமைத்த உணவு வகைகளும்

சிக்கன் சூப்
முட்டைகோஸ் சூப்

வெங்காய பக்கோடா
பெப்பர் சிக்கன்
மெதுவடை

காலிஃப்ளவர் கறி
கத்திரிக்காய் சாதம் (வாங்கி பாத்)

பிரான் கறி
சிக்கன் கிரேவி

சாதம்
சப்பாத்தி
வத்தல் குழம்பு
அவித்த முட்டை
சிக்கன் குழம்பு
ரசம்

சேமியா பாயாசம்
கோலோப் ஜாமூன்

இதெல்லாம் என்னன்னு பாக்குறீங்களா.. நம்ம ரூம்ல, இங்க இருக்கவங்களையெல்லாம் கூப்பிட்டு சின்ன விருந்து ஒண்ணு கொடுத்தோம்.. அதுக்கு தயார் செய்த வகைகள் தான் இவைகள்..

அதனால் தான் நேற்று இங்கே பதிவிட முடியவில்லை..
எல்லோருக்கும் உணவிடும் வேலை இருந்ததால்..

அதன் பிறகு கிட்டதட்ட மூன்று மணி நேரம் அரட்டைகளும் சின்ன சின்ன யூனோ, பிக்சனரி, அந்தாக்சரி போன்ற விளையாட்டுகளும் ஆடி இப்போது தான் விருந்தே முடிந்தது.

Thursday, February 01, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2

இந்த பயணத்தின் முதல் பகுதி

எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் (பெரும்பாலும் எந்த கிராமத்துக்கு போகும் பேருந்துகளும்) பேருந்துகள் நிற்பதற்கென்று ஒரு இடம் இருந்தாலும் எங்கே யார் குறுக்கே கையை நீட்டினாலும் பேருந்து நிற்கும். சிறிய ஊரான எங்கள் ஊரிலேயே, ஊரை விட்டு வெளியேறுவதற்குள் ஐந்து நிறுத்தங்கள் இருக்கும். எங்களை சுமந்து கொண்டு சென்ற அந்த சிறுமலைக்கு போகும் வண்டியும், கைகாட்டி நிற்போருக்கெல்லாம் நின்று அவர்களை உள்ளே திணித்துகொண்டு சென்றது. ஆசை உள்ளவன் கல்யாணப் பந்திக்கு சென்றால் மூக்கில் எட்டிப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவது போல வெளியில் நாலும் பேர்,இரண்டு பக்க படிகளில் தொங்கி வர, ஆடி ஆடி குலுங்கி குலுங்கி மலை ஏற ஆரம்பித்தது பேருந்து.

ஜன்னல் ஓர இருக்கைகள் தான், இந்த மாதிரி பயணங்களில் நன்று. எனக்கும் அது தான் ரொம்ப பிடிக்கும். மெல்ல மலயேற ஆரம்பித்த போது சில்லென்று சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது. என் தலை முடியெல்லாம் அந்த காற்றோடு போக ஆசை பட்டு எல்லாப் புறமும் கலைந்தது. கடந்து சென்ற பாறைகளும் அதில் எழுதப்பட்ட ஜோடிப் பெயர்களும், காதலை இன்னும் உலகுக்கு சொல்லிகொண்டிருந்தன. தூரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை சின்ன தலையணை போல தெரிய ஆரம்பித்தது. அட! சொல்ல மறந்துவிட்டேனே. திண்டுக்கல் என்பதற்கு கல்லினாலானா தலையணை என்று பொருள். திண்டு என்றால் தலையணை. திப்பு சுல்தான் மன்னர்கள் இங்கிருந்து தான் ஆட்சி செய்தனர். இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவகங்கைக்கும், நாமக்கல் மலைக்கோட்டைக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாக சொல்வதுண்டு. அந்த சுரங்கத்தின் வாசல் வரை நான் சென்று வந்ததுண்டு, எனது சிறிய வயதில். மருது சகோதரர்கள் உதவி கேட்டு திப்புசுல்தானை தேடி அப்படித் தான் வந்ததாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய சிவகங்கை சீமை படத்தில் பார்த்த ஞாபகம் இன்னமும் உண்டு.

என் நண்பர்களுக்கு இந்த மாதிரி பயணமெல்லாம் கொஞ்சம் புதுசு. சுற்றியுள்ள மனிதர்களும் அவர்களின் மண் வாசனையும் ரொம்ப புதுசு. தோளில் துண்டு போட்டு கொண்டு வெறும் வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு இதுவெல்லாம் ரொம்ப சாதாரணம். பஸ்ஸில் ஏறினாலோ பக்கத்து தெரு பாமா முதல் பக்கத்து ஊரு பரிமளா வரை, ஆலை இயந்திரங்கள் போல சத்தமாக பேசிக்கொண்டே வருவது பெண்கள் இயல்பு. நடத்துநர்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். இளவயது நடத்துநர்கள் பாதி பேர் காதலித்து, குறிப்பாக பேருந்தில் வந்த பெண்களையே, கல்யாணம் செய்து கொள்வார்கள். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் கல்யாணமாகாத சித்தியோடு பேருந்தில் ஏறினேன். அதுவரை பழைய தத்துவ பாட்டு பாடிக்கொண்டிருந்த பேருந்தில், நடத்துநர் வேகமாக கேசட்டை மாற்றி, கோபுர வாசலிலே படத்தில் தேவதை போலொரு பெண்ணிங்கே வந்தது தம்பி என்ற பாட்டை போட்டார். இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன். குறிப்பாக சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில் வரும் வாசக் கருவேப்பிலையே, அடிக்கடி பேருந்துகளில் கேட்ட பாடல்.

எனக்கு தெரிந்தவரை, ஊட்டி மலைப் பாதையை விட, எங்கள் சிறுமலை பேருந்து பாதை கொஞ்சம் அபாயகரமானது. அதிகமான இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளும் உண்டு இங்கே. அதிகமான போக்குவரத்து இல்லாததால் ஒரு வழி பாதை மட்டுமே. எதிர் பேருந்தோ மற்ற வேன் போன்ற வாகனமோ வந்து விட்டால் இரண்டும் கடந்து கொள்வது சற்று சிரமமான விஷயம். ஏதாவது ஒரு வண்டி மற்ற வண்டிக்காக கொஞ்சம் அகலமான இடத்தில் காத்திருந்து அப்புறம் தான் கடந்து போகும். வெளிப்புற மலைகளை கடந்து மெல்ல மலைக்கூட்டத்துள் பேருந்து புகுந்தது. அதுவரை கொஞ்சம் பொட்டல் காடாய் இருந்த மலைத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாக அடர் காடாய் மாறியது. வானத்தை தாங்கள் தான் தாங்கி பிடிப்பதாய் கர்வம் கொண்டு தலை நிமிர்ந்த மரங்கள். அதில் அதனை சுற்றி படர்ந்து கிடந்த மிளகு கொடிகள். அந்த இலைகளின் வாசனையே சொன்னது தாங்கள் மிளகு கொடியின் பிள்ளைகள் என்று.

முக்கனி என்று சொல்லப்படுகின்ற மா, பலா, வாழையெல்லாம் இங்கே தான் வழியெல்லாம் விளைந்து கிடந்தது. தனது குலைகளை தாங்க முடியாமல், அதிக அறிவு இருந்தாலும் செருக்கு கொள்ளக்கூடாது தங்களை மாதிரி என்று ஊருக்கு தத்துவம் சொல்லிகொண்டிருந்தன பணிந்து கிடந்த வாழை மரங்கள். சிறுமலை வாழைப்பழத்தின் சுவையினை நாக்கினால் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், காதுகள் வழி கேட்டீர்ப்பீர்கள். அந்த சுவை தந்தது இந்த மண் தான். இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் சங்க காலத்தில் மட்டுமே படித்த கேட்ட பழங்களான அத்திப்பழம் போன்ற வகைகளும் இங்கே ரொம்ப பிரசித்தி.

(இன்னும் பல சுவையான தகவலுடன், பயணம் தொடரும்)